#ஜெயகாந்தனின் சிறுகதைகள் தொகுப்பு **ஜெயகாந்தன்** **Acknowledgements:** Our sincere thanks go to the author Mr. Jeyakanthan for generously giving permission to release this etext file as part of Project Madurai collections and to Mr. Thukaram Gopalrao and colleagues at "thinnai.com" and Mr. P.K Sivakumar, New Jersey, USA for source etext files in TAB format. Web, PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. Last Updated on August 20, 2017 ----- உள்ளடக்கம் [TOC] ----- #1. யுக சந்தி கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள். "பாட்டி...பாட்டி' பையைத் தூக்கியாரட்டா? ஓரணா குடு பாட்டி." "வண்டி வேணுங்களா அம்மா?" "புதுப்பாளையம் வக்கீல் குமாஸ்தா ஐயர் வீடுதானுங்களே....வாங்க, போவோம்" ---என்று பல்வேறு வரவேற்புக் குரல்களுடன் அவளை இறங்கவிடாமல் தடுத்து நின்ற வண்டிக்காரர்களையும், கூலிக்காரச் சிறுவர்களையும் பார்த்துக் கனிவோடு சிரித்துவிட்டுப் பாட்டி சொன்னாள்: "எனக்கு ஒண்ணும் வேண்டாம்பா..சித்தே வழியை விட்டேள்னா நான் மெள்ள நடந்தே போயிடுவேன்.... ஏண்டாப்பா, வீட்டெக் கூடத் தெரிஞ்சு வெச்சிருக்காய்... நான்தான் மாசம் ஒருதடவை வர்றேனே, என்னிக்கு வண்டியிலே போனேன்?" என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி, அவர்களை விலக்கி வழியமைத்துக் கொண்டு தணலாய்த் தகிக்கும் வெயிலில், முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, இடுப்பில் ஏற்றிய சுமையுடன் வறுத்துக் கொட்டிய புழுதி மண்ணை அழுந்த அழுந்த மிதித்தவாறு ஒரு பக்கமாய்ச் சாய்ந்து சாய்ந்து நடந்தாள் பாட்டி. பாட்டிக்கு வயது எழுபது என்றாலும் சரீரம் திடமாய்த்தான் இருக்கிறது. மூப்பினால் ஏற்பட்ட ஸ்தூலமும், அதனால் விளையும் இளைப்பும் வீட்டுக்குப் போன பின்தானே தெரியும்?... அவள் கணிப்பில் நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து பரந்து ஓடுகிறார்கள். மழையும் வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக் கொண்டாள். அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? வெள்ளமாய்ப் பெருகி வந்திருந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென வரண்ட பாலையாய் மாறிப் போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? என்ன செய்தால்தான் என்ன? தகிக்கின்ற புழுதியில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் புதைய, அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள் பாட்டி. வழியில் சாலையோரத்தில் --- நான்கைந்து மனிதர்கள் நின்று சுகம் காண வாகாய் முளைத்த பெருங்குடைபோல் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது ஒரு சிறிய வேப்பமரம். அந்த நிழலில் ஒற்றையாய்ச் சற்றே நின்றாள் பாட்டி. எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் --சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்-- காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங் குழைகள் சிலிர்த்தன. "என்னப்பனே மகாதேவா" என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்தக் குளுமையை அனுபவித்தாள் பாட்டி. பாட்டியின் முக்காடிட்ட வட்டமான முகத்தில் ஒரு குழந்தைக்களை குடிகொண்டிருந்தது. இந்த வயதிலும் அவள் சிரிக்கும்போது வரிசைப் பற்கள் வடிவாய் அமைந்திருந்தது ஓர் ஆச்சரியமே' அவள் மோவாயின் வலதுபுறத்தில் ஒரு மிளகை விடவும் சற்றுப் பருத்த அழகிய கறுப்பு மச்சம்; அதன்மீது மட்டும் கருகருவென இரண்டு முடி-- இவ்வளவையும் ஒருசேரப் பார்த்தவர்கள், இவள் இளவயதில் எப்படி இருந்திருப்பாள் என்று எண்ணாமல் இருக்க முடியாது. பாட்டியின் பொன்னிறமான மேனியில் அதிக நிறபேதம் காட்டாத நார்ப்பட்டுப் புடவை காற்றில் படபடத்து; புடவையிலிட்ட முக்காட்டின் விளிம்பெல்லாம் குத்துக் குத்தாய் லேசாகத் தலைகாட்டும்-- மழித்து நாளாகிவிட்டதால் வளர்ந்திருக்கும்-- வெள்ளி முடி. கழுத்தில் ஸ்படிக மாலை. நெற்றியில் வியர்வையால் கலைந்த விபூதிப் பூச்சு. புடவைத் தலைப்பால் முகத்தையும், கைகளையும், மார்புக் குவட்டின் மடிப்புகளையும் அழுந்தத் துடைத்துவிட்டுக் கொண்டாள். அப்போது வலது விலாப்புறத்தில் இருந்த சிறிய பவழம் போன்ற சிவப்பு மச்சம் வௌித் தெரிந்தது. ---மீண்டும் நிழலிலிருந்து வெயிலுக்கு வந்து புழுதி மண்ணிலிருந்து, பழுக்கக் காய்ந்த கெடிலநதிப் பாலத்தின் கான்கிரீட் தளவரிசையில் பாதங்களை அமைதியாகப் படிய வைத்து, அசைந்து அசைந்து அவள் வரும்போது..... பாலத்தின்மீது கிராதியின் ஓரமாக, பாட்டியம்மாள் மீது பட்டுவிடக் கூடாதே என்ற பய உணர்வோடு ஒதுங்கி நின்று கையிலுள்ள சிறு தகரப்பெட்டியுடன் கும்பிட்டான் ஒரு பழைய பழகிய ---நாவிதன். "பாட்டியம்மா....எங்கே, நெய்வேலியிலிருந்தா?" என்று அன்புடன் விசாரித்தான். "யாரு வேலாயுதமா?....ஆமா' ....உன் பெண்டாட்டி குளி குளிச்சுட்டாளா?" என்று ஆத்மார்த்தமாய் விசாரித்தாள் கிழவி. "ஆச்சுங்க...ஆம்பளைப் பையன்தான்." "நல்லாயிருக்கட்டும்....பகவான் செயல்....' இது மூணாவது பையனா?" "ஆமாமுங்க" என்று பூரித்துச் சிரித்தான் வேலாயுதம் "நீ அதிர்ஷ்டக்காரன்தான்...எந்தப் பாடாவது பட்டுப் படிக்க வச்சுடு, கேட்டியா?" என்றதும் வேலாயுதம் குடுமியைச் சொறிந்தவாறு சிரித்தான். "அட அசடே, என்ன சிரிக்கிறாய்? காலம் வெகுவாய் மாறிண்டு வரதுடா; உன் அப்பன் காலமும் உன் காலமும் தான் இப்படிப் பொட்டி தூக்கியே போயிடுத்து... இனிமே இதொண்ணும் நடக்காது.... புருஷாள் எல்லாம் ஷாப்புக்குப் போறா... பொம்மனாட்டிகள்லேயும் என்னை மாதிரி இனிமே கெடையாதுங்கறதுதான் இப்பவே தெரியறதே....ம் ...எல்லாம் சரிதான்; காலம் மாறும்போது மனுஷாளும் மாறணும்.... என்ன, நான் சொல்றது?" என்று கூறி ஏதோ ஹாஸ்யம் பேசிவிட்ட மாதிரி பாட்டி சிரித்தாள். பதிலுக்கு அவனும் சிரித்தான். "இந்தா, வெயிலுக்கு ரெண்டைக் கடிச்சிண்டு போ" என்று இடுப்பிலிருந்த பையில் பிதுங்கி நின்ற இரண்டு வெள்ளிரிப் பிஞ்சுகளை எடுத்து அவனது ஏந்திய கைகளில் போட்டாள். "பஸ்லே வரச்சே அணாவுக்கு நாலுன்னு வித்தான்.... கொழந்தைங்களுக்கு ஆகுமேன்னு ஒரு நாலணாவுக்கு வாங்கினேன்" என்று அவள் சொன்னதும், வேலாயுதம் ஒரு கும்பிடு போட்டுவிட்டு ---தன்னை அவள் கடக்கும்வரை நின்று பின்னர் தன் வழியே நடந்தான். சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த கௌரியம்மாள், தனது பத்து வயதில் இந்தக் கடலூரில் நன்கு செயலில் இருந்த ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள். பதினாறு வயதில் கையிலொரு குழந்தையுடன் கைம்மைக் கோலம் பூண்ட பின், இத்தனை காலமாய்த் தன் மகனையும், தன் புருஷன் பங்கில் கிடைத்த வீட்டையும் விட்டு எந்த ஊருக்கும் சென்றதில்லை. எனினும் தன் மகன் வயிற்றில் பிறந்த மூத்தமகள் கீதா, மணக்கோலம் பூண்டு பத்தே மாதங்களில், தரித்திருந்த சுமங்கலி வேடத்தை, நாடகப் பூச்சைக் கலைப்பது போல் கலைத்துவிட்டுக் குடும்பத்தை அழுத்தும் பெருஞ் சோகமாய்க் கதறிக் கொண்டு தன் மடியில் வந்து வீழ்ந்து குமுறி யழுத நாள் முதல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கடைசி சோகமாய் அவளைத் தாங்கிக் கொண்டாள் கௌரிப் பாட்டி. தன் அரவணைப்பில், தன் அன்பில், தனது கண்ணீரில், தனது ஒட்டுதலில் அவளை இருத்திக் கொள்வதையே தன் கடமையாக ஏற்றுக் கொண்டாள். அதுவரை கீதாவின்மீது, மகன் பெற்ற குழந்தை என்ற பாசம் மட்டுமே கொண்டிருந்த பாட்டி--- கணவன் இழந்த நாள் முதல் தன் உயிரையே மகன் மீது வைத்திருந்த அந்தத் தாய்---அதை மாற்றிக் கொண்டது கீதாவுக்கு வெறும் ஆறுதல் தரும் பொருட்டன்று. கௌரிப் பாட்டி தனது இறந்த காலத்தின் நிகழ் காலப் பிரதிநிதி யெனத் தன்னையே அவளில் கண்டாள். பாட்டியின் மகன் கணேசய்யர் தந்தையின் மரணத்தை--- அதனால் விளைந்த அத்யந்த சோகத்தை உணராதவர் அவரது மனைவி பார்வதி அடிக்கடி ரகசியமாகக் கடிந்து கொள்வதற்கு ஏற்ப அவர் ஒரு 'அம்மா பிள்ளை' தான். விதவையாகிவிட்ட கீதாவைப் பற்றிப் பலவாறு குழம்பிக் குழம்பிப் பின்னொரு நாள் ஹைஸ்கூல் படிப்போடு நின்றிருந்த அவளை, உபாத்திமைப் பயிற்சிக்கு அனுப்ப யோசித்து, தயங்கித் தயங்கித் தன் தாயிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவரது முடிவை வெகுவாகப் பாராட்டி அவள் ஏற்றுக் கொண்டதும், கௌரிப் பாட்டியை அவரால் அளக்கவே முடியவில்லை. ---பாட்டியம்மாள், மாறிய காலத்தில் பிறந்த கீதாவின் பாக்கியத்தை எண்ணி மனத்துள் பூரித்தாள்... பயிற்சி முடித்துப் பல காலம் உள்ளூரிலே பணியாற்றி வந்த கீதாவுக்குப் போன வருஷம்-- புதிதாகப் பிறந்து வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகிய--- நெய்வேலிக்கு உத்தியோக மாற்றல் வந்தபோதும் கணேசய்யர் குழம்பினார். "அதற்கென்ன? நான் போகிறேன் துணைக்கு...." என்று. பாட்டியம்மாள் இந்தத் தள்ளாத காலத்தில் மகனையும் குடும்பத்தையும் துறந்து தனிமைப்பட தானே வலிய முன் வந்ததற்குக் காரணம், எங்கே முப்பது வயதைக்கூட எட்டாத தன் கீதா வைதவ்ய இருட் கிடங்கில் அடைப்பட்டுப் போவாளோ என்ற அச்சம்தான். இந்த ஒரு வருஷ காலத்தில், நீண்ட விடுமுறைகளின் போது இருவரும் வந்து தங்கிச் செல்வது தவிர, சனி--ஞாயிறுகளில் நினைத்தபோது புறப்பட்டு வந்துவிடுவாள் பாட்டி. அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவளது வாடிக்கையான நாவிதன் வேலாயுதத்தையும், அதற்கு முன் அவன் அப்பனையும் தவிர, வேறு எவரிடமும் பாட்டியம்மாள் தலை மழித்துக் கொள்ளப் பழக்கப் படாததுமாகும். இப்போது வழியில் எதிர்ப்பட்ட வேலாயுதம், நாளைக் காலை அவள் வீட்டில் வந்து நிற்பான் என்று பாட்டிக்குத் தெரியும். வரவேண்டும் என்பது அவனுக்கும் தெரியும் அது வாடிக்கை. ஒரு மைலுக்கு குறைவான அந்தத் தூரத்தை அரை மணி நேரமாய் வழி நடந்து அவள் வீட்டருகே வந்தபோது கணேசய்யர் முகத்தில் தினசரிப் பத்திரிக்கையைப் போட்டுக் கொண்டு முன் கூடத்து ஈஸிச்சேரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் திறந்து வைத்த தகர டின்னும் முறத்தில் கொட்டிய உளுத்தம் பருப்புமாய், மூக்குத்தண்டில் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொண்டு கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் மருமகள் பார்வதி அம்மாள். கம்பி அழி வைத்து அடைத்த முன்புறக் குறட்டின் ஒரு மூலையில், வெயிலுக்கு மறைவாய்த் தொங்கிய தட்டியோரமாய்ச் செருப்புகள் இறைந்து கிடக்க, வாய்க்குள் ஏதேதோ பொருளற்ற சம்பாஷணைகளைத் தான் மட்டும் ராகமிழுத்து முனகியவாறு குடும்ப விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தாள் கடைசிப் பேத்தியான ஆறு வயது ஜானா. -- பாட்டி வந்து நின்றதை யாருமே கவனிக்காதபோது, கம்பிக் கதவின் நாதாங்கியை லேசாக ஓசைப்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சிறு ஒலியில் விளையாட்டு சுவாரஸ்யத்தோடு திரும்பிப் பார்த்த ஜானா, அன்பில் விளைந்த ஆர்வத்தோடு 'பாட்டி' என்ற முனகலுடன் விழிகளை அகலத்திறந்து முகம் விகஸித்தாள். "கதவெத் தெறடி" என்று பாட்டி சொல்வது காதில் விழுமுன், "அம்மா அம்மா... பாட்டி வந்துட்டாம்மா, பாட்டி வந்துட்டா'..." என்று கூவியவாறு உள்ளே ஓடினாள் ஜானா. கதவைத் திறக்காமல் தன் வரவை அறிவித்தவாறு உள்ளே ஓடும் குழந்தையைக் கண்டு பாட்டி சிரித்தாள். கணேசய்யர், முகத்தின் மேல் கிடந்த பத்திரிகையை இழுத்துக் கண் திறந்து பார்த்தார். குழந்தையின் உற்சாகக் கூப்பாட்டால் திடீரென்று எழுந்து சிவந்த விழிகள் மிரண்டு மிரண்டு வெறிக்க ஒரு விநாடி ஒன்றும் புரியாமல் விழித்தார் அவர். அதற்குள் "ஏண்டி சனியனே இப்படி அலறிண்டு ஓடிவறே' " என்று குழந்தையை வைதுவிட்டு "வாங்கோ... வெயில்லே நடந்தா வந்தேள்...... ஒரு வண்டி வெச்சுக்கப்படாதோ? " என்று அங்கலாய்த்தவாறே மரியாதையோடு எழுந்தோடி வந்து கதவைத் திறந்தாள் பார்வதி. "இதோ இருக்கிற இடத்துக்கு என்ன வண்டியும் வாகனமும் வேண்டிக் கெடக்கு? அவனானா பத்தணா குடு, எட்டணா குடும்பான்..." என்று சலித்துக் கொண்டே படியேறி உள்ளே வந்த தாயைக்கண்டதும் "நல்ல வெயில்லே வந்திருக்கயே அம்மா, பார்வதி'... அம்மாவுக்கு மோர் கொண்டு வந்து கொடு" என்று உபசரித்தவாறே ஈஸிசேரியிலிருந்து எழுந்தார் கணேசய்யர். "பாவம். அசந்து தூங்கிகொண்டிருந்தே... இன்னும் செத்தே படுத்திண்டிறேன்..." என்று அவரைக் கையமர்த்தியவாறே, ஈஸிசேரின் அருகே கிடந்த ஸ்டூல் மீது பையை வைத்து விட்டு முற்றத்திலிறங்கித் தொட்டித் தண்ணீரை அள்ளிக் கை கால் முகம் அலம்பி, தலையிலும் ஒரு கை வாரித் தௌித்துக் கொண்டாள் பாட்டி, பிறகு முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு கூடத்து ஸ்டாண்டிலிருந்த சம்புடத்தை எடுத்து "என்னப்பனே... மகாதேவா" என்று திருநீற்றை அணிந்துக்கொண்டு திரும்பி வரும் வரை, கணேசய்யர் ஈஸிசேரின் அருகே நின்று கொண்டிருந்தார். அந்த ஈஸிசேர் பாட்டிக்கு மட்டுமே உரிய சிம்மாசனம். அவள் வீட்டிலில்லாத போதுதான் மற்ற யாரும் அதில் உட்காருவது வழக்கம். அவள் ஈஸிசேரில் வந்து அமர்ந்தபின் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டு விசிறினார் கணேசய்யர். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள்போல் பாட்டி உட்கார்ந்ததும் அவள் மடியில் வந்து ஏறினாள் ஜானா. "பாட்டி வெயில்லே வந்திருக்கா...சித்தே நகந்துக்கோ... வந்ததும் மேலே ஏறிண்டு..." என்று விசிறிக் கொண்டிருந்த விசிறியால் ஜானாவைத் தட்டினார் கணேசய்யர். "இருக்கட்டும்டா....கொழந்தை' நீ உக்காந்துக்கோ.... என்று குழந்தையை மடிமீது இழுத்து இருத்திக் கொண்டாள் பாட்டி. 'இப்ப என்ன பண்ணுவியாம்' என்று நாக்கைக் கடித்து விழித்துத் தந்தைக்கு அழகு காட்டினாள் ஜானா. ஜானாவை மடியில் வைத்துக் கொண்டே பக்கத்தில் ஸ்டூலின் மேலிருந்த பையை எடுத்து அதனுள்ளிருந்த வெள்ளிரிப் பிஞ்சுகளை வரிசையாகத் தரையில் வைத்து ஜானாவின் கையில் ஒன்றைத் தந்தாள். முறுக்கிச் சுருட்டி வைத்திருந்த மாற்றுப் புடவையை கொடியில் போடுவதற்காகப் பக்கத்தில் சற்று தள்ளி வைத்தாள். பிறகு பையைத் தலை கீழாகப் பிடித்து அதனுள்ளிருந்த மூன்று படி பச்சை வேர்க் கடலையைக் கொட்டியபோது, அதனூடே ஒரு கவர் விழுந்தது. "ஆமா, மீனாவும், அம்பியும் எங்கே? காணோம்?" என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு 'இதெ உங்கிட்டே குடுக்கச் சொன்னா கீதா" என்று கவரை நீட்டினாள் பாட்டி. இருபது வயது நிறைந்த பெண்ணை அம்பியின் துணையோடு மாட்டினி ஷோ பார்க்க என்னதான் பக்கத்திலிருந்தாலும் ---எப்படி சினிமாவுக்கு அனுப்பலாம் என்று தாய் கோபித்துக் கொள்வாளோ என்ற அச்சத்தோடு கவரை வாங்கியவாறே, "ஏதோ அவள் படிச்ச நல்ல நாவலாம். படமா வந்திருக்குன்னு காலையிலிருந்து உசிரை வாங்கித்து ரெண்டு சனியன்களும். மாட்டினி ஷோ தானே.... போகட்டும்னு அனுப்பி வெச்சேன்" என்றார் கணேசய்யர். "ஓ' தொடர் கதையா வந்துதே....அந்தக் கதை தானா அது?... பேரைப் பார்த்தேன்..." என்று ஒரு பத்திரிக்கையின் பெயர், ஓர் எழுத்தாளரின் பெயர் முதலியவற்றைக் குறிப்பாகக் கேட்டாள் பாட்டி. "இதுக்காகப் போய் ஏன் கொழந்தைகளை சனியன்னு திட்டறாய்?... நோக்கும் எனக்கும் சினிமான்னா என்னன்னே தெரியாது.... இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. நம்ம கொழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனச்சிக்கோ..." என்று மகனுக்குப் புத்தி சொல்லிவிட்டு, "கவர்லே என்ன சொல்லு-- அவளைக் கேட்டப்போ, 'அப்பா சொல்லுவா' ன்னு பூடகமா குடுத்து அனுப்பிச்சாள்" என விளக்கினாள் பாட்டி. கவரை உடைத்து, கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு அதனுள்ளிருந்த ஒரே காகிதத்தில் சுருக்கமாக எழுதியிருந்த வாசகங்களை படிக்க ஆரம்பித்ததும் --- கணேசய்யரின் கைகள் நடுங்கின; முகமெல்லாம் 'குப்'பென வியர்த்து உதடுகள் துடித்தன. படித்து முடித்ததும் தலை நிமிர்ந்து எதிர்ச் சுவரில் தொங்கிய கீதாவின் மணக்கோல போட்டோவை வெறித்துப் பார்த்தார்.... தாயினருகே அமர்ந்து இனிமையான சூழ்நிலையில் மகிழ்ச்சியுடனிருந்த கணேசய்யரின் முகம் திடீரென இருளடைந்தது' நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டு தாயின் முகத்தை வெறித்துப் பார்த்தார். அவர் கையிலிருந்த கடிதம் கீழே நழுவியதைக்கூட அவர் கவனிக்கவில்லை. 'என்ன விபரீதம்' ' என்று துணுக்குற்ற பாட்டியம்மாள், தரையில் விழுந்த அக்கடிதத்தை வௌிச்சத்தில் பிடித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்; அவளால் கண்ணாடியில்லாமலே படிக்க முடியும்' "என் அன்பிற்குரிய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோருக்கு.... இந்த கடிதத்தை எழுதுகையில் ஆறு மாதங்கள் தீர்க்கமாய் யோசித்து தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தபின் தௌிந்த மனத்தோடுதான் எழுகிறேன். இந்தக் கடிதத்திற்குப் பிறகு உங்களுக்கும் எனக்கும் கடிதப் போக்கு வரத்தோ, முகாலோபனமோ கூட அற்றுப் போகலாம் என்பதும் தெரிந்தே எழுதுகிறேன். என்னோடு பணி புரியும் ஹிந்தி பண்டிட் திருராமச்சந்திரன் என்பவரை வருகின்ற ஞாயிறன்று நான் பதிவுத் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்து விட்டேன். நான் விதவை என்பது அவருக்குத் தெரிந்ததுதான். ஆறுமாத காலமாய் நான் எனது உணர்ச்சிகளோடு-- இது பாபகரமான காரியம் என்ற ஓர் அர்த்தமற்ற உணர்ச்சியோடு-- போராடித்தான் இம் முடிவுக்கு வந்தேன். உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்துக்கு ஆட்படமுடியாமல் வேஷங்கட்டித்திரிந்து, பிறகு அவப் பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்தமுப்பது வயதில்-- இவ்வளவு சோதனைகளைத் தாங்காமல்-- இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பின் இதே முடிவுக்கு வர நேரிடுமோ என்ற அச்சமும் பிறந்தே-- இப்போதே செய்தல் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்... என் காரியம் என் வரைக்கும் சரியானதே' நான் தவறு செய்வதாகவோ, இதற்காக வருந்த வேண்டுமென்றே, உங்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென்றே கூட எனக்குத் தோன்றவில்லை. எனினும் உங்கள் உறவை, அன்பை இழந்து விடுகிறேனே என்ற வருத்தம் சில சமயங்களில் அதிகம் வாட்டுகின்றது... இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வௌிச்சத்தைப் பெற்று, ஒரு புது யுகப்பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற லட்சிய நிறைவேற்றத்தில் நான் ஆறுதலும் மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன். இந்தக் காலத்தில் யார் மனம் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது. ஒரு வேளை நீங்கள் என் முடிவை ஆதரித்தா... இன்னும் ஒரு வாரமிருக்கிறது... உங்களை, உங்கள் அன்பான வாழ்த்தை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் உங்களைப் பொறுத்தவரை'கீதா செத்துவிட்டாள்' என்று தலை முழுகி விடுங்கள். ஆமாம்; ரொம்பச் சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து 'தியாகம்' செய்துவிட்டார்கள்? ஏன் செய்யவேண்டும்? உங்கள் மீது என்றும் மாறாத அன்பு கொண்டுள்ள கீதா" "என்னடா.. இப்படி ஆயிடுத்தே?" என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவோ செய்யவோ சக்தியிழந்தவளாய் ஏக்கம் பிடித்து வெறித்து விழித்தாள் பாட்டி. "அவ செத்துட்டா...தலையெ முழுகிட வேண்டியது தான்" என்று நிர்த்தாட்சண்யமான குரலில் உறுதியாகச் சொன்னார் கணேசய்யர். பாட்டி திகைத்தாள்' --தாயின் யோசனைக்கோ, பதிலுக்கோ, கட்டளைக்கோ, உத்தரவுக்கோ காத்திராமல் அந்த 'அம்மாப் பிள்ளை' முதன் முதலில் தானே ஒரு தீர்மானத்துக்கு வந்தது இது தான் முதல் தடவை. "அப்படியாடா சொல்றே?" என்று கண்களிரண்டும் நீர்க்குளமாக, வயோதிக நெஞ்சு பாசத்தால் துடிக்க, நெஞ்சில் கை வைத்துக் கேட்டாள் பாட்டி. "வேறே எப்படியம்மா சொல்லச் சொல்றே?...நீ பிறந்த வம்சத்திலே இந்தக்குடும்பத்திலே... ஐயோ...' " என்று இந்த அவலத்தைக் கற்பனை செய்யமுடியாமல் பதறினார் கணேசய்யர். 'நான் பிறந்த யுகமே வேறேடா' என்ற வார்த்தை பாட்டிக்கு வாயில் வந்து நின்றது. அப்பொழுது தான் பாட்டிக்கு ஓர் அரிய உண்மை இவ்வளவு காலத்திற்குப் பின் புரிந்தது: 'என் மகன் எனது சொல்லுக்கும் எனது உத்தரவுக்கும் காத்திருந்தது வெறும் தாயன்பால் மட்டுமல்ல; நான் ஒரு யுகத்தின் பிரதிநிதி. அது ஆசாரமான யுகம்; நான் பிறந்தது சாஸ்திரத்துக்கு அஞ்சி நடந்த குடும்பத்தில்... அதுபோல் தன் குடும்பமும் நடக்க -- நடத்தி வைக்கத் தன்னால் ஆகாவிடினும் என்னால் ஆகும் என்ற நம்பிக்கையில்-- அந்த யுகத்தை அந்த ஆசார ஜீவிதத்தைக் கௌரவிப்பதன் பொருட்டே என் சொல்லே, என் வார்த்தையை அவன் எதிர்பார்த்திருந்தான்...' என்று தன்னைப்பற்றியும், தன் மகனின் மூர்க்கமான தீர்மானம் பற்றியும், தனித்துப்போன அன்பிற்குரிய கீதாவைப்பற்றியும் எண்ணி மௌனமாய் வாயடைத்து உட்கார்ந்தாள் பாட்டி. அப்போது அங்குவந்து அவர்களை விபரீதச் சூழ்நிலைக்கு ஆட்படுத்தியிருக்கும் அந்தக் கடிதத்தை எடுத்து படித்த பார்வதி "அடி, பாவி மகளே...என் தலையிலே தீயை வெச்சுட்டியேடி' " என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள். பாட்டி, தன் இயல்புக்கேற்ற நிதான புத்தியுடன் அந்தக் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்து அந்தக் கடைசி வரிகளைப் படித்தாள்.... "ரொம்ப சுய நலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப்-பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து, 'தியாகம்' செய்து விட்டார்கள்?' --பாட்டிக்குச் 'சுருக்' கென்றது.....உதட்டைக் கடித்துக் கொண்டாள்.... இந்த வார்த்தைகளின் அர்த்தம் மற்றவர்களுக்குப் புரியாது. பாட்டிக்குப் புரியும். கீதா, பதினெட்டு வயதில் நெற்றியிலிடும் திலகத்தை மறந்தது போல், கூந்தலில் சூடும் பூவைத் துறந்தது போல்-- 'அது அவள் விதி யென்று சொல்லி அவள் சோகத்தையே மறந்து விடவில்லையா, அவளைப்பெற்ற தாயும் தந்தையும்?... கீதா இப்படியாகி வந்த பிறகுதானே பார்வதி, அம்பியையும் ஜானாவையும் பெற்றெடுத்தாள்'... --அதற்கென்ன அது தான் வாழ்கின்றவர்களின் வாழ்க்கை இயல்பு. வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து சிதைந்து, மக்கி மண்ணாகிப் பூச்சி அரிப்பதுபோல் அரித்து அரித்துப் புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை, கனவுகளை அவர்கள் அறிவார்களா? ஆனால்... கீதாவைப் போல் அவளை விடவும் இள வயதில் அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஹிந்து சமூகத்தின் வைதவ்யக் கொடுந் தீயில் வடுப்பட்டு வாழ்விழந்து, அந்த நினைவுகளையெல்லாம் கொண்டிருந்த, அந்தக் கனவுகளை யெல்லாம் கண்டிருந்த, அந்த ஆசைகளை யெல்லாம் கொன்றிருந்த கௌரிப் பாட்டி, அவற்றை யெல்லாம் கீதாவிடம் காணாமலா, கண்டுணராமலா இருந்திருப்பாள்? அதனால்தான் கணேசய்யரைப் போலவோ, பார்வதி அம்மாளைப் போலவோ... கீதா இப்படி நடந்து கொள்ளப் போவதைப் அறிந்து.. அவளை வெறுத்து உதறவோ, தூஷித்துச் சபிக்கவோ முடியாமல் 'ஐயோ' என்ன இப்படி ஆய்விட்டதே'... என்ன இப்படியாய் விட்டதே' என்று கையையும் மனசையும் நெறித்துக் கொண்டு தவியாய்த் தவிக்கிறாள் பாட்டி. பொழுது சாய்ந்து விளக்கு வைக்கும் நேரத்தில் மாட்டினி ஷோவுக்குப் போயிருந்த மீனாவும் அம்பியும் வீடு திரும்பினார்கள். வாசற்படியில் கால் எடுத்து வைத்த அம்பி, கூடத்து ஈஸி சேரில் சாய்ந்து படுத்து ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்திருக்கும் பாட்டியைக் கண்டதும் சட்டென்று நின்று திரும்பிப் பின்னால் வரும் மீனாவிடம், "பாட்டிடீ..." என்று ரகசியமாக எச்சரித்தான். 'எங்கே? உள்ளே இருக்காளா, கூடத்தில் இருக்காளா?' என்று பின் வாங்கி நின்றாள் மீனா. "சிம்மாசனத்தில்தான் சாஞ்சிண்டு தூங்கறா..." என்றான் அம்பி. மீனா தோள் வழியே 'ஸ்டைலாக' கொசுவித் தொங்கவிட்டிருந்த தாவணியை ஒழுங்காய்ப் பிரித்து, இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, மேலாடை ஒழுங்காக இருக்கிறதா என்று ஒரு முறை கவனித்த பின் தலையைக் குனிந்து சாதுவாய் உள்ளே நுழைந்தாள். உள்ளே வந்த பின்தான் பாட்டி தூங்கவில்லை என்று தெரிந்தது. அப்பா ஒரு பக்கம் நாற்காலியிலும் அம்மா ஒரு பக்கம் முகத்தில் முந்தானையைப் போட்டுக் கொண்டு விம்மியவாறு ஒரு மூலையிலும் விழுந்து கிடப்பது என்ன விபரீதம் என்று புரியாமல் இருவரும் திகைத்து நின்றனர். அப்போது ஜானா சிரித்துக் கொண்டே அம்பியிடம் ஓடி வந்தாள். "பாட்டி வெள்ளிரிப் பிஞ்சு வாங்கியாந்தாளே..." என்ற ஜானாவின் குரல் கேட்டுப் பாட்டி திரும்பிப் பார்த்தாள் மீனாவை. "எப்ப வந்தேள் பாட்டி?" என்ரு கேட்டுவிட்டு "என்ன விஷயம்-- இதெல்லாம் என்ன?" என்று சைகையால் கேட்டாள் மீனா. பாட்டியின் கண்கள் குளமாயின. மீனாவைப் பார்க்கும்போதுதான் அவளுக்கு இன்னொரு விஷயமும்-- கணேசய்யர் கீதாவைத் தலை முழுகச் சொல்வதன் காரணம், பார்வதியம்மாள் கீதாவைச் சபிப்பதன் நியாய ஆவேசம் இரண்டும்--புரிந்தது பாட்டிக்கு. அங்கே கிடந்த அந்தக் கடிதத்தை மீனா எடுத்துப் படித்தாள். "அதை நீ படிக்க வேண்டாம்' என்று தடுக்க நினைத்தாள் பாட்டி. பிறகு ஏனோ 'படிக்கட்டுமே' என்று எண்ணி மீனாவின் முகத்தையே உற்றுக் கவனித்தாள். மீனாவின் முகம் அருவருப்பால் சுளித்தது. "அடி நாசமாப் போக" என்று அங்கலாய்த்தவாறே தொடர்ந்து கடிதத்தைப் படித்தாள். அவள் தோள் வழியே எக்கி நின்று கடிதத்தைப் படித்த அம்பி கூட விளக்கெண்ணெய் குடிப்பது போல் முகத்தை மாற்றிக் கொண்டான். வீடே சூன்யப் பட்டது. ஊரெல்லாம் பிளேக் நோய் பரவிக்கிடக்கும் போது வீட்டில் ஒரு எலி செத்து விழக்கண்டவர்கள் போல் ஒவ்வொருவரும் மிகுந்த சங்கடத்தோடு இன்னொருவர் முகத்தைப் பார்த்தனர். இரவு முழுதும் கௌரிப் பாட்டி தூங்கவில்லை. சாப்பிடவில்லை; கூடத்து ஈஸிசேரை விட்டு எழுந்திருக்கவும் இல்லை. மகனைப் பார்த்தும் மருமகளைப் பார்த்தும், மற்றப் பேரக்குழந்தைகளைப் பார்த்தும், கீதாவை நினைத்தும் பெருமூச் செறிந்து கொண்டிருந்தாள். 