Published August 31, 2017 | Version v1
Book Open

சமீபத்திய மலையாளச் சிறுகதைகள்

Description

1930-50 ஆம் ஆண்டு காலகட்டம்- மலையாளக் கதையின் பொற்காலமாக இருந்தது. இக் காலகட்டத்தில்தான் மலையாளத்தில் சிறுகதை இலக்கியம் வளர்ந்து பக்குவமெய்தியது.

1930-க்கு முன்பும் ஏாளமான கதைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. முதல் கதை வெளிவந்தது 1894-ல் என்று கருதப்படுகிறது. மூர்ங்கோத்துக் குமாரனுடையது அக் கதை. பிற்காலத்தில் நூற்றுக்கும் அதிகமான கதைகள் எழுதிப் பிரபலமடைந்த அவரை மலையாளக் கதையின் தந்தை என்று கூறலாம். இந் நூற்றாண்டின், முப்பதுக்கள்வரை மலையாளக் கதை அதன் இளம்பிராயத்திலிருந்தது. மேற்கத்திய நாடுகளில் உருவாகிவந்திருந்த நவீன கதைகள் மலையாள மொழியில் வந்தடைந்திருக்கவில்லை. கலையழகற்ற, நீண்ட வர்ணனைகள் அடங்கியவையாக இருந்தன அந்நாளையக் கதைகள். மங்களமாக முடிகின்ற திருமணங்களும் வீரச்செயல்களும் கொண்ட கதைகள் நிரந்தரமாக விரும்பப்பட்டன.

முதல் கதை தோன்றி நாற்பதாண்டுகள் ஆக வேண்டியிருந்தது. இன்று வழங்கும் நவீன சிறுகதை பிறப்பதற்கு. ஆலன்போ, செகாவ் முதலான உலகக் கதாசிரியர்களினுடைய படைப்புக்களின் புதுமைகள் மலையாள மொழியிலும் உண்டாயின. புதிய கதாசிரியர்களில் அநேகம் பேரும் ஆங்கில அறிவு உள்ளவர்களாகவும் இருந்தனர். புதுக்கதை இலக்கியங்களைக் குறித்து அறிய இது அவர்களுக்கு உதவியாக இருந்தது. படிப்படியாக மாப்பஸானுடையவோ, செகாவினுடையவோ கதைகளில் காணப்படும் கலையழகு மலையாளக் கதைகளுக்கும் உண்டாயிற்று. விரைவிலேயே கருத்தாழம் மிக்க பரப்பெல்லையும் காணத் தொடங்கியது. ரஷ்யப் புரட்சியும், தொடந்து நிலைநின்ற முதல் சோஷலிஸ்ட் ஸ்டேட்டும், மார்க்ஸிஸ்ட் மனப்பான்மை கொண்ட எழுத்தாளர்களுக்கு ஊக்கம் ஊட்டின. இக் காலகட்டத்தின் கதாசிரியர்கள்தான் தகழி, கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி முதலானோர்.

இதே சமயத்தில்தான் ஃப்ராய்டின் மனத்தத்துவமும், ப்ராஸ்ட், ஜாய்ஸ் ஆகியோரின் சங்கேதங்களும்கூட மலையாள இலக்கியத்தில் நுழைந்தன. நுண்பொருள் கோட்பாட்டியல் உணர்வு, நவீன சங்கேதங்களின் ப்ரவாகம் என்றிவற்றில் மலையாளமொழிக் கதாசிரியர்களுக்கு, தத்தம் ஆற்றலைக் கண்டு கொள்ளவும், தத்தம் நடைகளைக் கையாளவும், அப்படியே கதை இலக்கியத்தை வளர்க்கவும் இக் கால கட்டத்தில் இயன்றது. தகழியும் வர்க்கியும், செருகாடும் சோஷலிஸ்ட் ரியலிஸத்தை உறுதிப்படுத்தினார்கள். பொற்றெக்காடு ரோமான்டிஸிஸத்தின் கண்ணாடி மாளிகையைக் கட்டினார். இயக்கங்களிலிருந்து தனித்து நின்று தன் திறமையினால் பஷீர் மலையாளக்கதையின் முன்னேற்றத்திற்கு விலையுயர்ந்த பங்களித்தார். மலையாளக்கதையின் பொற்காலமாகவே இருந்தது இக் காலகட்டம்.

சோஷலிஸ்ட் ரியலிஸமும், ரோமான்டிஸிஸமும் பின்னடைந்த பிறகு இன்று நவீன பாணியை அடைந்திருக்கின்றன மலையாளக் கதைகள். புதுக்கதைகளையே நவீனக் கதைகளென்று அழைக்கிறோம். இந் நவீன காலகட்டத்தின் கதாசிரியர்களே காக்க நாடன், ஓ.வி. விஜயன், எம்.பி. நாராயணபிள்ளை முதலியோரும் நானும். மலையாளத்தில் புதிய போக்குகள் முதலில் நுழைந்தது சிறுகதைகளில்தான். ஏறக் குறைய, ஒரு பன்னிரண்டு வருட காலத்திற்கு முன்பிலிருந்து நவீன கதைகளின் விதைப்பு நடந்துகொண்டிருக்கிறது. முதல் நவீன கதை எதுவென்று திட்டவட்டமாகச் சொல்வது கஷ்டம். ஏனென்றால் புதுக் கதை சட்டென்று ஒரு நாளில் தோன்றியதல்ல.நவீன கதையின் வேர்களை வாசுதேவன் நாயர், மோஹனன் இவர்களுடைய சில கதைகளில் காணலாம் - முக்யமாக டெக்னிக்குகளைப் பொறுத்த வரையிலும். புதுமைக்கான ஆர்வத்தை மோஹனனின் கதைகளில் தெளிவாகக் காணலாம். நவீன கதைகளின் விசேஷங்களிலொன்று: பாரம் பரியமோ சன்மார்க்க எழுத்துக்களோ, ஆன்மவெளிப்பாட்டில் கட்டுப் பாடான தடையாக அவர்களுக்கு இருப்பதில்லை என்பதே. இத் தனிச் சிறப்பை பஷீரின் சில கதைகளில் காணலாம். நவீன கதையின் கலா பூர்வமான வேர்கள் வாசுதேவன் நாயரிலிருந்தும், உணர்ச்சிபூர்வமான வேர்கள் பஷீரிலிருந்தும் ஊன்றியுள்ளன.

