வல்லிக்கண்ணன் கதைகள்
Authors/Creators
Description
வாழ்க்கையின் நிகழ்வுகளும் மனிதரைப் பல விதங்களில் பாதிக்கின்றன. ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் வெவ்வேறு சமயங்களில் ஒருவரை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன. அவரவர்களுடைய, குறிப்பிட்ட நேரத்திய, மனநிலை சூழ்நிலை பக்கத் துணை முதலிய பலவற்றைச் சார்ந்து அமையக் கூடிய விஷயம் அது.
இப்படி எல்லாம் இருப்பதனால் வாழ்க்கையை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்போருக்கு வாழ்க்கை ஒரு நாடகமாகவும், ரசிக்க வேண்டிய விளையாட்டாகவும் தோன்றுகிறது.
நான் வாழ்க்கைச் சுழல்களில் அனுபவச் சிக்கல்களில் ஆழ்ந்து விடாது, வாழ்வின் ஒரு ஓரத்தில் நின்று வாழ்க்கையையும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்து வருகிறேன். அவை எழுப்புகிற என் மன அலைகளையும் எண்ண ஓட்டங்களையும் சுவையாகப் பதிவு செய்து வந்திருக்கிறேன். அத்தகைய முயற்சிகள் சிறுகதைகளாகவும், குறுநாவல்களாகவும், நாவல்களாகவும் வடிவெடுத்திருக்கின்றன.
நான் எழுதியுள்ள பல நூறு சிறுகதைகளில் நாற்பத்தொரு கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மனிதர்களின் விதம் விதமான உணர்ச்சி நாடகங்களையும், உளவியல் போராட்டங்களையும் எடுத்துக் காட்டும் வாழ்க்கைச் சித்திரங்கள் இவை. வாழ்க்கையில் காணப்படுகிற முரண்பாடுகளையும், அங்கதங்களையும், விசித்திரத் தன்மைகளையும் இவை சுவையோடு பதிவு செய்துள்ளன.
ரசனைக்கு இனிய விருந்து ஆகும் இச்சிறுகதைகளைத் தொகுத்து, அழகான புத்தகமாக வெளியிடும் ராஜராஜன் பதிப்பகத்துக்கும், நண்பர் மா. நந்தன் அவர்களுக்கும் என் நன்றி உரியது.
இக்கதைகளை வெவ்வேறு காலங்களில் வெளியிட்ட பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கும் நன்றி.
வல்லிக்கண்ணன்