'வழக்கத்துக்கு விரோதமாய் என்னை வழியனுப்ப பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, பஸ் புறப்படும் போது முந்தானையால் கண்களைக் கசக்கிக் கொண்டாயடி கீதா? இப்போதல்லவா தெரிகிறது... பாட்டியை நிரந்தரமாப் பிரியறமேன்னுட்டு, பாவம் கொழந்தெ கண்கலங்கி நின்னுருக்கேன்னு... இப்பன்ன புரியறது... கண்ணிலே தூசு விழுந்திருக்கும்னு நினைச்சேனே பாவி'-- 'என்னடி இப்படி பண்ணிட்டியே' ' என்று அடிக்கடி தன்னுள் குமுறிக் குமுறிக் கேட்டுக் கொண்டாள் பாட்டி. விடிகின்ற நேரத்துக்குச் சற்று முன்பு தன்னையறியாமல் கண்ணயர்ந்தாள். கண்மூடிக் கண் விழித்தபோது மாயம் போல் விடிவு கண்டிருந்தது. தெருவாசற்படியின் கம்பிக் கதவோரமாக கைப் பெட்டியுடன் வந்து காத்திருந்தான் வேலாயுதம். கண் விழித்த பாட்டி-- நடந்த தெல்லாம் கனவாகி விடக்கூடாதா என்று நினைத்து முடிக்கு முன் 'இது உண்மை' என்பது போல் அந்தக் கடிதம் ஸ்டூலின் மீது கிடந்தது. அந்த கடிதத்தை எடுத்து மீண்டும் படித்தாள் பாட்டி. அப்போது அறைக்குள்ளிருந்து வந்த கணேசய்யர், இரவெல்லாம் இதே நினைவாய்க் கிடந்து மறுகும் தாயைக் கண்டு தேற்ற எண்ணி "அம்மா வேலாயுதம் வந்திருக்கான்... அவள் செத்துட்டானு நெனைச்சித் தலையை செரைச்சி தண்ணிலே போயி முழுகு..." என்றார். "வாயை மூடுடா..." என்று குமுறி எழுந்தாள் பாட்டி. காலங் கார்த்தாலே அச்சான்யம் பிடிச்ச மாதிரி என்னபேச்சு... இப்ப என்ன நடந்துட்டுதுன்னு அவளைச் சாகச் சொல்றே?..." என்று கேட்டுவிட்டு, தாங்க முடியாத சோகத்துடன் முகமெல்லாம் சிவந்து குழம்பக் கதறியழுதாள் பாட்டி. பிறகு சிவந்த கண்களைத் திறந்து ஆத்திரத்துடன் கேட்டாள். "என்னடா தப்புப் பண்ணிட்டா அவ?... என்ன தப்புப் பண்ணிட்டா, சொல்லு,' என்று தன் தாய் கேட்பதைக் கண்டு, கணேசய்யருக்கு ஒரு விநாடி ஒன்றுமே புரியவில்லை. "என்ன தப்பா?...... என்னம்மா பேசறே நீ? உனக்குப் பைத்தியம் புடிச்சிடுத்தா?" என்று கத்தினார் கணேசய்யர். அடுத்த விநாடி தன் சுபாவப்படி நிதானமாக மகனின் முகத்தைப் பார்த்தவாறு, அமைதியாக யோசித்தாள் பாட்டி. தன் மகன் தன்னிடம் இப்படிப்பேசுவது இதுவே முதல் தடவை. பாட்டி மெல்லிய குரலில் நிதானமாய்ச் சொன்னாள்: "ஆமாம்டா... எனக்குப் பைத்தியந்தான் ... இப்பப் பிடிக்கலைடா... இது பழைய பைத்தியம்? தீரமுடியாத பைத்தியம்... ஆனால் என்னோட பைத்தியம்-- என்னோட போகட்டும் அந்தப் பைத்தியம் அவளுக்குப் 'படீர்' னு தௌிஞ்சிருக்குன்னு அதுக்கு யார் என்ன பண்றது?...... அவதான் சொல்லிட்டாளே-- என் காரியம் என் வரைக்கும் சரி, வேஷம் போட்டு ஆடி அவப் பேரு வாங்காம விதரணையா செஞ்சிருக்கேன்னு..." "அதனாலே சரியாகிடுமா அவ காரியம்?" என்று வெட்டிப் பேசினார் கணேசய்யர். "அவ காரியம் அவ வரைக்கும் சரிங்கறாளே அவதான்... அதுக்கென்ன சொல்றே?" என்று உள்ளங் கையில் குத்திக் கொண்டாள் பாட்டி. "சாஸ்திரம் கெட்ட மூதேவி. ஆசாரமான குடும்பத்துப் பேரைக் கெடுத்த சனி -- செத்துத் தொலைஞ்சுட்டானு தலையை முழுகித் தொலைன்னு சொல்றேன்" என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினார் கணேசய்யர். பாட்டியம்மாள் ஒரு விநாடி தன்னையும் தன் எதிரே நிற்கும் மகனையும் வேறு யாரோ போல் விலகி நின்று பார்த்துவிட்டு, ஒரு கைத்த சிரிப்புடன் கூறினாள். "நம்ம சாஸ்திரம்...ஆசாரம்' அப்படீன்னா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா? என்னை என்ன பண்ணித்து தெரியுமா அந்த சாஸ்திரம்?....அப்போ நீ பால் குடிக்கிற கொழந்தையடா...எனக்குப் பதினைஞ்சி வயசுடா' என் கொழந்தை, என் மொகத்தெப் பார்த்துப் பேயைப் பார்த்ததுபோல் அலறித்தேடா....' பெத்த தாய் கிட்டே பால்குடிக்க முடியாத குழந்தை கத்துவே; கிட்டே வந்தா மொட்டையடிச்ச என்னைப் பார்த்து பயத்துலே அலறுவே.... அப்படி என்னை, என் விதிக்கு மூலையிலே உட்காத்தி வெச்சாளேடா' அந்த கோரத்தை நீ ஏண்டா பண்ணலே கீதாவுக்கு?.....ஏன் பண்ணலே சொல்லு" என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்கும்போது, கணேசய்யரும் கண்களை பிழிந்து விட்டுக் கொண்டார்' அவள் தொடர்ந்து பேசினாள். "ஏண்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர் புடவைக் கட்டிக்கச் சொல்லித்தோ? தலையைப் பின்னிச் சுத்திண்டு பள்ளிக்கூடம் போய்வரச் சொல்லித்தோ? தன் வயித்துக்குத் தானே சம்பாத்திச்சுச் சாப்பிடச் சொல்லித்தோ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான் சரின்னேன், ஏன்?.... காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான்' நான் பொறந்த குடும்பத்தலேன்னு சொல்றயே.... எனக்கு நீ இருந்தே' வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும் அப்படி இருந்தது. சீதா பண்ண காரியத்தை மனசாலே கூட நெனக்க முடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாவும் இருந்தது. இப்போ முடியலியேடா.... எனக்கு உன் நிலைமையும் புரியறது---அவளும் புரிஞ்சுதானே எழுதி இருக்கா....உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாடா? அவளுக்கு அது வேண்டாம்னுட்டா....ஆனா, டேய் கணேசா.... என்னெ மன்னிச்சுக்கோடா... எனக்கு அவ வேணும்' அவதாண்டா வேணும்.... எனக்கு இனிமே என்ன வேண்டி இருக்கு' என் சாஸ்திரம் என்னோடேயே இருந்து இந்தக் கட்டையோட எரியும்.... அதனாலே நீங்க நன்னா இருங்கள்.... நான் போறேன்.... கீதாவோடேயே போயிடறேன்.... அது தான் நல்லது. அதுக்காக நீ உள்ளூரத் திருப்திப் படலாம்---யோசிச்சுப் பாரு இல்லேன்னா அவளோட சேத்து எனக்கும் ஒரு முழுக்குப் போட்டுடு' நான் வர்ரேன்" என்று கூறியவாறே மாற்றுப் புடவையைச் சுருட்டிக் காக்கிப் பைக்குள் திணித்தவாறு எழுந்தாள் பாட்டியம்மாள். "அம்மா' ஆ...." என்று கைகளைப் கூப்பிக்கொண்டு தாரை தாரையாய்க் கண்ணீர் வடித்தார் கணேசய்யர். "அசடே....எதுக்கு அழறே? நானும் ரொம்ப யோசிச்சுத்தான் இப்படி முடிவு பண்ணினேன்... என்ன பண்ணினாலும் அவ நம்ம கொழந்தேடா" என்று மெதுவாய்ச் சொல்லிவிட்டு உட்புறம் திரும்பிப் பார்த்தாள். "பார்வதி நீ வீட்டெச் சமத்தாப் பார்த்துக்கோ..." என்று எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள் பாட்டி. "எனக்கு உடனே போயி கீதாவைப் பார்க்கணும்" என்று தானே சொல்லிக் கொண்டு திரும்பும்போது, வாசற்படியில் நின்றிருந்த வேலாயுதத்தைக் கண்டாள் பாட்டி. "நீ போடாப்பா....நான் அவசரமாப் போறேன் நெய்வேலிக்கு" என்று அவனிடம் நாலணாவைத்தந்து அனுப்பினாள். 'இனிமேல் இவனுக்கு இங்கு வேலை இல்லை---அதற்கென்ன? உலகத்தில் என்னென்னமோ மாறுகிறது' நான் ஒரு நாவிதனைக்கூட மாற்றிக்கொள்ளக் கூடாதா?' என்று எண்ணிச் சிரித்துக்கொண்டாள். இடுப்பில் பையை வைத்துக் கொண்டு வாசற்படியிலிறங்கிய பாட்டி, ஒரு முறை திரும்பி நின்று "நான் போயிட்டு வரேன்" என்று மீண்டும் விடை பெற்றுக்கொண்டாள். அதோ, காலை இளவெயிலில், சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துக்கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்..... வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால்?...... ஓ' அதற்கு ஒரு பக்குவம் தேவை' ----- #2. இல்லாதது எது? 'அதை' அவன் மறந்து வெகு நாட்களாயிற்று. இந்தப் பிரபஞ்சத்துக்கே மூல வித்தான 'அதை' மறந்து---ஏன் அதை மறுத்தும்---இந்தப் பிரபஞ்சத்தையே தனதாக்கிக் கொள்ளப் போட்டியிட்டு முன்னேறி முன்னேறி வெற்றி கொள்ளும் அவன், வெறியும் கொண்டு, அந்த வெறியில் தன்னை மறந்து தன், பிறவியை மறந்து, தன் காரியத்தில் கண்ணாய் இருந்து கொண்டிருப்பதைக் கண்ட 'அது' தானே அவன் எதிரில் வந்து திடீரென்று பிரசன்னமாயிற்று. அப்பொழுதும் அவன் 'அதை'க் கவனிக்கவில்லை. அணுவைப் பிளப்பதில் வெற்றி கண்ட அவனது தீட்சண்ய மிக்க விழிகள், அண்டங்களையெல்லாம் துருவி ஆராய்வதில் முனைந்திருந்தன. அவனைச் சுற்றிலும் நவ நவமான, மிக நவீன யந்திரங்களும், வேகத்தை---தூரத்தை---காலத்தைத் துல்லியமாய் அளக்கும் கருவிகளும் இருந்தன. கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் சுழலும் கிரகங்களில் என்னென்ன நிகழ்கின்றன என்று கண்முன் காட்டும் கருவி ஒன்றில், அவன் முகம் குனிந்திருந்தது. அவனது இரு செவிகளையும் அடைத்திருந்த கருவியின் வாயிலாக அவன் மற்றொரு உலகத்துச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் எதிரில் வந்து தனது பிரசன்னத்தை உணர்த்தியும் அவன் தன்னை ஏறிட்டுக் காணாதிருப்பதைக் கண்டு, 'அது' கோபம் கொள்ளும் நேரத்தில்; குனிந்திருந்த அவன் தலையும், அதில் பஞ்சாய் நரைத்திருந்த சிகையும், 'அதன்' பார்வையில் பட்டது. 'ம்.....இன்னும் இவன் இதை வெல்லக் கற்றுக்கொள்ளவில்லையே' ' என்ற நினைவில் கொஞ்சம் சமாதான முற்றது அது; மூப்பையும் மரணத்தையும் வெல்ல இயலாத இந்த மனித ராசியிடம் போய் நமது கோபத்தைக் காட்ட வேண்டாம் என்று அமைதி அடைந்தது அது. ஒரு காலத்தில் தனது பிரசன்னத்துக்காக, வாழ்க்கையையும், மனித பந்தங்களையும் துறந்து, வனமேகி, எண்ணற்ற காலம் கண்மூடித் தவமிருந்து காணமுயன்று தோற்ற ---அல்லது வென்ற அந்த மனிதனின் வாரிசா இவன்?...... 'எதிரில் வந்து---வலுவில் நிற்கும் என்னை ஏறிட்டுப் பாராத இவன் விழிகள் குருடோ?..... இல்லை..... இல்லை;..... இவன் பார்வை, இவனுக்கு எட்டாத தூரத்தில் நான் இருத்திய கிரகங்களை--- எனது திரைகளையும் விலக்கிப் பார்க்கின்றன.... அந்த விஷயத்தில் இவன் வென்றுதான் விட்டான்..... "ஏ' ஜீவாத்மாவே என்னைப்பார்'...." 'அது' அழைத்த குரல், அவன் செவியுட் புகாதவாறு அந்தக் கருவிதான் அவன் காதை அடைத்துக் கொண்டிருக்கிறதே....' ஔியுருவாய், ஒலியுறுவாய், உருவற்ற உருவாய் அவன் எதிரே பிரசன்னமாகியிருந்த 'அது', தன் இருப்பை அவனுக்கு உணர்த்த முயன்றது. திடீரென்று கண்களைப் பறிக்கும் பிரகாசமும், செவிப்புலனைப் போக்கும் இடியோசையும்--- அவனது காரியத்துக்கு இடைஞ்சல் விளைவித்தன. 'அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் யந்திரங்களிலோ, அந்தக் கருவிகளிலோ ஏதேனும் கோளாறு நிகழ்ந்து விட்டிருக்குமோ' என்ற பதைபதைப்பில் அவற்றின் இயக்கத்தை அவசர அவசரமாய் நிறுத்திவிட்டு, அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் கேந்திர ஸ்தானத்தைப் பரிசீலித்தான், அந்தக் கிழட்டு விஞ்ஞானி. எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. 'பின் எங்கிருந்து வந்தன அந்தப் பெரு வௌிச்சமும், இடி முழக்கமும்' என்று அவன் தனது நரைத்த தலையை--நரம்புகள் நௌிந்து சருமம் சுருங்கிய கரத்தால் சொறிந்து கொண்டே யோசித்தான். அப்பொழுது.... "ஏ ஜீவாத்மாவே...." என்ற குரல் கேட்டுத் தனது நரைத்த சிறிய தாடியை ஒரு விரலால் நெருடிக்கொண்டே, புருவத்தைச் சுளித்தவாறு கண்களை மூடி சிரம் நிமிர்த்தி அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் நடுவில் ஒற்றை மரமாய் நின்று திகைத்தான் அவன். "ஏ ஜீவாத்மாவே, என்னைப்பார்' " என்ற அதன் குரல் எட்டுத் திக்குகளிலிருந்தும் பிறந்து எதிரொலியின் கனபரிமாணங்களுடன் அவ்வாராய்ச்சிக் கூடத்தின் மையத்தில் நின்றிருந்த அந்த மனிதனை வியூகம் அமைத்துத் தாக்குவது போல் ஒலித்தது. "யார் நீ?...." என்று முகட்டை நோக்கி நிமிர்ந்த தலையைத் தாழ்த்தாமல், இமைகளையும் திறக்காமல் கேட்டான். "நான்தான் பரமாத்மா' " "ஓ' வழி தவறி வந்து விட்டாய்....இந்த உன் சுய அறிமுகம், அதோ பக்கத்திலிருக்கிறதே மாதா கோயில், அல்லது தூரத்தில் இருக்கிறதே ஒரு மசூதி, அல்லது உன்னையே கல்லாக்கி சிறை வைத்திருக்கிறதே கலைக்கோயில் ஒன்று, அங்கே ஔித்தால் அவர்கள் சாபல்ய முறுவார்கள்.....போ, என் காரியத்துக்குக் குந்தகம் செய்யாதே' " "ஏன் விஞ்ஞானியான உன்னிடத்தில் வேலை இல்லை என்கிறாயா?" "ஆம்; எனக்குத்தான் உன்னிடம் வேலை இருக்கிறது" என்றான் அவன். அவன் பதில் அதற்குப் புரியவில்லை. அதன் மௌனத்தைக்கண்டு, வாய் அடைத்து நிற்கும் பரமாத்மாவின் நிலையைக் கண்டு அந்தக் கிழவன் தனக்குள் சிரித்துக் கொண்டே சொன்னான்: "உனக்கு தெரியாத பாஷையை-- தெரிய அவசியமில்லாத பாஷையை நீ ஏன் பேசுகிறாய்? மனிதனின் பாஷையை பேச நீ முயன்றால், அதுவும் மனிதனிடமே பேச முயன்றால், நீ தோற்றுத்தான் போவாய். உனது பாஷையையும், உனது பேச்சையும் உற்றுக் கேட்டு உணர்ந்து கொண்டிருக்கிறேன் நான். மலையில் தவழும் அருவியில் உன் பேச்சைக் கேட்டு, அதன் ரகசியத்தை அறிந்து, அதிலிருந்து மின்சாரம் கண்டோம். இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை ஊதி ஊதி சுழலும் வாயு மண்டலத்தில் உன் மொழியைக் கேட்டு இருதயத்தின் துடிப்பெல்லாம் அதில் பிரதிபலிக்கும் அதிசயத்தைக் கண்டுபிடித்து வானொலியையும், அதைச் சார்ந்த எண்ணற்ற பல சாதனைகளையும் சாதித்தோம். புரியாதா பாஷையாய் எட்டாத் தொலைவிலிருந்து கண் சிமிட்டும் தாரகைகள் என்னும் உனது நயன பாஷைகளையும் புரிந்து செயல்பட முயன்று, எங்களுக்கு நீ விதித்த எல்லையையும் மீறி, உன்னால் பூட்டி வைக்கப்பட்ட கோடானு கோடி வானத்து ரகசியங்களை எல்லாம் கொண்டு வந்து, இந்த எளிய புழுதிபடிந்த பூமியில் போட்டு உடைத்துக் கொண்டிருக்கும் எங்கள் பாஷையை நீ பேச முயல்வது வீண். நீ உனது பாஷையை பேசிக்கொண்டே இரு. ஒரு நாள் உன் குரலிலிருந்து நீயே சிக்கிக் கொள்வாய். உன்னைத் தேடி வந்து உன்னைச் சிறைப் பிடிப்பதோ, அல்லது நீயே இல்லை என்று உணர்த்துவதிலோதான் எனக்குப் பெருமை. உனது பிரசன்னம் எங்களுக்குத் தேவையற்றது. அதைத்தான் நான் குறிப்பிட்டேன். உனக்கு என்னிடம் வேலையில்லை. எனக்கு உன்னிடம் வேலை இருக்கிறதென்று." அவன் இன்னும் தன் கண்களை மூடிக்கொண்டே பேசுவது அதற்கு வியப்பளித்தது. "என்னைப் பார், பிறகு நம்புவாய்" என்றது அது. "முடியாது. நீ என் கண்களுக்குத் தெரிந்தால், அது வெறும் ஜாலமாகிவிடும். கண்ணும், செவியும், வாயும், மூக்கும், மெய்யுணர்வும் அல்ல உன்னை நிர்ணயிப்பது. இவற்றுக்கெல்லாம் எஜமான் என் அறிவு. அறிவின் கருவிகளே இந்தப் புலன்கள் யாவும், என் கண்ணுக்கு நீ தெரிந்தால், என் அறிவு உன்னை மறுத்து உன்னை தோலுரித்து நீ யார் என்று எனக்குச் சொல்லிவிடும்; இந்த நிமிஷம் வரை நீ, நீயல்ல; நீ எனது பிரமை." "நீ நாஸ்திகனா?" என்று கேட்டது அது. "இல்லை" என்றான் அவன். "நீ ஆஸ்திகன்தானே?" என்றது அது. "அதுவுமில்லை" என்றான் அவன். அது மீண்டும் வாயடைத்து மௌனமாயிற்று. அவன் சிரித்தவாறே சொன்னான்: "நான் மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்வேன். நீ போய் உனக்கு தெரிந்த உனது பாஷையில் பேசிக் கொண்டிரு. அல்லது அறிவின் பாஷையை நம்பாது அர்த்தமற்ற முணுமுணுப்புடன் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'ஆஸ்திகர்'களிடம் போய்ப் பேசு. அல்லது உன்னை மறுத்து உன்னைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்கும் 'நாஸ்திகர்'களிடம் போய்ப் பேசு---இருவரும் நம்பிவிடுவார்கள். அவர்களின் தீராத விவகாரமாவது தீர்ந்து தொலையும் ஆம்; அகண்டத்திலுள்ள கோளங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்து--அந்த ஆகர்ஷணத்தில் ஸ்திதி பெற்றிருப்பது போலத்தான், இந்த ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஒருவரின் தர்க்கத்தில் மற்றொருவர் இழுத்துக் கொண்டும், பறித்துக் கொண்டும் இருப்பதால் இருக்கை கொண்டுள்ளனர். என் காரியம் அதுவல்ல, அறிவும் கரமும்தான் மனிதருக்குத் தேவை. அவற்றின் காரியங்கள் முற்றிலும் முடிந்த பிறகு, ஆத்மாவைப் பற்றி யோசிக்கலாம். நீ போ' " "ஏ' அறிவாத்மாவே.....உன் அறிவின் வல்லமையும் கரங்களின் நுண்மையும் ஒருபுறம் இருக்கட்டும். நீ துருவித் துருவி ஆராய்வதாகவும் கண்டுபிடிப்பதாகவும் பெருமையடித்துக் கொள்கிறாயே, அந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அவற்றின் நியதிக்குட்பட்ட போக்கையும் காண உன் மனம் வியப்படைய வில்லையா? அந்த வியப்புக்கு மூல வித்தான அர்த்தமுள்ள ஓர் வஸ்துவைப் பற்றி எண்ணிப் பார்க்கையில், உனக்கொரு பிரமிப்பு விளையவில்லையா? அந்த பிரமிப்பால் உன் அறிவும் கரமும் குவிந்து அடக்கமுறவில்லையா? அந்தச் சக்தியின்முன் தாளத்திற்குட்பட்ட சங்கீதம்போல், பிரபஞ்ச இயக்கத்தையே ஒரு நியதிக்குட்படுத்தி, இணைத்து இயக்கும் அந்தப்பேராற்றலின் முன் நீ மிகவும் அற்பம் என்று உனது கண்டுபிடிப்பே உணர்த்தவில்லையா?" "இல்லை, 'நான்' எனபது முன்னு மற்ற பின்னு மற்ற இடைநிலை என்று எண்ணி, தனக்கு இருபுறமும் தொடர்ந்து வந்ததும் வருவதுமான சங்கிலிகளைத் துண்டித்துக்கொண்டு, தன்மயமான 'நான்' மட்டுமே ஸ்திரப்படுத்த முயன்று உன்னைத் தொழுதுகொண்டு இருக்கும் மூடாத்மாக்களுக்குத்தான் அவ்வித பிரமிப்பு உண்டாவது சாத்தியம். ஆனால் நான், இந்த நூற்றாண்டில் வாழும் 'நானா'கிய எனக்கு வெகு சாதாரணமாய் இருக்கும் எத்தனையோ விஷயங்கள், எனக்கு முந்தைய நூற்றாண்டுகளில் வாழ்ந்த 'நான்'களுக்குப் பிரமிப்பாய்த் தோன்றி, அந்த மயக்கத்தில் உன் காலடியில் அவர்கள் வீழ்ந்தனர் என்று அறிந்தவன். ஆனால் இன்று எனக்குப் புரியாத புதிர்கள் எத்தனை கோடி இருப்பினும் அவற்றுக்காக இந்த வினாடி நான் பிரமிப்புற்ற போதிலும் இவை யாவும் தௌிவடையும், எனக்குப் பின்னால் வரும் 'நான்'களுக்கு ரொம்ப அற்பமான உண்மைகளாய் விளங்கும் என்று நம்புகிறேன். அதனால்தான் எவ்வித மயக்கத்துக்கும் ஆளாகாமல், உன் காலில் விழாமல் என் காரியத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கெல்லாம் அடிப்படை எங்கள் அறிவுப் புலன். ஒரு நீண்ட முடிவற்ற சங்கிலியின் ஒரு கண்ணியாக விளங்கும் நான், எனது கருமத்தை நிறைவேற்றுவதைத் தவிர மற்ற எதைப்பற்றிய பிரமைகளையும் லட்சியப்படுத்த மறுக்கிறேன். எனக்குப் பின்னால் வரும் 'நான்'என்ற கண்ணி ஒவ்வொன்றும் அவ்விதமே செயல்படும். இந்த 'நானென்னும்' கண்ணிகளில் ஏதோ ஒன்று, வரப்போகும் ஏதோ ஒரு காலத்தில் ஆற்ற வேண்டிய காரியங்கள் அனைத்தையும் முடித்து. பின், வழி தெரியாமல் திகைத்து நின்றுவிடுமானால், அப்போது நீ எதிர்ப்படுவாயானால், அந்த 'நான்' ஒருவேளை உன் காலில் விழலாம். ஆனால் அவ்விதம் நிகழப் போவதில்லை. ஏனெனில் அறிவு என்ற எமது மகத்தான புலன், எந்த அமைப்பிலும் சிக்கி 'இவ்வளவே' என்ற வரையறையில் நிற்கத் தகுந்தது அல்ல. இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு விரிந்ததோ, அத்தகைய விரிவு மிகுந்தது அறிவு. ஆகையினால் அந்த 'நான்' என்ற அறிவின் முன் 'நீ' என்ற பிரமைதான் மண்டியிட வேண்டும்---ஆம்; மானுடம் வெல்லும். பிரமைகள் நீங்கும்; அல்லது விளக்கப்படும்." 'அது' அவனது பிரசங்கத்தைக் கேட்டு, அரை மனத்துடன் சிரித்துவிட்டு, பின்னர் கேட்டது. "அறிவின் அடிமையே...உன் சர்வ வல்லமை பொருந்திய அறிவு, உனது ஊன் பொதிந்த உடம்புக்கு உட்பட்டதுதானே?" "ஆம்' " "சரி, உன் உடம்புக்கு ஏற்படும் நோய், மூப்பு, மரணம் என்ற விதியின்படி அதுவும் செத்துவிடுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அந்த அறிவால் இந்த விபத்துகளைத் தடுத்துவிட முடியும் என்றுகூட நீ நம்புகிறாயா?" "இல்லை, நான் அவ்விதம் நம்பவில்லை; அதற்கு அவசியமுமில்லை. ஏனெனில் என்னை மட்டுமே---எனது அறிவை மட்டுமே--முன்னுமற்ற பின்னுமற்ற அனாதியாய் எண்ணித் தவிக்கும் மூடாத்மா அல்ல நான். எனக்கு நோயும், மூப்பும், மரணமும் ஏற்படலாம். அதனால் என்ன? நான் இளமை இழந்து மூப்படைவதால் மனித குலமே இளமை இழந்து மூப்படைந்து விடுகிறதா? நான் மரணமுற்று விடுவதால்--உலகமே அஸ்தமித்துவிடப் போகிறதா? என் அறிவு நைந்து போவதால், மனித குலத்தின் அறிவே நைந்துவிடப் போகிறதா? அப்படி இருக்கும் பட்சத்தில் எங்கள் அறிவு அதற்கும் ஒரு மார்க்கம் அமைத்திருக்கும். அது அவசியமில்லை என்பதினாலேயே அந்த முயற்சியில் நாங்கள் இறங்கவில்லை. தனி மனிதன் இறந்து படலாம். அவனது அறிவும், அதன் ஆற்றலும் அழிந்துவிடுவதில்லை. மனித அறிவே ஸ்திரமாய், சிரஞ்சீவியாய் இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் சக்தி பெற்றது......" "போதும் போதும் உங்கள் அறிவின் பெருமை' விஷயத்துக்கு வருவோம்" என்று சொல்லிவிட்டு, 'அது' சில வினாடிகள் அமைதியாய் இருந்தது. அந்த அமைதியான வினாடிகளில் 'அது' மனிதனின் அறிவின் மீது கொண்டுவிட்ட பொறாமையும், அந்த அறிவை அபகரிக்க வழி தெரியாமல் பொருமும் ஏக்கமும் வௌிப்பட்டன. சற்று நேரத்துக்குப் பின் வஞ்சகமும், தன்னகங்காரமும் மிகுந்து கர கரக்கும் குரலில் 'அது' அவனை மிரட்டியது. "அற்ப மனிதனே, சாகப் பிறந்தவனே இந்த நிமிஷம் உன் உயிரை நான் எடுத்துக்கொள்ள முடியும். சம்மதம்தானா?" அந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த கிழட்டு விஞ்ஞானி ஒரு வினாடி திகைத்தே போனான். தனது அனுபவத்தை நம்பவும் முடியாமல், தன் உயிரை இழக்கவும் மனமில்லாமல், குழம்பி நின்றவன் 'சரி விவகாரம் என்று வந்தாகிவிட்டது. பார்த்துவிடுவோம்' என்று எண்ணி, தௌிவான குரலில் சொன்னான்: "நான் சாவதற்கு அஞ்சவில்லை. நான் முக்கியமான சில கண்டுபிடிப்புகளைக் குறித்துக் கொண்டிருக்கிறேன். எனது குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு பல சாதனைகளைப் புரியலாம்; அவற்றை முடித்தபின் நான் சாகத் தயார்" என்று அவசர வேகமாய் ஓடித் தன் இருக்கையில் அமர்ந்து, 'போனை' எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு அந்தக் கருவிகளை இயக்க ஆரம்பித்தான். "நில்....நில்' சாவு என்றதும் அவ்வளவு அவசரமா? அப்படி முன்னறிவிப்போடு சாவு வருவதில்லை. நான் வந்ததற்கான காரியத்தை உன்னிடம் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை....என்னை நீ கண் திறந்து பார்க்காவிட்டாலும் போகிறது. செவி திறந்து, கவனமாய்க் கேள் நான் உன் உயிரைப் பறித்துச் செல்ல வரவில்லை. உனக்கு, மனிதர்களாகிய உங்களுக்கு முன் யோசனை இல்லாமல் அதிகப்படியான புலன்களை அளித்து விட்டதாக நான் உணர்கிறேன். அதனால் நீங்கள் துன்பப்படுகிறீர்கள். ஆகையினால் உனக்கு இருக்கும் புலன்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு விடுவது என்று தீர்மானித்து விட்டேன். என் தீர்மானத்தின்படி உனது ஆறு புலன்களாகிய கண், மூக்கு, வாய்....செவி, மெய், அறிவு ஆகியவற்றில் ஒன்றை நான் எடுத்துக் கொள்ளப் போவது நிச்சயம். ஏனெனில் எதை நீ இழக்கப் போகிறாயோ, அது எனக்கு அவசியம் தேவை. ஆனால், ஒரு சலுகை தருகிறேன். இவற்றில் எதை நீயே இழக்கச் சம்மதிக்கிறாயோ, அதையே நான் எடுத்துக் கொள்வேன். சீக்கிரம் சொல்" என்றது 'அது' 'ஒன்றை நான் எடுத்துக் கொள்ளப் போவது நிச்சயம்' என்ற அதன் குரலும், 'அது எது என்று நீ தீர்மானம் செய்' என்ற சலுகையும் அவனை வெகுவாய்ச் சிந்திக்க வைத்தன. 'அறிவை இழக்கக் கூடாது. கண்களை இழக்க முடியாது. அதைப்போலவே செவிப் புலன், மெய்யுணர்வு வாய்---ம். இவற்றில் எதை இழந்தாலும் பயனற்றுபோகும் வாழ்க்கை. வேண்டுமானால், மூக்கை இழந்து விடலாமா? மோப்ப உணர்வு இல்லாவிட்டால் உண்ண முடியாதே; உண்ணா விட்டால் உடல் நைந்து போகும்---நோய், மூப்பு, மரணம்--இவ்விதம் குழம்பிய கிழவன் 'அது' இவ்விதம் கேட்பதில் ஏதோ சூது இருக்கிறது என்று சந்தேகப்பட்டான். ஆம்; மனிதனின், அவன் அறிவின் மிகச் சிறப்பான அம்சமே இந்தச் சந்தேகப்படும் குணம்தான். சந்தேகம் ஆராய்ச்சிக் கருவியாய் அமைகிறது. அதிலிருந்தே யூகம் பிறக்கிறது; செயல் விளைகிறது. ஆகையால் 'உன் சித்தத்துக்கு ஏற்ப எதையாயினும் எடுத்துக் கொள்' என்று கூறி விடலாமா, என்று யோசித்தான். அவ்விதம் சொன்னால் அடுத்த வினாடியே தான் இழக்கப் போவது தன் அறிவு என்பதையும் அவன் உணர்ந்தான்....அறிவினும் உயர்ந்த புலன் ஒன்று தனக்கு விளையலாகாதா என்று கற்பனை செய்தான். கிழவனின் முகத்தில் புன்னகை ஔிவீசிற்று; "ஏ பரமாத்மாவே, உனது சித்தப்படி என்னிடம் இப்போதுள்ள ஆறு புலன்களில் எதை வேண்டுமானாலும் நீ எடுத்துக் கொள்ளலாம். ஆனால்....ஆனால்....." "சீக்கிரம் சொல்...." என்று தன் விருப்பத்துக்கே அவன் விட்டு விட்ட மகிழ்ச்சியில், அவனது அறிவுப் புலன் மீது எண்ணம் கொண்டுவிட்ட அது, பேராசையுடன் பரபரத்தது. அதன் பேராசையை அறிந்து கொண்ட கிழவன் மூடிய கண்களுடன், முகத்தில் விளைந்த ஏளனச் சிரிப்புடன் சொன்னான். "உனக்கு இவ்வளவு அவசரம் கூடாது. சொல்வதை முழுக்கக் கேள். மனிதன் தானடைந்ததைத் திரும்பத் தர மாட்டான். கேட்பது நீயாக இருப்பதால் சம்மதிக்கிறேன். சரி, என்னிடம் இருக்கும் புலன் ஒன்றை, எனக்கு அது தீங்கு பயக்கிறது என்பதாலும், உனக்கு வேண்டுமென்பதாலும் நீ எடுத்துக்கொள்ளப் போகிறாய். என்னையே 'எது' என்று தீர்மானித்து நான் தருவதைக் கொள்வதாகச் சலுகை தந்தாய். அந்தச் சலுகையை நான் விட்டுக் கொடுக்கிறேன். உன் இஷ்டப்படி எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சலுகையை நான் விட்டுக் கொடுப்பதால் எனது ஒரு வேண்டுகோளை நீ புறக்கணிக்காமல் இருக்கவேண்டும்" என்றான் அவன். 'இவனுடைய சர்வ சக்தியான அறிவையே நாம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். இவன் வேறு எதை வைத்துக் கொண்டு என்ன செய்து விடப் போகிறான்' என்று எண்ணி "உனது வேண்டுகோள் என்ன?" என்றது 'அது' கிழவன் அமைதியாக ஒவ்வொரு வார்த்தையாய்ச் சொன்னான். "எனது புலனை எடுத்துக் கொள்ள வந்து விட்ட மூல சக்தியே....நான் அனுமதித்து விட்டேன். எனது வேண்டுகோளை நிறைவேறுவதற்கு முன்பே, உனது காரியத்தை நீ நடத்திக் கொள்ளலாம். எனது புலன்களில் ஒன்றை நீ எடுத்துக் கொள்வதற்கு முன், எனது வேண்டுகோளைத் தீர்க்கமாய்ப் பரிசீலித்துவிட்டுக் காரியம் செய். எனது வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமல் எடுத்துக் கொண்டதையே திருப்பித் தந்து பெரும் தோல்விக்கு உள்ளாகாதே, கேள்; இதுவே என் வேண்டுகோள்; என்னிடம் இருக்கின்ற புலன்களில் ஒன்றை எடுத்துக் கொள்; என்னிடம் இல்லாத புலன் ஒன்றை பதிலுக்குத் தா'...." பரமாத்மா பேரமைதியில் ஆழ்ந்து யோசித்தது: 'இல்லாத புலன்....இல்லாத புலன்....இல்லாத புலன். இல்லாததை எப்படிச் சிருஷ்டிப்பது....?' 'அறிவுப் புலனை எடுத்துக் கொண்டு பதிலுக்கு என்ன புலனைத் தருவது....தர முடியுமா? தந்தால் அறிவினும் சக்தி மிக்கதாய் அது மாறினால்?......இல்லாதது எது?....ம், மானுடன் சொல்வான்; அவன் பாஷையை நான் பேச முயன்றது சரியன்று...இருக்கிறவனிடம் இருக்கின்றதை கேட்டால், இல்லாதவனிடம் இல்லாததைக் கேட்டது சரிதான்...' என்ற என்ற கடைசி முணு முணுப்புடன் 'அது' தன் பிரசன்னத்தைக் கலைத்துக் கொண்டு, அங்கு இல்லாமலாகி எங்கும் நிறைந்து கலைந்தது..... கிழவன் இடி போன்ற குரலில் சிரித்தான். "நீ சாவாய்....அதை நீ வெல்ல முடியாது" என்று பதில் குரல் எங்கிருந்தோ வந்து ஒலித்தது. "என்னால் தான் சாக முடியும்.....உன்னால் முடியுமா? நான் செத்தால் எனக்கு சந்ததி உண்டு. உனக்கு யாரிருக்கிறார்கள்" என்று சிரித்தவாறே, திடீரென்று மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டு--மரணத்திற்கு முன் ஏற்பட்ட இந்த கற்பனைகளிலிருந்து விடுபட்டு, அந்த ஆராய்ச்சிக் கூடத்தில், தன் இருக்கையினின்றும் கீழே விழுந்தான் அந்தக் கிழட்டு விஞ்ஞானி. முன்னறிவிப்பு இல்லாமல் வந்த கோழை மரணம், விஞ்ஞானியின் உடலைக் குளிரத் தழுவிக் கொண்டது. அந்த ஆராய்ச்சிக் கூடத்தில், கரு கருவென சுருண்ட சிகையுடன் ஒரு இளைஞன்---முன்னவனின் சந்ததி--இப்பொழுது அமர்ந்திருந்தான். அவன் விழிகள் ஏகாந்த வௌியில் சுழலும் எண்ணற்ற ரகஸியங்களின் புதிய உண்மைகளைக் கண்டு கொண்டிருக்கின்றன. அவன் செவிகளை அடைத்திருந்த கருவியின் மூலம், புதிய புதிய செய்திகளை முதன் முதலில் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் இதுவரை எங்கேயும் ஔியாகவோ, ஒலியாகவோ 'அது' இவன் வழியில் குறுக்கிடவில்லை. 