ஆனால் நவீன கதை அதன் பூரண உருவத்தில் வெளிப்படுவது 1960-க்குப் பிறகுதான். அதன்பின் இருப்போர் ஒரு கூட்டம் இளைஞர்கள். எம். பி. நாராயண பிள்ளையின் "ஜோர்ஜாறாமன்றெ கோடதி" (ஆறாம் ஜார்ஜின் நீதிமன்றம்) வாசகரைக் கிளர்ச்சிப்படுத்திய ஒரு கதையாகும். நாராயண பிள்ளையுடன் சேர்ந்து மேடைக்கு வந்த மற்ற நவீன கதாசிரியர்கள் "ஆறாம் ஜார்ஜின் நீதிமன்றத்"தையும் மிஞ்சுகிற கதைகள் எழுதினர். ஓ.வி. விஜயனின் "எட்டுகாலி" (சிலந்தி) , "தீட்டம்" (மலம்) என்ற கதைகள் வாசகரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. முதல் கதை பாலுணர்வி்ன்மேல் வெறுபைப்பற்றியதாகவும் இரண்டாவது மலத்தைப்பற்றியதாகவு மிருந்தன.

பழைய தலைமுறையின் கதாசிரியர்களிடம் மார்க்ஸிஸத்தின் கனத்த பாதிப்பு உண்டாயிருந்ததல்லவா. சோஷலிஸ்ட் ரியலிஸத்தின் வருகையுடன் இப் பாதிப்பு மலையாளக் கதையில் குறைந்து வருகிறதாகத் தோன்றுகிறது. இந்நாளைய கதாசிரியர்கள் பலரும் தாங்கள் மார்க்ஸிஸ்டுகள் இல்லையென்று சொல்வதில்லை அவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். இங்கேயும் நவீன கதாசிரியனின் தர்மசங்கடம்தான் பிரச்னை. ஒரு நாளும் உண்டாகாத புரட்சிகளைக் குறித்து துக்கக் கனவுகளை பட்டத்து விள கருணாகரனுடையவும் , எம். சுகுமாரனுடையவும் கதைகளில் காணலாம்.

காக்கநாடன் ஓ. வி. விஜயன், எம். பி. நாராயண பிள்ளை இவர்களுடன் புதுக்கதையைப் பேணியவர்கள் ஸேது, பத்மராஜன், பூனத்தில் குஞ்ஞப்துல்லா, ஸக்கரியா, ஈ. ஹரிகுமார் முதலானவர்கள். நவீன கதை இலக்கிய இரசிகர்களுக்கிடையில் நிரந்தரமான வாதங்கள் நடக்கின்றன. அசமனூர் ஹரிஹரனின் "ஸ்வப்னம்" (கனவு) ஒரு மனத் தத்துவக் கதை. புதுக்கதையின் விமர்சனம் இரு விதமாகவும் உள்ளது. ஒரு பக்கம் யதார்த்தவாதிகளான எழுத்தாளர்களும் வாசகர்களும், மறுபக்கம் கம்யூனிஸ்ட் அறிவு ஜீவிகளும். இவ் விமர்சனத்தை நவீன கதை எதிர்த்து நிற்பதைக் காண்கிறோம். அது மட்டுமல்ல. அது நாள் தோறும் படர்ந்து வளரவும் செய்கிறது. நவீன கதையின் வளர்ச்சி இன்னும் முழுமையாகவில்லை. பதிய கதாசிரியர்களில் பலரும் முப்பத்தைந்து வயதிற்கும் குறைந்தவர்களே. அவர்களிடமிருந்து மலையாள மொழிக் கதைக்கு இன்னும் கனமான தானங்கள் எதிர்பார்க்கப் படுகின்றன. நவீன மலையாளக் கதை, இன்றைய அதன் சிதைவு குணத்தை நீக்கிக்கொள்ளுமெனவும் சோஷலிஸ்ட் ரியலிஸ்ட் அமைப்பைப்போல ஆரோக்யமான ஒரு கதை முறைக்கு வழிவகுக்குமெனவும் சில விமரிசகர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.

Files

cmiipttiy mlaiyaallc cirruktaikll - em. mukuntnnn.md

Files (2.7 MB)

Name Size Download all
md5:c0ec03f1f0e3393755541ebaf0fcd6e7
539.0 kB Download
md5:3044551e0293c62408d1336c181b8b72
237.3 kB Download
md5:da300bf807384b5b761bedf2aee0c911
334.2 kB Download
md5:2069e5f88de393b2fbd30276a81c840a
977.7 kB Preview Download
md5:b9e6f02800636fa91d6a797370ebab32
527.6 kB Download
md5:b97bd02e644b2baa4d71bec3a5e1381a
103.4 kB Preview Download
md5:6f9c785d4b3e0deafd58e0c13764f4ac
1.7 kB Download