'அது' தன் பாஷையில் தன் விதியை நொந்து கொள்கிறது. அந்த பாஷையின் அர்த்தத்தையும் இவனே கண்டு தேர்கிறான். அதன் பெருமையை தானும் அறிந்து, அதற்கும் உணர்த்துகிறான். இவனே மானுடன்' முன்னும் பின்னும் உள்ள மனிதகுல வம்சாவளிச் சங்கிலியில் ஒரு கண்ணி இவன். இவனுக்கு இல்லாதது எது, மரணம் உட்பட?....... ----- #3. இரண்டு குழந்தைகள் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர் வாழ்ந்தனர். அது மட்டுமல்லாமல், அநேகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் பக்கத்தில் சற்றுத்தள்ளியோ நெருங்கியோ அமைந்துள்ள கொட்டகைகளில் மாடுகள், பசுக்கள் வசித்தன. சில கொட்டகைகளில் கார்கள் இருந்தன. சேதன அசேதனப் பொருட்கள் யாவற்றுக்கும் இடம் கொடுத்த அந்தத் தெரு சிவப்பிக்கும் அவள் மகன் சோணையாவுக்கும் இடம் தந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட முடியுமா?.... முதலில் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலிருந்தும் அவளையும் அவள் குழந்தையையும் விரட்டினார்கள். பிறகு அந்த ரிட்டையர்ட் சப்ரிஜிஸ்திரார் சுப்புஐயரின் மனையாள் தயவின் பேரில், அவர்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த மாட்டுக் கொட்டகையில் இடம் பிடித்தாள் சிவப்பி. மழையென்றும் குளிரென்றும் இயற்கை தொடுக்கும் தாக்குதல்களுக்கு அரணாய் அமைந்தது அந்தக் கொட்டகை. தினசரி அந்த மாட்டுக்கொட்டகையை அவள் சுத்தம்செய்வாள். அவள் படுத்துக்கொள்ளும் இடத்தை அவள் சுத்தம் செய்து கொள்ளுகிறாள். அதற்குக் காசு கொடுப்பார்களா, என்ன?.... பகல் பொழுதெல்லாம் இடுப்பில் பிள்ளைச் சுமையுடன், அந்தத் தெருவின் கோடியில் உள்ள விறகுக் கடையில் அவளைப் பார்க்கலாம். விறகுச் சுமை கிடைத்துவிட்டால், பிள்ளைச்சுமை இறங்கிவிடும். அவன் கையில் காலணாவுக்கு முறுக்கை வாங்கிக் கொடுத்து அங்கேயே மரத்தடியில் குந்தி இருக்கச் சொல்லிவிட்டு ஓடுவாள். பிள்ளையை விட்டுவிட்டுப் போகும் துடிப்பில், சுமையுடன் ஓட்டமாய் ஓடி ஒரு நொடியில் திருப்புவாள். சோணையாவும் புத்திசாலித்தனமாய், அம்மா வரும் வழியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். அதுவரை முறுக்கைக் கடிக்கவேமாட்டான். தாயைக்கண்டதும் ஒரு சிரிப்பு மலரும். அவளும் ஓடி வந்து பிள்ளையைத் தூக்கி முத்தமிடுவாள். தாயுள்ளம் அந்தப் பிரிவைக் கூடத் தாங்க முடியாதது என்பது அவள் தவிப்பில் தெரியும். கையிலுள்ள முறுக்கைத் தாயின் வாயில் வைப்பான் சிறுவன். அவள் கொஞ்சம் கடித்து, அதை எடுத்து அவன் வாயில் வைத்து, "நீ தின்னுடா ஐயா...." என்று சொன்ன பிறகு தான் தின்பான். விறகுச் சுமை இல்லாத நேரங்களில் கடைத்தெருவில் சென்று கடைகளில் தானியம் புடைப்பாள். மாலை நேரத்தில் அந்தப் பெரிய தெருவின் ஒரு மூலையில், மரத்தடியில் மூன்று கற்களைச் சேர்த்து அடுப்பு மூட்டிச் சோறு சமைத்துத் தானும் தன் மகனும் உண்டபின் மாட்டுக் கொட்டகையில் வைக்கோல் பரப்பில் நித்திரை கொள்வாள். அந்தத் தெருவில் எல்லா வீட்டுக்கும் அவள் வேலை செய்வாள். அதிலும் சுப்பு ஐயர் வீட்டுக்காரர்களுக்கு அவளிடம் தனிச்சலுகை. அவளும் மற்ற வீட்டுக்காரர்களிடம் செய்யும் வேலைக்குக் கூலியாகக் காசு பெறுவது உண்டு. சுப்பு ஐயர் வீட்டில்...எப்பொழுதாவது அவர் மனைவி கொடுத்தாலும்கூட வாங்குவதில்லை. அவள் செய்யும் வேலைகளுக்காக மீந்துபோன சோறு, கறி குழம்பு வகையறாக்கள் அவளைச் சாரும். சுப்பு ஐயர் வீட்டில் அவளாகக் கேட்டு வாங்குவது, மத்தியான நேரத்தில் ஒரு குவளை சோறு வடித்த கஞ்சி மட்டும்தான். அந்தக் கஞ்சியில் அவளுக்கு அபரிமிதமான சுவை. சுப்பு ஐயர் வீட்டுக்குக் கிராமத்தில் இருந்து நெல் வருகிறது. நல்ல வீட்டு அரிசி; பச்சரிசிக் கஞ்சி மணக்கும்; அவளுக்குக் குடிக்க குடிக்க அது இனிக்கும். எந்த வேலை எப்படிப் போனாலும் பத்து பதினோரு மணிக்கு ஐயர் வீட்டு வாசற்படியில் தகரக் குவளையும் கையுமாய் வந்து நின்று விடுவாள். சுப்பு ஐயர் திண்ணையருகே ஈஸிச்சேரில் சாய்ந்திருக்கிறார். கையிலுள்ள விசிறி லேசாக அசைகிறது. திண்ணையில் தகரக் குவளையின் சப்தம் கேட்கவே ஐயர் நிமிர்ந்து பார்க்கிறார். "அடியே...ஒன் ஸ்வீகாரம் வந்திருக்கா; பாரு" சுப்புஐயருக்கு சிவப்பியைப் பார்த்தால் கொஞ்சமும் பிடிக்காது. மனைவி அவளிடம் பிரியமாய் இருப்பதே அதற்குக் காரணம். தனது வெறுப்பை எப்படியெப்படி யெல்லாமோ காட்டிக் கொள்வார். "என்னடா பயலே, வயசு நாலாகுதோன்னோ? இன்னம் என்ன ஆயி இடுப்பைவிட்டு எறங்கமாட்டேங்கறே. நீயும் போயி வெறகு தூக்கறதுதானே.... எப்பப் பார்த்தாலும் சவாரிதான்; நாளைக்கு நடந்து வரலேன்னா ஒன்னெ என்ன செய்றேன் பாரு...." என்று வேடிக்கை பேசவே சிவப்பி மகிழ்ந்து போனாள். ஐயர் தன் பிள்ளையைக் கொஞ்சிவிட்டார் என்ற நினைப்பில் சோணையாவை முத்தமிட்டாள். அதற்குள் சுப்பு ஐயரின் மனைவி உள்ளே இருந்து கஞ்சியில் உப்பைப் போட்டுக் கலக்கிக் கொண்டே வந்தாள். திண்ணையோரமாய் ஒதுங்கி, எட்டி நின்றவாறே புடவையைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு சிவப்பி கையிலேந்தி நிற்கும் தகரக் குவளையில் அவள் கஞ்சியை வார்க்கும்போது, ஈஸிச்சேரில் சாய்ந்திருந்த சுப்பு ஐயர் நிமிர்ந்து உட்கார்ந்து கூர்ந்து கவனித்தார். கஞ்சியிலிருந்து ஒரு பருக்கை விழுவது தெரிந்ததோ, போச்சு, அவ்வளவுதான்'.... ஐயர் வீட்டு அம்மாள் இருந்த இருப்பும், இந்தக் கஞ்சித்தண்ணிக்குக்கூட வக்கில்லாமல் அவள் அப்பன் அடித்த 'லாட்ரி'யும்.... வம்ச பரம்பரையாகக் குலமுறை கிளர்த்த ஆரம்பித்துவிடுவார். "என்னடி அது 'லொடக்'னு கொட்டித்தே?..." என்று புருவத்தை உயர்த்தினார். அம்மாளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. "காட்டுடீ...ஐயர்கிட்டே கொண்டுபோய்க் காட்டு. கையைவிட்டுத் துழாவிப் பாருங்கோ... இந்த ஆத்து சொத்தெல்லாம் கொண்டுபோய்க் கொட்டிட்டேனேன்னோ.... இவர் துப்புக் கண்டுபிடிக்கிறார்...." என்று இரைந்துவிட்டு உள்ளே போனாள். "ஒண்ணுமில்லே சாமி....வெறும் கஞ்சி ஆடை" என்று அதை விரலால் எடுத்துக் காட்டி தூக்கி எறிந்தாள் சிவப்பி. "அடி அசடே....அதை எறிஞ்சுட்டியே...அதிலேதான் 'வைடமின் பி' இருக்கு." "எனக்கு அதொண்ணும் வாணாம் சாமி...." என்று கஞ்சிக் குவளையுடன் நகர்ந்தாள் சிவப்பி. அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஐயர் தனக்குள் சொல்லிக் கொண்டார்: "ஹ்ம்...கஞ்சித் தண்ணியைக் குடிச்சுட்டு என்ன தெம்பா, இருக்கா' அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு" என்று முணகியபின், உரத்த குரலில்.... "அடியே...இனிமே சோத்தெ வடிக்காதே. பொங்கிப்பிடு. அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு. ஒடம்புக்கு ரொம்ப நல்லது...." என்று சொன்னார். "ஆமா...இப்போ இருக்கற சத்தே போறும்" என்று சலித்துக்கொண்டு உள்ளே போனாள் அம்மாள். அம்மாள் எத்தனை தடவைகள் சலித்துக் கொண்டாலும், ஐயருக்கு சிவப்பியைப் பார்க்கும் போதெல்லாம் --- லோகத்தில் இருக்கும் சத்தெல்லாம் தன் வீட்டுக் கஞ்சித் தண்ணீரில் தான் இருப்பதாகத் தோன்றும். ராமநாதபுரம் ஜில்லாவிலிருந்து "பஞ்சம் பிழைப்ப"தற்காக மதுரை வந்தவள் சிவப்பி. பெயரளவில் சிவப்பி. கரிய ஆகிருதி...ஆரோக்கியமும் திடமான உடற்கட்டும் உடைய அவள் பஞ்சத்திலடிபட்டு இந்த நகரத்திற்கு வந்தவள்தான் என்றாலும், இங்குள்ளவர்கள் கண்டு வியக்கும்படிதான் இருந்தது அவள் உடல் வனப்பு. செழிப்பாக இருக்கும் பூமியில் வளமாக வாழும் வாய்ப்பும் கிட்டியிருந்தால் நிச்சயம் இவளால் முறம் கொண்டு புலியை விரட்டி இருக்க முடியும்' ஆனால் இப்போது.... முறம் கொண்டு தானியங்கள் புடைப்பதும், கூலிக்கு விறகு சுமப்பதுமாய் உழைத்துத் தானும் ---- கருப்பையாத்தேவனின் வாரிசாக திகழ்ந்து, தன் சிரிப்பிலும் புன்னகையிலும் அவள் கணவனின் சாயல் காட்டி, ஆறுதல் தரும் நான்கு வயது மகனான --- சோணையாவும் வயிறு வளர்ப்பது தான் அந்த மறத்தியின் உடல் வலு புரியும் மகத்தான சாதனை. இடுப்புக் குழந்தையும் தாயுமாய் அவளை இங்கே விட்டு விட்டு, ஏதாவது வேலை தேடி வருவதாகச் சொல்லி, வடக்குச் சீமைக்குப் போன அவள் புருஷன் கருப்பையாத் தேவனின் முகதரிசனம் ஆறு மாசமாகியும் கிடைக்கவில்லை. அன்று ஐயரவர்களுக்கு பிறந்த தின வைபவம். வீட்டில் விசேஷமானதால் விருந்தினர்களும் வந்திருந்தனர். வந்தவர்களுக்கெல்லாம் பந்தி நடந்ததால் சிவப்பி கஞ்சிக்காகக் காத்திருக்க வேண்டி இருந்தது. பிள்ளை பசியால் துடித்தான். அவனுக்கு 'பராக்கு'க் காட்டிப் பேசிச் சிரித்து விளையாடியவாறு கொட்டகையின் ஓரத்திலிருந்த மர நிழலில் குந்தியிருந்தாள் சிவப்பி. "ஒங் ஐயா எங்கலே...." என்று மகனின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சினாள் சிவப்பி. "ஐயா...ஓ....போயித்தாரு..." "எப்பலே வரும் ஒங்க ஐயா..." என்றதும் அவன் அவள் மடியிலிருந்து இறங்கி நடந்து, தெருவில் போய் நின்று இரண்டு பக்கமும் மாறி மாறிப் பார்த்துவிட்டு வந்தான். "ஆத்தா...ஐயா....ஊம்" என்று இரண்டு கையையும் விரித்தான். அவன் முகத்தில் ஏமாற்றமும் சோர்வும் படர்ந்திருந்தது. "ஐயா நாளைக்கு வந்துடும். வாரப்போ ஒனக்கு முட்டாயி, முறுக்கு, புதுச் சட்டை எல்லாம் கொண்ணாந்து குடுத்து...அப்புறம் நாம்ப நம்ம ஊருக்குப் போயி, நம்ம ஊட்லே இருக்கலாம்...." என்று கூறும்போது அவள் குரல் தழுதழுத்தது; கண்களில் நீர் துளிர்த்தது. மகனின் முகத்தில் முத்தம் கொடுக்கும் போது அவன் முகத்திலேயே கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள். இந்த சமயத்தில் ஐயர் வீட்டு வாசலில் இலை வந்து விழும் சப்தம் கேட்டது---- "ஆத்தா...கஞ்சி....கஞ்சி..." என்று குழந்தை பறந்தான். மகனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, கையில் தகரக் குவளையுடன் போய் நின்றாள் சிவப்பி. சுப்பு ஐயர் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்து, திண்ணைக்கருகே ஈஸிசேரில் வந்து சாய்ந்து ஏப்பம் விட்டார். "என்ன சேப்பி?..." "இன்னக்கி விசேஸங்களா சாமி?" ---அவள் சாதாரணமாய், உபசாரத்திற்குத்தான் கேட்டு வைத்தாள். "என்னத்தெ விசேஷம் போ....ஊர்லேந்து பொண்ணு வந்திருக்காளோன்னா?... அதான்...ஹி...ஹி...." ---இவளுக்கு ஏதாவது தரவேண்டி இருக்குமோ என்ற பயத்தில் பூசி மழுப்பினார் ஐயர். உள்ளேயிருந்து அம்மாளின் குரல் மட்டும் கேட்டது. "யாரது சேப்பியா....?" "ஆமாங்க." "சித்தெ சந்துவழியா கொல்லப்புறம் வாயேண்டி....ஒன்னத்தான் நெனச்சிண்டே இருந்தேன். தொட்டியிலே.... ரெண்டு வாளி ஜலம் சேந்தி நெரப்பு... சாப்பிட்டவாளுக்குக் கையலம்பக்கூட ஜலம் இல்லே....சீக்கிரம் வா...." என்று அம்மாவின் குரல் ஒலித்ததும் இடுப்பிலிருந்த குழந்தையுடன் உள்ளே போகும் சிவப்பியைப் பார்த்து, "இடுப்பைவிட்டு எறங்காமே ஒன் உசிரை வாங்கறதே, சனி அத்தெ எறக்கி விட்டுட்டுப் போ'..." என்றார் ஐயர். குழந்தையை இறக்கி மர நிழலில் உட்கார வைத்து "ஆத்தா போயி கொஞ்சம் தண்ணி எறைச்சி ஊத்திட்டு வாரேன்; அழுவாமே குந்தி இருக்கியா, ஐயா?..." என்று அவனை முத்தம் கொஞ்சினாள் சிவப்பி. 'சரி' என்று சமர்த்தாகத் தரையில் சம்மணம் கட்டி உட்கார்ந்து கொண்டான் சிறுவன். சந்துப் பக்கம் போகும் போது சிவப்பி திரும்பித் திரும்பித் தன் மகனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சென்றாள். அவனும் சிரித்தவாறு உட்கார்ந்திருந்தான். பையன் அழாமல் அடம் பிடிக்காமல் இருந்ததில் ஐயருக்குக் கொஞ்சம் ஏமாற்றம்; ஆத்திரம் என்று கூடச் சொல்லலாம். உள்ளேயிருந்து ஆரோகண அவரோகண கதிகளிலெல்லாம் குரலை முழக்கிக் கொண்டு வந்தான் அவர் மகள் வயிற்றுப் பேரன். அவனுக்கும் வயது நான்குதான் இருக்கும். நான்கு விரலையும் வாய்க்குள் திணித்தவாறு சிணுங்கிக் கொண்டே அவருகே வந்தான் பேரன். "ஏண்டா கண்ணா அழறே? இப்படி வா...மடியிலே வந்து தாச்சிக்கோ" என்று பேரனை அழைத்தார். "மாத்தேன் போ....அம்மா...ஆ...ஆ" என்று வாயைப் பிளந்து கொண்டு அழ ஆரம்பித்தான் குழந்தை. "அம்மா சாப்பிடறாடா கண்ணா...சாப்டுட்டு வந்து ஒன்னெத் தூக்கிண்டுடுவா. சமத்தோன்னோ?....அதோ பாரு, அந்தப் பையனை...அவ அம்மாவும் எங்கேயோ போயித்தான் இருக்கா...ஒன்னெ மாதிரி அவன் அழறானோ?" என்று சோணையாவைக் காட்டினார் ஐயர். சோணையா கையைத் தட்டிக்கொண்டு ஐயரின் பேரனைப் பார்த்துச் சிரித்தான்; அவனோ காலை உதைத்துக் கொண்டு அழுதான்' ---தனது பேரனுக்கு அவனை வேடிக்கை காட்டப்போய், தன் பேரன் அவனுக்கு வேடிக்கையாகிப் போனானே என்ற ஊமை ஆத்திரம் ஐயருக்கு... "ஏண்டா சிரிக்கிறே? அப்படியே போட்டேன்னா..." என்று விளையாட்டாய்க் கண்டித்து தம் எரிச்சலைத் தீர்த்துக் கொண்டார் ஐயர். "அந்தப் பையன்தான் அசடு....அவனை நன்னா அடிப்போமா?" ---அவர் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கத்தினான் பேரன். "இதெவிட அசடு லோகத்திலே உண்டோ.... நன்னா ஒதைக்கணும்" என்று கருவிக்கொண்டே ஐயரின் மகள் எச்சில் இலையுடன் தெருப்பக்கம் வந்தாள். இலையைப் போட்டுக் கையைக் கழுவிய பின், "சனியனே, கத்திப் பிராணனைத் தொலைக்காதே' " என்று பல்லைக் கடித்துக் கொண்டு வந்து மகனைத் தூக்கிக் கொண்டாள். "என்னடி பொண்ணே, ஒன்னும் சாப்பிடாம இலையைக் கொண்டு வந்து எறிஞ்சிருக்கே... எல்லாம் அப்படியே இருக்கு ...ஜாங்கிரிகூடன்னா அப்படியே கெடக்கு? இப்படி 'வேஸ்ட்' பண்ணுவாளோ?..." என்று அரற்றினார் ஐயர். "இந்த சனி என்னெ சாப்பிட விட்டாத்தானே...?" "சரி...அவனெக் கத்த விடாதே' அவனுக்கு ஒரு ஜாங்கிரி குடு" என்று சொல்லிவிட்டு சோணையாவைப் பார்த்தார். "ஏண்டா பயலே, நோக்கு ஜாங்கிரி வேணுமா?" என்றார் கண்களைச் சிமிட்டிக் கொண்டே. ---பையனுக்கு புரியவில்லை. "மிட்டாயிடா...மிட்டாய், வேணுமா?" மிட்டாயி என்றதும் பையனுக்குப் புரிந்துவிட்டது. சந்தோஷத்துடன் தலையை ஆட்டிக் கொண்டு எழுந்து வந்தான். "அதோ, அதான்...மிட்டாயிடா... எடுத்துத் தின்னு பாரு, இனிக்கும்...." என்று நாக்கைச் சப்புக்கொட்டி ஆசை மூட்டி எச்சில் இலையைக் காட்டினார் ஐயர். சோணையா தனது பிஞ்சுக் கரங்களால் எச்சிலையில் கிடக்கும் துண்டு ஜாங்கிரியை எடுத்து வாயில் வைத்துச் சுவைத்தான்.... "எலே...எலே...போடுலே கீளே----தூ...." என்று கூவியவாறு சந்திலிருந்து ஓடிவந்த சிவப்பி அவன் கையிலிருந்த ஜாங்கிரியைத் தட்டிவிட்டாள். "துப்புலே.... துப்பு..." என்று அவன் தலையில் 'நறுக்' கென்று குட்டினாள். சோணையா அழுதான்; அவன் பிளந்த வாய்க்குள் விரலைவிட்டு அந்த ஜாங்கிரித் துண்டை வழித்து எறிந்தாள். "நா எலும்பை முறிச்சி கஞ்சி ஊத்தறேன்....எச்சப் பொறுக்கறியா?..." என்று முதுகில் அறைந்தாள். "கொழந்தேயெ அடிக்காதே சேப்பி..." என்றார் ஐயர். "இல்லே சாமி...நாங்க இல்லாத ஏளைங்க....இப்பவே கண்டிக்காட்டி நாளைக்கி எச்சிக்கலை பொறுக்கியாவே ஆயிடும்..." என்று சொல்லிவிட்டு இடுப்பில் இருக்கும் சோணையாவின் முகத்தைத் துடைத்து "இனிமே எச்சியெல்லாம் எடுக்காதே' " என்று சமாதானமாய்க் கேட்டாள். பையன் விம்மிக் கொண்டே ஐயரைக் காட்டி, "சாமி....சாமிதான் எடுத்துத் திங்கச் சொல்லிச்சு..." என்று அழுதான். சிவப்பிக்கு உடம்பு பதைத்தது, கண்கள் சிவக்க ஐயரைப் பார்த்தாள். "ஏன் சாமி...ஒங்க புள்ளையா இருந்தா சொல்லுவீங்களா?... ஒங்க எச்சி ஒஸத்தியா இருந்தா ஒங்களோட, எம் பையனுக்கு ஏன் அதைத் தரணும்..." என்று கோபமாய்க் கேட்டாள். "என்னடி அது சத்தம்?" என்று கேட்டுக் கொண்டே பாத்திரத்தில் கஞ்சிக் கொண்டு வந்தாள் வீட்டு அம்மாள். "நீயே பாரும்மா...எம்மூட்டப் புள்ளைக்கி எச்சிலைத் திங்கப் பளக்கிக் கொடுக்கிறாரும்மா, சாமி..." என்று கண்ணைத் துடைத்துக் கொண்டாள் சிவப்பி. "நான் என்ன பண்ணுவேண்டி...நேக்கு அவர் ஒரு பச்சைக் கொழந்தை...ஒன் கொழந்தையை நீ அடிக்கறே; நா என்ன பண்றது, சொல்லு?" "ஏண்டி சேப்பி, நான்தான் அவனை எடுத்துத் திங்கச் சொன்னேன்னு சொல்றயே, நான் சொன்னதை நீ கண்டையா?...." என்று எழுந்து வந்தார் ஐயர். "எம்மவன் வறவனுக்கு பொறந்தவன். பொய் சொல்ல மாட்டான் சாமி..." ஆக்ரோஷத்தோடு இரைந்தாள் சிவப்பி. ஐயர் அசந்து போனார்' "ஆமா; சொன்னேன்னுதான் வச்சுக்கோயேன்...எங்க வீட்டுக் கஞ்சியெ தெனம் குடிக்கறயே, அது மட்டும் எச்சல் இல்லியா?... அதுவும் எச்சல்தான் தெரிஞ்சுக்கோ..." என்று பதிலுக்கு இரைந்தார் ஐயர். "இந்தாங்க சாமி...ஒங்க எச்சிக் கஞ்சி' நீங்களே தான் குடிச்சிக்குங்க... இந்த எச்சில் எனக்கு வாணாம்..." என்று தகரக் குவளையைத் 'தடா'லெனச் சாய்த்துவிட்டு, மகனைத் தூக்கி இடுப்பில் பொத்தென இருத்திக்கொண்டு வேகமாய் நடந்தாள் சிவப்பி; இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்து மனம் பொறுக்காமல் "எல்லாம் என் கர்மம், என் கர்மம்' " என்று தலையிலடித்துக் கொண்டு உள்ளே போனாள் ஐயரின் மனைவி. உள்ளே தோட்டத்தில் தொட்டி நிறைய---சிவப்பியின் உழைப்பால் நிறைந்திருந்த--- தண்ணீரையும் பாத்திரம் நிறைய அவளுக்காக எடுத்து வைத்திருந்த சோற்றையும் குழம்பையும் பார்த்த அம்மாளுக்குக் கண்கள் கலங்கிப் போயின. "அடியே...பாத்தையோ, நம்மாத்துக் கஞ்சியெக் குடிச்சு வந்த கொழுப்புடீ... இனிமே அவளுக்கு கஞ்சி ஊத்தப் படாது சொல்லிட்டேன்... நாளையிலேருந்து சாத்தெ வடிக்காதே.... பொங்கிப்பிடு.... அதிலேதான், சத்து இருக்கு..." என்ற ஐயரின் வழக்கமான பல்லவி திண்ணையிலிருந்து சற்றுக் கண்டிப்பான குரலில் ஒலித்தது. மறுநாள் ஐயர் வீட்டில் சோற்றை வடித்தார்களோ, பொங்கினார்களோ,.... ஆனால், வழக்கமாகக் கஞ்சி வாங்க வரும் சிவப்பியை மட்டும் மறுநாள்... மறுநாள் என்ன, அதன் பிறகு ஒரு நாளும் அந்தத் தெருவில் காணவில்லை. ----- #4. நான் இருக்கிறேன் அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறைக் காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவௌி வழியாகப் பார்த்தால் உள் சுவர்களைக் கிழித்துக்கொண்டு கம்பீரமாய் வளர்ந்துள்ள அரசஞ்செடிகளும் காடாய் மண்டிக்கிடக்கும் எருக்கம் புதர்களும் தெரியும். சத்திரத்துக்கு எதிரே அதாவது சாலையின் மறுபுறத்தில் நான்கு புறமும் படித்துறையுள்ள ஆழமில்லாத குளம்; குளத்திற்கு அப்பாலும், குளத்தைச் சுற்றிலும் செழிப்பான நஞ்சை நிலப்பகுதி, வரப்பினூடே நடந்து ஏறினால், சற்றுத் தூரத்தில் ரயில்வே லைன் மேட்டுப் பகுதி. ரயில்வே லைனுக்கு மறுபுறம் - 'இந்தப் பக்கம் செழித்துத் தலையாட்டிக் கொண்டிருக்கும் பயிர்களை வளர்த்ததன் பெருமை என்னுடையதுதான்' என்று அலையடித்துச் சிலு சிலுக்கும் ஏரி நீர்ப்பரப்பு கண்ணுக்கெட்டிய தூரம் பரந்து கிடக்கிறது. அதற்கப்புறம் ஒன்றுமில்லை; வெறும் தண்ணீர்தான்; தண்ணீர் பரப்பின் கடைக்கோடியில் வானம்தான் தண்ணீரும் வானமும் தொட்டுக்கொண்டிருக்கின்ற இடத்தில் நிலவின் பெருவட்டம் மங்கிய ஔியை ஏரிநீரில் கரைத்து மிதந்து கொண்டிருக்கிறது...நிலவு மேலே ஏற ஏற அதன் உருவம் குறுகிச் சிறுத்தது; ஔி பெருகிப் பிரகாசித்தது. ஒரு கோடியில் எழுந்து, ரயில்வே லைன் மேட்டின் மேலேறிய நிலவு வீசிய வௌிச்சம், மறுகோடியில், சத்திரத்துத் திண்ணையில் உட்கார்ந்து உணவருந்திக்கொண்டிருந்த அந்த வியாதிக்காரப் பிச்சைக்காரனின் புத்தம் புதிய தகரக் குவளையின் மீது பட்டுப் பளபளக்க, அதன் பிரதிபிம்பம் அவன் முகத்தில் விழுந்தது. திண்ணையில் அவனைத் தவிர யாரும் இல்லை. அவன் அந்தத் தனிமையிலும், தகரக் குவளையில் ஊறிக் கிடந்த ரசத்து வண்டல் சோற்றிலும் லயித்துத் தன்னை மறந்த மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டே ஒவ்வொரு கவளமாய்ச் சாப்பிட்டான். அவன் பார்வை நிமிர்ந்து நிலவில் பதிந்திருந்தது. வாய் நிறையச் சோறுடன் அவன் பாடுவது தௌிவாய் ஔிக்கவில்லை. கேட்கத்தான் அங்கு வேறு யாரிருக்கிறார்கள்' தகரக் குவளையை வழித்து நக்கிச் சுற்றிலும் இறைந்து கிடந்த பருக்கைகளை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கி விரலோடு சேர்த்து உறிஞ்சிச் சாப்பிட்டானதும் தனது--விரல்கள் குறைபட்ட--இரண்டு கைகளாலும் தகரக் குவளையை இடுக்கி எடுத்துக் கொண்டு சாலையின் குறுக்காய், குளத்தை நோக்கி நடந்தான். கால்விரல்களுக்குப் பிடிப்பு இல்லாததால் குதிகால்களை அழுந்த ஊன்றித் தாங்கி தாங்கித்தான் அவனால் நடக்க முடியும் -- குளத்தின் மேல்படியில் காலிலிருந்த கான்வாஸ்ஷஉஸ் நனையாமல் நின்றுகொண்டு, தகரக் குவளையை அலம்பி, ஒரு குவளைத் தண்ணீரைக் குடித்தான். தண்ணீரை 'மடக் மடக்' கென்று குடிக்கும்போது அவசரத்தில் குவளைக்கும் வாய்க்குமிடையே இரண்டு பக்கத்திலும் தண்ணீர் வழிந்து அவன்மேலிருந்த கோட்டின் காலரை நனைக்கவே அவசர அவசரமாகத் தண்ணீரைத் தட்டிக்கொண்டே கோட்டின் மார்புப் பையிலிருந்த பீடியையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்து வேறு பைக்கு மாற்றிக்கொண்டான். மேலேறி வந்த பிறகு தகரக் குவளையைக் கீழே வைத்துவிட்டு, நின்று ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டான். புகையோடு சேர்த்துத் திருப்தியுடன் ஏப்பம் விட்டவாறு அவன் முனகிக் கொண்டான். 'நல்லாத்தான் இருக்கு...' என்று வாய்விட்டு முனகிக் கொள்ளும்போதே மனசில் '--என்ன நல்லாருக்கு?' என்ற கேள்வியும் பிறந்தது. "எல்லாம்தான். தோ... இந்த நெலா, இந்தக் குளம்... அடிக்கிற காத்து, குடிக்கிற தண்ணி...பசி,சோறு, தூக்கம்-எல்லாந்தான். வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கு... பீடிச் சொகம் ஒண்ணு போதுமே' " என்று நெருப்புகனியக் கனியப் புகையை வாய் நிறைய இழுத்து ஊதினான். சிறிது நேரம் நின்று ஏதோ யோசனைக்குப்பின் சத்திரத்துத் திண்ணைக்கு வந்து ஒரு மூலையில் தகரக் குவளையைக் கவிழ்த்து வைத்து விட்டு, சுவரோரமாகக் கிடந்த கந்தல் துணியால் தரையைத் தட்டிவிட்டு உட்கார்ந்தான். "உலகம் இவ்வளவு அழகாயிருக்கு. இதைப் பார்க்கற எம் மனசு சந்தோஷப்படுது. ஆமா, எல்லாப்பொருளும் பார்த்தவங்க மனசை சந்தோஷப்பட வைக்கும்போது, நான்...நான் என்னைப் பார்த்தவுடனே ஒவ்வொருத்தர் முகத்திலேயும் ஏற்படற மாற்றம் இருக்கே, வியாதியாலே மரத்துப்போன என் உடம்புக்குத் தெரியாத வேதனை, பாவம் அவங்க மனசுக்குத் தெரியுது. அன்னக்கி ஒரு நாளு, ஒரு வீட்டுக்கு முன்னாடி போயி அம்மா தாயே' பசிக்குது'ன்னு நின்னப்ப, சாப்பிட்டுட்டு எச்சில் இலை கொண்டுவந்து வௌியே போட்ட ஒரு பொண்ணு என்னைப் பாத்துட்டு வாந்திவர்ரமாதிரி குமட்டிக்கிட்டு உள்ளே ஓடினப்புறம், ஒரு ஆளு வந்து எட்டிப் பார்த்துட்டு சொன்னானே... 'அம்மா, வௌியே ஒரு தரித்திரம்வந்து நிக்குது; ஏதாவது போட்டு அனுப்பு. இவனெல்லாம் ஏன் தான் உசிரை வெச்சுக்கிட்டு இருக்கானோ இந்தத் தீராத நோயோடே' ன்னு... "அந்த வார்த்தையைக் கேட்டவுடனே அங்கே நிக்க முடியாமத் திரும்பினப்போ, 'இந்தப்பா பரதேசி' ன்னு கூப்பிட்ட அந்தக் குரல் இருக்கே, அதிலே இருந்த ஆறுதல்தான் உலகத்திலே வாழணும்னு ஆசை குடுத்திடிச்சி... ராமலிங்கசாமி மாதிரி காதோரத்திலே முக்காட்டுத் துணியைச்செருகிக்கிட்டு கையிலே சோத்தோட எதிரே' என் பையன் கொஞ்சம் வாய்த்துடுக்கு...சாகறதும் இருக்கறதும் நம்ம கையிலா இருக்கு' ன்னு சொல்லிக்கிட்டே கொவளையிலே சோத்தைப் போட்டாங்க.. நான் அந்த அம்மா முகத்தையே பார்த்துக்கிட்டு நின்னேன். தன் மகனைப் பார்த்து, 'நீ சாகக்கூடாதா' ன்னு யாரோ கேட்டுட்ட மாதிரி அவங்க கண்ணில தண்ணி கொட்டிக்கிட்டே இருந்தது..." --அன்றைக்குப் பிறகு அவன் பகலில் பிச்சைக்குப் போவதில்லை. இருட்டிய பிறகு யார் கண்ணிலும் படாமல் தலையில் முக்காடிட்டுக்கொண்டுதான் போவான். மூன்று வேளைக்கும் முதல் நாளிரவு ஒருவேளை எடுத்த பிச்சைதான் சில நாட்களில் அதுவே அதிகமாகி அடுத்த நாளைக்கும் இருந்துவிடுவதும் உண்டு. தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் நிறைவாக இருந்த வயிற்றைத் தடவி விட்டுக்கொண்டான். "சாப்பாடு கொஞ்சம் அதிகம்தான்..." என்று மறுபடியும் ஒரு ஏப்பம் விட்டவாறு, "முருகா" என்று எழுந்தான். தரையில் விரித்த கந்தலை எடுத்துத் தலையில் முண்டாசாகக் கட்டினான். மூலையில் இருந்த தடியையும் கையில் எடுத்துக்கொண்டு ஏரிக் கரையை நோக்கி நடந்தான். "ம்...உடம்பிலே வியாதி இருந்தா என்ன? உசிரு இருக்கறது நல்லாத்தான் இருக்கு. நாக்குக்கு ருசியா திங்கிற சொகம்; கண்ணுக்குக் குளிர்ச்சியா பாக்கற சொகம்; காதுக்கு எதமா கேட்கற சொகம்...வியாதி இருந்தால் இதெல்லாம் கெட்டுப்பூடுதா?..." ஏரிக்கரையின் ஓரமாக ரயில்வே லைன் மேட்டுச் சரிவில் தடிக்கம்பை ஊன்றியவாறு உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் பீடிப் புகையைக் காற்றில் ஊதிவிட்டான்... "அப்பாடா' சாப்பிட்டவுடனே வயித்திலே என்னமோ ஒரு வலி' திங்கறதிலே ஒண்ணும் சொகமில்லே: ஆனா, தின்னாத்தான் சொகம். ஒடம்பிலே சேத்துக்கறதா சொகம்? உடம்பிலேருந்து எல்லாத்தையும் போக்கிக்கறதிலேதான் சொகம். உடம்பையே போக்கிக்கிட்டா?... சொகந்தான்' ஆனா, உடம்பிலே இருக்கிற சொரணையே போயிட்டா, சொகம் ஏது? " இப்பொழுது அவன் முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான். நிலவும் நட்சத்திரங்களும் அவன் கண்களுக்கும் அழகாகத்தான் தெரிந்தன. "ம்....தோ... அதான் சப்தரிஸி மண்டலம். அந்த நாலு நச்சத்திரம் சதுரமா இருக்கு; அதுக்கு ஓரமா வாலு மாதிரி மூணு நீட்டிக்கிட்டு இருக்கே; அந்த மூணுலே நடுவாலே இருக்குதே, அதுக்குத் தள்ளி மங்கலா.. அதான் அருந்ததி நச்சத்திரம்...சர்த்தான், நமக்கு ஆயுசு கெட்டி' அருந்ததி தெரியுதே... அம்மாஞ் சுளுவா எல்லாருக்கும் தெரியுமா அது? லேசா எழுதிக் கலைச்சிட்ட மாதிரி... புள்ளி மானத்திலே இருக்கா, கண்ணுலே இருக்கான்னு கண்ணைக் கசக்கிட்டு எங்கியுமில்லேன்னு சொல்லிடுவாங்க பலபேரு... அருந்ததியைப் பாத்தவனுக்கு ஆறுமாசத்துக்குச் சாவு இல்லேம்பாங்க..." நிலவொளியில் பளபளத்துக்கொண்டிருக்கும் ஏரி நீரில் புரண்டு எழுந்து குளுமை பெற்றுவரும் தென்றல் காற்று அந்த வியாதிக்காரனின் உடலையும் தழுவத்தான் செய்தது. நீரின் அலைகள், சின்னஞ் சிறு கால்கள் சலங்கை அணிந்து சதிராய் நடந்து வருவதுபோல் தரையில் மோதி மோதித் தளதளக்கும் இனிய நாதத்தை அவன் செவிகளும் கேட்டன. கரையோரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த காட்டுப் பூக்களின் நெடிமிக்க போதை மணம் அவனது நாசியையும் துளைக்கத்தான் செய்தது... அவன் வாழ ஆசைப்படுவதில் என்ன தவறு? வெகு நேரத்திற்குப் பிறகு தண்ணீரிலிருந்து கரையேறி வந்து, அங்கு கழற்றிப் போட்டிருந்த கான்வாஸ் ஷஉஸை எடுத்து குனிந்து நின்று காலில் அணிந்துகொண்டான்; அப்படியே அவன் தலை நிமிரும்போது...எதிரே... நீண்டுசெல்லும் இருப்புப் பாதையில் வளைந்து திரும்பும் அந்தக் கண்ணுக்கெட்டிய எல்லையில் வௌிச்சம் தெரிந்தது...ஒரு துண்டு வௌிச்சம்தான். அந்த ஔிக்கீற்றின் அசைவால் தரையில்செல்லும் இருப்புப்பாதையிலும், வானில் செல்லும் தந்திக் கம்பிகளிலும் ஒரு ஜொலிப்புத் துண்டம், விட்டு விட்டுத் தாவிச் செல்லுவது போலிருந்தது. தூரத்தில் ரயில் வருகின்ற ஓசை லேசாகக் கேட்டது. "அடேயப்பா' மெயிலு வரானோ? மணி பன்னனெண்டா ஆயிடுச்சி' " என்று தண்டவாளத்தைக் கடப்பதற்காகக் கைத்தடியைச் சரிவில் ஊன்றித் தட்டுத் தடுமாறி ரயில்வே லைன் மேட்டின் மீது ஏறும்போது தூரத்தில்... நீண்டு செல்லும் இருப்புப் பாதையின் வளைந்து திரும்பும் கண்ணுக்கெட்டிய எல்லையில் இரண்டடி உயரத்திற்கு, வௌபுள்ளிளையாய் அசைகின்ற உருவம்...ஏதாவது மிருகமா? அல்லது... கால்களை மண்டியிட்டு தரையில் ஊர்ந்து வந்த அந்த மனித உருவம், ரயில்வேலைன் மீது ஏறியதும் எழுந்து நின்றது. சுற்றிலும் ஒருமுறை பார்த்து, தன் பின்னால் பிச்சைக்காரன் வரும் திசையைப் பார்க்கத் திரும்பியபோது அதற்குள் நிற்க முடியாமல் கால்கள் நடுங்க, மெல்லக் கைகளைத் தரையில் ஊன்றித் தண்டவாளத்தின்மீது உட்கார்ந்துகொண்டது. பிறகு உறுதியுடன் இரண்டு தண்டவாளங்களுக்கும் குறுக்காக விறைத்து நீட்டிப் படுத்துக்கொண்டது. "அடச்சே, மனுசப்பயதான் டோய்' உசிரை வெறுத்துட்டான் போல... ஐயையோ' உங்களுக்கு ஏண்டா புத்தி இப்படி போவுது? வௌிச்சம் வேகமா வருதே' " என்று பதறியவாறு, விரல்களில்லாத பாதங்களுக்குப்பாதுகாப்பாய் இருந்த கான்வாஸ் ஷஉஸ் தேயத் தேய இழுத்தவாறு தாவித் தாவி ஓடிவந்த பிச்சைக்காரனின் செவிகளில் தூரத்து ரயில் சத்தம் பேரோசையாகக் கேட்டது. ரயிலின் ஓசை சமீபித்துவிட்டது. பிச்சைக்காரன் ஓடி வந்த வேகத்தில், கண்களை இறுக மூடித் தண்டவாளத்தின் குறுக்காக விறைத்து நீட்டிக் கிடந்தவனின் விலாவுக் கடியில் கைத்தடியைக் கொடுத்து, மயானத்தில் பிணத்தைப் புரட்டுவது போல் நெம்பித் தள்ளினான். அவனைத் தள்ளிய வேகத்தில், வியாதிக்காரன் இரண்டு உள்ளங் கைகளாலும் பற்றிப் பிடித்திருந்த கைத்தடி எகிறி விழுந்தது. தண்டவாளத்திலிருந்து உருண்டு எழுந்த அந்த இளைஞன் ஒன்றும் புரியாமல் எதிரிலிருப்பவனை வெறித்து விழித்தான். மறுபடியும் தன்னைத் தள்ளிவிட்டு அவன் ரயிலின் முன்னே போய் விழுந்துவிடுவானோ என்ற பயத்துடன் தனது கைகள் இரண்டையும் அகல் விரித்துக்கொண்டு அவன் மீது பாய்வதுபோல் நின்று, "வேணாம் ஐயா, வேணாம்' உசிரு போனா வராது..." என்று கெஞ்சினான் வியாதிக்காரன். அவன் முன்னே இரண்டு கால்களும் வெடவெடக்க உடலே நடுங்க நின்றிருந்தான் அந்த இளைஞன். அப்பொழுது 'ஹோ'வென்ற பேரிரைச்சலோடு வந்த மெயில்வண்டி, அந்த இருவரின் மீது தன் நிழலை ஏற்றி இழுத்தவாறு கடகடத்து ஓடியது. ரயிலின் பேரோசை அருகே அதிர்ந்து நகரும்வரை மௌனமாய் நின்றிருந்த இருவரும், ரயில் அவர்களை கடந்து போனபின் அதன் பின்புறத்தைப் பார்த்தனர். செக்கச் சிவந்த ஒற்றை விளக்கு ஓடி ஓடித் தூரத்தில் மறைந்தது. நின்றிருந்த இளைஞன் கால்கள் நிலைக்காமல் உட்கார்ந்துக்கொண்டான். வியாதிக்காரன் கையிலிருந்து எகிறிப் போன கைத்தடியைத் தேடி எடுத்துக் கொண்டு வந்தான். "யோவ்' உன்னைச் சொல்லி குத்தமில்லை ஐயா...இந்த எடத்து ராசி அப்படி' ஆமா, இந்த எடத்துக்கு ஒரு காவு வேணுமினு இருக்கு. ஒண்ணு ரெண்டு உன்னோட மூணு ஆச்சு, நாளைக்கிப் பொழுது விடியட்டும்; ரெண்டு எலுமிச்சம் பழத்தையாவது வாங்கி வெக்கணும். முந்தாநாளு அப்படித்தான்--ஏரிக் கரையிலே யாரோ ஒரு அம்மாவும் ஐயாவும் கொழந்தையை விட்டுட்டு கட்டுச்சோத்தை அவுத்து வெச்சிச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க... அதுக்கென்னா தெரியும் --பச்சைபுள்ளை' நடந்து நடந்து வந்து தண்டவாளத்திலே ஏறிட்டுது...இந்த இடம்தான். ரயிலு வார நேரம்...அப்புறம், நான் பாத்துட்டேன்...வேற யாரையுங்காணோம். சர்த்தான், ஆபத்துக்குப் பாவமில்லேன்னு தொட்டுத் தூக்கிட்டேன்..." என்று சொல்லிவிட்டு ஒரு வநாடி மௌனமாகி நின்றான். பிறகு எதையோ நினைத்துப் பெருமூச்சுடன், ம்.....இருக்காதா...பெத்தவங்களுக்குத்தான் தெரியும் புள்ளை அருமை' " என்று தன் நினைவுக்கு அவனே சமாதானம் சொல்லிக்கொண்டு தொடர்ந்தான்; "எதுக்குச் சொல்ல வந்தேன்னா, இந்த இடத்து ராசி அப்படி இன்னக்கிக் காத்தாலே கூட ஒரு எருமை மாடு... ஆபத்துன்னு வந்தா மனுசனுக்கே புத்தி மாறிப்பூடுது. எருமை என்னா பண்ணும்? கூடுஸஉ வண்டி வந்துட்டான். இஞ்சினுக்காரன் ஊதறான்...ஊதறான்...இது என்னடான்னா, லைனைவுட்டு நவுறாம, நேரா ஓடிக்கினே இருக்குது. அவன் வந்த வேகத்திலே பிரேக் போட்டாப் புடிக்கிதா, என்னா எழவு?...ரயிலும் ஓடியாருது, எருமையும் ஓடுது. நானு ஒரு பக்கத்திலே ஓடி, கல்லுங்களை எடுத்து அடிச்சிக்கினே இருக்கேன். அப்புறம், சும்மா ஒரு மயிரிழையிலே தப்பிச்சிதுன்னு வெச்சிக்கியேன்..." என்று அந்த இடத்தின் ராசியை விவரித்தான் வியாதிக்காரன். அந்த இளைஞன் தலையைக் குனிந்து மௌனமாய் உட்கார்ந்திருந்தான். வியாதிக்காரன் ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான். "நா" ஒருத்தன் இந்தப் பக்கந்தானே சுத்திக்கிட்டிருக்கேன்' இப்ப என்னடான்னா, ஏதாவது ஆடு கீடு வந்து நிக்குதோன்னு ஓடியாந்தேன்...நல்லவேளை; ஒரு மனுஷனைச் சாவுலேருந்து தடுத்தாச்சி...ம்...நாம்பளா தடுக்கறோம்?...ஒனக்கு இன்னம் ஆயுசு இருக்கு...என்னமோ, தடுக்கணும்னு இருக்கு, தடுத்தாச்சி...இல்லாட்டி, மனுசன் தடுத்தா வர்ர சாவு நின்னுடப்போவுது?" என்று வாயில் புகையும் பீடியுடன் தோளில் கிடந்த துண்டை எடுத்துத் தலைப்பாகையைச் சுற்றிக்கொண்டான். பிறகு, மண்ணில் தலைகுனிந்தவாறு காலை மடக்கிப்போட்டு உட்கார்ந்திருந்த அந்த இளைஞனை மௌனமாக உற்றுப் பார்த்தான். அவன் அழகாக இருந்தான்; நல்ல நிறம். தலைமயிர் நிலா வௌிச்சத்தில் கருகருவெனப் பளபளத்தது. வௌபுள்ளிளை ஷர்ட்; எட்டுமுழ வேட்டி உடுத்தியிருந்தான். அவன் தன்னைப் போல் பரம ஏழையோ, பிச்சைக்காரனோ, வியாதிக்காரனோ அல்லவென்று தோன்றியது. 'வறுமையோ பட்டினியின் கொடுமையோ அந்த இளைஞனிடம் தெரியவில்லை. பின் எதற்காகத் தற்கொலை செய்து கொள்ள வந்தான்?' என்று தெரிந்துக்கொள்ளத் துடித்தது வியாதிக்காரனுக்கு. "சர்த்தான், எந்திரிச்சி வாய்யா' தோ...அங்கே சத்தரத்துத் திண்ணையிலே போயிக் குந்துவோம்...இந்தச் சத்தரம் இருக்கே..." என்று பேசிக்கொண்டே நடந்து திரும்பிப் பார்த்த பிச்சைக்காரன், அவன் இன்னும் எழுந்திருக்காமல் தூரத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். 'என்னாயா, குந்திக்கினே இருக்கியே? இனிமே அடுத்த ரயிலு காத்தாலே ஆறு மணிக்கு வடக்கே போற பார்சலுதான்; வா போவோம் ஒலகத்துலே மனுசன்னு பொறந்துட்டா கஸ்டமும் இருக்கும் சொகமும் இருக்கும். கஸ்டத்துக்குப் பயந்து செத்துபூட்டா, சொகத்தை அனுபவிக்கிறது யாரு? கஸ்டத்தைப் பார்த்து சிரிக்கணுமய்யா. ஏன்னா, கஸ்டம் வருதுன்னா பின்னாடிச் சொகம் காத்துக்கிட்டு இருக்குதுன்னு அர்த்தம்...ம், எழுந்திரு, போலாம்..." என்று உற்சாகமாகப் பேசும் பிச்சைக்காரனை நிமிர்ந்து பார்த்துக் கலங்குகின்ற கண்களோடு முகத்தில் பரிதாபகரமான புன்சிரிப்போடு அந்த இளைஞன் எழுந்திருப்பதற்கு முன்னால் உதவிக்குக் கை நீட்டினான். "தெய்வமே'... இவன் கையை புடிச்சி நான் தூக்கறதாவது?' என்று விலகிக்கொண்டான் பிச்சைக்காரன். அந்த இளைஞன் தன் முயற்சியால் கைகளை ஊன்றி ஒருவாறு எழுந்து நின்றான். பிறகு நிதானித்து, காலைப் பதனமாக ஊன்றி மறு காலை உயர்த்தும்போது தடுமாறி விழ இருந்தவன், பிச்சைக்காரனின் தோள்களைப் பிடித்துக்கொண்டு நின்றான். அவன் பிடித்த வேகத்தில் நிலைகுலைந்த பிச்சைக்காரன் சமாளித்தவாறு, அப்பொழுதுதான் அந்த இளைஞனின் கால்களைப் பார்த்தான். அவை பார்ப்பதற்கு ஒழுங்காக இருப்பன போன்று தோன்றின. என்றாலும் கணுக்காலில், தொடைகள் சேர்கின்ற இடம் முழுதும் -- முழங்கால் மூட்டுக்கள் உறுதியற்று நடுங்கிக் கொண்டிருந்தன. முழங்காலுக்கு கீழே நான்கு புறமும் மடங்கும் தன்மையுடன் கால்கள் தொளதொளத்துச் சூம்பிக் கிடந்தன. சற்று நேரத்துக்குமுன் தூரத்துப் பார்வைக்கு இரண்டடி உருவமாய்க் குறுகித் தெரிந்த அந்த உருவம் நினைவுக்கு வந்தது பிச்சைக்காரனுக்கு. அந்த இளைஞன் நடக்க முடியாமல் மண்டியிட்டுத் தவழ்ந்து வந்திருக்கிறான் என்பதை யூகித்து, "இந்தாய்யா' இந்த கம்பை வச்சிக்கிட்டு நடக்கிறியா?" என்று கைத்தடியைக் கொடுத்தான். "ஊஹஉம், முடியாது. இப்பிடியே வர்ரேன்...நீ நடந்தா நானும் வருவேன்..." என்று அவன் தோள்களை இறுகப் பற்றியவாறு கூறினான் நொண்டி. வியாதிக்காரன் லேசாகச் சிரித்தான். "கம்பு இல்லாம நானும் நடக்கமுடியாது...இருந்தாலும் சமாளிச்சிக்கிடலாம்னுதான் குடுத்தேன்...கையிலே கம்பு இருந்தா உன்னைத் தூக்கிக்கிட்டுகூட நடப்பேன்...வா போவோம்" என்று கைத்தடியைப் பூமியில் உறுதியாய் ஊன்றித் தாங்கித் தாங்கி நடந்த வியாதிக்காரனின் தோளில் தொங்குவதைப்போல் பிடித்துக்கொண்டு ஊனக் கால்களைத் தத்தித் தத்தி இழுத்தவாறு நகர்ந்தான் நொண்டி. "ஐயா..." "ம்...." "ரொம்பப் பாரமா இருக்கேனா?....உம்....உம்...பார்த்து...." "அதெல்லாம் ஒண்ணுமில்லே....பயப்படாம வா..." "இப்பிடி எல்லாருக்கும் பாரமா இருக்கப் பிடிக்காமத்தான்...பிடிக்காமத்தான்..." என்று விம்மினான் நொண்டி. ---உசிரையே விட்டுடலாம்னு பாத்தியா? ஏய்யா எப்பப்பார்த்தாலும் உன்னைப் பத்தியே உனக்கு நெனப்பு?..." "என்னாலே எல்லாருக்கும் கஷ்டம்தான்..." அவர்கள் இருவரும் தட்டுத் தடுமாறிப் போய்க்கொண்டிருந்தார்கள். நொண்டியும் வியாதிக்காரனும் நிலா வௌிச்சம் இறங்கிக் கொண்டிருக்கும் திண்ணையில் படுத்திருந்தனர். வியாதிக்காரன் பாதிபடுத்தும் பாதி படுக்காமலும் தூணில் சாய்ந்து கால்களை நீட்டிக்கொண்டு பீடி புகைத்துக்கொண்டிருந்தான்.. "பீடி குடிக்கிறியா ஐயா?" "வேண்டாம்; பழக்கமில்லை..." என்று குப்புறப் படுத்திருந்த நொண்டி பதில் சொன்னான். திடீரென்று குப்புறக் கிடந்த முகத்தைத் திருப்பி வியாதிக்காரனைக் கேட்டான் நொண்டி: "கஷ்டத்துக்கு அப்புறம்தான் சொகம்னு சொன்னியே...எனக்கு இனிமே ஏது சொகம்? சொகமே வராதுன்னு தெரிஞ்சும் எதுக்கு நான் இருக்கணும்?" "சொகமே வராதுன்னு முடிவு சொல்லறதுக்கு நீ யாரு? கஷ்டம் வரப் போவுதுன்னு நீயா முன்கூட்டியே சொன்னே? அது திடீர்னு வந்தமாதிரி இது வராதா'....அதெல்லாம் அவன் பார்த்துச் சொல்லணும்" என்று வானத்தை நோக்கிப் புகையை ஊதினான் பிச்சைக்காரன். வியாதிக்காரனுக்கே தான் சொன்ன பதில் நொண்டியின் மனச் சமாதானத்துக்குத்தான் என்று தெரிந்தது. "சாகப் படாது ஐயா...அதான் ஒரு நாளைக்கு எல்லாருமே சாகப் போறமே?... அதுவரைக்கும் இருந்துதான் சாவமே..." என்று சமாதானம் கூறினான். "அது சரி; நீ பாட்டுக்குச் சாகறதுக்கு வந்துட்டியே...உனக்கு தாயி, தகப்பன், குடும்பம்னு ஒண்ணுமில்லியா? என்னை மாதிரி அநாதைதானா?" என்றான் வியாதிக்காரன். "அம்மா..." என்று பெருமூச்செறிந்தவாறு எழுந்து உட்கார்ந்த நொண்டி, சில விநாடிகள் மௌனமாய்த் தலை குனிந்திருந்துவிட்டு, விம்மி விம்மி அழ ஆரம்பித்தான். "வருத்தப்படாதே ஐயா" என்று ஆறுதல் கூறினான் பிச்சைக்காரன். முகத்தைத் துடைத்துக் கொண்டு சொன்னான் இளைஞன். "அதோ தெரியுது பாரு" என்று ரயில்வே லைனுக்கு நேரே வரிசையாகத் தெரியும் சில வீடுகளின் கொல்லைப்புறத்தைக் காட்டி, "அங்கேதான் எனக்கு வீடு. அம்மா இருக்காங்க, தம்பி இருக்கான். தம்பிக்கிக் கல்யாணமாகிக் கொழந்தைகள்கூட இருக்கு. என்னாலேதான் யாருக்கும் உதவியுமில்லே, சந்தோஷமுமில்லே. நான் வயித்திலே ஜனித்ததிலிருந்து எங்க அம்மா என்னைச் சுமந்துகிட்டே இருக்காங்க. அம்மாவுக்கு ஒரே நம்பிக்கை--எனக்கு காலு வந்திடும்னு...எப்பப் பார்த்தாலும் தம்பிகிட்டே 'அந்த டாக்டரைப் பார்க்கணும்னு பணத்தை வாங்கிக்கிட்டு டாக்டர்களைப் பார்த்ததுதான் மிச்சம். அவன் என்ன பண்ணுவான்?...வரவரத் தம்பியும் குடும்பஸ்தனாக மாறிப் புள்ளைகளும் பெண்டாட்டியுமா ஆனப்புறமும் நான் ஒரு சொமையா இருக்கிறதா? எனக்காக அம்மாவும் தம்பியும் தினம் சண்டை போடறாங்க...தம்பி கோவத்திலே என்னை நொண்டின்னு சொல்லிட்டான். அம்மா, 'ஓ' ன்னு அழுதுட்டாங்க' என்று நொண்டி சொல்லும்போது வியாதிக்காரனின் மனசில், ராமலிங்கசாமி மாதிரி காதோரத்திலே முக்காட்டுத் துணியைச் சொருகிக்கொண்டு 'பரதேசி' ன்னு கூப்பிடும் அந்த குரலும் முகமும் தோன்றின. நீட்டிய காலகளின் முழந்தாள் முட்டுகளைப் பிசைந்துகொண்டே சொன்னான் நொண்டி: "நேத்து ஏதோ ஒரு நாட்டு வைத்தியர் இந்தமாதிரிக் குறையெல்லாம் தீத்து வைக்கிறார்னு யாரோ சொன்னாங்க -- அம்மா கையிலே இருந்த காசை முந்தானையிலே முடிஞ்சுண்டு 'வாடா' ன்னு உசிரைவாங்கி என்னை அழைச்சிண்டு போறப்ப நான் என்ன பண்ணுவேன், சொல்லு, சரின்னு அம்மா தோள்லே தொத்திண்டு போனேன். அந்த வைத்தியன் இருக்கிற இடம் நாலு மைல் இருக்கு...பஸ்ஸிலதான் போகணும்...போனோம்...அம்மா ஆசையிலே, வழக்கம்போல இல்லாம ஒரே தடவையிலேயே மண்ணு விழுந்திட்டுது...என் காலைப் பாத்துட்டு முடியாதுன்னுட்டான் அவன். 'இவன் ஒண்ணும் நல்ல வைத்தியன் இல்லே...ஊரை ஏமாத்தறவன்' னு என்னை அழைச்சிண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டாங்க அம்மா... பஸ்ஸிலே ஒரே கூட்டம்..." ஒரு நிமிஷம் பேச்சை நிறுத்திக் கண் கலங்க எங்கோ பார்த்தவாறு வெறித்த விழிகளுடன் நெஞ்சில் பெருகி, தொண்டையில் அடைத்த துயரை விழுங்கினான் நொண்டி. அவன் வாழ்வின் மீது கொண்ட வெறுப்புக்கெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சி காரணமாய் அமைந்து அவனைச் சாவின் பீடத்துக்குக் கொண்டு வந்து தள்ளியதோ -- அந்த நிகழ்ச்சி மனசில் தெரிந்தது. அதை மனசால் பார்த்துக்கொண்டே வியாதிக்காரனிடம் விவரித்தான் நொண்டி. அந்த காட்சி -- வௌபுள்ளிளைப் புடவையுடுத்தி முக்காடிட்ட அந்த வயோதிகத் தாயின் தோளைப் பற்றி, தன்னுடலின் முழுப் பாரத்தையும் அவள் மேலே சுமத்திக்கொண்டு, "கட்டாலே போறவன்; யாராரோ சொன்னாளேன்னு நம்பி வந்தேன். இவன் ஒண்ணும் வைத்தியன் இல்லே; பில்லி சூனியம் வைக்கறவன்... நீ கவலைப்படாதேடா கண்ணா' நான் உன்னை அடுத்த மாசம் வேலூர் மிஷன் ஆஸ்பத்திரிக்கி அழைச்சிண்டு போயி..." என்று ஏதோ சொல்ல வரும்போது, அவள் தோளில் நெற்றியைத் தேய்த்துக்கொள்வதுபோல் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சொன்னான் மகன்:-- "எனக்குக் 'காலில்லையே'ங்கற கவலைகூட இல்லேம்மா; நீ எனக்காகப்படற சிரமத்தைப் பார்த்தாத்தான் ரொம்பக் கஷ்டமா இருக்கம்மா..." என்று விம்முகின்ற குரலோடு அவள் தோளில் நெற்றியைத் தேய்த்துக்கொண்டே இருக்கும்போது, பஸ் வந்தது. "கண்ணா, கெட்டியாப் பிடிச்சுக்கோ...பாத்து, பாத்து...இதோ, இப்பிடி உட்காந்துக்கோ" என்று மகனைச் சுமந்து இழுத்தவாறு பஸ்ஸில் அவள் ஏறுவதற்குள், முன்பக்கத்தில் டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்த கண்டக்டர்,"ஆச்சா? எவ்வளவு நாழி?" என்று அவசரப்படுத்தினான். ஒருவாறு சிரமத்திற்குப்பின் பஸ்ஸில் ஏறியதும், எதிரில் இருந்த இருவர் உட்காரும் ஸீட்டில் மகனைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு உட்கார்ந்தாள் அம்மா. பஸ் போய்க்கொண்டிருக்கும்போது, அவனது தாய் சேலைத் தலைப்பிலிருந்த சில்லறையை எடுக்கும்போது, அவன் அகஸ்மாத்தாகத் திரும்பும்போது அவர்கள் ஸீட்டுக்கு மேலே எழுதியிருந்த 'பெண்கள்' என்ற வாசகம் அவன் கண்களில் பட்டது. அப்பொழுது ஒரு ஸ்டாப்பில் பஸ் நின்றது. அழகிய இளம் பெண்ணொருத்தி பஸ்ஸில் ஏறினாள். அவளைப் பார்த்தவாறே அருகில் வந்தான் கண்டக்டர். நொண்டி ஒரு விநாடி பெண்ணைப் பார்த்தான்; அவளது இடத்தில் தான் உட்கார்ந்திருப்பதை உணரும்போது அவனது ஆண்மை உணர்ச்சி அவனுள் ரகசியமாக வதைபட்டுக் கொண்டிருக்கும் அதே சமயம், அதைக் கொல்லுவதுபோல் கண்டக்டரின் குரல் ஒலித்தது: "இந்தாய்யா ஆம்பளே' பொம்மனாட்டி நிக்கிறாங்க இல்லே?" அந்த நொண்டி திடீரென்று கால்கள் வந்துவிட்டது போல் எழுந்து நின்றான். அவன் எழுந்த வேகத்தில் அந்தப் பெண் அந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டாள். எழுந்து நின்ற நொண்டியின் கால்கள் நடுங்கின... "ஐயா'...ஐயா' "என்ற தாயின் பரிதாபகரமான குரல் கண்டக்டரையும், அந்த பெண்ணையும் பஸ்ஸிலுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இன்னொருவர் சொல்லித்தன் காதால் கேட்கப் பொறாத அந்த வார்த்தையை அவளே சொல்லவேண்டிய நிர்ப்பந்தம்... "ஐயா' அவன் நொண்டி ஐயா' நிக்க முடியாதையா'...." என்று சொல்லிக் கண்களில் வழிந்த கண்ணீருடன் எழுந்து தன் இடத்தைக்காட்டி, "கண்ணா, நீ இப்படி உக்காந்துக்கோடா" என்று சொல்லும்போது தடுமாறி விழ இருந்த மகன், தாயின் தோளைப் பிடித்துக்கொண்டு சொன்னான்; 'இல்லேம்மா, நான் நிப்பேன்." "உன்னாலே முடியாது கண்ணா" என்று அந்தப் பெண்ணின் பக்கத்தில் மகனை உட்கார வைத்து அந்தத் தாய் நிற்கும்போது, அந்தப் பெண் எழுந்து அவன் தாயிடம் மன்னிப்புக் கேட்பதுபோல், "நீங்க உக்காருங்க அம்மா" என்று வற்புறுத்திக் கெஞ்சினாள். கண்டக்டரின் முகம் அழுவதுபோல் மாறிவிட்டது "ஸார், மன்னிச்சுக்குங்க, எனக்கு முதல்லே தெரியலை ஸார்..." என்று நொண்டியிடம் குனிந்து சொன்னான். நொண்டி யாருக்கும் ஒன்றும் பதில் சொல்லாமல், யார் முகத்தையும் பார்க்காமல், பக்கத்தில் அமர்ந்திருந்த தாயின் பின்னால் ஒரு குழந்தையைப்போல் முகம் புதைத்து, அழுகையை அடக்கி, நெற்றியை அவள் தோளில் தேய்த்துக் கொண்டே இருந்தான். பஸ் போய்க் கொண்டிருந்தது. பஸ்ஸிலிருந்த எல்லோரின் அநுதாபமும் அவன் நெஞ்சில் கனமேற்றி அவன் உயிரையே அரிப்பதுபோல்... ---நொண்டி சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் மௌனமாய்க் கேட்டவாறிருந்த வியாதிக்காரன் தன்னைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தான். 'இவனுக்கு இன்னும் வயசு இருக்கு, வாழ்க்கை இருக்கு... இவனுக்கு ஒரு கஸ்டம்னா வருத்தப்படறதுக்கு, உதவி செய்யறதுக்கு உறவுக்காரங்க இருக்காங்க. இவன் வாழணுன்னு ஆசைப்படறதுக்கு அன்பான தாய் இருக்கா...இவன் நொண்டின்னு தெரிஞ்சு அன்பு காட்ட, பரிதாபப்பட, பிரியம்காட்ட உலகமே இருக்கு....இவன் எதுக்கு சாகணும்?' என்று ஆரம்பித்த மனம் தன்னைப்பற்றி எண்ணும்போது... 'எனக்கு யார் இருக்கா? எனக்கு ஒரு கஸ்டம்னா, வருத்தப்படறதுக்கு, உதவி செய்யறதுக்கு உறவு இருக்கா? உறவுங்கெல்லாம் உதறித்தள்ளி எத்தனையோ காலம் ஆயிடுச்சே? நான் வாளணும்னு ஆசைப்படற ஜீவன் என்னைத் தவிர இன்னொண்ணு உண்டா? எனக்கு அன்பு காட்ட, பரிதாபப்பட, பிரியங்காட்ட யார் இருக்கா? உலகமே வெறுத்து முகம் சுளிச்சு என்னைப் பாக்குது' என்றெல்லாம் எண்ணி மௌனமாய் உட்கார்ந்திருந்தான் வியாதிக்காரன். நொண்டியின் இமைகளைத் தூக்கம் அழுத்த, அவன் கொட்டாவி விட்டான். அந்த சப்தம் கேட்டு வியாதிக்காரன் நொண்டியைப் பார்த்தான், "இந்தாய்யா, நீ சாகப்படாது,....சொல்லிட்டேன். ஒனக்குக் காலு இல்லேங்கிற நெனப்பினாலேதான் நீ கஸ்டப்படறே, மத்தவங்களையும் கஸ்டப்படுத்தறே." "நான்தான் சொல்றேனே, எனக்குக் காலில்லாம மத்தவங்களுக்குத் தான் பாரமா இருக்கேனே' எங்கம்மா வைத்தியனுக்குன்னு தம்பியைப் பணம் கேக்கறப்போ அவங்க ரெண்டு பேருக்கும் என்னாலே எவ்வளவு சண்டை' எவ்வளவு வருத்தம்' " என்று நொண்டி சொல்ல, குறுக்கிட்ட வியாதிக்காரன், "ஆமாய்யா, நீ சதாநேரமும் உங்கம்மா தோளைப் புடிச்சுத் தொங்கிக்கிட்டே இருந்தா அப்படித்தான் சண்டை வரும். காலு இல்லாட்டிப்போனா என்னாய்யா? கையாலே இந்த உலகத்தையே வளைக்கலாமே' வாழ்றத்துக்குக் காலும் கையும் வேணாமய்யா. நல்ல மனசு வேணும், அறிவு வேணும். மனுசனோட அறிவு யானையைக் காட்டிலும் சிங்கத்தை காட்டிலும் வலுவானது. இல்லேங்கறதுக்காகச் செத்து இருந்தா மனுச சாதியே பூண்டத்துப்போயிருக்கும். காலு இல்லாட்டி அது இல்லாத் கொறையை மாத்திக்கிட்டு எப்படி இருக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்னா, காலு இருக்கிறங்களைக்காட்டிலும் நீ வேகமா ஓடிடமாட்டியா? "மனுசனுக்கு ரெக்கை இருந்திருந்தா அவனும் பறந்துகிட்டிருப்பான். ரெக்கை இல்லாததனாலேதான் 'விர்ரு விர்ரு' ன்னு இப்ப ஏரோப்ளேன்லே பறக்கிறான். இன்னும் மானத்துலே எங்கெங்கேயோ போயி என்னென்னாத்தையோ புடிக்கிறான். இல்லேன்னு சாவறதா? உங்கம்மாவேதான், என் மகனுக்குக் காலு இல்லாட்டி என்னா, என்னென்னா காரியம் பண்றான்னு நெனைக்க வெச்சிட்டியினா அவுங்க ஏன் உன் தம்பிகிட்டே போயி வம்புக்கு நிக்கப் போறாங்க? நீ என்னா என்னை மாதிரி தீராத நோயாளியா? நானே வாழறப்போ நீ சாகப்போறேங்கறியே..." என்று சொல்லும்போது வியாதிக்காரனின் தொண்டை அடைத்தது. அவனது பேச்சால் வியாதிக்காரனின் நெஞ்சிலிருந்து, வாழவேண்டுமென்ற ஆசை, வாழ முடியும் என்ற நம்பிக்கை நொண்டியின் இதயத்தில் தொற்ற ஆரம்பித்தது. நொண்டி புதியதோர் நம்பிக்கையுடன் தலை நிமிர்த்தி வியாதிக்காரனைப் பார்த்தான். வியாதிக்காரன் தொடர்ந்தான். "நீ என்னமோ சொல்றியே, பஸ்ஸிலே உன்னை எந்திரிக்கச் சொன்னான், அப்புறம் உட்காரச் சொன்னான்னு... அதுக்காக உன் மனசு கஸ்டப்பட்டது, நாயந்தான். தோ, என்னைப்பாரு. என்னை அந்த பஸ்ஸிலே ஏறவுடுவானாய்யா? நீ என்னைப் பகல்லே பாத்தா இப்பிடி பக்கத்திலே உக்காந்து பேசக்கூட மாட்டே, தோ... வௌிச்சத்திலே பாரு இந்தக் கையை" என்று தன் குறைபட்ட கைகளை மேலே இருந்த கோட்டை இழுத்து விட்டுக் கொண்டு நிலா வௌிச்சத்தில் நீட்டி விம்மினான்: "இந்தக் கை கொஞ்ச நாளைக்கு முன்னே முழுசா இருந்தது. உனக்குக் காலு இல்லே-- அவ்வளவுதான். எனக்கு இருக்கிறதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இல்லாமாப் போயிக்கிட்டே இருக்கு... இந்தக் கையாலே முந்தாநாளு ஒரு கொழந்தையைத் தூக்கிட்டேன். கொழந்தையைத் தூக்கணும்கிற ஆசையினாலேயா தூக்கினேன்? சீ அந்த ஆசை எனக்கு வரலாமா? தண்டவாளத்திலே வந்து நிக்குதே, ரயிலு வர்ர நேரமாச்சேன்னு பதறித்தூக்கிட்டேன். நான் வியாதிக்காரந்தான். என் உடம்பிலே சொரணைன் அத்தே போயிடுச்சி. ஆனாலும் ஒரு குழந்தையை தூக்கறோம்கிற நெனைப்பிலேயே என் மனம் சிலிர்த்துப் போச்சு... ஆனா, ஆனா.... அதுக்காக அந்தப் பெத்தவங்க என்னை அடிக்க வந்துட்டாங்க, தெரியுமாய்யா?... மனுசனாப் பொறந்தும், மனுசனுக்குள்ள எந்தச் சொகத்தையும், எந்த உரிமையையும் அநுபவிக்க முடியாம் நான் வாழறேனே... ஒரு பிசாசு மாதிரி தனியா குந்திக்கிட்டு, வாழறதா நெனச்சி என்னையே ஏமாத்திக்கிறேனே" என்று சொல்லும்போது கொஞ்சம் கொஞ்சமாக விம்ம ஆரம்பித்து விக்கிவிக்கி அழுதான் வியாதிக்காரன். சற்று நேரத்திற்குப்பின் கண்களைத் துடைத்துக் கொண்டு ஒரு வரண்ட சிரிப்புடன் சொன்னான்: "ஆமா, பெத்தவங்களுக்குத் தெரியும் புள்ளை அருமை.... சாவைக் காட்டிலும் கொடியது இல்லையா, இந்த நோயி? அப்புறம் விஷயத்தைச் சொன்னப்புறம் ஒருமாதிரி சமாதானம் ஆனாங்க...அப்பக்கூட, 'ஒரு கொரலு, எங்களைக் கூப்பிட வேண்டியதுதானே...நீயா தூக்கறது?'ன்னு கேட்டிச்சி ---அந்த அம்மா. 'நீங்க சொல்றது நாயந்தான். தெரியாம செஞ்சிட்டே' ன்னு மன்னிப்பு கேட்டுகிட்டு வந்தேன், ஏன்னா, இது பொல்லாத நோயி, மனுசனுக்கு வரக்கூடாது; ஆரம்ப காலம்னா தீத்துடலாம். இது ரொம்ப முத்தின கேஸஉ' இனிமே கொறையாது; பரவும். மத்தவங்க ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். ஒரு தாய்க்குத் தன் குழந்தை செத்தாலும் பரவாயில்லே; இந்த நோய்வரப் பொறுக்கமாட்டா" என்று அவன் தன்னையுணர்ந்து தனக்குள் முனகுவதுபோல் பேசினான். சில நிமிஷ மௌனத்துக்குப் பிறகு நொண்டி இரண்டாவது முறை கொட்டாவி விட்டான். "தூக்கம் வருதா? படுத்துக்க, ஐயா' தூங்கர்து ரொம்பச் சொகம். செத்தாத் தூங்கமுடியாது, கேட்டுக்க, பொழுது விடிஞ்சி பெத்த மகராசிக்குப் புள்ளையாப் போய்ச் சேரு' உனக்கு நான் கடைசியாச் சொல்றது இதுதான்: காலு இல்லேன்னு நெனச்சி நீ யாருக்கும் பாரமா இருக்காதே. இப்ப யாரோட துணையுமில்லாம எப்பிடி சாக வந்தியோ, அந்த மாதிரி வாழப் போ. அதிலே ஒண்ணும் வெக்கப்படவேணாம். உன்னையே பாத்து உங்கம்மா மகிழ்ந்து போவாங்க, பாரு..." என்று, அணைந்திருந்த கடைசிப் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான் வியாதிக்காரன். படுத்த சற்று நேரத்துக்கெல்லாம் நொண்டி தூங்கிப் போனான். வியாதிக்காரன் தூக்கம் வராமல், கீழே கிடந்த துண்டுப் பீடிகளைப் பொறுக்கிப் பற்றவைத்துக் கொண்டு தூணில் சாய்ந்து வானத்தை வெறித்தவாறு உட்கார்ந்திருந்தான். "அதோ, ரொம்ப தூரம் தள்ளி வந்திருச்சே சப்தரிஸி மண்டலம்...நாலு நச்சத்திரச் சதுரத்திக்கு ஓரமா, வாலு மாதிரி இருக்கற மூணுக்கு நடுவாலே, ஓரத்திலே, ஆமாமா, அருந்ததி...அருந்ததியைப் பார்த்தவனுக்கு ஆறு மாசத்துக்குச் சாவில்லே' அடிச் செருப்பாலே' இன்னும் ஆயுசு அதிகம் வேணுமா என் கட்டைக்கி?" என்று விரக்தியும் வேதனையும் குழைய முனகிக்கொண்ட வியாதிக்காரன், கையிலிருந்த பீடியைத் தரையில் நசுக்கித் தேய்த்தான். அவன் பார்வை சப்தரிஷி மண்டலத்தை வெறித்தது. விடிந்து ஆறு மணிக்கு வடக்கே போகும் பார்சல் வண்டியின் அவலமான கூக்குரல் கேட்டு, சத்திரத்துத் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த நொண்டி கண் விழித்தான். அவனருகே வியாதிக்காரனின் கறை படிந்த கந்தலும், பளபளப்பான புதிய தகரக் குவளையும் தனியாகக் கிடந்தன. அங்கே ஈக்கள் மொய்த்தன. தூரத்தில், நீண்டு செல்லும் இருப்புப் பாதையின் வளைந்து திரும்பும் எல்லையில் புகை கக்கி அழுதவாறு பார்சல் வண்டி நின்றிருந்தது' அங்கு மனிதர்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர். "இங்கே சுத்திக்கினு இருப்பானே -- அந்தப் பெருவியாதிக்காரன், ரயிலு முன்னாடி போயி விழுந்துட்டான்'..." "அவன் எனக்கு வாழக் கற்றுக் கொடுத்தான்; நான் அவனுக்குச் சாகக் கற்றுக் கொடுத்தேன். அவன் என்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால்?" --நொண்டியின் கண்கள் கலங்கின. "அந்த இடத்தின் ராசியோ?--தன்னையே காவு தந்து இன்னொரு விபத்து ஏற்படாமல் தடுக்க முயற்சியோ? அவன் மேனியிலிருந்ததா பயங்கர தொத்து வியாதி?...இல்லை; என் மனசில் தோன்றியதே---தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் --அந்த 'வாழ்க்கையின் வெறுப்பு' த்தான் பயங்கர வியாதி...அதற்கு அவன் பலியாகிவிட்டான்." திடீரென்று ரெயில்வே லைனுக்கு அப்பால் வரிசையாகத் தெரியும் வீடுகளின் கொல்லைப்புறக் கதவுகளைத் திறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோரின் நடுவே இருந்து, "ஐயோ' கண்ணா' " என்ற அலறல் ரயில்வே லைனுக்கு அப்பால் வெகு தூரத்திலிருந்த நொண்டியின் வயிற்றைக் கலக்கியது. "அம்மா' நான் இருக்கிறேன்....அம்மா' " என்று கோஷித்தவாறு வேகமாய்த் தவழ்ந்தோடினான் அவள் மகன். "மகனே'....மகனே'..." என்று ரயில்வே லைன் மேட்டின் மீது விழுந்து புரண்டு கொண்டிருந்த அவன் தாய் 'நான் இருக்கேன்' என்ற குரல் கேட்டு அவனைப் பார்த்து ஒன்றும் புரியாமல் அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு கண்ணீருடன் சிரித்தாள். பிறகு, "யார் பெத்த மகனோ' " ரயில் சக்கரத்தைப் பார்த்து அழுதாள். அவள் அருகே வந்த அவள் மகன் அவள் தோளில் முகம் புதைத்து நெற்றியைத் தேய்த்து அழுதுகொண்டே சொன்னான்: "அம்மா' நான் இருக்கேம்மா...அது உன் மகனில்லே... அது. அந்த மனுஷன்...அவன் செத்திருக்கக் கூடாது அம்மா....ஆ'...." என்று பெருங்குரலில் கதறி அழுதான் நொண்டி. ----- #5. பொம்மை அந்த வீதியிலேயே பெரிய வீடு கிருஷ்ண மந்திரம். பெரிய வீடு என்றாலும் நாற்புறமும் மதிலால் வளைக்கப்பட்ட இந்தக் காலத்து பங்களா அல்ல; பழைய காலத்து மாளிகை. வீட்டின் முன்புறம் சலவைக் கற்கள் பதித்த பெரிய திண்ணைகளும் ரேழியும் உண்டு. அந்த வீட்டுப் பெரியவரின் பேத்திக் குழந்தையாக ராணி பிறக்கும் வரை, திண்ணைகளும் ரேழியும் சுதந்திரமாகத்தான் இருந்தன. பேத்திக் குழந்தை தவழ ஆரம்பித்து, ஒருநாள் தவழ்ந்துகொண்டே வந்து வாசலில் இறங்கி விட்ட பிறகு, அதைப் பார்த்துக்கொண்டே வந்து வண்டியில் இறங்கிய பெரியவர், குழந்தையை வாரியெடுத்துக்கொண்டு வேலைக்காரர்களை ஒரு முறை வைது தீர்த்த பிறகு--குழந்தையின் பாதுகாப்புக்கு இந்த வேலைக்காரர்களை நம்புவது ஆபத்து என்ற தீர்மானத்துடன் வீட்டின் முன்புறம் கம்பி அழிகள் வைத்து அடைத்து, திண்ணைகளும் ரேழியும் சிறை வைக்கப்பட்டன. குழந்தை ராணி, சுதந்திரமாய்த் தவழ்ந்து திரிந்தாள். இப்பொழுது ராணி நடந்து திரிகிறாள், வயசு நாலு ஆகிறது. ராணிக்கு ஒரு அங்கச்சியும் பிறந்து விட்டாள். திண்ணை நிறைய செப்பும் பொம்மையும் இறைந்து கிடக்க, நாளெல்லாம் விளையாடிக்கொண்டிருப்பாள் ராணி. தாத்தா, ராணிக்குப் புதிசு புதிசாகப் பொம்மைகளும் விளையாட்டுச் சாமான்களும் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பார். ராணி ஒவ்வொன்றையும் புதுமோகம் தீரும் வரை, உண்ணும்போதும் உறங்கும்போதும் கூடக் கையிலேயே வைத்திருந்து விளையாடி உடைத்து, விளையாட்டுச் சாமான்களுக்காக வைத்திருக்கும் பிரம்புப் பெட்டியில் பத்திரமாக வைத்துவிடுவாள். அவளாக உடைக்காமல் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், தலையைப் பிய்த்துக் கொண்டு புரண்டு புரண்டு, காலையும் கையையும் உதைத்துக் கொண்டு அழுவாள். தாத்தா உடனே புதிசு வாங்கிக் கொண்டு வந்து தருவார். அவளுக்கென்ன---ராணி' அந்தப் பிரம்புப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து திண்ணை மீது வைத்துவிட்டு, முக்கி முனகித்தானும் திண்ணையில் ஏறிப் பெட்டியைத் திறந்து எல்லாவற்றையும் கொட்டிய ராணி, "ஹை.....எவ்வளவோ சொப்பு' " என்று ஆச்சரியத்தால் கூவிய குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். வௌியே---கம்பிகளுக்கிடையே பரட்டைத் தலையை அடைத்துக் கொண்டு மோதிர விரலையும் நடு விரலையும் வாயிலிட்டுச் சப்பியவாறு, பிறந்த மேனியாக நின்றிருந்த ராணியின் வயதேயுள்ள ஒரு கறுப்புக் குழந்தை ராணியைப் பார்த்துச் சிரித்தாள். அரைஞாண்கூட இல்லாத கரியமேனியில், புழுதியில் விழுந்து புரண்டதால் அழுக்கின் திட்டுக்கள் படர்ந்திருந்தன. மூக்கிலிருந்து ஒழுகியது, வாய் எச்சிலுடன் கலந்து, மோவாயில் இறங்கி மார்பிலும் வயிற்றின் மேலும் வடிந்துகொண்டிருந்தது. அந்தக் குழந்தையை பார்க்க ராணிக்கு ஆச்சரியமாய் இருந்தது. அந்தக் குழந்தையும் முகமே இரண்டு கண்களாய் விரிய ராணியைப் பார்த்தது. "ஐயய்யே....நீதான் தத்தையே போடல்லியே...." என்று கையை நீட்டி இளித்துக் காட்டிவிட்டு, அந்த அம்மணக் கோலத்தைப் பார்க்க வெட்கப்படுவதுபோல் முகத்தை மூடிக்கொண்டாள் ராணி. ராணியின் வெட்கம் இரவல்தான்; ராணி சட்டையில்லாமல் திரிந்தால், தாத்தா அப்படிச் சொல்லிக்கொண்டு முகத்தை மூட்டிக்கொள்வார். ராணி அம்மாவிடம் ஓடிச் சட்டையும் ஜட்டியும் போட்டுக்கொண்டு வந்து, முகத்தில் மூடியிருக்கும் தாத்தாவின் கையை விலக்கி, தான் போட்டிருக்கும் சட்டையையும், சட்டையை தூக்கிவிட்டு ஜட்டியையும் காட்டுவாள். முகத்தைத்தான் மூடிக்கொள்ள தாத்தா கற்றுக் கொடுத்திருந்தார்; கண்ணை மூடிக்கொள்வதற்கு?....தாத்தாவும் விரல் இடுக்கு வழியாக பார்ப்பாரே' அதே போல் பார்த்த ராணி, முகத்திலிருந்த கையை எடுத்துவிட்டு கேட்டாள்: "ஆமா, ஒனக்குத் தத்தை இல்லே?...." "ஓ' இருக்கே....." "எங்கே ஈக்கு?..." "தோஓ'....அங்கே' " என்று கையைக்க் காட்டியது கறுப்புக் குழந்தை. "எங்கே, உங்க வீத்திலேயே?...." "ஆமா...." "உங்க வீது எங்கே?..." "தோ....இங்கேதான்" என்று கையைக் காட்டியது கறுப்புக் குழந்தை. ராணி திண்ணையிலிருந்து ரொம்பப் பிரயாசைப்பட்டுக் கீழே இறங்கி வந்து கம்பி அடைப்பின் அருகே, கையில் நேற்று தாத்தா வாங்கித் தந்த புதிய வர்ணப் பொம்மையுடன் நின்று, அவள் காட்டிய திசையில் பார்க்க முயன்றாள். தலையை வௌியே தள்ளிப் பார்க்க முடியாததால் அந்தக் குழந்தையின் வீடு தெரியவில்லை. கறுப்புக் குழந்தை ராணியின் கையிலிருந்த பொம்மையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கறுப்புக் குழந்தை காட்டிய இடம் அதிக தூரத்தில் இல்லை. கிருஷ்ண மந்திரத்துக்குப் பக்கத்தில் நீண்டு செல்லும் சுவர் ஓரமாக, பிளாட்பாரத்தில் ஒரு பெரிய முருங்கை மரம் நிழல் பரப்பி நிற்கிறது. அதன் நிழலில் சுவரின்மீது 'முனீஸ்வரர் அபயம்' என்று பாமரர்களால் எழுதி வைத்துக் கொண்டாடப்படும் ஒரு பாமரக் கடவுள், முழுச் செங்கல் உருவத்தில் எழுந்தருளியிக்கிறார், அவருக்குப் பக்கத்தில் இரண்டு 'ட' னா ஆணிகள் அடித்து, ஒரு கோணியின் இரண்டு முனைகளை ஆணியில் மாட்டி, இன்னொரு முனையை முருங்கை மரத்தில் பிணைத்து, நாலாவது முனையை ஆதரவில்லாமல் காற்றில் திண்டாடிவிட்டு அந்த முனையை ஒரு பக்கத்து மறைப்பாகக் கொண்டு அதில் ஒரு குடும்பம் வாழ்கிறது. கறுப்புக் குழந்தை காட்டிய அந்த இடம் ராணிக்குத் தெரியவில்லை. "ஒனக்குத் தத்தை யாது வாங்கித் தந்தா? தாத்தாவா?" "எனக்குத் தாத்தாத்தான் இல்லியே' " "தாத்தா இல்லே?--பாத்தி?" "ஊஹ்உம்." "அம்மா?" "ஓ...அம்மா இருக்கே' எங்கம்மா வேலைக்குப் போயிருக்கு. அப்புறமா...நாளைக்கு வரும்போது எனக்கு முறுக்கு வாங்கித் தரும். சொல்லூ" "உங்க வீத்லே பொம்மை யீக்கா?" கறுப்புக் குழந்தை பதில் சொல்லாமல்....ராணியின் கையிலிருந்த பொம்மையையே பார்த்துக் கொண்டிருந்தது. ராணி பதிலை எதிர்பார்த்தா கேள்வி கேட்டாள்? அவளுக்கு ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்' பதில் வந்தாலும் வராவிட்டாலும் கேட்க வேண்டும். அதில் ஒரு லயிப்பு. "ம்...ம்...அப்பதம்....கப்பல்----கப்பல் ஈக்கா?" கறுப்புக் குழந்தை தலையை ஆட்டியது. அந்தத் தலையாட்டலுக்கு 'இல்லை' என்றும் கொள்ளலாம்; 'இருக்கு' என்றும் கொள்ளலாம். அதை எங்கே இவள் கவனித்தாள்? எங்கோ பார்த்துக்கொண்டு கண்களைச் செருகிச் செருகி 'ம்....ம்....ம்....ம்' என்ற சுருதியிசையோடு, 'அப்பதம்....லயில் ஈக்கா? கார் ஈக்கா, வண்டி ஈக்கா?' என்று கேட்டுக் கொண்டே இருந்தாள் ராணி. அவள் கேட்பதற்கெல்லாம் தலையாட்டினாள் கறுப்புக் குழந்தை. வீடு இருந்தாலல்லவா வீட்டில் என்னென்ன இருக்கும் என்று தெரியும்? வீதியிலிருப்பதெல்லாம் வீட்டிலிருப்பதாகத்தான் கறுப்புக் குழந்தைக்கு நினைப்பு. வீதியே வீடாகி விட்டபின்..... அந்தக் 'கேள்வி கேட்கும்' விளையாட்டு சலித்துப் போய்விட்டது ராணிக்கு. "நா....வௌபுள்ளிளையாதப் போதேன்" என்று கூவிக்கொண்டே திண்ணைமேல் ஏறிய ராணி, "உங்க வீத்லே பொம்மை ஈக்கா?" என்று கடைசியாக மறுபடியும் ஒரு முறை கேட்டு வைத்தாள். கறுப்புக் குழந்தை வழக்கம்போல் தலையாட்டினாள். திண்ணைமீது உட்கார்ந்துகொண்டே ராணி தன்னிடமிருந்த வர்ணப் பொம்மைக்குச் சட்டை போட்டாள். "ஹை...சின்ன சட்டை'...." என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பினாள் கறுப்புக் குழந்தை. "போ....' நீ தான் அதது....பாப்பா கூத தத்தை போத்துக்கித்தா...பாப்பாதான் தமத்து, நா ரொம்ப தமத்து...மானம் வரைக்கும் தமத்....தூ" என்று கைகளை அகல விரித்துக் கொண்டு சொன்னாள் ராணி. இவள் என்ன பேசுகிறாள் என்று கூட கறுப்புக் குழந்தைக்குப் புரியவில்லை. கறுப்புக் குழந்தைக்குப் புரிந்ததெல்லாம் 'தனக்கும் ஒரு பொம்மை வேண்டும், அதற்குச் சின்ன சட்டை போட்டு அழகு பார்த்துச் சிங்காரிக்க வேண்டும், தானும் ஒரு சட்டையைப் போட்டுக்கொள்ள வேண்டும்' என்பவைதான். உள்ளேயிருந்து குழந்தை அழும் சப்தம் கேட்டது. கறுப்புக் குழந்தை கால்களை எக்கிக்கொண்டு கம்பிகளின் வழியாக எட்டிப் பார்த்தது. "அங்கச்சிப் பாப்பா அயுதா....அங்கச்சிப் பாப்பாக்குத் தலைக்கு ஊத்துதா.... உங்க வீத்திலே பாப்பா ஈக்கா?" என்று கைகளைத் தட்டிச் சிரித்தவாறு கேட்டாள் ராணி. எதைச் சொல்ல வந்தாலும் அதைத் தொடர்ந்து ஒரு கேள்வியாகத்தான் முடிக்கத் தெரியும் ராணிக்கு. "எனக்குத் தான் தம்பி இருக்கானே' " "தம்பிப் பாப்பாவா.... ' உங்க பாப்பாவை இங்கே அயெச்சிண்டு வருவியா? " வீட்டின் உள் முற்றத்தில் குழந்தைக்குத் தலைக்கு ஊற்றிக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் காட்சியில் லயித்திருந்த கறுப்புக்குழந்தை வழக்கம்போல் இதற்கும் தலையாட்டினாள். அப்பொழுது "ஏ' ....செவாமி...." என்ற குரல் கேட்டு, வலது கையால் கம்பியை பிடித்துக் கொண்டு, வலது காலைக் கம்பியில் உந்திக்கொண்டு இடது காலையும் இடது கையையும் வீசிக்கொண்டே திரும்பிய கறுப்புக் குழந்தை "இங்கேதாம்மா இருக்கேன்" என்று பதில் குரல் கொடுத்தது. "ஏங் கொரங்கே' பாப்பாவெப் பாத்துக்காம அங்கே எங்கே போயித் தொலைஞ்சே' வாடி, அங்கேயே நின்னுகிட்டு. எனக்கு வேலைக்குப் போவணும், வந்து கொட்டிக்க' " என்று தாயின் குரல் அழைத்தது. "பொம்மை நல்லாருக்கு' அம்மா கூப்புடுது, நா போயி 'பயேது' துன்னுட்டு வர்ரேன்" என்று சொல்லிவிட்டுத் தாயை நோக்கி ஓடினாள் சிவகாமி. சிவகாமியின் தாய் ரங்கம்மாள் அந்தத் தெருவின் மறுகோடியில் புதிதாய்க் கட்டுகின்ற ஒரு வீட்டில் சித்தாள் கூலியாக வேலை பார்க்கிறாள். வேறு எங்காவது தொலைவில் வேலை இருந்தால் மத்தியானம் சாப்பிட வரமாட்டாள். பக்கத்திலிருப்பதால் குழந்தைக்கும் போட்டுத் தானும் சாப்பிட வந்தாள். அவளுடைய கைக்குழந்தைக்கு, பிறந்தது முதலே சீக்கு. கைப்பிள்ளை வயிற்றில் ஆறு மாதமாய் இருக்கும் போது புருஷன் க்ஷயரோகத்தால் செத்துப் போனான். அந்தத் துயரத்தை மாற்ற வந்தது போல் அவளுக்குப் பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகவும், புருஷனைப் போலவேயும் இருந்ததில் அவளுக்கு ஒரு தனி மகிழ்ச்சி. பிறந்து எட்டு மாதமாகியும் சற்றும் வளர்ச்சியின்றி நரம்பும் தோலுமாய்க் கிடக்கிறது குழந்தை. நாள்தோறும் காலையில் பக்கத்திலிருக்கும் முனிசிபல் தர்ம ஆஸ்பத்திரி மருந்தை வாங்கிக் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறாள்; அதுவும் குடித்துக்கொண்டுதான் இருக்கிறது. ரங்கம்மாளுக்குக் கைக்குழந்தையின் மீதுதான் உயிர். சிவகாமி 'பொட்டச்சி' தானே என்ற அலட்சியம். கைக்குழந்தைதான் ஆம்பிளைச் சிங்கமாம்; அவன் வளர்ந்துதான் சம்பாதித்துப் போட்டுப் பெற்றவளுக்குக் கஞ்சி ஊற்றப் போகிறானாம். நோய் பிடித்து, நரம்பும் தோலுமாய் உருமாறி, நாளெல்லாம் சிணுங்கி அழுது, சோர்ந்து உறங்கிச் செத்துக்கொண்டோ, வாழ்ந்துகொண்டோ---எப்படி இருந்தால் தான் என்ன? ஒரு தாயின் கனவுகளை வளர்க்க ஒரு குழந்தை போதாதா? இரண்டு நாளாகக் கைக்குழந்தைக்குக் காய்ச்சல் வேறு. வழக்கம்போல் முனிசிபல் ஆஸ்பத்திரி மருந்தை வாங்கி வந்து குழந்தைக்கு ஊற்றிவிட்டு, பக்கத்திலிருந்த குப்பைக் குழியில் தன்னையொத்த குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த சிவகாமியை அழைத்து, வயிற்றுக்கு 'நீத்தண்ணி'யை வடித்துக் கொடுத்து, "பாப்பாவை பாத்துக்கோ, எங்கியும் பூடாதே' " என்று காவலுக்கு வைத்துவிட்டுப் போன ரங்கம்மாள், வரும்போது சிவகாமியை அங்கு காணாமல் கோபத்துடன் கூவியபோது---பக்கத்திலிருந்து, "இங்கேதானேம்மா இருக்கேன்" என்ற குரல் கேட்டதும் சாப்பிட அழைத்ததாக தன் கோபக் குரலை மாற்றிக் கொண்டாள் ரங்கம்மாள். வரும்போதே "அம்மா அம்மா...." என்று கொஞ்சிக் கொண்டே வந்தாள் சிவகாமி. "இன்னாடி?" "உம்....எனக்குச் சட்டை குடும்மா, சட்டை' வெக்கமா இருக்கு" என்று முழங்காலைக் கட்டிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள் சிவகாமி. "எங்கே இருக்கு சட்டை?" "ஐயே, பொய்யி சொல்றே, பெட்டிக்குள்ளே இருக்குது" சிரித்துக் கொண்டே தலையாட்டினாள் சிவகாமி. "ஒரே ஒரு கிழிசல் இருக்கு. அதையும் போட்டுப் பொரட்டி அழுக்காக்கிப் போட்டுடுவே' " "இல்லேம்மா' அழுக்காக்காம அப்பிடியே புதுச்சா வெச்சிக்கிறேம்மா' அம்மா, ஐய, அம்மா' சட்டை, இல்லாம எனக்கு வெக்கமா இருக்கு. அங்கே அந்த வூட்டுப் பாப்பா பூச்சட்டைப் போட்டிருக்கு' எம்மா அழகு தெரியுமா, அந்தப் பாப்பா' " "சரி சரி, தின்னு' " அலுமினியத் தட்டிலிருக்கும் பழைய சோற்றையும் ஊறுகாயையும் தன் சின்னஞ்சிறு விரல்களால் அள்ளி அள்ளிச் சாப்பிட்டாள் குழந்தை. ரங்கம்மாள் பானையில் பருக்கைகளுடன் கலந்திருந்த தண்ணீரில் உப்பைப் போட்டுக் கலக்கிப் பானையோடு தூக்கிக் குடித்தாள். "அம்மா, அம்மா' " "இன்னாடி?" "எனக்கு ஒரு பொம்மை வாங்கித் தரியா" "தர்ரேன்..." "எப்ப வாங்கித் தரே?" "நாளைக்கி...." "அந்தப் பாப்பா நெறையச் சொப்பு வெச்சிருக்கும்மா...." என்று பொம்மையைப் பற்றியும் செப்புகளைப் பற்றியும் சட்டையைப்பற்றியும் பேசிக்கொண்டே சாப்பிட்டாள் சிவகாமி. சாப்பிட்டு முடித்த பிறகு சுவரோரமாக வைத்திருந்த ஜாதிக்காய்ப் பெட்டியைத் திறந்து அதில் கிடந்த கந்தல்களைக் கிளறி ஒரு பழைய கிழிந்த கவுனை எடுத்துச் சிவகாமிக்கு அணிவித்தாள் ரங்கம்மாள். கவுனில்---இடுப்பிலும் தோளிலும் கிழிந்தும், கையிலிருந்த கிழிசல்கள் தைத்தும் இருந்தன. அதைப் போட்டவுடன் சிவகாமிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. 'ஹை ஹை' என்று குதித்தாள். கவுனிலிருந்த கிழிசலில் விரலை விட்டுப் பார்த்துக்கொண்டே, "அம்மா, அந்தப் பாப்பா புதுச்சட்டை போட்டிருக்கும்மா..." என்றாள். "அவுங்கள்ளாம் பணக்காரங்க...." என்று சொல்லிக்கொண்டே கவுனின் பொத்தானைப் போட்டுவிட்டாள் ரங்கம்மாள். "நாம்ப.....?" "நாம்பல்லாம் ஏழைங்க....சரி, நீ பாப்பாவைப் பாத்துக்க; நா வேலைக்கிப் போயிட்டு வர்ரேன்....இங்கேயே இரு" என்று சொல்லிவிட்டுப் புறப்படும்போது, ரங்கம்மாள் கைக்குழந்தையைத் தூக்கிப் பால் கொடுத்தாள். அது கண்ணைக்கூடத் திறக்காமல், ஜ்உரவேகத்தில் பால் குடிக்க மறந்து மயங்கிக் கிடந்தது. ரங்கம்மாளுக்கு நெஞ்சு பதைபதைத்தது. 'வேலைக்குப் போகாமல் இருந்துவிடலாமா?' என்று ஒரு விநாடி யோசித்தாள். போகாவிட்டால் ராத்திரி சோற்றுக்கு என்ன செய்வது? அரைநாள் வேலை செய்தாகிவிட்டது. இன்னும் அரை நாள் செய்தால்தானே முக்கால் ரூபா கூலி கிடைக்கும்'....என்று நினைத்தவள். "அப்பா' முனீஸ்வரனே' எங்கொழந்தையைக் காப்பாத்து" என்று வேண்டிக்கொண்டு புறப்பட்டாள். ரங்கம்மாள் புறப்படும்போது, சிவகாமி ஞாபகப்படுத்துவதுபோல் கேட்டாள்: "அம்மா, பொம்மை....." ரங்கம்மாள் சிவகாமியின் பரட்டைத் தலையைக் கோதியவாறே சொன்னாள்: "நீ அந்தப் பணக்காரக் கொழந்தையைப் பாத்துட்டு ஒண்ணொண்ணும் கேட்டா நா எங்கேடி போவேன்?" "உம்...அது கிட்டே பொம்மை இருக்கு....நீ பாப்பாகிட்டே வெளையாடிக்கிட்டே இரு...." என்று முரண்டினாள் சிவகாமி. "நம்ப கிட்டே பாப்பா இருக்கு.....நீ பாப்பா கிட்டே வெளையாடிக்கிட்டே இரு...." என்று சிவகாமியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு ஓட்டமும் நடையுமாய் வேலைக்குப் போனாள் ரங்கம்மாள். ரங்கம்மாளின் தலை மறையும் வரை, குழந்தையின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவகாமி மௌபுள்ளிள எழுந்து, தான் போட்டிருக்கும் சட்டையைத் தடவித் தடவிப் பார்த்து மகிழ்ந்தவாறு 'கிருஷ்ண மந்திர'த்தை நோக்கித் துள்ளித் துள்ளி ஓடினாள். "தோ பாத்தியா... நானும் சட்டை போட்டுக்கிட்டேன்..... எங்கம்மா போட்டுச்சி...." என்று கத்திக்கொண்டே கம்பிக் கதவருகே வந்து நின்ற சிவகாமியைப் பார்த்த ராணி "உஸ்... தத்தம் போதாதே....பாப்பா தூங்குது.... முயிச்சின்தா அயும்" என்று தன் மொம்மையை மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள். "உன் தத்தை ஏன் கியிஞ்சி ஈக்கு?" என்றாள் ராணி. "நாங்கல்லாம் ஏழைங்க " என்றாள் சிவகாமி. ராணிக்குப் புரியவில்லை. "உன் பொம்மை எங்கே?" என்றாள் ராணி. "எனக்கு பொம்மையில்லே. தம்பிப் பாப்பாதான்.... அவனோடதான் நான் வெளையாடணுமாம்...." என்றாள் சிவகாமி. கிருஷ்ண மந்திரத்திற்குள், மத்தியான நேரமானதால் பெரியவர்கள் எல்லொரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். திண்ணையிலிருந்து இறங்கி மௌபுள்ளிள வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள் ராணி. எல்லோரும் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். முற்றத்து ஓரத்தில் அண்டா நிறையத் தண்ணீர் இருக்கிறது. அன்று காலை அந்த முற்றத்தில்தான் அங்கச்சிப் பாப்பாவுக்குத் தலைக்கு ஊற்றியது ராணியின் நினைவுக்கு வந்தது. தன் குழந்தைக்கும் தலைக்கு ஊற்ற எண்ணிய ராணி மௌபுள்ளிள உள்ளே சென்று அண்டாவுக்குப் பக்கத்திலிருந்த குவளையில் தண்ணீரை மொண்டு எடுத்துக் கொண்டு இரண்டு கைகளாலும் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து திண்ணைமேல் வைத்தாள். இந்தக் காரியங்களின் இடையிடையே, சிவகாமியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். சிவகாமியும் ரகசியமாகச் சிரித்தாள். சத்தம் ஏதுமில்லாமல், குழந்தைக்குக் 'குளிப்பு' வைபவம் நிகழ்ந்தது. வர்ணப் பொம்மையின் தலையில் தண்ணீரை ஊற்றித் தேய்த்ததும் பொம்மையின் கண்ணும் மூக்கும் அழிந்து போயின. மீண்டும் தண்ணீரை ஊற்றிக் கழுவியதும் வெறும் மண்ணில் பொம்மை உருவம்தான் இருந்தது. ராணி அழ ஆரம்பித்தாள்....கண்ணைக் கசக்கிக் கொண்டு விம்மல் விம்மலாய் ஆரம்பித்த அழுகை "தாத்தா" வென்ற பெருங் குரலோடு வெடித்தது. ராணி அழுவதைக் கண்டதும் பயந்துபோன சிவகாமி முருங்கைமரத்து நிழலை நோக்கி எடுத்தாள் ஓட்டம். முருங்கை மர நிழலில் சுவரோரமாய்ப் படுத்திருந்த தம்பிப் பாப்பாவைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள் சிவகாமி. லேசாக அவன் முகத்தைத் தடவினாள்... குழந்தை சிணுங்கி அழுதான். அது அவளுக்கு வேடிக்கையாய் இருந்தது. அடிக்கொருதரம் அவனைச் சீண்டிக்கொண்டே இருந்தாள். அவன் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்தவாறு அவனுடைய சின்னஞ்சிறு கால்களையும் கையையும் தொட்டுப் பார்த்தாள். அப்புறம் கழுத்து வரை போர்த்தியிருந்த கந்தலை எடுத்துப் பார்த்துவிட்டு, வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டாள் சிவகாமி. "ஐயய்யோ, தம்பிக்குத்தான் சட்டை இல்லையே' " என்று சொல்லிக்கொண்டே குழந்தையைப் பார்த்து, "ஒனக்கும் சட்டை வேணுமாடா?" என்று கேட்டாள். பிறகு எழுந்து பக்கத்திலிருந்த ஜாதிக்காய்ப் பலகைப் பெட்டியைத்திறந்து, அதிலிருக்கும் கந்தலைக் கிளறி ஒரு கிழிந்த ரவிக்கையை எடுத்துக் கொண்டு பெட்டியை மூடிவிட்டு, குழந்தையின் அருகே வந்து உட்கார்ந்தாள். போர்வையை எடுத்து விட்டுச் சட்டை அணிவிக்க முற்படும்போது, அவளுக்கு இன்னொரு விளையாட்டுத் தோன்றியது. மோதிர விரலையும் நடு விரலையும் சேர்த்து வாயிலிட்டுச் சப்பிக்கொண்டே எழுந்து 'ஹை...ஹை' என்று தோளை உயர்த்திக் கொண்டு குதித்தாள். சுவரோரமாக வைத்திருந்த 'மூன்று கல்' அடுப்பு மீது பானை இருந்தது. அதனுள்---பானை நிறையப் பச்சைத் தண்ணீர். பக்கத்திலிருந்த தகரக் குவளையில் ஒரு குவளைத் தண்ணீர் மொண்டு கொணர்ந்து தம்பிப் பாப்பாவின் அருகில் வைத்தாள். அந்த வீட்டுப் பாப்பா செய்த்ததுபோலவே குழந்தையின் அருகே இரண்டு காலையும் நீட்டிப் போட்டுக் கொண்டு, தன் சட்டை நனையாமல் இருக்க முன் பக்கத்தை எடுத்து மேலே சொருகிக் கொண்டாள். குழந்தையை, படுத்திருந்த இடத்திலிருந்து முக்கி முனகித் தூக்கிக் கால்களின் மீது கிடத்திக் கொண்டு, தண்ணீர் படாமல் பாயையும் ஒதுக்கி வைத்துவிட்டு----குழந்தையின் தலையில் ஒரு கைத் தண்ணீரை வைத்து 'எண்ணெய்' தேய்த்தாள்; பிறகு முகத்தில், மார்பில், உடம்பில் எல்லாம் எண்ணெய் தேய்ப்பதுபோல் தண்ணீரைத் தேய்த்தாள். குழந்தை ஈன சுரத்தில் சிணுங்கிச் சிணுங்கி அழுதான். பிறகு டப்பாவிலிருந்த தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குழந்தையின் தலையில் ஊற்றினாள். குழந்தை வயிற்றை எக்கி எக்கிக் கேவியது.... 'சீ'.... இந்த பானை கைக்கு எட்டலியே' என்று முனகியவாறு காலில் கிடத்திய குழந்தையோடு இன்னும் கொஞ்சம் தள்ளி, உட்கார்ந்த இடத்திலிருந்தே கைக்குப் பானை எட்டுகின்ற தூரத்திற்கு நகர்ந்து கொண்டாள். ----தெருவில் ஜனங்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். ஆனால், கட்டுவதற்கு ஆணியுமில்லாமல், முருங்கை மரத்திற்கும் எட்டாமல் தொங்கிக்கொண்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த அந்தக் கோணியின் நான்காவது முனை, குழந்தையையும் சிவகாமியையும் மறைத்துக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் குப்பைத் தொட்டி. கோணியை விலக்காமல் இவளை யாரும் பார்க்க முடியாது. பார்த்தாலும் முதுகுப்புறம்தான் தெரியும். இரண்டாவது குவளைத் தண்ணீரைக் குழந்தையின் தலையில் ஊற்றினாள். குழந்தையின் வயிறு ஒட்டி மேலேற ஒருமுறை கேவிற்று. "ரோ....ரோ....அழாதேடா கண்ணு...." என்ற கொஞ்சலுடன் தண்ணீரை ஊற்றிக்கொண்டே இருந்தாள். ஒவ்வொரு குவளைத் தண்ணீருக்கும் குழந்தைக்கு மூச்சுத் திணற வயிறு ஒட்டி மேலேறிக் கேவிற்று. அந்தக் குழந்தையின் திணறல், இந்தக் குழந்தைக்கு வேடிக்கையாய் இருந்தது. ஒன்று....இரண்டு...மூன்றாவது குவளைத் தண்ணீரைச் சாந்தமாக, அமைதியாக எவ்வித சலனமும் உடலிற் காட்டாமல் ஏற்றுக் கொண்டது குழந்தை. "தம்பி குளிச்சிட்டானே' " என்று நாக்கைத் தட்டிக் கொண்டு குழந்தையின் தலையையும் உடம்பையும் துடைத்தாள் சிவகாமி. பிறகு அந்த ரவிக்கையைச் சட்டையாக அணிவித்து முக்கி முனகித் தூக்கி வந்து பாயில் கிடத்தினாள். "இப்போது தான் நல்ல பாப்பா" என்று குழந்தைக்கு முத்தம் கொடுத்தாள் சிவகாமி. "சீ, தலைமயிர் மூஞ்சியிலே விழுதே" என்று மரச்சீப்பை எடுத்துத் தலை வாரினாள். பொட்டு? அதோ செங்கல் உருவில் பக்கத்தில் எழுந்தருளியிருந்த முனீஸ்வரனின் மேலிருந்த குங்குமத்தையெல்லாம் சுரண்டி எடுத்துக் கொண்டு வந்து தம்பிக்குப் பொட்டு வைத்தாள். கால்கள் இரண்டையும் சேர்த்து வைத்தாள். கைகளை மார்பின் மீது குவித்து வைத்து, துவண்டு கிடந்த தலையை நிமிர்த்தி வைத்தாள். 'தம்பி ஏன் அழலே....?' என்ற நினைவும் வந்தது. 'தம்பி தான் பட்டுப் பாப்பா....அழவே மாட்டான்.' "தம்பி தம்பி" என்று எழுப்பினாள். குழந்தையின் உடம்பு சில்லிட்டிருந்தது. "அப்பா' ரொம்ப 'சில்'லுனு இருக்கு. தம்பி, ஏண்டா சிரிக்கமாட்டேங்கிறே? கையை ஆட்டு... ஆட்டமாட்டியா? கண்ணைத் திற" என்று இமைகளை விலக்கிவிட்டாள்; கண்கள் வெறித்தன.... "என்னடா தம்பி, பொம்மை மாதிரி பார்க்கிறியே... நீ பொம்மை ஆயிட்டியா?" என்று கைகளைத் தட்டிக் குதித்தாள் சிவகாமி. சாயங்காலம் ரங்கம்மாள் வேலையிலிருந்து திரும்பி வரும் போது 'கிருஷ்ண மந்திர'த்தின் அருகே வர்ணம் போன ஒரு மண் பொம்மை---தூக்கி எறிந்த வேகத்தில் கால் பகுதி மட்டும் கொஞ்சம் உடைந்து கிடந்தது--- காலில் தட்டுப்பட்டது. ரங்கம்மாள் குனிந்து அதைக் கையில் எடுத்தாள். 'மத்தியானமெல்லாம் குழந்தை பொம்மை.... வேணும்னு அழுதாளே' என்று நினைவு வந்ததும் கையிலெடுத்ததை மடியில் கட்டிக் கொண்டாள். சற்றுத் தூரத்தில் சிவகாமி ஓட்டமாய் ஓடி வந்தாள்..... "எங்கேடி ஓடியாறே? வீட்டுக்குத்தானே வர்ரேன்? இந்தா ஒனக்குப் பொம்மை...." என்று வர்ணம் போன பொம்மையைக் கொடுத்தாள். "இதுதான் அந்தப் பாப்பாவோட பொம்மை ஒடஞ்சி போயிடுச்சி.... அம்மா, நம்ப தம்பிப் பாப்பா இல்லே. தம்பிப் பாப்பா---- அவன் பொம்மையாயிட்டாம்மா.... வந்து பாரேன். அந்தப் பாப்பாவோட பொம்மைதான் கெட்டுப் போச்சு.... தம்பி நல்லா இருக்கான், வந்து பாரேன்..." என்று தாயை இழுத்தாள் சிவகாமி. "என்னடி சொல்றே, பாவி' " என்று பதறி ஓடிவந்த ரங்கம்மாள்--- குளிப்பாட்டி, சட்டை போட்டு, தலைவாரி நெற்றியில் பொட்டு வைத்து நீட்டிக் கிடத்தியிருக்கும் தன் ஆசை மகனைப்பார்த்து, "ஐயோ மவனே...." என்று வீழ்ந்து புரண்டு கதறி அழுதாள். சிவகாமிக்கு ஒன்றும் புரியவில்லை. மோதிர விரலையும் நடு விரலையும் வாயிலிட்டுச் சப்பிக்கொண்டு, முகமே கண்களாய் விரியப் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தாள். அவள் கையில் ராணி குளிப்பாட்டியதால் வர்ணம் போய், தூக்கி எறிந்த வேகத்தில் கால் உடைந்துபோன அந்த நொண்டிப் பொம்மை இருந்தது. அம்மா எதற்கு அழுகிறாள் என்று சிவகாமிக்குப் புரியவே இல்லை. ஆனாலும் அவள் உதடுகளில் அழுகை துடிக்கிறது---- அவள் அழப் போகிறாள். ----- #6. தேவன் வருவாரா? பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த 'சித்தாள்' பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை. குடிசைக்குள் ---தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில் ---அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடிசைக்கு வௌியே வந்து தலை நிமிர்ந்து பார்க்கும்போது நிலவு கிளம்பி இருந்தது. 'நேரம் இருட்டிப் போச்சுதே, இந்தப் பொண்ணு எங்கே போணா?" கிழவிக்கு நெஞ்சு படபடத்தது. இவ்வளவு நேரமாகியும் அவள் வீடு வந்து சேராமலிருந்ததில்லை. சேரித் தெருவில் யாரோ போவது தெரிந்தது. "அதாரு? சின்னப் பொண்ணா...ஏ, சின்னப் பொண்ணு' எங்க அழகம்மா எங்கே? உங்க கூட வரலியா?...." "நாங்கல்லாம் ஒண்ணாத்தான் வந்தோம் ஆயா.....வழியிலே எங்கனாச்சும் பூட்டாளோ என்னமோ, தெரிலியே....." குடிசையின் கதவை இழுத்து மூடிவிட்டு, தெருவில் இறங்கி நடந்தாள் ஆரோக்கியம். எதிரில் வரும் பெண்களை எல்லாம் நிறுத்தி விசாரித்தாள். "எங்க அழகம்மாளைப் பார்த்தீங்களா, அழகம்மாவை?" எல்லோரும் பார்த்ததாகத்தான் சொன்னார்கள். அவள் எங்கே என்றுதான் யாருக்கும் தெரியவில்லை. சேரித் தெரு முனையில் உள்ள சாயபுக் கடையில் ஒரே கும்பல்...' அந்தக் கும்பலில் இருப்பாளோ' '--கிழவி சாயபுக் கடையை நோக்கி ஓடினாள். கடையில் பெண்கள் கூட்டம் நிறைந்திருந்தது; அழகம்மாளைத்தான் காணோம். "ஏ' ஐயோ, கடைக்கார ஐயா...எங்க அழகம்மா இந்தப் பக்கம் வந்தாளா, பாத்திங்களா ஐயா?..." "அட போம்மா, ஒனக்கு வேறே வேலையில்லே...நீ ஒரு பைத்தியம், அந்தப் பைத்தியத்தைத் தேடிக்கிட்டுத் திரியறே? எங்களுக்கு வேறே வேலையில்லியா?" என்று எரிந்து விழுந்தான் கடைக்கார சாயபு--அவனுக்கு வியாபார மும்முரம். பைத்தியம்;--அந்த வார்த்தையைக் கேட்டதும் கிழவிக்கு நெஞ்சில் உதைத்தது போலிருந்தது. ஆமாம்; இரண்டு மாதத்துக்குமுன் அழகம்மாள் பைத்தியமாகத்தான் இருந்தாள். இதே தெருவில், குப்பைத் தொட்டிகளைக் கிளறிக்கொண்டு, எச்சில் இலை நக்கிப் பசி தீர்த்துக் கொண்டு, 'ஆடை பாதி, ஆள் பாதி' க் கோலத்துடன் பைத்தியமாய்த் திரிந்து கொண்டிருந்தவள்தான் அழகம்மாள். "இப்ப இல்லியே......இப்பத்தான் அழகம்மாளுக்குப் பைத்தியம் தௌிஞ்சு போச்சுதே' " கிழவியின் உதடுகள் முணுமுணுத்தன. எப்படித் தௌிந்தது? கிழவிக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் அது ஓர் புரியாத, நம்ப முடியாத புதிர், பேராச்சரியம்' இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் கிழவி ஆரோக்கியம் மாதா கோயிலுக்குப் போகும் போது, மாதாகோயில் சாலையின் ஓரத்தில் உள்ள மணல் திடலில், ஓங்கி வளர்ந்திருந்த இரண்டு ஒதிய மரங்களுக்கு இடைவௌியில் உடலை மறைத்துக்கொண்டு 'ஆயா ஆயா' என்று பரிதாபமாகக் கூவினாளே, அழகம்மாள்...அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம்? "ஆயா, நானும் உன்னை மாதிரி ஒரு மனுசப் பிறவி தானே?...ஒரு பொம்பளைப் பொண்ணு கட்டத் துணி இல்லாம முண்டமா நிக்கிறேனே, பாத்திக்கிட்டே போறியே ஆயா..." என்று கதறியழுதாளே, அழகம்மாள்--அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம்? அழகம்மாளின் அந்தக் குரல்... பத்து வருஷங்களுக்கு முன் தன்னை வெறுத்துவிட்டு யாருடனோ எங்கோ ஓடிப்போய்விட்ட மகள் இஸபெல்லாவின் நினைவைக் கொண்டுவந்தது. கிழவி குரல் வந்த திக்கை வெறித்துப் பார்த்தபோது, இடுப்புக்குக் கீழே ஒரு முழக் கந்தைத் துணியை, எட்டியும் எட்டாமலும் இருந்ததால் பக்கவாட்டில் முடிந்து கட்டிக் கொண்டு, காதலனைத் தழுவுவதுபோல் மரத்தோடு மார்பைச் சேர்த்து இணைத்து மறைத்தவாறு, தலையை மட்டும் திருப்பிக் கழுவில் ஏற்றிய குற்றவாளி போல் நின்று கதறும் அவள் இஸபெல்லாவா?...அழகம்மாளா?...யாராயிருந்தால் என்ன? பெண்' கிழவி அன்று மாதா கோயிலுக்குப் போகவில்லை. குடிசைக்கு ஓடோடியும் வந்து தன்னிடமிருந்த கந்தல் புடைவை ஒன்றை எடுத்துக் கொண்டுபோய் அவளிடம் கொடுத்தாள். உடுத்திக் கொண்டதும் கண்கள் கலங்க, கரம்கூப்பிக் கும்பிட்டவாறு, "ஆயா, நீதான் எனக்குத் தாய், தெய்வம்..." என்று கூவிக் காலில் விழுந்தாளே, அழகம்மாள்--அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம்? ஆரோக்கியம் அழகம்மாளை வாரி அணைத்துக்கொண்டு, "நீதான் எனக்கு மகள்..." என்று கண்கள் தாரை தாரையாய்க் கண்ணீர் பொழியக் கூறினாளே... "இருவர்க்கும் இருவர் துணையாகி -- நாளெல்லாம் மாடாய் உழைத்து, பிச்சை எடுத்துக் கால்வயிறு கழுவிக் கொண்டிருந்த கிழவி ஆரோக்கியத்திற்கு முழு வயிறு சோறு போடுகிறாளே, அவளா பைத்தியம்? 'இல்லை: என் அழகம்மா பைத்தியமில்லை' என்று தீர்மானமாய்த் தலையை ஆட்டிக்கொண்டாள் கிழவி. பிறகு மாதாகோயில் சாலைவழியே தன் அழகம்மாளைத் தேடி நடந்தாள். அந்த இடம் ரொம்ப அழகான பிரதேசம், பிரபலமாகப் பேசப்படும் காஷ்மீராகட்டும், கன்னியாகுமரியாகட்டும் அல்லது உலகின் பேர்போன எந்த உல்லாசபுரியாகட்டும்--அங்கெல்லாம் பிறக்காத ஒரு லயிப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு வரண்ட பிரதேசத்திலோ, சந்து பொந்திலோ ஏற்பட்டுவிடத்தான் செய்யும். மற்றவர் கண்ணுக்கு 'இது என்ன அழகு' என்று தோன்றும் இந்த இடம் ஒருவனுக்கு இந்திரலோகமாகத் தோன்றும். அழகம்மாளுக்கும் அப்படித்தானோ? அவள் பைத்தியமாக இருக்கும்போதுகூட அந்த இடத்தில்தான் அடிக்கடிக் காணப்படுவாள். மரங்களும், சிறு கற்பாறைகளுள், மணற் குன்றுகளுக் நிறைந்த அந்தத் திடலில், கண்ணுக்கெட்டிய தூரம் காடாகக் கிடக்கும் அந்தத் திடலின் ஒரு ஓரத்தில், இரண்டு ஒதிய மரங்கள் ஒன்றில் ஒன்று இணைந்து வளர்ந்திருக்கும் அந்த இடத்தில் அவள் சாய்ந்தும், கிடந்தும், இருந்தும், நின்றும் பொழுதைக் கழிப்பாள். அதோ..... நிலா வௌிச்சத்தில் சாலையோரத்தில் நெருங்கி வளர்ந்து நிற்கும் இரட்டை மரத்தில் சாய்ந்திருப்பது யார்....? "அழகம்மா....அழகம்மா...." ---பதிலில்லை. கிழவி மரத்தினருகே ஓடினாள். அழகம்மாளேதான்' கன்னிமேரித்தாய் போல, தெய்வீக அழகாய் நின்றிருந்தாள் அழகம்மாள். ஆரோக்கியம் வந்ததைக்கூடக் கவனிக்காமல் சந்திரனில் என்னத்தைத் தேடுகிறாள்' அவள் முகத்தில் புன்னகையும் நிலவும் பொங்கி வழிகின்றன. "அழகம்மா...." கிழவி அவள் காதருகே குனிந்து மெல்ல அழைத்தாள். "ஆயா...." நிலவில் பதிந்த பார்வை பெயராமல் குரல் மட்டும் வந்தது; கிழவிக்கு உயிரும் வந்தது. 'தெய்வமே, அவளுக்கு புத்தி பேதலித்து விடவில்லை....' கிழவி தன் உடலில் சிலுவைக் குறி இட்டுக் கொண்டாள். "ஆயா" இப்பொழுதும் பார்வை நிலவில்தான் இருந்தது. "என்னாடி கண்ணே...." "அதோ நெலாவிலே பாரு...." கிழவியின் வரி விழுந்த முகத்தில் இடுங்கிக் கிடந்த ஔியிழந்த விழிகள் நிலவை வெறித்து விழித்தன. "அதோ நெலாவிலே பாரு... நான் தெனம் ஒன்னைக் கேப்பேனே, 'தேவன் வருவாரா'ன்னு...."--- கிழவிக்குத் தினசரி தன்னிடம் அவள் கேட்கும் அந்த கேள்வி ஞாபகத்துக்கு வந்தது. பல மணி நேரம் மௌனமாய் இருந்து விட்டுத் திடீரென அவள் கேட்பாள்--- "ஆயா, தேவன் மறுபடியும் வருவாரா...." அதற்கு கிழவி பதில் சொல்வாள்; "வருவார் மகளே, வருவார்.... பெரியவங்க அப்படித்தான் சொல்லி இருக்காங்க..." என்று. "சரி; அதற்கு இப்பொழுது என்ன வந்தது?..." அவள் முகம் புன்னகையில் மலரக் கண்கள் ஜொலிக்கப் பேசிக்கொண்டேயிருந்தாள். "அதோ நெலாவிலே பாரேன்....அன்னக்கி என் தேவன் அங்கேருந்துதான், இறங்கி வந்தார்....ஆயா, அந்தத் தேவனோட ஒடம்பு தங்கம் மாதிரி சொலிச்சிது. அவரு நெலாவிலேருந்து எறங்கி வந்து என்கிட்டே பேசினார். நான் இந்த மரத்தடியிலே படுத்திருந்தேன்---அவரைப் பார்த்துச் சிரிச்சேன்.... நெலவுக்கும் தரைக்குமா, சரிவா ஒரு பாலம் மாதிரி போட்டிருந்தது.... அவரு வரும்போது அந்த பாதை மறைஞ்சிப் போச்சு'.... ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அந்தப் பாலம் ஒவ்வொரு அடி மறைஞ்சி போச்சு... அதைப் பார்க்கும் போது கண்ணும் நெஞ்சும் நெறைஞ்சி எனக்கு மூச்சே நின்று போறமாதிரி இருந்தது...அவரு எனக்குப்பணம் காசெல்லாம் தர்ரேன்னாரு...நான் வேணாம்னு சொல்லிட்டேன். 'ஒனக்கு என்ன வேணும்'னு கேட்டாரு.... 'நீங்கதான் வேணும்'னு சொன்னேன்--- அந்தத்தேவனோட நெழல் என்மேலே விழுந்தது; நிலாவிலேயும் விழுந்தது --- நிலா கறுப்பாயிடுச்சி --- என் ஒடம்பும் இருண்டு போயிடுச்சு. 'நான் கண்ணை மூடிக்கிட்டேன் --- நூறு நூறா,....ஆயிரம், கோடியா மானத்திலே நட்சத்திரமில்லே, அந்த மாதிரி நிலாக் கூட்டம் என் கண்ணுக்குள்ளே சுத்திச் சுத்தி வந்தது. வௌியே ஒலகம் பூராவும் ஒரே இருட்டு. என் உடம்புக்குள்ளே மட்டும் வௌிச்சம், வௌிச்சம், ஒரே வௌிச்சம்' வௌியிலேருந்த வௌிச்சமெல்லாம் என் உள்ளே புகுந்துக்கிட்டுது. அந்த வௌிச்சம் கொஞ்சம் கொஞ்சமா ஒடம்பு பூரா பரவிக் கிட்டிருந்தது. அப்புறம் லேசாக் கண்ணைத் தெறந்து பாத்தா, நெலாவும் இல்லே, தேவனும் இல்லே; இருட்டும் இல்லே, சூரியன் பொறப்படற நேரம்; ஆகாசம் பூரா ஒரே செவப்பு நெறம். நெருப்பு மாதிரி இருந்தது. கண்ணெல்லாம் எரிச்சல், அப்பத்தான் நான் இருந்த நெலையைப் பார்த்தப்ப எனக்கு வெக்கமா இருந்தது.... அந்தத் தூங்கு மூஞ்சி மரத்திலேருந்து ரெண்டு மூணு பூவு, முண்டக் கட்டையா கெடந்த என் உடம்பிலே உதுந்து கெடந்தது, எனக்கு 'ஓ'ன்னு அழணும் போல இருந்தது. அப்ப யாரோ ஒரு சின்ன பொண்ணு அந்த பக்கமா வந்தது....என்னைப் பாத்து 'நீ யாரு'ன்னு கேட்டுது... அது என்னா கேள்வி?.... 'நான்தான் அழகம்மா'ன்னு சொன்னேன். 'ஒனக்கு அப்பா அம்மா இல்லியா'ன்னு கேட்டுது, அந்தக் கேள்வியை யாரும் என்னைக் கேக்கக் கூடாது, தெரியுமா? கேட்டா கொன்னுப் போடலாம் போல ஒரு கோவம் வரும் எனக்கு, ஆமாம்; அப்படித்தான்... அந்தப் பொண்ணு பயந்து போயி ஒரே ஓட்டமா ஓடிடுச்சு. அதுக்கு அப்புறம் நீ வந்தே, ஆயா.... ஆயா, அந்தத் தேவன் இன்னொரு தடவை வருவாரா?....." கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை' 'கிறுக்குக் குட்டி என்னமோ உளறி வழியுது' என்று நினைத்துக்கொண்டு "சரி சரி, வா நேரமாச்சு, போவலாம்... இந்த மாதிரி நேரத்தில் நீ தனியா இங்கெல்லாம் வரக்கூடாது, வாடி கண்ணு போவலாம்..." என்று கையைப் பிடித்திழுத்தாள். அழகம்மாள் அப்பொழுதுதான் சுயநினைவு பெற்றாள்-- "ஆயா" என்று உதடுகள் துடிக்க, பரக்கப் பரக்க விழித்து உறக்கம் கலைந்தவள் போன்று கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டாள் அழகம்மாள். "ஆயா....என்னெ நீ ரொம்ப நாழி தேடினியா? என்னமோ ஒரே மயக்கமா இருந்துது---இங்கேயே உக்காந்துட்டேன்....நேரம் ரொம்ப ஆவுது இல்லே....இந்தா பணம்...." என்று தனது உழைப்பால் கிடைத்த கூலியை முந்தானை முடிச்சிலிருந்து அவிழ்த்துக் கொடுத்தாள் அழகம்மாள். கிழவி, அழகம்மாளின் நெற்றியையும் கன்னத்தையும் தொட்டுப் பார்த்தாள், 'ஒடம்புக்கு ஒண்ணுமில்லே.... பசி மயக்கமா இருக்கும்.' "காத்தாலே பழையது சாப்பிட்டதுதானே....வா வூட்டுக்குப் போயி சோறு திங்கலாம்." வீட்டுக்கு வந்ததும், அடுப்பில் போட்டுவிட்டுப் போயிருந்த ஒரு பானை வெந்நீரை ஊற்றி அழகம்மாளை 'மேல் கழுவ' வைத்து, வேறு உடை கொடுத்து தட்டத்துக்கு முன் உட்கார வைத்துச் சோறு பரிமாறினாள் கிழவி. அழகம்மாள் எங்கோ கூரை முகட்டைப் பார்த்தபடி தட்டிலிருக்கும் சோற்றில் விரலால் கோலம் போட்டவாறு குந்தி இருந்தாள். "என்னாடி பொண்ணே.....சோறு திங்காம குந்தி இருக்கியே?" என்றாள் கிழவி. "ஆயா, என் தேவன் வருவாரா?...." "வருவாரம்மா, நீ சாப்பிடு...." "எனக்குச் சோறு வாணாம் ஆயா...." "நாள் பூராவும் எலும்பை ஒடிச்சிப் பாடுபட்டுட்டு வாரியே.... ஒருவேளைகூட நல்லா சாப்பிடல்லேன்னா இந்த ஒடம்பு என்னாத்துக்கு ஆவும்..... எங் கண்ணுல்லே, சாப்பிடு" என்று அழகம்மாளின் முகவாயைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள் கிழவி. கிழவியின் முகத்தை உற்றுப் பார்த்தாள் அழகம்மாள் ஒரு புன்முறுவல். "சரி, சாப்பிடறேன் ஆயா....கொஞ்சம் தண்ணி குடு....." இரண்டு கவளம் சாப்பிட்டாள். மூன்றாவது வாய்க்கு ஒரு குவளை தண்ணீரையும் குடித்தாள். அடுத்த கவளம் வாயருகே வரும்போது குடலை முறுக்கிற்று....அழகம்மாள் வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு எழுந்து குடிசைக்கு வௌியே ஓடிவந்தாள். ஓடி வந்து குனிந்து நின்று 'ஓ' வென்ற ஓங்கரிப்புடன் வாந்தியெடுத்தாள். அடுத்த நாள் அழகம்மாள் வேலைக்குப் போகவில்லை; சாப்பிடவுமில்லை. மயங்கிக் கிடந்தாள். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு ஒருவாறு எழுந்து நடமாடினாள்; வேலைக்குப் போனாள். அழகம்மாளுடன் வேலை செய்யும் பெண்கள் தனியே என்னவோ கூடிப் பேசுகிறார்களே, அது என்ன பேச்சு?.... இவளைக் கண்டவுடன் பேச்சு நின்றுவிடுகிறதே, ஏன் அப்படி?..... அழகம்மாளுக்கு புரியாத முறையில் குறும்பாகச் சிரித்துக் கொண்டு என்னென்னவோ கேட்கிறார்களே, அதெல்லாம் என்ன கேள்விகள்?..... இவளால் முன்போல் ஓடியாடி வேலை செய்ய முடியவில்லையே, ஏன் அப்படி?.... இப்பொழுதெல்லாம் அழகம்மாள் வரும் வரை அவளுக்காகக் காத்திராமல் எல்லோரும் வந்துவிடுகிறார்கள். அவள் மட்டும் கடைசியில் தனியாக வருகிறாள். அழகம்மாளுக்கும் கொஞ்ச நாளாய், இருந்த வாயும் அடைத்துப் போயிற்று. அவள் யாரிடமும் பேசுவதில்லை. வேலை செய்யும்போதும், சும்மாயிருக்கும்போதும் அவள் மனம் அந்த ஒரே வார்த்தையை ஜெபித்துக்கொண்டிருக்கும் ---- 'என் தேவன் வருவாரா? என் தேவன் வருவாரா?' அன்று இரவு வழக்கம்போல் ஆரோக்கியத்திடம் கேட்டாள் அழகம்மாள்: "ஆயா, தேவன் வருவாரா?" "போடி, புத்தி கெட்டவளே' தேவனாம் தேவன்' அவன் நாசமாப் போக' எந்தப் பாவி பயலோ ஒண்ணுந் தெரியாத பொண்ணைக் கெடுத்துட்டுப் போயிருக்கான். மானம் போவுதுடி பொண்ணே, மானம் போவுது" என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள் கிழவி. கிழவி கோபமாகப் பேசியதைத் தாள முடியாமல், அழகம்மாள் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். விம்மி விம்மி, கதறிக் கதறிக் குழந்தைப் போல் அழுதாள். அவள் அழுவதைப் பார்த்து மனம் பொறுக்காமல் கிழவியும் அழுதாள். கிழவியின் நினைவில் பத்து வருஷத்துக்குமுன் யாருடனோ, எங்கோ ஓடிப் போன இஸபெல்லா நின்றாள். "மகளே....இஸபெல்' நீயும் இப்படித்தான் ஏதாவது கெட்ட பேருக்கு ஆளாகி என் மொகத்திலே முழிக்க வெக்கப்பட்டுக்கிட்டு ஓடிப் போனியா?...ஐயோ'.... இவளும் அந்த மாதிரி ஓடிப்போவாளோ?'----கிழவிக்கு மார்பில் பாசம் பெருகி வந்து அடைத்தது. 'என் இஸபெல் எங்கேயும் ஓடிப் போகல்லே...இதோ இருக்காளே...இதோ, இங்கேயே இருக்கா,--- கிழவியின் பார்வை அழகம்மாளின் மேல் கவிந்திருந்தது. "மகளே...." என்று அழகம்மாளை அணைத்துக் தேற்றினாள்' "வருத்தப்படாதே அழகம்மா...எந்திரிச்சி வந்து சாப்பிடு..." "போ'.... நீதான்... நீதான் என் தேவனை நாசமாப் போகன்னு திட்டினியே.... நா, சாப்பிடமாட்டேன்... ஊம்ஊம்" என்று குழந்தைபோல் கேவிக் கேவி அழுது கொண்டே சொன்னாள் அழகம்மாள். தெரியாத் தனமாய் திட்டிட்டேன்டி கண்ணே.....வா, எந்திரிச்சி வந்து சாப்பிடு... இனிமே உன் தேவனைத் திட்டவே மாட்டேன்." அழகம்மா அழுது சிவந்த கண்களால் கிழவியைப் பார்த்தாள். கண்ணீருடன் புன்முறுவல் காட்டி "சோறு தின்னும்மா," என்று கெஞ்சினாள் கிழவி. "சொல்லு ஆயா.... தேவன் வருவாரா?" "வருவான்" "போ ஆயா, 'வருவான்'னு சொல்றியே?" "இல்லேயில்லே, வருவாரு' " "ஆயா எம்மேலே கோவமா?" "இல்லேடி தங்கம்....நீ சாப்பிடு...." "கொஞ்சம் ஊறுகாய் வெச்சாத்தான்....." "வெக்கிறேன், உனக்கு இல்லாததா?" "ஆயா....." "மகளே...." "ஆ.....யா...." "மகளே...." ----இருவர் கண்களிலும் கண்ணீர் வழிய ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிக்கொண்டு....அ தெ ன் ன ? அழுகையா?..... சிரிப்பா?.... அழகம்மாளுக்கு குழந்தை பிறக்கப் போகிறது. அந்த மகிழ்ச்சி அல்லது துயரம் அழகம்மாளுக்கு இருந்ததோ என்னவோ, ஆரோக்கியத்திற்கு முதலில் இரண்டும் இருந்தது. பிறகு தனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பிறக்கப் போகும் ஆனந்தம் ஏற்பட்டு, அந்த ஆனந்தத்திலேயே அவள் இப்பொழுது திளைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மை' ஆமாம்: இஸபெல்லுக்குப் பிறகு அந்தச் சின்னஞ்சிறு குடிசையில் சில மாதங்களில் ஒரு குழந்தை தவழப் போகிறதே' கொஞ்ச நாளாய் அழகம்மாள் வேலைக்குப் போவதில்லை. எப்பாடு பட்டோ கிழவி அவளுக்கு மூன்று வேளையும் வயிறாரச் சோறு போடுகிறாள். தனக்கு ஒரு வேளைக்கு இல்லாவிட்டாலும் சகித்துக்கொண்டு பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணைக் கண்ணுக்குக் கண்ணாகக் காப்பாற்றுகிறாள் கிழவி. "என் மகள் ஒரு கொறையுமில்லாமல் பெற்றுப் பிழைக்க வேண்டு" மென்று நாள்தோறும் கர்த்தரை ஜெபிக்கிறாள். அழகம்மாளைக் கூட்டிக்கொண்டு போய் தினசரி சர்க்கார் ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கிக் கொடுக்கிறாள். சேரியிலுள்ளவர்கள் அழகம்மாளோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் பைத்தியம் என்கின்றனர். அதைப்பற்றிக் கிழவிக்கென்ன கவலை? கிறிஸ்மஸ்உக்கு இரண்டு நாட்களுக்குமுன் அழகம்மாளைச் சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டு, திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு தனியே வந்தாள் கிழவி. அழகம்மாளோ ஆஸ்பத்திரி பெஞ்சின் மீது எங்கோ வெறித்த பார்வையுடன் சலனமின்றி உட்கார்ந்திருந்தாள். கொஞ்ச நாளாகவே அவள் நிலை அப்படித்தான் இருந்தது. கிறிஸ்மஸ்உக்குள் குழந்தை பிறந்துவிடும்... குழந்தைக்கு ஒரு புதுச் சட்டை தைக்கணும்" என்று நினைத்த கிழவிக்கு ஆனந்த மேலீட்டால் உடல் பதறிற்று. கர்த்தரை ஜெபிக்கும் உதடுகள் துடித்தன. உடலில் சிலுவைக் குறி இட்டுக்கொள்ளும்போது விரல்கள் நடுங்கின. மாலை மணி நாலுக்கு, பிரசவ வார்டில் பேச்சும் கலகலப்புமாக இருந்த நேரத்தில்--பக்கத்தில் இருந்த குழந்தை 'வீல் வீல்' என்று அலறும் சப்தத்தில் கண் விழித்தாள் அழகம்மாள். ஆமாம்: விடியற்காலை நேரத்தில், கிறிஸ்மஸ் தினத்தன்று அவளுக்குக் குழந்தை பிறந்திருந்தது: ஆண் குழந்தை' கழுத்தில் கிடக்கும் ரோஜா மாலை சரிந்து கிடப்பது போல் அந்தப் பச்சைச்சிசு அழகம்மாளின் மார்போடு ஒட்டிக் கிடந்தது. அழகம்மாளின் பார்வை ஒரு வினாடி குழந்தையை வெறித்துச் சுற்றும் முற்றும் பரக்கப் பரக்க விழித்துச் சுழன்றது. "ஏது இந்தக் குழந்தை' ' "ஏ பொம்பளே...புள்ளை கத்துது பேசாம பாத்துக்கினு இருக்கியே...பால் குடு" என்று அதட்டினாள் ஒரு கிழவி. 'இது என் குழந்தையா? எனக்கேது குழந்தை?'--அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழந்தை வீரிட்டது' "ஆமாம்; இது என் குழந்தைதான்...என் மகன் தான்." குழந்தையை எடுத்து மார்பில் அணைத்துத் துணியால் மூடிக் கொண்டாள். "பையனைப் பாரு, அப்பிடியே அப்பனை உரிச்சிக்கிட்டு வந்திருக்கான்" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் அழகம்மாள். அடுத்த கட்டிலினருகே ஒரு கிழவியும் இளைஞனும் நின்றிருந்தனர். 'அந்தக் குழந்தைக்கு அவன் அப்பனாம்; என் குழந்தைக்கு?' 'ஒவ்வொரு கட்டிலினருகிலும் ஒவ்வொரு அப்பன், தன் குழந்தையைப் பார்க்க வந்து நின்றிருக்கிறானே...என் குழந்தையைப் பார்க்க அவன் அப்பன் ஏன் வரவில்லை' என் மகனுக்கு அப்பன் எங்கே? அவன் எப்பொழுது வருவான்?' கண்ணில்படும் ஒவ்வொரு மனிதனையும் உற்று உற்றுப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள் அவள். குழந்தை மீண்டு அழுதது. "ஏண்டா அழறே? உன்னைப் பார்க்க உன் அப்பா வரலேன்னு அழறியா? இரு இரு; நான் போயி உன் அப்பாவைக் கூட்டியாறேன்" என்று குழந்தையை எடுத்துப் படுக்கையில் கிடத்தினாள் அழகம்மாள். கிறிஸ்மஸ்உக்காகக் குழந்தைக்குச் சட்டை தைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்த ஆரோக்கியத்திற்குத் தலையில் இடி விழந்தது போலிருந்தது. --கட்டிலின் மீது குழந்தை கிடக்கிறது. அழகம்மாளைக் காணோம். எல்லோரும் தேடுகிறார்கள். கிழவி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டாள். அப்பொழுது திடீரென அவளுக்கு முன்பொரு நாள் அழகம்மாள் காணாமற் போய்க் கண்டுபிடித்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து மாதாகோயில் சாலையிலிருக்கும் அந்த இரட்டை மரத்தை நினைத்துக்கொண்டு ஓடினாள். ஆனால்... ஆஸ்பத்திரியை விட்டு வௌியே வந்ததும் அதற்குமேல் நகர முடியாமல் திகைத்து நின்றாள் கிழவி. எதிரிலிருக்கும் பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கும் அழகம்மாளைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் விளைந்த திகைப்பா? பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருக்கும் அந்த மனிதரிடம் அழகம்மாள் என்ன பேசிக்கொண்டிருக்கிறாள்? "சீ சீ, போ" என்று விரட்டுகிறாரே அந்த மனிதர். பிச்சையா கேட்கிறாள்? என்ன பிச்சை? கிழவி மகளை நெருங்கி ஓடினாள். அதற்குள் அழகம்மாள் சற்றுத் தள்ளி நின்றிருந்த இன்னொரு இளைஞனை நெருங்கி என்னவோ கேட்டாள். அவள் குரல் இப்பொழுது கிழவியின் செவிகளுக்குத் தௌிவாகக் கேட்டது. "என்னாங்க...என்னாங்க....உங்க மகனைப் பார்க்க நீங்க ஏன் வரலை?.... அப்பாவைப் பார்க்காம அவன் அழுவுறானே.... வாங்க; நம்ப மகனைப் பாக்க வாங்க...." என்று அந்த வாலிபனின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறாள். அவன் பயந்து போய் விழிக்கிறான். "மகளே...." என்று ஓடி வந்தாள் கிழவி. திரும்பி பார்த்த அழகம்மாள் கிழவியை அடையாளம் கண்டு கொள்ளாமல் விழித்தாள். "என் குழந்தைக்கு அப்பா எங்கே, அப்பா?" அந்த ஒரே கேள்விதான்' "நீ வாடி கண்ணே என்னோட....இதோ பாத்தியா, உன் மகனுக்குப் புதுச்சட்டை" என்று மடியில் வைத்திருந்த சட்டையை எடுத்துக் காண்பித்தாள் கிழவி. அழகம்மாள் ஒரு வினாடி சட்டையை உற்றுப் பார்த்தாள்' "நல்லா இருக்கு; பையனுக்குப் போட்டுப் பார்ப்பமா?" என்றாள் புன்னகையுடன். அடுத்த நிமிஷம் அவள் முகம் வாடிக் கறுத்தது. "போ, என் மகனுக்குச் சட்டை வேணாம்; அப்பாதான் வேணும்" என்று சிணுங்கினாள். "மகளே' உனக்குத் தெரியலியா? முன்னே எல்லாம் நீ சொல்லுவியே 'தேவன்'னு....அந்த தேவன்தான் இப்ப வந்து உன் வயித்திலே மகனாப் பிறந்திருக்கான்.... ஆமாண்டி கண்ணே' இன்னொரு விஷயம் உனக்குத் தெரியுமா... கர்த்தருக்குக் கூட அப்பா கிடையாது.... நீ கவலைப்படாதே மகளே' " கிழவியின் வார்த்தைகள் அழகம்மாளுக்கு ஆறுதல் அளித்திருக்குமா? அவள் பார்வை.... அழகம்மாளின் பார்வை, உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆணும் என் குழந்தைக்குத் தகப்பன்தான் என்று கூறுவது போல் எதிரில் வரும் மனிதர்கள் நடுவே தன் குழந்தைக்கோர் அப்பனைத் தேடி அலைந்து கொண்டுதான் இருந்தது. ----- #7. துறவு "எங்கே, போனவங்களெ இன்னங் காணலியே....." என்று முனகிக்கொண்டே, வாசற்படியை ஒரு கையால் பற்றியவாறு, பாதித்தெருவரை உடம்பை வளைத்து நீட்டித் தெருக்கோடி வரை பார்த்தாள் பங்கஜம் அம்மாள். அப்பொழுதுதான் அடுத்த வீட்டு வாசலில், சேலைத் தலைப்பில் ஈரக் கையைத் துடைத்துக்கொண்டு வந்து நின்றாள் மரகதம். "என்ன மரகதம்....பகலெல்லாம் காணவே இல்லியே? வேலை சாஸ்தியோ?" என்று ஆரம்பித்தாள் பங்கஜம். "அதெல்லாம் ஒண்ணுமில்லே அக்கா; என்னவோ நெனப்பிலேயே நேரம் போயிடுச்சி..." அந்த இரண்டு வீடுகளையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் அந்தச் சாய்வுத் திண்ணையின் இரு புறங்களிலும் இருவரும் உட்கார்ந்து கொண்டனர். ---இரண்டு பெண்கள் கூடிப் பேசுவதென்றால் அந்தப் பரஸ்பர இன்பம் அவர்களுக்கல்லவா தெரியும்? "மணி எட்டு இருக்குமா?" என்றாள் பங்கஜம். "இப்பத்தானே ஏழரை அடிச்சிது? வேலையெல்லாம் ஆச்சுதா?..." "ஆச்சு.... வேலை ஆயி என்ன பண்றது? 'பொழுதோட வீட்டுக்கு வந்தமாம், சாப்பிட்டமாம்'கிற பேச்சேதான் எங்க வூட்டு ஐயாவுக்கு கெடையாதே' கோயிலும் கொளமும் சுத்திப்பிட்டு ராத்திரி மணி ஒம்பதோ, பத்தோ?---அவுக போறதுமில்லாம அந்தப் பய சோமுவையும் கூட்டிக்கிட்டுப் போயிடறாவ...." "சோமு வீட்டிலே இல்லே?---குரல் கேட்டுதே' " --மரகதம் பேச்சை வளர்க்கவே அப்படிக் கேட்டு வைத்தாள். "அவன் அடிக்கிற கூத்தை எங்கே போயிச் சொல்றதம்மா... பக்தி ரொம்ப மீந்து போச்சி...வௌக்கு வெச்சா வீட்டிலே தங்கமாட்டேங்கிறான். உபந்நியாசம் கேக்கப் போயிடறான்....போன வருசமே பெயில்...எப்பப் பார்த்தாலும் சாமியும், பாட்டும்தான்.... கறி திங்கமாட்டானாம்; முட்டைகூட வேண்டாம்கிறான்....அவுகளுக்கோ அந்த வாசமில்லாம சோறு எறங்காது. இவனோ, அதைத் தொட்ட கையைக் களுவாம, சோத்தெத் தொடாதேங்கிறான்...இந்த ரெண்டு பேருக்கும் ரெண்டு சமையல் பண்ண என்னால் ஆகுமா?.... கெடக்குக் களுதைன்னு வெறும் ரஸத்தோட விட்டுட்டேன் இன்னக்கி...." "என்ன அக்கா சமையல்?" "ஆறு மணிக்குமேலே குப்பம்மா வந்தா, கடைக்குப் போறேன்னா... ஒரு எட்டணாவெ குடுத்து அனுப்பிச்சேன், ஆறணாவுக்கு--- தோ...இத்தினி இத்தினி நீளத்துக்கு எட்டு கெளுத்தி வாங்கியாந்தா...அதோட ரெண்டு மாங்கா கெடந்தது, அதையும் போட்டுக் கொளம்பு வச்சேன்... அவனுக்குத் தொட்டுக்க என்ன பண்றதுன்னு ஒண்ணுந் தோணலே... வெறும் ரசத்தோட விட்டுட்டேன்... எனக்கு ஒண்ணுமே முடியலே... காத்தாலே இருந்து ரெண்டுத் தோளும் என்னா கொடைச்சல்' அப்படியே இத்துப் போவுது... சின்னப்பையன் ரமணி வேறே ராவிக்கெல்லாம் இருமித் தொலைக்கறான்... தூக்கமா வருது? இந்த லெட்சணத்திலே ரெண்டு கறி, ரெண்டு கொளம்பு வைக்க யாராலே முடியும்? பிள்ளையா பொறந்ததுவ, இருக்கறதைச் சாப்பிடணும்...'அது வேணாம், இது வேணாம்'...சைவமாம், சைவம்'...இவனும் இவன் சைவமும்...நான் என்னத்தைப் பண்ண...மூஞ்சியை மூணு மொளம் நீட்டிக்கிட்டு வெறும் ரசத்தை ஊத்தித்திங்கும்...ஹ்உம்... --பங்கஜம் அம்மாள் மூச்சுவிடாமல் கொட்டி அளந்து சலித்துப்போய்ப் பெருமூச்செறிந்தாள்' மரகதம் ஆரம்பித்தாள்: "அதை ஏன் கேக்கறீங்க அக்கா....எங்க வீட்டிலே இருக்கறவரு... மத்தியானம் அப்பிடித்தான், பாருங்க.... காலையிலே ஆபீசுக்குப் போகும்போது, 'முருங்கைக்காய் சாம்பார் வச்சி, உருளைக்கிழங்கு வறுவல் பண்ணு'ன்னு சொல்லிட்டு போனாவ....பதினோரு மணி வரைக்கும் சாம்பாரை வச்சி, சாதத்தையும் வடிச்சிட்டு உக்காந்திருந்தேன், உக்காந்திருந்தேனோ அப்பிடி உக்காந்திருந்தேன். கட்டையிலே போற காய் கறிக்காரனைக் காணவே இல்லை....மணியோ பதினொண்ணு ஆயிடுச்சி. அதுக்கு மேலே யாரைப் புடிச்சிக் கடைக்கு அனுப்ப? அவுவ பன்னெண்டு மணிக்கெல்லாம் வந்து எலையெப் போடுன்னு பறப்பாவளேன்னு, ரெண்டு வாளக்காய் கெடந்தது; அதை வறுத்து வச்சேன்...எலை முன்னே வந்து உக்காந்ததும் மனுசனுக்கு ஏன்தான் அப்பிடி ஒரு கோவம் வருமோ, ஆண்டவனே....'எளவெடுத்த வாளைக்காய்க் கருமந்தானா?ன்னு தட்டோட வீசி, எறிஞ்சாவ பாருங்க...நா என்னக்கா பண்ணுவேன் என்று சொல்லும்போதே கண்களை முந்தானையால் கசக்கிக்கொண்டாள், கடைசியிலே....நானும் அதெக் கையாலே தொடலே...அப்பிடியே கெடக்கு...." மரகதம் எதையெதையோ சொல்லி வருத்தப்படவே, பங்கஜம் பேச்சைத் திருப்பினாள்: "அது கெடக்கு...ஒன் நாத்தனார் முளுவாம இருந்து 'அபார்ஸ'னாயி ஆசுபத்திரியிலே கெடக்கான்னியே....என்னாச்சு?...காயிதம் வந்துதா..." மரகதம் குரலின் தொனி இறங்கி ஒலிக்கப் பேசினாள்: "பாத்தீங்களா, மறந்தே போனேனே...அபார்ஸனும் இல்லே, கிபார்ஸனும் இல்லே.... அவளுக்குத்தான் ஏழுமாசம் ஆயிடுச்சே...என்னாநடந்துதோ.... காத்தாலேருந்தே வயித்துப் புள்ளெ அசையிலியாம்---தடபுடலா போயி ஆசுபத்திரிக்கிக் கொண்டு போயிருக்காவ.... வயித்தை அறுத்து..... ----மிகவும் மும்முரமாக சம்பாஷணை 'கிளைமாக்ஸ்' அடையும் தருணத்தில் வாசற்படியில் செருப்பின் மிதியோசை கேட்டது' --சப்தத்திலிருந்தே, வருவது தன் கணவர்தான் என்பதைப் புரிந்துக்கொள்வாள் பங்கஜம்---ரெண்டு பெணகளும் எழுந்து நின்றனர். பங்கஜம் அம்மாளின் கணவன் சதாசிவம் பிள்ளையும், மகன் சோமுவும் திருநீறு துலங்கும் நெற்றியுடன் சிவப் பழங்களாய் உள்ளே நுழைந்தனர். மரகதம் குரலைத் தாழ்த்தி ரகசியம் பேசுவது போல் கூறினாள்: "ராஜியை அனுப்புங்க அக்கா.....வாளைக்காய் குடுத்தனுப்பறேன் சோமுவுக்கு..." "எதுக்கம்மா? என்று தயங்கினாள் பங்கஜம். "தம்பிக்குத்தான்...கெடக்கு, ராஜியை அனுப்புங்க அக்கா....." என்று புன்னகையுடன் கூறிவிட்டு உள்ளே போனாள் மரகதம். அடுக்களைக்கு வந்த பங்கஜம், மகனுக்கும் கணவனுக்கும் இலையிட்டு, மணைபோட்டு.... "ஏட்டி, ராஜி' அடுத்த வீட்டு அக்கா, என்னமோ தாரேன்னா...போயி வாங்கியா..." என்றாள். "என்னது?....என்ன வாங்கியாரச் சொல்றே, இன்னேரத்திலே...." என்று அதட்டல் குரல் போட்டார் பிள்ளை. "அதுவா? நீங்க பெத்து வச்சிருக்கீங்களே சைவப்பளமா, ஒரு பிள்ளை, அதுக்கு, சாதத்துக்குத் தொட்டுக்க ஒண்ணுமில்லே...அதுக்காவத்தான்...இல்லாட்டி தொரை கோவிச்சிக்குவாரில்லே...." என்று இரைந்தாள் பங்கஜம். ---அவளுக்குத் தெரியும், பிள்ளையிடம் எந்தச் சமயத்தில் எந்த ஸ்தாயியில், எந்த பாவத்தில் குரலை முடுக்கிப் பேசினால், சொன்னதை அவர் ஏற்றுக்கொள்வார் என்று. முற்றத்தில் கைகால் அலம்பிக்கொண்டிருந்த சோமு இந்த அஞ்ஞானிகளுக்காக வருந்துவதுபோல் மெல்லச் சிரித்தான். பிறகு, மாடத்திலிருந்த திருநீற்றை அள்ளிப் பூசிக்கொண்டு கூடத்திலிருந்த திருநீற்றை அள்ளிப் பூசிக் கொண்டு கூடத்திலிருந்த படங்களின் முன் நின்று 'அருட்சோதி தெய்வமென்னை' என்று கசிந்துருக ஆரம்பித்தான். சோமுவுக்கு வயது பதினைந்துதான்---அதுதான் மனிதனுக்குப் 'பித்து'ப் பிடிக்கும் பருவம். ---அது சமயப் பித்தாகவோ, கலைப் பித்தாகவோ, அரசியல் பித்தாகவோ அல்லது பெண் பித்தாகவோகூடப் பிடிக்கலாம்' சோமுவுக்கு அங்க வளர்ச்சிகளும், ஆண்மை முத்திரைகளும் ஏற்படும் பருவம் அது. முகம் குழந்தை மாதிரிதான் இருந்தது. உடலிலும் மனசிலும் சதா ஒரு துடிப்பும் வேகமும் பிறந்தது. மனம் சம்பந்தமில்லாத ஸ்தாயிகளிலெல்லாம் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது. உலகையும், வாழ்வையும் அறிய உள்ளம் பரபரத்தது. ஏதோ ஒரு இடத்தைத் தொட்டவுடனே எல்லா இடத்தையும் தொட்டுவிட்டதாக எண்ணி இறுமாந்தது. 'தான் புதிதாக அறிந்த விஷயங்கள் எல்லாம் புதிதாகப் பிறந்தவை' என்று நம்பி, அவற்றை மற்றவர்கள் அறியமாட்டார்கள் என்ற எண்ணத்தினால், மற்றவர்களைவிடத் தன்னை உயர்த்திப் பாவித்தது. மனசில் வாழ்வும், உற்றாரும், உறவினரும் ---எல்லாமே வெறுப்புத்தான், சதா நேரமும் 'சிடுமூஞ்சி'யும் கலகலப்பின்மையும், எதையோ நினைத்து ஏங்குவதுபோலவும், ஏகாந்தத்தை நாடுவதும்.... வீடே வெறுத்தது' சோமுவுக்கு வேதாந்தப் பித்துதான்' பொழுதோடு வீட்டுக்கு வராமல் பள்ளிக்கூடத்திலிருந்து ஓடக்கரைக்கும், கொய்யாத் தோப்புக்கும் போய் விளையாடிவிட்டு இரவு ஏழு மணிக்கோ, எட்டு மணிக்கோ வீடு திரும்பி, ஆடிய களைப்பில் உண்ட மயக்கத்துடன் உறங்கிப் போவதையே வழக்கமாக கொண்டிருந்த சோமு போன வருஷம் எட்டாம் வகுப்பில் 'கோட்' அடித்து விட்டான். வீட்டில் வசவுகளும் கண்டிப்பும் அதிகமாகி இனிமேல் பள்ளிக்கூடம் விட்டவுடன் நேரே வந்து வீட்டு வாசலைத்தான் மிதிக்கவேண்டும் என்ற கட்டளை பிறந்தது. இரவு சாப்பாடு வரை படிக்கவேண்டும் என்ற தண்டனை வேறு. வீட்டுக் கூடத்தில் அவனது தம்பிகளான சீனாவும் ரமணியும் கொஞ்ச நேரம் படித்துவிட்டு, மற்ற நேரமெல்லாம் தங்கை ராஜியுடன் விளையாடிக்கொண்டிருக்க, சோமு மட்டும், துயரமும் கவலையும் தோய்ந்த முகத்துடன் --- புத்தகத்தையும், சன்னல் வழியே வௌியுலகத்தையும் பார்த்தவாறு -- தந்தையின் உத்தரவை மீற முடியாமல் படித்துக் கொண்டிருப்பதைக் கண்ட பங்கஜம் அம்மாளுக்குப் பாவமாய் இருந்தது. "போதும்' நீ படிச்சிக் கிளிக்கிறது. கொஞ்சம் காத்தாட வௌியிலே போயி வா....உம்..." என்று அவன் கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கி வைத்தாள். சோமு தந்தையை எண்ணித் தயங்கி நின்றான். "நீ போயிட்டு வா....அவுக வந்தா நா' சொல்லிக்கிறேன், அவுக மட்டும் வீட்டிலேயேதானே இருக்காவ?.... கோயிலுக்கு போவாம அவுவளாலே, ஒரு நாளு இருக்க முடியுதா?.... நீயும் போயி அந்த நடராஜா கிட்டே 'எனக்கு நல்ல புத்தியெயும், தீர்க்காயுசையும், படிப்பையும் குடுடா ஆண்டவனே'ன்னு வேண்டிக்கிட்டுவா....அவுவ வந்தா நான் சொல்லிக்கறேன். அவள் சொல்லி முடிக்கும் முன் சட்டையை மாட்டிக் கொண்டு ஒரே ஓட்டம்.... "சீக்கிரம் வந்துடுடா சோமு..." என்று இரைந்து கூவிச் சொல்லும் தூரத்துக்குப் போய்விட்டான் அவன். காதில் விழுந்ததோ, என்னவோ... எட்டு மணிக்கு, சதாசிவம் பிள்ளை வரும்போதோ, "சோமு எங்கே?...." என்று கேட்டுக்கொண்டு வந்தார். "ஆமா.... சோமு சோமுன்னு அவனை வறுத்துக் கொட்டிக்கிங்க.... அவனுக்கு மட்டும் வீடே கதியா?..... நான்தான் என்ன பாவம் பண்ணிப்பிட்டோ இந்த ஜெயில்லே கெடக்கேன்.... ஒரு கோயில் உண்டா, கொளம் உண்டா?.... திருநாள் உண்டா, பெருநாள் உண்டா?.... என் தலைவிதி ஒங்களுக்குகெல்லாம் உளைச்சிக் கொட்டிச் சாகணும்னு..... என் வயித்திலே பொறந்தததுக்குமா, அந்த பாவம்.... பிள்ளையப் பார்த்தா பாவமா இருக்கு.... என்ன தான் அதிகாரம்னாலும் இப்பிடியா?" என்று கண்ணைத் துடைத்து. மூக்கைச் சிந்தி, முந்தானையை மடக்கி, முன்கையை நீட்டிக்கொண்டு எழுந்து வந்தாள் பங்கஜம். "எங்கே சோமுன்னுதானே கேட்டேன்" என்று பம்மிப் பதில் கொடுத்தார் பிள்ளை. ----இனிமேல் விஷயத்தைத் தெரிவித்தால் ஒன்றும் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு சாந்தமான குரலில் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னாள் பங்கஜம்; "கோயிலுக்கு போயிருக்கான்... நான் தான் அனுப்பிச்சேன். நீங்க அவனை ஒண்ணும் மூஞ்சியைக் காட்டாதீங்க. பையனைப் பார்த்தா பாவமா இருக்கு...." முற்றத்தில் இறங்கி கால் அலம்பிக்கொண்டிருந்த பிள்ளை, "சரி, சரி, நானே நெனச்சேன்... நாளையிலேருந்து வடக்கே இருந்து ஒரு பெரிய மகான் வந்து 'லெக்சர்' பண்ணப்போறார்.... அவர் பேரு அருளானந்தராம்.... பெரிய இவுராம்...." பங்கஜம் தந்த டவலில் முகம் துடைத்துக்கொண்டார் மாடத்திலிருந்த திருநீற்றை எடுத்துப் பூசிக்கொண்டார். "சரி, எலையெப் போடு.....என்ன வச்சிருக்கே?...." என்று சொல்லிவிட்டு, படங்களுக்கு முன்னே கரம்கூப்பி நின்றார். "கத்திரிக்காய் வதக்கிக் கொளம்பு....அப்பளம்' " ---கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்த அவர் முகத்தில் ஒரு சுளிப்பு'..... சேவிப்பு முடிந்தது; முகம் கடுகடுத்தது' "என்னடி வச்சிருக்கேன்னே...." "கத்திரிக்காய் வதக்கிக் கொளம்பு; அப்பளம்' " "சனியன்.....ரெண்டு கருவாடு கூடவா கெடைக்கலே....அதுகூடப் போட்டுக் கொதிக்க வைக்க... சீ சீ, நாளு பூரா மனிசன் கொரங்குத் தீனியா திம்பான்...." என்று சலித்துக் கொண்டார். ----சதாசிவம் பிள்ளை சிவபக்தர்; நர மாமிசம் கேட்காமலிருக்கிறாரே போதாதா?.... மறுநாளிலிருந்து சோமு தந்தையுடன் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்தான். 'சாமி ஆண்டவனே....இந்த வருஷம் நான் பாஸாகணும்' என்று ஆரம்பித்த பக்தி, ஜீவகாருண்யமே திறவுகோல் என்று வளர்ந்து, 'வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்' என்று சோமுவின் மனத்தில் கனியலாயிற்று. சுவாமி அருளானந்தரின் பிரசங்கம் தொடர்ந்து இருபத்தியேழு நாட்கள் ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது அல்லவா?.... சோமுவுக்கு ஞானம் பொழிய ஆரம்பித்தது. 'ஆமாம்....தாய் தந்தை, உடன்பிறந்தார், செல்வம், சுற்றம், உலகம் எல்லாம் பொய்தானே.... சாவு வரும்; அது மட்டும்தான் உண்மை. அந்த பெரிய உண்மைக்கு நேரில் இவையெல்லாம் அற்பப் பொய்' 'படிப்பு ஏன்?....சம்பாதனை எதற்கு?..... 'முடிவில் ஒருநாள் செத்துப்போவேனே.... அப்பொழுது இவற்றில் ஏதாவது ஒன்று....யாராவது ஒருவர் என்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியுமா, என்ன?.... 'தாய் அல்லது தந்தை இவர்களில் யாரேனும். யாராயிருந்தாலும் முடிவில் எல்லோரும் ஒருநாள் செத்துப் போவார்கள்...இவர்களில் யாரையாவது நான், அல்லது என் கல்வி, எனது சம்பாதனை காப்பாற்ற இயலுமா என்ன?.... 'முடியாது' ' 'அப்படியானால் இவர்களுக்கும் எனக்கும் என்ன உறவு?....நான் யார்?....இவர்கள் யார்? வீடு என்பதும், பந்துக்கள் என்போரும் அந்நியர் என்போரும், இன்பம் என்பதும் துன்பம் என்பதும்..... 'எல்லாம் வெறும் பொய்' ' 'மரணத்தை மனிதன் வெல்லமுடியாது. ஆனால் ஆசைகளைத் துறப்பதன் மூலம் மனிதன் கடவுளை அடையமுடியும். 'கடவுளை அடைவது என்றால்?..... 'கடவுளை அடைவது என்றால்--- உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இப்படிப்பட்ட பாசபந்தச் சுழலில் சிக்கி, பாவகிருத்தியங்கள் புரிந்து மீளா நரகத்தில் விழாதிருக்க, பிறவி நீத்துக் கடவுளின் பாதாரவிந்தைகளை அடைந்து..... 'ஆமாம்....ஆசைகளைத் துறக்கவேண்டும்' இந்த அற்ப வாழ்வில் ஆசைகொள்ள என்ன இருக்கிறது?....' ---அந்த இளம் உள்ளம் ஏகாந்தத்தை நாடித் தவித்தது. அவன் கற்பனையில் ஒரு தவலோகமே விரிந்தது..... ....ஹிமவானின் சிகரத்தில், பனிச் செதில்கள் பாளம் பாளமாய், அடுக்கடுக்காய் மின்னிப் பளபளக்கும் அந்தப் பாழ்வௌியில், மேகம் திரண்டு ஒழுகுவதுபோன்ற---ஹிமவானின் புத்திரி கோதிவிடும் வெண் கூந்தல் கற்றைபோல் விழும் --- நீரருவியில், அதன் அடிமடியில் ஓங்காரமாய் ஜபிக்கும் பிரணவ மந்திர உச்சாடனம் போன்ற நீர்வீழ்ச்சியின் இரைச்சலில், சிவனின் புகழ்பாடும் எண்ணிறந்த பறவை இனங்களின் இன்னிசையில்.... எதிலுமே மனம் லயிக்காமல், பற்றாமல், உலகத்தின் அர்த்தத்தையே தேர்ந்த பெருமிதத்தில், தௌிவில் மின்னிப் புரளும் விழிகளை மூடி, இயற்கையின் கம்பீரத்துடன் நிஷ்டையில் அமர்ந்திருக்கிறாரே அந்த ரிஷிக் கிழவர்.... அவர்தான் லோக குரு' ---அருளானந்த சுவாமிகள்விட்ட கவிதாநயம் மிகுந்த சரடு சோமுவைப் பின்னிப் பிடித்துக் கொண்டது. அங்கே சென்று லோக குருவைத் தரிசித்து அவர் பாதங்களிலே வீழ்ந்து, அவருக்கு பணிவிடை செய்ய வேண்டுமாம். அதையே பிறவியின் பயனாகக் கொள்ள வேண்டுமாம். மற்றக் கருமங்கள் யாவையும் மறந்து ஆசைகளை, பந்தங்களை, தன்னை, உலகை யாவற்றையும் துறந்து..... ---துறந்துவிட்டால் லோக குருவாகப்பட்டவர் சோமுவை ஒரே தூக்காகத் தூக்கி, இமயமலைக்கு மேலே, எவரஸ்டையும் தாண்டி, கைலாயத்திற்கும் அப்பால் சுவர்க்கத்திற்கு அனுப்பி விடுவாரல்லவா?.... "சம்போ மஹாதேவா'....." என்றவாறு படுக்கையை விட்டு எழுந்தான் சோமு. "ஏது, பிள்ளையாண்டான் இன்னக்கி இவ்வளவு விடிய எழுந்திரிச்சிட்டாரு. வா வா' எண்ண தேச்சுக்க...." என்று கூப்பிட்டாள் பங்கஜம். 'இந்த கட்டைக்கு இதெல்லாம் எதற்கு?' என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது. 'இன்றைக்கு ஒரு நாள்தானே' என்ற சமாதானத்தில் அவன் ஒன்றும் பேசவில்லை. 'என்ன நாளைக்கு?.... நாளைக்கு என்ன ஆய்விடப்போகிறாய்?' அதை நினைக்கும்பொழுதே மாய வாழ்வை உதறியெறிந்த எக்களிப்பு முகத்தில் தோன்றியது. "ஏ, மூதி' நிஜாரோட நிக்கிறதைப் பாரு... போயி கோமணத்தைக் கட்டிக்கிட்டு வா..." "அப்பா' தலையிலே எவ்வளவு முடி?... முடி வெட்டிக்கிட்டா என்னா?..." என்று முனகிக்கொண்டே தலையில் எண்ணெயை வைத்துத் தேய்த்தாள். 'முடி வெட்டிக் கொள்வது என்ன, மொட்டையே அடித்துக்கொள்ள வேண்டியதுதான்' ' என்று மனம் முணகியது. --அவனுக்குத் தலைமுடி ஒரே அடர்த்தி. சுருள் சுருளாக, வளையம் வளையமாக, வாரிவிட்டால் வங்கி வங்கியாக... "ஒங்க தாத்தாவுக்குத்தான் இந்த மாதிரி சுருட்டை முடி..." --மகனின் முடிப் பெருமையைப்பற்றி அவள் அடிக்கடி பேசிக் கொள்வாள்' 'எல்லாப் பெருமையும் நாளைக்கு...' --"சம்போ மகாதேவா" என்று சோமுவின் மனம் கோஷித்தது. 'நாளைக்கு...நாளைக்கு' என்று மனம் குதூகலித்துக் கொண்டிருந்தது. அந்த 'நாளை' யும் வந்தது. மூன்று மாதங்களுக்குமுன் ஒரு 'பிளாஸ்டிக் பெல்ட்' வாங்கவேண்டுமென்ற பெரும் லட்சியத்திற்காக, பள்ளிக் கூடத்தருகே விற்கும் வேர்க்கடலை, பட்டாணி, நாவற்பழம் இத்தியாதி வகையறாக்களைத் தியாகம் செய்து கிடைத்த காசையெல்லாம் சேர்த்துவைத்த செல்வம் மேஜை டிராயரில் 'புரூக்லாக்ஸ்' டப்பியொன்றில் இருந்தது, அதை எடுத்து எண்ணிப் பார்த்தான். கிட்டத்தட்ட ஒரு ரூபாய்' அந்தப் 'பாப மூட்டை' யைச் சுமக்க மனமில்லாமல் தர்மம் செய்து விடுவது என்று தீர்மானத்தான் சோமு. கொஞ்ச காலமாகவே அவன் தனது நண்பர்களை--அவர்கள் ஞானமேதுமறியா ஈனஜன்மங்கள் என்பதனால்--விட்டு விலகி ஒதுங்கி நடந்தான். உபாத்தியாயரோ--'மாணவர்களோடு சேர்ந்து கொச்சையாகவும் விரசமாகவும் கேலி பேசி மகிழும் அந்தத் தமிழ் வாத்தியார் இருக்கிறாரே, அவர் ரௌத்ரவாதி நரகத்துக்குத் தான் போகப்போகிறார்' என்று டிக்கட் கொடுத்த புக்கிங் கிளார்க் மாதிரி முடிவு கட்டிவிட்டான் சோமு. 'ஊனைத் தின்று ஊனை வளர்க்கும் தகப்பனார் என்ன கதி ஆகப்போகிறாரோ?' என்று வருந்தினான். தாயா?--அது ஒரு மூடாத்மா... 'இந்த அஞ்ஞான இருளில் அமிழ்ந்து கிடக்கும் மானிடப் பிறவிகளுக்கு மெய்ஞ்ஞான தீபத்தின் ஔி என்றுதான் கிட்டுமோ?...' 'ஸ்வாமி அருளானந்தரும், அவருக்கும் மேலாக ஹிமாலயத்தின் அடிவாரத்தில் தபஸில் லயித்திருக்கும் லோக குருவு இவ்விருவருக்கும் அடுத்தபடியாய்த் தானும் ஆகவேண்டிய பிறவி லட்சியம்...' 'சம்போ மஹாதேவா' ' அடுத்த நாள் அதிகாலை, சட்டை நிஜார் அனைத்தையும் துறந்து--இடையில் ஒரு துண்டு மட்டும் உண்டு--மடியில் தனது 'மாயா செல்' வத்தை முடிந்துகொண்டு, எல்லோரும் எழுந்திருக்கும் முன்னே சித்தார்த்தன் கிளம்பிச் சென்றது போல் நழுவினான் சோமு. வௌியிற் கலக்க எண்ணி, வீட்டை வௌியேறிய சோமு நேரே மேலச் சந்நிதிக் கோபுரத்தடிக்குப் போனான். அங்கே ஒரு டஜன் பண்டாரங்கள் நின்றிருந்தன. அவர்கள் எல்லோருக்கும் தலைக்கு ஓரணாவாகத் தனது செல்வத்தைத் தானமிட்டுவிட்டு, தில்லைநாயகனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நேரே குளத்தங்கரைக்கு ஓடினான். அங்கே அரசமரத்தடியில் காலையிலிருந்து தவமிருக்கும் 'பழனிநாத' னிடம், இருந்த சில்லரையைக் கொடுத்துவிட்டுக் குரு உபதேசம் கொள்வதுபோல் குனிந்து உட்கார்ந்தான். 'குரு' அவன் காதில் குனிந்து கேட்டார்: "என்ன தம்பி...மொட்டையா?" "ஆமாம்..." வேணாம் தம்பி... கிராப்பு அளகா இருக்கே'..." --மாயையை வென்ற ஞானிபோல் அவனைப் பார்த்துப் புன்னகை பூத்தான் சோமு. 'மகனே' என்றழைத்து உபதேசம் செய்யப் போவது போல் இருந்தது அவன் தோற்றம். "அப்பனே...முடியை இழக்க யோசனை செய்கிறோமே, முடிவில் ஒருநாள் இந்தச் சடலத்தையே வைத்து எரிப்பார்களே அதைப்பற்றிச் சிந்திக்கிறோமா?... முடிதரித்த மன்னர்கள் எல்லாம்கூட முடிவில் ஒருநாள் பிடி சாம்பராய்த்தானே போனார்கள்" என்று 'குரு உபதேசம்' செய்துவிட்டுக் குனிந்து கொண்டான். --அவனுக்குத் தான் பேசியதை நினைக்கும்போது, பேசியது தான்தானா என்றே ஆச்சரியமாய் இருந்தது. 'என்ன ஞானம்' என்ன ஞானம்' ' என்று தன்னையே மனசுக்குள் பாராட்டிக் கொண்டான். 'பேசிப் பயனில்லை; ஞானம் முற்றிவிட்டது' நினைத்த நாவிதன் அவனைப் 'பக்குவ'ப்படுத்த ஆரம்பித்தான். உச்சந்தலைக்குக் கீழே நாவிதனின் கத்தி 'கருகரு'வென்று வழிந்து இறங்கும்போது எதிரில் பெட்டியின்மீது சாத்தி வைத்திருந்த கண்ணாடியில் முகம் கோரமாய்த் தெரிந்தது. அதைப் பார்த்த சோமுவின் கண்கள் ஏன் கலங்க வேண்டும்?..... 'சம்போ மகாதேவா' என்று மனசுக்குள் முனகி, தன்னை அடக்கிக் கொண்டான். பிறகு, குளத்தில் இறங்கி நாலு முழுக்குப்போட்டு விட்டு 'ஜெய் சம்போ' என்ற குரலுடன் கரையேறினான். பாசம், பந்தம், சுற்றம் சொந்தம், செல்வம், செருக்கு யாவற்றையும் இழந்த ஏகாங்கியாய் அவன் வடதிசை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ----ஆமாம்; இமயமலை அங்கேதான் இருக்கிறது' 'இமயமலை இங்கிருந்து ஆயிரம் மைல் இருக்குமா?.....இருக்கலாம்' ' 'ஒரு மனிதன் ஒரு நாளைக்குக் குறைந்தது பத்து மைல் நடக்க முடியாது?....நிச்சயமாக முடியும்' ' 'அப்படியானால் மொத்தம் நூறு நாட்கள்---அதாவது மூன்று மாதமும் பத்து நாட்களும்....' 'இரண்டாயிரம் மைலாக இருந்தால்.... அதுபோல் இரண்டு மடங்கு'.... எப்படி இருந்தாலும் போய்விட வேண்டியதுதானே'.....பிறகு, என்ன யோசனை?....' 'போகும் வழியெல்லாம் எவ்வளவு புண்ணிய ஷேத்திரங்கள்'.... எவ்வளவு தெய்வ பக்தர்கள்'.... எவ்வளவு மகான்கள்'.... எவ்வளவு முனிவர்கள்'...... சோமு தனது புனித யாத்திரையைத் துவங்கி ஆறு மணி நேரமாகி இருந்தது. போகும் வழியில்.....ஆம்; ஹிமாலயத்தை நோக்கிப் போகும் வழியில்தான்----குறுக்கிடுகிறது பரங்கிப்பேட்டை' அந்த நகரில் அன்று சந்தை' சோமு கடைத்தெரு வழியாக நடந்து வந்துக்கொண்டிருந்தான். கிராமத்து மக்கள் கும்பல் கும்பலாகப் போவதும் வருவதுமாய்....ஒரே சந்தடி' மூட்டை முடிச்சுகளுடன் பறந்து பறந்து ஓடுகிறவர்கள், கூடைச்சுமைகளுடன் ஒய்யாரமாய் கைவீசி நடக்கிறவர்கள், தோளில் உட்கார்ந்து கொண்டு கரும்பு கடிக்கும் பிள்ளைச் சுமையுடன் துள்ளி நடப்பவர்கள், கட்டை வண்டிகளில் அழிகம்பைப் பிடித்துக்கொண்டு நகத்தை கடித்தவாறு சிரித்துச் செல்லும் கிராமத்து அழகிகள், தெரு ஓரங்களில் குந்தி இருந்து வியாபாரம் செய்பவர்கள், கூடியிருந்து பேசி மகிழ்பவர்கள், வியாபராம் செய்தவாறு வேடிக்கை பேசுபவர்கள், விலை கூவியவாறு பாட்டுப் பாடுபவர்கள். வேடிக்கை பார்த்தவாறு வழிவட்டம் போடுபவர்கள், கேலி பேசிவாறு 'கேளிக்கை'க்கு ஆயத்தமாகிறவர்கள்--- மனிதர்கள் திருநாள்போல் மகிழ்ந்திருந்தனர். வாழ்வின் உயிர்ப்பு எத்தனையோ கோலத்தில் வளைய வந்துகொண்டிருந்தது அங்கே. வாய்க்காலைத் தாண்டுவது போல் வாழ்க்கையைத் தாண்டிவிடலாம் என்று எண்ணி வந்த சோமு அந்தச் சந்தையைக் கடக்கும்போது --- வாழ்க்கையின் அந்தக் காட்சிகளில் தன்னை மறந்து லயித்துவிட்டான். அதோ, அந்த மர நிழலில் --- ஓர் இளம்பெண் நாவல் பழத்தை அம்பாரமாய்க் குவித்து வைத்துக்கொண்டு விலை கூவி விற்கிறாள். நாவல் பழ நிற மேனி; அந்தக் கருமேனியில் ---அவள் முகத்தில் முத்துப் பற்ற்களும், அவற்றிற்கு வரம்பமைத்த வெற்றிலைச் சாறூரும் உதடுகளும் எல்லோரையும் வலிய அழைத்து நாவற்பழம் தருகின்றன. அவளது கண்கள் வௌபுள்ளிளை வெளேரென்று. அவற்றின் நடுவே இரண்டு நாவற்பழங்களைப் பதித்து வைத்ததுபோல் புரளும் கருவிழிகள்..... அந்த விழிகள் சோமுவை, நாவல்பழத்தை வெறித்து நோக்கிய சோமுவின் விழிகளை நோக்கின. "கல்கண்டு பளம்.....கருநாவப் பளம்....படி ஓரணா, படி ஓரணா...." என்று பாட்டுபாடி அவனை அழைத்தாள். 'படி ஓரணா.... பரவாயில்லையே ...பள்ளிக்கூடத்துக்கு எதிரே வண்டியில் வைத்து நாலைந்து பழங்களைக் கூறுகட்டி கூறு காலணா என்று விற்பானே....' என்ற நினைவும் வரவே சோமுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ---அவனுக்கு நாவற்பழம் என்றால் உயிர்' அதுவும் உப்புப் போட்டு தின்பதென்றால்?.... அவன் வாயெல்லாம் நீர் சுரந்தது' அதுவும் இந்தப் பழங்கள்'.... கன்னங்கறேலென்று, ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு..... கனிந்து லேசாக வெடித்த பழங்கள்... வெடிப்பின் இடையே சில பழங்களில், கறுமையும் சிவப்பும் கலந்த பழச்சாறு துளித்து நின்றது, பக்கத்தில் ஒரு சிறு கூடையில் உப்பும் வைத்திருந்தாள்... கும்பலில் இருந்தவர்கள் காலணாவும் அரையணாவும் கொடுத்துக் கைநிறைய வாங்கிச் சென்றனர். சிலர் உப்பையும் சேர்த்துக் குலுக்கித் தின்றனர். அதோ, ஒரு கிழவர்.... அவர் வாயைப் பார்த்ததும் சோமுவுக்குச் சிரிப்பு வந்தது, அவர் மூக்குக்கும் மோவாய்க்கும் இடையே ஒரு நீளக்கோடு அசைந்து நௌிந்துகொண்டிருந்தது. அதுதான் உதடு, வாய், பற்கள் எல்லாம்.... "அரையணாவுக்கு பளம் குடு குட்டி' " அந்தக் கிழவர் பொக்கை வாயால் 'பளம்' என்று சொல்லும்போது வௌியே தெரிந்த நாவையும் வாயின் அசைவையும் கண்ட சோமுவுக்குச் சிர்ப்புப் பொத்துக்கொண்டு வந்தது. ஒரு காகிதத்தில் நாவல்பழத்தைப் பொறுக்கி வைத்து ஒரு கை உப்பையும் அள்ளித் தூவிக் கிழவரிடம் கொத்தாள் நாவற்பழக்காரி. "ஏ, குட்டி, கௌவன்னு ஏமாத்தப் பாக்கிறியா? இன்னம் ரெண்டு பளம் போடுடி...வயசுப் புள்ளைவளுக்கு மட்டும் வாரி வாரிக் குடுக்கிறியே..." என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டே கேட்டார் கிழவர். "அடி ஆத்தே....இந்தக் கெழவனுக்கு இருக்கற குறும்பைப் பாரடி அம்மா' " என்று கையைத் தட்டிக் கன்னத்தில் வைத்துக்க்கொண்ட நாவர்பழக்காரி கண்களை அகல விரித்தவாறு சிரித்தாள். "மீதி சில்லறை குடு குட்டி...என்னமோ ஆம்படையான் சம்பாதிச்சுக் குடுத்த காசு கணக்கா வாங்கிப் போட்டுக்கிட்டு நிக்கறியே...." என்றார் கிழவர். "ஏ, தாத்தா...என்னா வாய் நீளுது...." என்று கிழவர் கன்னத்தில் லேசாக இடித்தாள் பழக்காரி. "பாத்தியா...ஒரு ஆம்பிளை கன்னெத்தெ தொட்டுட்டா...எம்மேலே அம்மாம் பிரியமா, குட்டி...? ஒங்கப்பங்கிட்டே சொல்லி நாளு பாக்கச் சொல்றேன்...எந்தப் பய கால்லேயாவது சீக்கிரம் கட்டாட்டி நீ எம்பின்னாலே வந்துடுவே போல இருக்கே..." என்று சொல்லிக் கிழவர் அனுபவித்துச் சிரித்தார். பழக்காரி வெட்கத்தினால் இரண்டு கைகளினாலும் முகத்தை மூடிக்கொண்டாள். "போ...தாத்தா' " என்று கண்டிப்பதுபோல் கிழவரைப் பார்த்தாள். கிழவர் சிரித்துக்கொண்டே, கையிலிருந்த பழங்களில் ஒன்றை எடுத்து--உப்பில் நன்றாக அழுத்தி எடுத்து--இரண்டு விரல்களால் வாய்க்கு நேர உயர்த்திப் போட்டுக் குதப்பிச் சப்பிக் கொட்டையைத் துப்பினார்... 'அடெ, இத்தினூண்டு கொட்டை' பழம், நல்ல பழம் தான்' --கிழவரின் வாயசைப்பையும் சுவை ரசிப்பையும் கவனித்து அனுபவித்த சோமு வாயில் சுரந்த எச்சிலைக் கூட்டி விழுங்கினான். இந்த மொட்டைத்தலைச் சிறுவன் தன்னையே கவனித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்த கிழவர். "இந்தாடா, பையா..." என்று சோமுவிடம் ஒருகை பழத்தை அள்ளிக் கொடுத்தார். சோமுவுக்குச் செவிட்டில் அறைந்ததுபோல் இருந்தது' அந்த நாவற்பழக்காரி அவனைப் பார்த்தாள். சோமு, கிழவனையும், நாவற்பழக்காரியையும் மாறி மாறிப்பார்த்தான். அவனுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது' "நா ஒண்ணும் எச்சப் பொறுக்கி இல்லே..." என்று அவனிடம் நீட்டிய கிழவரின் கையிலிருந்த பழத்தைத் தட்டிவிட்டான். கிழவர் சிரித்தார்: "அட, சுட்டிப்பயலே...என்னமோ ஒன்னெப் பாத்தா ஆசையா இருந்தது...எம் பேரப்பையன் மாதிரி...கோவிச்சிக்கிட்டியே...நான் ஒன் தாத்தா மாதிரி இல்லே..." என்று வாஞ்சையுடன் அவன் தலையைத் தடவிக் கொடுத்தார். சோமுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. "ஒங்க தாத்தாவுக்குத்தான் இந்தமாதிரி சுருட்டை மயிர்" என்று சொல்லும் அவன் தாயின் குரல் செவிகளில் ஒலித்தது. "இந்தாடா பையா...ஏதுக்கு அளுவுறே? நீ யாரு வூட்டுப் பையன்..." என்றார் கிழவர். சோமு ஒன்றும் பதில் பேசவில்லை. "ஒனக்கு என் கிட்டே கோவம், இல்லே?...பரவாயில்லே...தாத்தாதானே...இந்தா, பழம் தின்னு..." "ஊஹ்உம்...எனக்கு வேணாம்' "சேச்சே... அப்பறம் எனக்கு வருத்தமா இருக்கும். ஒண்ணே ஒண்ணு' " என்று அவன் கையில் வைத்தார். அவனால் மறுக்க முடியவில்லை. அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு அந்த இடத்தில் நிற்க முடியாமல் நகர்ந்தான். "பாவம்...யாரோ அனாதை' மொகத்தைப் பாத்தா பாவமா இருக்கு..." 'நான் அனாதையா?...பிச்சைக்காரனா?...' வாயிலிருந்த பழத்தைச் சுவைத்துக் கொட்டையைத் துப்பினான். 'அந்தக் கிழவனின் முகத்தில் அறைவதுபோல் நானும் ஒரு காலணாவுக்குப் பழம் வாங்கித் தின்றால்?...' 'திங்கலாம்...காசு?...' --அவன் தனது மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டே நடந்தான். அதோ, அந்த மரத்தடியில் வேர்க்கடலை, பட்டாணி வறுக்கிறார்கள். அப்பா'...என்ன வாசனை?... --திடீரென அவன் மனசில் மின்னல்போல் அந்த எண்ணம் விசிறி அடித்தது. 'நாம் எங்கே போகிறோம்?...நமது லட்சியம் என்ன? --அவனுக்கு நெஞ்சில் 'திகீல்' என்றது. அவனே தேர்ந்துகொண்ட அந்த முடிவு அவனை இப்பொழுது முதல் தடவையாக மிரட்டியது' ஒருகணம் சித்தம் கலங்கியது; உணர்வற்று நின்றான், உடலிலும் நெஞ்சிலும் ஒரு துடிப்புப் பிறந்தது. தன்னை ஏதோ ஒன்று பின்னாலிருந்து திரும்ப அழைப்பதுபோல் உணர்ந்தான். அந்த அழைப்பின் பாசம், பிடிப்பு...அதிலிருந்து பிய்த்துக்கொண்டு விலகிவிட எண்ணிக் கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஓட்டமாய்ச் சந்தைத் திடலைவிட்டு ஓடினான்...கடைத்தெருவைக் கடந்து சாலை வழியே வந்தபின் தன் பயணத்தைத் தொடர்ந்தான். வெகுதூரத்தில், வாழ்வின் கீதம்போல் ஒலிக்கும் சந்தை இரைச்சல் அவன் காதுகளில் மெல்லெனக் கேட்டுக் கொண்டே இருந்தது. அவன் ஏன் அழுதுகொண்டே நடக்கிறான்?... சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் சாலையில் கிட்டத்தட்ட, பதினைந்தாவது மைலிலுள்ள ஆலப்பாக்கத்தருகே புழுதி படிந்த உடலுடன் நடக்க முடியாமல் தளர்ந்து தள்ளாடி நடந்து வருவது--ஹிமாலயத்தை நாடிச் செல்லும் ஞானச் செம்மல் சோமுதான். நடக்க முடியவில்லை; வயிற்றைப் புரட்டுகிறது ஒரு சமயம், வலிக்கிறது மறுசமயம்...பசிதான்' --சுமைகளை உதறி எறிந்துவிட்டு வந்த சோமுவுக்கு, சோறில்லாமல் வெற்றுடல் சுமையாய்க் கனக்கிறது' இனிமேல் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது என்ற ஸ்தம்பிப்பு' நிற்கிறான்...பார்வை வெகுதூரம் வரை ஓடி வழியை அளக்கிறது.... பார்வை மறைகிறதே.....கண்ணீரா? பசிக் கிறுகிறுப்பா?.... இமயமலைக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கிறது' சிரமப்பட்டு ஒரு அடி எடுத்து வைக்கக் காலை அசைத்தவுடன் காலில் பெருவிரலிலிருந்து அடித்தொண்டை வரைக்கும் ஒரு நரம்பு--கொரக்குப் பிடித்து சுண்டி இழுப்பது போல்.... "ஆ?....என்ன வலி'....." பல்லைக் கடித்துக்கொண்டு தரையில் மெல்ல உட்காருகிறான். ----எத்தனை நாழி?.... எழுந்திருக்க மனமும் வரவில்லை; உடலும் வரவில்லை. இருள் பரவ ஆரம்பித்தது; மேற்குத் திசையில் வானம் சிவந்து கறுத்தது. அந்தச் சாலையின் நெடுகிலும் வளர்ந்து படர்ந்திருந்த ஆல விருக்ஷத்தின் விழுதுகள் சடைசடையாய் ஆடிக்கொண்டிருந்தன. இருளைக் கண்டதும்.... பாவம், பிள்ளைக்குப் பயத்தால் மனத்தில் உதறல் கண்டுவிட்டது. அந்தச் சாலையில் விளக்குகளும் கிடையாது. 'இன்று நிலாவும் இல்லை' என்று சொல்வதுபோல் நான்காம் பிறை கடைவானில் தலைக்காட்டிவிட்டு கீழிறங்கிக் கொண்டிருந்தது. 'எங்காவது ஒரு குடிசை கண்ணுக்குத் தெரிகிறதா?' என்று பார்த்தான்....ஹஉம், இன்னும் இரண்டு மைலாவது நடக்க வேண்டும். 'இரவு படுக்கை?.....' ---வீட்டில் படுக்கும் மெத்தையும், பஞ்சுத் தலையணையும், கம்பளிப் போர்வையும் நினைவுக்கு வந்தன.... 'இதெல்லாம் என்ன விதி'.....' 'பசிக்கிறதே'....' 'யார் வீட்டிலேயாவது போயி, சம்போ மகாதேவான்னு நிக்கிறதா என்ன?' 'யாராவது பிச்சைக்காரன்னு நெனைச்சி வெரட்டினா?....' வீட்டில்--மெய்ஞ்ஞானம் கைவரப்பெறாத அம்மா, பாசத்தை விலக்க முடியாமல், மகனென்ற மாயையில் சிக்கி பக்கத்தில் அமர்ந்து பரிந்து பரிந்து சோறிட்டுப் பறிமாறுவாளே---அந்த அம்மா, ஆசை அம்மா---அவள் நினைவு வந்ததும்.... "அ...ம்....மா..." என்று அழுகையில் உதடுகள் விம்மித் துடித்தன' 'சீ' இதென்ன பைத்தியக்காரன்போல் ஓடிவந்தேனே' இதென்ன கிறுக்கு?....' என்று தன்னையே சினந்துகொண்டான். இந்நேரம் ஊரில், வீட்டில் அம்மா, தன்னைக் என்னென்ன நினைத்து, எப்படியெப்படிப் புலம்பி அழுவாள்..... அப்பா? அவர் ஊரெல்லாம் தெருத் தெருவாய் அலைந்து திரிந்து எல்லோரிடத்திலும் 'சோமுவைப் பார்த்தீர்களா சோமுவை...' என்று விசாரித்தவாறு சாப்பிடாமல் கொள்ளாமல் ஓடிக் கொண்டிருப்பார்... 'ஐயோ' என்னால் எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம்' ' என்று எண்ணிய சோமு. "அம்மா'...நா வீட்டுக்கு வந்துட்றேன் அம்மா...ஆ...ஹ்உ...ம்..." என்று ஜன நடமாட்டமே இல்லாத அந்தச் சாலையில், திரண்டு வரும் இருளில் குரலெடுத்துக் கூவி அழுதான். சிறிது நேரம் மனம் குமுறி அழுது சோர்ந்தபின், மனம் தௌிந்து புத்தி செயல்பட ஆரம்பித்தது. நேரமோ இருட்டுகிறது, நடந்துவந்த வழியை எண்ணினான். 'மீண்டும் திரும்பி நடப்பதென்றால் வீட்டுக்குப் போய்ச் சேருவது எப்போது?......எப்படியும் விடியற்காலையிலாவது வீட்டுக்குப் போயாக வேண்டுமே...இந்த இருட்டை, ராத்திரியைக் கழிப்பது எங்கே?... அவனுக்கு அழுகை வந்தது. 'இதெல்லாம் என்ன விதி?' "விதியல்ல கொழுப்பு' " என்று பல்லைக் கடித்துக் கொண்டு வாய்விட்டுச் சொன்னான். பக்தி வெறியும் வேதாந்தப் பித்தும் சற்றுப் பிடி தளர்ந்தன. 'பெற்றோர்க்கும் எனக்கும் என்ன பந்தம்?' 'பெற்ற பந்தம்தான்' பந்தமில்லாமலா என்னை வளர்த்தார்கள்? நான் சிரிக்கும்போது சிரித்து, அழும்போது அழுது...' 'பாசத்தை யாரும் வலியச் சென்று ஏற்காமலே பிறக்கிறதே...அதுதானே பந்தம்' ' 'ஆமாம் பந்தங்கள் இருந்தால்தான், பாசம் கொழித்தால்தான் பக்தியும் நிலைக்கும்.' 'பந்தமும் பாசமும் பொய்யென்றால், ஸ்வாமி அருளானந்தரின் மீதும், லோக குருவின்மீதும், பரம்பொருளின் மீதும் கொண்டுள்ள பக்தி...அதுவும் ஒரு பாசம்தானே?' சாலையில் கவிந்திருந்த இருளில் மரத்தடியில் அமர்ந்து தன்னைச் சூழ்ந்து பின்னிக்கொண்டிருந்த வேதாந்தச் சிக்கல்களையும், தத்துவ முடிச்சுகளையும் அவிழ்த்து, சிக்கறுத்துத் தள்ளித்தள்ளித் தன்நிலை உணர்ந்துகொண்டிருந்த சோமு, இருளும் நன்றாகப் பரவிவிட்டது என்று உணர்ந்தான். கண்ணுக்கெட்டிய தூரம் இருளின் கனம்தான் தெரிந்தது. வெகு தொலைவில் ரயில் சப்தம் கேட்டது. வானத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரச் சிதைவு இருளின் கருமையை மிகைப்படுத்திக் காட்டின. யாரோ ஒரு பிரம்ம ராக்ஷஸனின் வரவுக்காக 'பாரா'க் கொடுத்து திண்டுமுண்டான ராக்ஷசக் கூட்டம் அணிவகுத்து நிற்பதுபோல் அசையாமல் தோன்றும் மரங்களின் கரிய பெரிய பரட்டைத் தலைகளின் மீது ஜிகினா வேலை செய்ததுபோல் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாய் மொய்த்தன..... திடீரென் 'சரசர'வென்ற அந்தச் சப்தம்'.....எங்கிருந்து வருகிறது?.... சோமுவின் கண்கள் இருளைக் கிழித்து ஊடுருவின.... காதுகள் கூர்மையாயின.... 'எங்கே'....என்னது?.....' 'அதோ....அதுதான்; அதுவேதான்' ' ---சாலையின் வலது புறத்தில்---சோமு உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நேரே பத்தடி தூரம் தள்ளி---கடலைக் கொல்லையிலிருந்து மேலே உயரும் சாலைச் சரிவில், உதிர்ந்து நிரவிக் கிடக்கும் ஆலிலைச் சருகுக் குவியலின் நடுவே, நெல்லுக் குத்தும் மர உலக்கை ஒன்று லாகவம் பெற்று நௌிவதைப்போல நகர்ந்து வந்தது....இருளில்கூட என்ன மினுமினுப்பு' "பாம்பு'....தப்பு....தப்பு.....சர்ப்பம்.... சர்ப்ப ராஜன்...." வாய் குழறிற்று. காலும் கையும் தன் வசமிழந்து உதறின. சாய்ந்து உட்கார்ந்திருந்த அடிமரத்தில் முதுகை ஒட்டிக் கொண்டு எழுந்தான். எழுந்திருக்கும்போது மொட்டைத் தலையில் 'நறுக்'கென்று மரத்தின் முண்டு இடித்தது. -அந்த 'உலக்கை' மேட்டில் ஏறி, சாலையின் குறுக்கே நீண்டு நகர்ந்தது. நீளக் கிடந்து நகர்ந்த அந்த உலக்கை ஒரு துள்ளுத் துள்ளிச் சாடி நௌிந்தது. "வ்வோ....மொ....ழொ....ழொ...." வென்று பயந்தடித்துக் குளறினான் சோமு. உலக்கையின் சாட்டத்தைத் தொடர்ந்து கிளம்பிய தவளை ஒன்றின் பரிதாப ஓலம் சில வினாடிகளில் ஓய்ந்து போயிற்று. 'ஏறுமயில்....ஏறிவிளையாடு முகம் ....ஒன்று" என்று 'பய-பக்தி'க் குரலில் முருக ஸ்தோத்திரம் செய்தான் சோமு. அந்த 'உலக்கை' சாலையின் மறு இறக்கத்தில் 'சரசர'வென்ற ஓசையுடன் இறங்கி மறைந்தது. திடீரென அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. 'திடீரென மரத்தின் மீதிருந்து ஒரு 'உலக்கை' சுருண்டு விழுந்து தன் மீது புரண்டு சாடி....' "ஐயோ'...." தலையைத் தொட்டவாறு தொங்கும் ஆல விழுது. நாக்கை நீட்டித் தலையை நக்கும் பாம்புபோல்.... இன்னும் கொஞ்ச நேரத்தில் பாம்பின் படம் மொட்டைத்தலையின் மீது கவிந்து, 'பொத்'தென அடித்து, மேலெல்லாம் புரண்டு, சுற்றி, இறுக்கி.... திடுதிடுவென இருண்ட சாலையின் நடுவே ஓடினான். கால் நரம்புகள் நொந்து வேதனை தந்தன....முழங்காலுக்குக் கீழே ஒரே பதட்டம்...ஓடிவந்த வேகத்தில் முழங்கால் மடங்க, குப்புற விழுந்தான். முன்காலில் அடிபட்டவுடன் கண்கள் இருண்டன.... அவன் தன் நினைவின்றி, பசி மயக்கத்தில், நடந்த களைப்பில் மிருதுவான செம்மண் புழுதியில் அசைவின்றிக் கிடந்தான். அடுக்கடுக்காய்த் திரண்டு வந்த இருள் திரட்சி அவன் மீது கனமாகக் கவிந்தது' ஜல்....ஜல்....ஜல்.....ஜல்..... 'அது என்ன சப்தம்? கைலயங்கிரியில் தாண்டவமாடும் சர்வேச்வரனின் கழலொலி நாதமா?....' 'தூரத்தில், வான்முகட்டில் கேட்கிறதே...' 'ஜல்....ஜல்...' "தா...தா...ஹேய்...." 'ஜல்...ஜல்....ஜல்....' "ஹாவ்....ஹாவ்.....அதார்ரா அவன், நடுரோட்டிலே படுத்துக் கெடக்கிறது?...." என்ற வண்டி ஓட்டுபவனின் குரலைத் தொடர்ந்து, "எறங்கிப் போயிப் பாரேண்டா....நில்லு, நானும் வாரேன்...." என்ற மற்றொரு குரலும் சோமுவின் செவியில் விழத்தான் செய்தன....அனால் அவை எங்கோ சந்தையில் ஒலிக்கும் தூரத்துக் குரல்கள்போல் தோன்றின. வண்டியிலிருந்து இறங்கிய மனிதர், வண்டிக்குக் கீழே புகை மண்டி எரியும் ராந்தல் விளக்கை அவிழ்த்துக் கொண்டு அவனை நெருங்கினார். சோமுவின் மூடிய இமைகளினூடே வௌிச்சத்தின் சாயை படரவே, கனத்து அழுத்திக்கொண்டிருக்கும் இமைகளைத் திறந்தான்....ஔிபட்டுக் கண்கள் கூசின. இமைகள் பிரிந்து பிரிந்து ஒட்டின. அவன் கைகளை ஊன்றி எழுந்து உட்கார்ந்தான். உட்கார்ந்ததும் கண்களைக் கசக்கிக் கொண்டு விம்மி விம்மி அழுதான்.... "அடடே....சந்தையிலே பாத்த பையனில்லே நீ....." சோமு அழுவதை நிறுத்திவிட்டு வௌிச்சத்தில் அவர் முகத்தைப் பார்த்தான். ---ஆமாம்; சந்தையில் நாவற்பழம் தந்த பொக்கை வாய்க் கிழவர்' "ஒனக்கு இவனைத் தெரியுமா, தாத்தா?" என்றான் வண்டி ஓட்டி வந்த வாலிபன். "தெரியாம என்னா? ஒன்ன மாதிரி ஒரு பேரன்' " "நீ யாருடா, பயலே... இங்கே எப்படி வந்தே?....அதுவும் இந்நேரத்திலே...எந்த ஊரு... என்னாடா பையா, எல்லாத்துக்கும் அளுவுறே.... சேச்சே.... ஆம்பிளைப்புள்ளே அளுவறதாவது... எனக்கு வெக்கமா இருக்கு.....சரி, நீ எங்கூட வா....தோ, பக்கத்திலேதான் வூடு இருக்கு; போயிப் பேசிக்கலாம்...வவுத்தெப் பசிக்குதடா, கெழவனுக்கு...உம் வா'...." என்று அருகே இழுத்து அணைத்துக்கொண்டார் கிழவர். இருக்கும் சொந்தத்தை உதறிவிட எண்ணிய சோமுவும், எல்லாரிடமும் சொந்தம் பாராட்டும் கிழவரும் ஒருவரையொருவர் ஒரு கணம் பார்த்துக்கொண்டனர். கிழவர் சிரித்தார். அந்த இரட்டை மாட்டுக் கட்டை வண்டியில் கூடைகளும், வாழையிலைச் சருகுகளும் குப்பைபோல் நிறைந்திருந்தன. உயரமான வண்டியின் சக்கரங்களில் காலை வைத்துத் தாவியேறினார் கிழவர். சோமுவால் ஏற முடியவில்லை; கிழவர் கைகொடுத்தார். கிழவரின் பேரன் வண்டியை ஓட்டினான். மடியிலிருந்து சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டே சோமுவிடம் பேச்சுக் கொடுத்தார் கிழவர்: "பையா....நீ எங்கேருந்து வாரே....எங்கே போறே....கேக்கறத்துக்குச் சொல்லு....." "நா....நா'....வந்து....இமயமலைக்குப் போலாமின்னு...." அவனுக்குத் தொண்டை அடைத்தது. "இமயமலையா?....அது எங்கேல'யிருக்கு?....." "அதான் தாத்தா...நீ கைலாசம்னு சொல்லுவியே...." என்று குறுக்கிட்டான் அவர் பேரன். "அடெ பைத்தியக்காரப் புள்ளே....அந்த மலைக்கி இந்தச் சரீரத்தோட போவ முடியுமா'லே.... காரைக்காலம்மையாரே தலையாலே நடந்தில்லே போனாவ....நாமெல்லாம் செத்தப்புறம்தான் போவமுடியும்...நீ பசலை...இன்னம் எவ்வளவோ அனுபவிக்கக் கெடக்கு...படிச்சி, சம்பாதிச்சு, கலியாணம் காச்சின்னு கட்டிக்கிட்டு, புள்ளெக் குட்டியெல்லாம் பெத்து, என்னெ மாதிரி ஆனப்புறம் இந்தப் புத்தி வந்தா சரிதான்....இப்பவேவா?....இது என்னடா, கிறுக்குத்தனமால்லே இருக்கு....எனக்குக்கூட இல்லே அந்த மாதிரிப் புத்தி வரமாட்டேங்குது..." என்று சொல்லிக்கொண்டிருந்த கிழவர் ஏதோ பழைய நிகழ்ச்சியில் லயித்தவர்போலச் சிரித்துக் கொண்டார். "தாத்தா'....' என்று சோமுவின் குரல் ஒலித்தது. "என்னலே..." என்று கிழவர் அவன் தோள்மீது கைவைத்தார். அவன் விம்மி விம்மி அழுதான். "தாத்தா இனிமே....நா' எங்கேயும் போகமாட்டேன், தாத்தா...வீட்டிலே இருந்துகிட்டே சாமியெல்லாம் கும்பிட்டுக்குவேன் தாத்தா....அம்மா அப்பாகிட்டே சொல்லிக்காம இனிமே எங்கேயும் போகமாட்டேன்... நீங்க மட்டும்....என்னெ எப்படியாச்சும் செதம்பரத்திலே கொண்டுபோய் சேர்த்திடணும்....தாத்தா....நாளைக்கே, நான் வூட்டுக்குப் போயிடணும் ஒங்களெ நா' மறக்கவே மாட்டேன் தாத்தா...." என்று கெஞ்சிக் கெஞ்சி அழுதான் சோமு. கிழவர் சிரித்தார். "என்ன தாத்தா சிரிக்கிறீங்க....என்னெக் கொண்டு போயி விடமாட்டீங்களா?.... செதம்பரத்துக்கு வேண்டாம், புவனகிரியிலே விட்டாகூட போதும். அங்கேருந்து போயிடுவேன்....." சோமுவுக்கு தான் வந்த வழியை...தூரத்தை....நினைக்கும்போது மலைப்பாய் இருந்தது. வந்ததுபோல் திரும்பி நடந்து போய்விடமுடியாது என்று தோன்றிற்று. 'கிளாஸ் டீச்சர் ராதாகிருஷ்ணய்யர் எவ்வளவு அன்பாகப் பேசுவார்.... எவ்வளவு செல்லமாகக் கொஞ்சுவார்....ஒருநாள் கூட 'ஆப்ஸன்ட்' ஆகாதவன் என்று புகழ்ந்து பேசுவாரே.... இரண்டு நாட்கள் வராவிட்டால் வீட்டிலிருந்து போய் அவரைக் கேட்கமாட்டார்களா?.... அவரும் வருத்தப்படுவாரே... ஸார், நா' இனிமே இப்படிச் செய்யவே மாட்டேன்....' '....ஐயோ' வண்டி இன்னும் வடக்கே போய்க்கொண்டிருக்கிறதே' யார் இந்தக் கிழவன்? என்னை கொண்டுவிடவும் மாட்டேன் என்கிறான்...இன்னும் அதிக தூரத்துக்கு இழுத்துக் கொண்டு போகிறானே....' "தம்பி...வீணா மனசைப் போட்டுக் கொளப்பிக்காதே' மூணு மணிக்கு எவனாவது செதம்பரத்துக்கு எலைக்கட்டு ஏத்திக்கிட்டுப் போவான்...அப்போ உன்னையும் எளுப்பி வண்டியிலே ஏத்திவுடறேன்.... நீ போயிடலாம்...ராவிக்கு எங்கவூட்லே சாப்பிட்டுட்டுப் படுத்துக்க... நானும் ஒன் வயசிலே இப்படி ஓடியிருக்கேன்....அப்புறம்தான் தெரியும் அந்த சுகம்'...." என்று சொல்லிவிட்டுக் கிழவர் பழைய நினைவுகளில் லயித்துக் தனக்குள் சிரித்துக்கொண்டார்..... ---அவன் முகத்திலும் வாழ்வின் சுவைபோல் சிரிப்புப் பூத்தது' விடிவுக்கால இருள் மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருந்தது. புவனகிரியின் எல்லையில் 'கடக் கடக்' கென்று இரட்டை மாட்டுக் கட்டை வண்டியொன்று ஏற்றியிருந்த இலைக்கட்டுச் சுமையுடன் நகர்ந்துக்கொண்டிருந்தது. கழுத்து மணி 'சலசல'த்தது; சக்கரத்தின் ஓசை விட்டுவிட்டுக் கிறீச்சிட்டது. இலைக்கட்டுகளின்மேல், குளிருக்குக் கோணிப்பையைப் போர்த்தியவாறு உறக்கமும் விழிப்புமாய் உட்கார்ந்திருந்த சோமுவுக்கு ஊர் நெருங்குவதில் பயமும் மகிழ்ச்சியும் தோன்ற உறக்கம் கலைந்தது. 'சிதம்பரம் 1 மைல்' ' ----என்ற கைக்காட்டி மரத்தைக் கண்டவுடன், "ஐயோ'----" என்று குதூகலிக்கும் குரலில் கூப்பிட்டான் சோமு. வண்டிக்காரன் நுகத்தடியில் கால்களை உந்திக் கொண்டு, மாடுகளின் மூக்கணாங்கயிற்றை வலிந்திழுத்தான்; வண்டி நின்றது. வண்டியிலிருந்து, சக்கரத்தைப் பற்றித் தொத்திக் கீழே இறங்கிய சோமு வண்டிக்காரனின் முன் கைகூப்பி நின்றான். "ஐயா, ஒனக்குக் கோடி நமஸ்காரம்...இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். தாத்தாகிட்ட போயி இதைச் சொல்லு....அவுரு தங்கமான தாத்தா..." சோமுவின் குரல் தழுதழுத்தது....கண்களில் கண்ணீர் மல்கியது. வண்டிக்காரன் வாய்விட்டு, மகிழ்வோடு சிரித்தான்: "தம்பி....வண்டி ஒறவு. வண்டியோடப் போயிடக் கூடாது...நா' வாரா வாரம் சந்தைக்கு வருவேன்....தாத்தாகூட வருவாரு....மாருகட்டுலே அந்த மேக்கால கேட்டு இருக்குல்ல.... அங்கதான்....வந்து பாக்கிறியா?...." "அவசியம் வாரேன்...தாத்தாவுக்கு என் நமஸ்காரத்தைச் சொல்றியா?...நா' போயிட்டு வாரேன்" என்று வார்த்தைகளைச் சொல்லி முடிக்காமல் வைகறை வானத்தை புலர் பொழுதின் வெள்ளிிய வான்வௌியை, இருளிலிருந்து ஔியை நோக்கி ஓடி மறைந்தான் சோமு. தெருக்களின் நடுவே வரும்போது வீடுகளின் முன்னே பெண்கள் சாணம் தௌித்துக் கொண்டிருந்தனர். இடையில் ஒரு முழத் துண்டு மட்டும் தரித்த சோமு, குளிருக்கு அடக்கமாய், கைகளை மார்பின் குற்க்காகத் தோளில் சேர்த்துக் கட்டியவாறு வேக வேகமாய் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான். அவன் வீட்டருகே நெருங்கும்போது, பங்கஜத்தம்மாள் வாசலில் கோலமிட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள். வாசலில் நின்று, கோலத்தை ஒருமுறை கவனித்துவிட்டு...உள்ளே திரும்பும்போது சோமு ஓட்டமாய் ஓடிவந்து வாசலில் நின்று "அம்மா' " என்று விக்கும் குரலில் கூப்பிட்டான். அந்தக் குரல் அவள் செவியில் அரைகுறையாகவே விழுந்தது..... "போ போ....விடிஞ்சுதா--அதுக்குள்ளே.....?" என்று திரும்பினாள்' பிரஷ்டம் செய்யப்பட்ட பாபியைப்போல் வாசலில் நின்று, "அம்மா.... நாம்மா...சோமு" என்று கூறிய சோமு 'ஓ'வென்று அழுதுவிட்டான். "அடப்பாவி....இதென்னடா கோலம்'...." என்று கையிலிருந்த கோலப் பொடி டப்பாவைப் போட்டு விட்டு ஓடிவந்து பிள்ளையை வாரியணைத்துக் கொண்டாள் பங்கஜம்' "நா'....நா'.....பண்டாரமா போயிடலாம்னு...நெனைச்சி...நெனைச்சி...போனேம்மா... போனா..போனா வழியிலே ஒன் ஞாபகம் வந்திடுச்சிம்மா...ஆ...ஆ..." என்று குரலெடுத்து அழுதவாறு தாயை இறுக அணைத்துக்கொண்டு விக்கினான் சோமு. "பைத்தியக்காரப் புள்ளே.... என்னெ விட்டுட்டு நீ போலாமா?... 'தாயிற் சிறந்த கோயிலுமில்லே'ன்னு நீ படிச்சதில்லையா?....வா... உள்ளே வாடா...." என்று ஒரு கையில் அவனை அணைத்துக் கொண்டு, மறு கையால் கண்களைத் துடைத்துக் கொண்டான் பங்கஜம். உள்ளே----போகும்போதே, "பாத்தீங்களா, உங்க பிள்ளையை....அத்தை வீட்டுக்குப் போயிருப்பான்னீங்களே ----சந்நியாசம் போயிட்டுத் திரும்பி இருக்கு...." என்று கண் கலங்க சிரித்துக்கொண்டே கூவினாள் அவன் தாய். "ஏண்டா, ஒனக்கு நல்ல எளுத்து நடுவே இருக்கையிலே கோண எளுத்து குறுக்கே போச்சி?.... அட, பரதேசிப்பய புள்ளே.... அளகா இருந்த கிராப்பை எடுத்துப்பிட்டு....சரி சரி, அந்த மட்டிலே வந்து சேந்தியே... கண்ணும் மூஞ்சியும் பார்க்க சகிக்கலே....போ.... போயி, பல்லை வௌக்கி மூஞ்சி மொகத்தைக் களுவிப்பிட்டுச் சாப்பிடு....அடியே, வட்டிலெ எடுத்துவச்சி பழையதைப் போடு....இந்தா, நானும் வந்துட்டேன்" என்று சாமி கும்பிடக் கூடத்துக்குச் சென்றார் சதாசிவம் பிள்ளை. அண்ணனைக் கண்டதும், அப்பொழுதுதான் படுக்கையிலிருந்து எழுந்த இரண்டு தம்பிகளும், ராஜியும் அவனிடம் ஓடிவந்து அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, "எங்கேண்ணா போயிட்டே நேத்தெல்லாம்?...." என்று விசாரித்தனர். ராஜி அவன் மொட்டைத் தலையைப் பார்த்து வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள். அவனுக்கு வெட்கமாயும், வருத்தமாயும் இருந்தது' "இங்கே பாரும்மா, ராஜியை...என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கறா" என்று கத்திக்கொண்டே அவனைப் பிடிப்பதற்கு ஓடினான்..... கூடத்தில் சுவாமி படத்தருகே நின்று, நெற்றியில் திருநீற்றை அள்ளிப் பூசிக்கொண்டு. கண்மூடி கரம்கூப்பி, "ஆங்காரம் தனை அடக்கி ஆணவத்தைச் சுட்டெரித்துத் தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்' " என்று உருகிக்கொண்டிருந்த சதாசிவம் பிள்ளையின் கால்களை ஓடிச் சென்று கட்டிக்கொண்டு, சோமுவை எட்டிப் பார்த்துப் பல்லைக் காட்டிப் பரிகாசித்தாள், ராஜி. குழந்தையை ஒரு கையால் அணைத்துப் பிடித்துக் கொண்டு, ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் பிள்ளை. அதற்குள் அடுக்களையிலிருந்து தாயின் குரல் கேட்கவே சோமு சாப்பிடப் போனான். வட்டிலில் பழையதைப் பிழிந்துவைத்து, முதல்நாள் மீன் குழம்புச் சட்டையை அகப்பையால் துழவிக்கொண்டே, 'என்ன ஊத்தவா?' எனப்துபோல் சோமுவைப் பார்த்தாள் பங்கஜம். ----- #8. பூ உதிரும் பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்-- நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலக மகா யுத்தங்களிலும் நேச தேச ராணுவத்தினர் புரிந்த வீரதீரச் சாகசங்கள் பற்றியதாகத்தான் இருக்கும். அவரது வலது புருவத்துக்கு மேல் இருக்கும் ஒரு நீண்ட தழும்பு; முன் பற்களில் ஒன்றுக்கு தங்கமுலாம் பூசிக்கொண்டது; அதற்குக் காரணமாகயிருந்த ஒரு சீனாக்கார நண்பன் தன் நினைவாய் அவருக்குத் தந்த -- இப்பொழுதும் கையிலிருக்கும் ஒரு பழைய மாடல் கைக் கெடியாரம்; இடுப்பில் சாவிக் கொத்துடன் தொங்கும் நீண்ட பேனாக்கத்தி; அதன் உதவியால் இரண்டு எதிரிகளைச் சாய்த்தது.... இவ்விதம் அவரோடு சம்பந்தப்பட்ட சகலமும் யுத்தத்தின் முத்திரை பெற்று விட்ட பின் அவரால் வேறு எவ்விதம் பேச இயலும்? அரும்பு மீசைப் பிராயத்தில் முதல் மகா யுத்தத்திலும், கரு கருவென முறுக்கு மீசை வளர்ந்த நடுத்தர வயதில் இரண்டாவது மகா யுத்தத்திலும் சமராடி வந்தவர் அவர். சுதந்திரமும் அமைதியும் நிலவும் ஒரு நாட்டின் பிரஜையாய் நரைத்த மீசையுடன் தளர்ந்த உடலுடன் இப்போது வாழ்ந்த போதிலும், அவரது பட்டாளத்துக்கார மனத்துக்கு அடிக்கடி பழைய நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்திக் கொள்வதில் ஒரு போதை இருந்தது. அதில் ஒரு புத்துணர்ச்சியும் பிறந்தது. அவர், தான் சந்திக்க நேருகின்ற ஒவ்வொரு வாலிபனிடமும் முதல் தடவையாகவும், பின்னால் சந்திக்கும் சமயங்களில் அடிக்கடியும் ஒரு விஷயத்தை வற்புறுத்துவார்: "இந்த தேசத்திலே பொறந்த ஒவ்வொரு வாலிபப் புள்ளையும், இருபது வயசுக்கு மேலே ஒரு பத்து வருஷம் ---கொறஞ்சது அஞ்சு வருஷமாவது கட்டாயமா பட்டாளத்து அநுபவம் பெத்து வரணும்.....ஆமா ....மாட்டேன்னா---- சட்டம் போடணும்'......" தன் மகனை ராணுவ வீரனாக்க வேண்டும் என்ற அவரது ஆசை பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், அவரது பேச்சையும் தீர்மானத்தையும் கண்டு பயந்த அவர் மனைவி மரகதம் உறவினர்கள் மூலம் கிழவரின் முடிவை மாற்ற முயன்றாள்..... "எதுக்குங்க பட்டாளமும்....கிட்டாளமும்? பையன் பத்து படிச்சி பாஸ் பண்ணி இருக்கு. ஏதாவது கெவுருமெண்டு உத்தியோகம் ஒண்ணு பாத்து வெச்சி, கலியாணம் காட்சி நடத்தி பேரன் பேத்தியைக் கொஞ்சிக்கிட்டிருக்காம--- பையனைப் பட்டாளத்துக்கு அனுப்பறது சரியில்லீங்க அவ்வளவுதான்......" என்று கூறிய அந்த உறவினர்களையும், அவர்கள் அவ்விதம் வந்து யோசனை கூறக் காரணமாயிருந்த மனைவியையும் பார்த்து மீசையை முறுக்கிக் கொண்டு லேசாய்ச் சிரித்தார் பெரியசாமி. பிறகு அவர்கள் சொல்வதை சற்று ஆழ்ந்து சிந்தித்தார். அதில் பொருளிருப்பதாகத் தோன்றவில்லை அவருக்கு. குறுகிய பாசம் என்பதைத் தவிர வேறு காரணமில்லை என்றே தோன்றியது. அவர்களுக்கு அவர் சொன்னார்: "உங்களுக்குத் தெரியாது....ம்.... நான் வாழ்நாள் பூராவும் வௌபுள்ளிளைக்காரங்ககிட்டே அடிமைச் சிப்பாயாவே காலங் கழிச்சவன்.... அப்பல்லாம் ஒரு சாதாரண வௌபுள்ளிளைக்கார சோல்ஜருக்கு இருந்த மதிப்புக்கூட ஒரு கறுப்பு மேஜருக்கு கிடையாது, ஒரு சுதந்திர நாட்டு ராணுவத்திலே ஒரு சாதாரண சிப்பாயாக இருக்க மாட்டோமான்னு ஏங்கினது எனக்கில்லே தெரியும்? இப்ப எம்மகனுக்கு அந்தச் சான்ஸ் கெடைக்கிறதுன்னா அதெ விடலாமா? பட்டாளத்துக்குப் போனா, சாகறது தான் தலை விதின்னு நெனச்சிக்காதீங்க. பட்டாளத்துக்குப் போகாதவங்களுக்கும் சாவு உண்டு... வாழ்கையிலே ஒரு பொறுப்பு' அநுபவம், தேசம்ங்கிற உணர்வு...ம்...ஒரு 'டிஸிப்ளின்' எல்லாம் உண்டாகும் பட்டாளத்திலே..இதெல்லாமில்லாம சும்மா வெந்ததைத் தின்னுட்டு வேளை வந்தா சாகறதிலே என்னா பிரயோசனம்?... சொல்லுங்க" என்று அவர் கேட்கும் போது தந்தையின் அருகே நின்றிருந்த சோமநாதன், தந்தையின் இதயத்தையும் எண்ணத்தையும் சரியாகவும் முழுமையாகவும் புரிந்துகொண்டான். அவர் உடலில் ஒரு துடிப்பும் அவர் கண்களில் 'தனக்கு வயதில்லையே' என்றொரு ஏக்கமும் பிறந்ததை அவன் மட்டுமே கண்டான். "அப்படிச் செத்துப் போனத்தான் என்னப்பா? பட்டாளத்துக்குப் போறவன் அரசாங்கத்துப் பணத்திலே உடம்பை வளர்த்துக்கிட்டு, ஊருக்கு லீவில் வந்து உடுப்பைக் காமிச்சுப்பிட்டு போனாப் போதுமா? சண்டைன்னு வந்தா சாகவும் தான் தயாராப் போகணும்" என்று ஒரு வீரனின் மகனுக்குரிய துணிச்சலுடன் சோமநாதன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, கிழவரின் சுருட்டுக் கறையேறிய கரிய உதடுகள் உணர்ச்சி மிகுந்து துடித்தன. "சபாஷ்' "என்று பெருமிதத்தோடு அவனைப் பாராட்டுகையில் அவர் கண்களில் அதீதமானதோர் ஔி சுடர்விட்டது. இடது கை ஆள் காட்டி விரலால் முறுக்கேறி உயர்த்தியிருந்த மீசையின் வளைவை லேசாக ஒதுக்கிவிட்டுக் கொண்டே மகனின் தோள் மீது கை வைத்து, அவனுக்கு நேரே நின்று மகனின் கண்களைப் பார்த்துக் கேட்டார் பெரியசாமி. "டேய் தம்பி... இவங்களுக்கு ஒண்ணும் புரியாது; நீ சொல்லு பார்ப்போம்; இந்தியா மேலே சண்டைக்கி வர்ரவன் இனிமே இந்த உலகத்திலே எவனாவது இருக்கானா?...ம் தள்ளு' பட்டாளத்துக்குப் போறதுன்னா, காக்கி உடுப்பை மாட்டிக்கினவுடனே கையிலே துப்பாக்கியைத் தூக்கிக்கிட்டு கண்ட பக்கமெல்லாம் 'படபட'ன்னு சுட்டுக்கினு நிக்கறதில்லே.... பட்டாளத்து வாழ்க்கையைச் சரியாப் பயன்படுத்திக்கிட்டா அறிவும் அனுபவமும் வளரும். எழுதப் படிக்கத் தெரியாதவனாத்தான் நான் மிலிட்டரிக்குப் போனேன். நானே இவ்வளவு கத்துக்கிட்டு வளர்ந்திருக்கேன்னா யாரு காரணம்? பட்டாளம் தான். இல்லாட்டி 'எங்கம்மாவை விட்டுப்பிட்டு எப்பிடிப் போவேன்'னு ஊரிலேயே குந்திக்கினு இருந்தா, வெறவு பொறுக்கிக்கினு மாடுமேய்க்கத்தான் போயிருப்பேன். நீ என்னை மாதிரி தற்குறியில்லை; படிச்சிருக்கே....போனியானா ரொம்ப விசயம் கத்துக்கலாம்; ஆபீசராகூட ஆகலாம். இங்கேயே இருந்தியானா சினிமா பார்க்கலாம்; சீட்டி அடிக்கலாம்; அதான் உங்கம்மாவுக்குத் திருப்தியாயிருக்கும்.... ஊர்க்காரனுவ எப்பவும் ஏதாவது சொல்லிக்கிட்டு இருப்பானுவ... துப்பாக்கின்னா எது போலீஸஉக்காரனுக்கு மட்டும்தான் சொந்தம்னு நெனைச்சிக்கிட்டிருக்காங்க....ம், இந்த நாட்டிலே பொறந்த ஒவ்வொருத்தனும் துப்பாக்கி பிடிக்கக் கத்துக்க வேணாமா? அப்பத்தான் இன்னக்கி இல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாளு தேசத்துக்கு ஒரு ஆபத்துன்னா நாடே துப்பாக்கி ஏந்தி நிக்கும்....." ----தந்தை தன் சொல் வலியால், தாயின் ஆசீர்வாதத்துடனும் பத்து வருஷங்களுக்கு முன் பட்டாளத்தில் சேர்ந்தான் சோமநாதன். முதன்முறையாக, பட்டாளத்தில் சேர்ந்த அடுத்த ஆண்டில் அவன் லீவில் ஊருக்கு வந்திருந்தபோது... ஒரு வருஷத்தில்.....அவன் அதிகமாய் வளர்ந்திருப்பது கண்டு அவன் தாய் பூரித்துப் போனாள். அவனிடம் வெறும் உடல் வளர்ச்சி மட்டுமல்லாமல் உள வளர்ச்சியும் அறிவு விசாலமும் மிகுந்திருக்கிறதா என்பதையே சிரத்தையுடன் ஆழ்ந்து பரிசீலித்தார் பெரியசாமி. சதா நேரமும் அவனோடு பேசிக்கொண்டிருப்பதிலும் தன் அனுபவங்களைச் சொல்வதை அவன் எவ்விதம் கிரகித்து கொள்கிறான் என்று கவனிப்பதிலும் அவனை அளந்தார் அவர். லீவில் வீட்டுக்கு வந்திருக்கும்போதுகூட, காலையில் ஐந்தரை மணிக்கு மேல் அவனால் படுக்கையில் படுத்திருக்க முடியாது. எங்கோ நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் தனது ராணுவ முகாமில் முழங்குகின்ற காலை நேர எக்காளத்தின் ஓசையைக் கேட்டவன் போன்று, அந்தப் பழக்கத்தால்---- படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து விடுவான் சோமநாதன். பின்னர், காலை நேர உலாப் போய்விட்டு, தேகப்பயிற்சி செய்து முடித்தபின் என்ன செய்வதென்று புரியாமல் நாள் முழுதும் பேப்பர் படித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இரண்டாவது முறை அவன் லீவில் வந்தபோது அதற்கொரு பரிகாரம் காண்பதுபோல் தோட்ட வேலை செய்ய ஆரம்பித்தான். அதன் விளைவாய் அவர்கள் வீட்டை சுற்றிலும் கட்டாந்தரையாகக் கிடந்த 'தோட்டம்' சண்பகமும், ரோஜாவும், மல்லிகையும் சொரியும் நந்தவனமாக மாறி அவனது நினைவாய் இன்றும் மலர்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறது..... இந்த பத்து வருஷ காலமாய் மகன் நினைவு வரும் போதெல்லாம் பெரியசாமிப் பிள்ளை தோட்டத்தில் போய் நின்று, அந்த மலர்ச் செடிகளை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருப்பார். மலர்ந்த புஷ்பங்களைக் கண்டு அவர் மனம் மகிழ்ந்துகொண்டிருக்கும். அதே போழ்தில் அங்கு உதிர்ந்த பூக்களைக் கண்டு பெருமூச்செறிந்து கொண்டிருப்பாள் அவர் மனைவி. "ம்...சும்மாக் கெடந்த தோட்டமெல்லாம் செம்பகமும் ரோஜாவும் வெச்சிப் பூ மண்டிப் போவுது...ஊரிலே இருக்கிற பொண்ணுங்க எல்லாம் வந்து அள்ளிக்கிட்டுப் போவுதுங்க... போறதுங்க சும்மா போவுதா? 'பூ இருக்கிற வீட்டிலே பொண்ணு இல்லியான்னு' பரியாசம் பண்றா ஒரு குட்டி..." "அதாரு அந்த வாயாடி?... பொண்ணு இல்லே, நீதான் வந்து இருவேன்னு சொல்றதுதானே?..." என்று நரைத்த மீசையில் வழக்கம்போல் கை போட்டார் பெரியசாமி. "அப்பிடித்தான் நானும் நெனச்சிக்கிட்டேன். அதை அவகிட்டே எதுக்குச் சொல்வானேன்... நேத்து கோயில்லே அவ ஆயியைப் பார்த்துச் சொன்னேன்... அவளுக்கு வாயெல்லாம் பல்லாப் போச்சு... நம்ப பயலுக்குப் பொண்ணு கொடுக்கக் கசக்குமோ, பின்னே?..." என்று மலர்களின் நடுவே மலர்ந்த முகத்தோடு, பல இரவுகளாய்த் தூங்காமல் கட்டிய மனக் கனவுகளைக் கணவனிடம் உதிர்க்கும் மனைவியின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டார் பெரியசாமி. "சரி, சரி' இந்தத் தடவை நம்ப வீட்டிலே கலியாணம் தான்... நீ போயி மசிக்கூடும் காகிதமும் எடுத்து வையி... பையனுக்குக் கடுதாசி எழுதணும்" என்று உற்சாகமாய்க் கூவினார் பிள்ளை. வாழ்க்கையில் இளம்பிராயத்தில் பெரியசாமிப் பிள்ளையின் மனைவியாகிப் பல வருஷங்கள் அவரைப் பிரிந்து ஒவ்வொரு நாளும் தாலிச் சரட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டே காலம் கழித்து, ஒருவாறு அந்தக் கவலை தீர்ந்து புருஷன் திரும்பிவந்த பின் தனக்கு ஒரு குழந்தை பிறக்காதா என்று பலகாலம் ஏங்கி, பின்னொரு நாள் சோமநாதனைப் பெற்றபோது என்ன பேருவகை கொண்டாளோ, அந்த அளவு தாங்கொணா இன்ப உணர்ச்சியினால் மெய் சிலிர்த்து ஆனந்தத்தில் கண்களிரண்டும் நீர்க் குளமாக உள்ளே சென்றாள் மரகதம்... வழக்கமாய், தந்தையின் கடிதம் கண்ட ஓரிரு வாரங்களுக்காகவே ஊருக்கு வந்துவிடும் சோமநாதன் அந்தத் தடவை இரண்டு மாதங்களுக்குப் பிறகே வர முடிந்தது. ஆம்; போன தடவை அவன் வந்தபோது, கோவாவில் போரிட்டு வெற்றி பெற்ற-யுத்த அனுபவம் பெற்ற--வீரனாய்த் திரும்பி இருந்தான் அப்பனும் மகனும் பேசிக் கொண்டிருக்கையில் இடையில் வந்து கலந்துகொள்ளத் தைரியம் இல்லாத மரகதம் தூரத்திலோ, அறைவாயிலிலோ நின்று அவர்களைக் கவனித்துக் கொண்டிருப்பாள். மகனது வார்த்தைகளைச் செவிகள் கிரகித்தபோதிலும் அவரது பார்வை மரகதம் நிற்கும் திசைக்கு ஓடி அவள் கண்களையும் அடிக்கடி சந்திக்கும்...அந்த ஒவ்வொரு நிமிஷமும், பேசிக் கொண்டிருக்கும் மகனின் வார்த்தைகள் காதில் விழாமல் ஒலியிழந்து போகும்; பேசாது தூரத்தே நிற்கும் மனைவியின் மௌன வார்த்தைகள்--அவளது இதயத் துடிப்பு-- அவர் செவியையும் இதயத்தையும் வந்து மோதும்; "தோட்டம் பூரா செம்பகமும் ரோசாவும் வெச்சுப் பூ மண்டிப் போவுது..." --அவன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த நேரம்போக, தான் பேச நேர்ந்தபோதெல்லாம் மகனின் கலியாண விஷயமாகவே பேசினார் பெரியசாமிப் பிள்ளை. சோமநாதன் தனக்கொரு கலியாணம் என்பது பற்றி அதுவரை யோசித்ததில்லை. ஆனால் தகப்பனார் பேசுகிற தோரணையைப் பார்த்தால் தனக்கு யோசிக்க அவகாசமே தரமாட்டார் போலிருந்தது. இதில் யோசிக்கத்தான் அப்படி என்ன இருக்கிறது? சமாதானச் சூழ்நிலையில் வாழும் ஒரு தேசத்தின் ராணுவ உத்தியோகஸ்தன் கல்யாணம் செய்து கொள்ளலாம்... அவ்விதம் திருமணம் புரிந்துகொண்டு எத்தனையோ பேர் குடும்பத்தோடு அங்கேயே வந்து வாழ்கிறார்களே...என்பதையெல்லாம் நினைவு கூர்ந்து 'சரி' என்று ஒப்புக்கொண்டான். --அந்தத் தடவை லீவிலேயே அவனுக்கும் அவளுக்கும் கலியாணம் நடந்தது. பூப்பறிக்க வந்த கௌரி பூந்தோட்டத்தின் சொந்தக் காரியானாள். ஒரு பலனும் கருதாமல் சோமநாதன் தன் கையால் நட்டுத் தண்ணீர் பாய்ச்சியதற்குப் பிரதியாக மலர்களை மட்டுமில்லாமல் அவனுக்கொரு மனைவியையும் கொண்டுவரத் தூதாகியிருக்கும் மகிழ்ச்சியில் சண்பகமும் ரோஜாவும் பூத்துக் குலுங்கிச் சிரித்தன. அந்த மலர்ச் செடிகளின் சிரிப்பால் ஆகர்ஷிக்கப்பட்டோ, தனக்கும் அவனுக்கும் உறவு விளையக் காரணம் இந்தச் செடிகள்தான் என்ற நினைப்பாலோ கௌரி பொழுதையெல்லாம் தோட்டத்திலேயே கழித்தாள். கல்யாணத்திற்குப் பிறகு சரியாக இரண்டு மாதங்களையும் சோமநாதன் அவளுடனேயே--ஒரு மணி நேரம் கூடப் பிரிந்திராமல்--கழித்தான். எத்தனை காலைகள் எத்தனை மாலைகள், எத்தனை இரவுகள் இவர்கள் இருவரும் அங்கேயே கழித்து, என்னென்ன பேசி, என்னென்ன கனவுகளை வளர்த்தார்கள் என்று அந்தச் சண்பகத்துக்குத் தெரியும்; அந்த ரோஜாவும் மல்லிகையும் அறியும். கடைசியில் ஒரு நாள்...... இரண்டு மாதங்கள் அவள் உடலோடும், இதயத்தோடும் இணைந்திருந்து, கனவோடும் கற்பனையோடும் கலந்து உடலால் மட்டும் விலகும்போது 'அடுத்த தடவை லீவுக்கு வந்து திரும்பும்போது உன்னை என்னோட அழைச்சுக்கிட்டுப் போவேன்' என்று வாக்குறுதி தந்து அவன் அவளைப் பிரிந்து சென்றான். கௌரியை பிரிந்து சென்ற பதினைந்தாம் நாள் அவளுக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அவனிடமிருந்து மறு கடிதம் வரும்வரை, தனது தனியறையின் ஏகாந்தத்தில்.... அவனே வந்து எட்டிப் பார்ப்பது போல், ஜன்னலருகே வளைந்திருக்கும் சண்பக மரக் கிளையில் பூத்துச் சிரிக்கும் மலர்களுக்கு அந்தக் கடிதத்தில் இருந்த ரகசியங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தாள் கௌரி. சண்பகத்துக்குப் பக்கத்தில், மலர்ச்சியின் ரகசியத்தை மறைத்துக்கொண்டு,....முற்றாக மறைக்க முடியாமல்.... தாங்கொணாத் தவிப்புடன், கனத்துக் கிடக்கும் மொட்டுக்களைத் தாங்கி நிற்கும் ரோஜாவைப் பார்த்து அவள் சிரிக்கும் போது 'உன் கதை இன்னும் ஒரு மாதத்தில் தெரியும்? என்று 'பளீரென'ச் சிரித்துச் சிதறிய முல்லைக் கொடியிலிருந்து பூக்கள் உதிர்ந்த ரகசியம் அவளுக்கு அப்போது புரியவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பின், சண்பகத்தையும் ரோஜாவையும் மடி கனக்கக் கட்டிக்கொண்டிருக்கும் உணர்வுடன் மனமும் உடலும் கூசிச் சிலிர்க்க அந்த விஷயத்தை அவனுக்கு அவள் எழுதும்போது.....அவனுக்கும் அவளுக்கும் விளைந்த உறவுக்குப் பின் சில இரவுகளே சேர்ந்து கிடந்து சிலிர்த்த அந்தப் படுக்கையின் தலைமாட்டில், சுவரில் தொங்கும் சோமுவின் படம் அவளைப் பார்த்துச் சிரிக்கும்போது அவன் படத்தைக்கூட பார்க்கமுடியாமல் அவள் முகத்தை மூடிக்கொண்டாள். முகத்தை மூடிய கரங்களையும் மீறி வழிந்த நாணம் அவள் காதோரத்தில் சிவந்து விளிம்பு கட்டி நின்றது. அவள் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டு, அந்தப் படத்தைக் கையிலெடுத்தாள். அருகே இருத்திப் பார்க்கப் பார்க்க விகசிப்பதுபோல் வடிவாயமைந்த உதட்டில் ஊர்ந்த அவனது மாயப் புன்னகை, அவள் இதயத்தை ஊடுருவியது. திடீரென்று அவளுக்கு உடல் சிலிர்த்தது. நெஞ்சில் நிலைத்த அவன் நினைவு வயிற்றில் புரண்டது போலிருந்தது..... "நீங்க எப்ப வருவீங்க?" என்று அந்தப் படத்தை முகத்தோடு அணைத்துக்கொண்டு அமைதியாய், சப்தமில்லாமல் தொண்டை அடைத்துக் கரகரக்க அவள் கேட்டபோது, தன் விழிகளில் சுரந்த கண்ணீரை அவளால் அடக்க முடியவில்லை. "எப்ப வருவீங்க....எப்ப வருவீங்க?" என்று துடித்துக் கொண்டிருந்த அவள் இதயத்திற்கு அவனிடமிருந்து பதில் வந்தது. இதயம் என்று ஒன்றிருந்தால், துடிப்பு என்ற ஒன்றும் உண்டு. அந்த இதயம் அவனுக்கும் இருந்ததால் அவன் கடிதமே அவனது இதயமாய் அவள் கரத்தில் விரிந்து துடித்தது..... "........ஏழாம் மாதம் பூச்சூட்டலுக்கு வருவேன். மூன்று மாதம் லீவு கிடைக்கும். உன்னோடயே இருந்து குழந்தை பிறந்த பிறகு, என் மகனின் பூமாதிரி இருக்கிற பாதத்திலே முத்தமிடணும்னு என் உதடுகள் துடிக்கிற துடிப்பு....' என்று தன் கணவன் தனக்கெழுதிய கடிதத்தைப் பெரியசாமிப் பிள்ளைக்கும் மரகதத்துக்கும் படித்துக் காட்டிக்கொண்டிருந்த கௌரி "அவ்வளவுதான் முக்கிய விஷயம்" என்று கடிதத்தை மடித்துக்கொண்டு தன் அறைக்குள் ஓடி விட்டாள். அறைக்கு வந்ததும் அந்தக் கடிதத்தை நெஞ்சோடு அணைத்தவாறு கட்டிலில் கிடந்தும் இருந்தும் அந்தக் கடிதத்தின் வாசகங்களை அவனை அனுபவித்ததே போன்று ரகசியமாகவும் தன்னிச்சையாகவும் அனுபவித்து மகிழ்ந்தாள் கௌரி. அதில் தான் அவன் என்ன வெல்லாம் எழுதியிருந்தான்' புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்கள், உணர்ந்து கொள்ளத்தக்க அந்தரங்கமாய் அக்கடிதத்தில் பதிந்திருந்தன. அந்தக் கடிதத்தை எத்தனையோ முறை படித்து, இன்னும் எத்தனையோ முறை படிக்கப்போகும் கௌரி இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறாள்....... '.....மகன்தான் என்று அவ்வளவு நிச்சயமாக எப்படித் தெரியும் என்று என்னைக் கேட்கிறாயா?.....எனக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும்? நீ கர்ப்பமுற்றிருப்பதாக எழுதியிருந்ததை படித்த பின் , நேற்றுத்தான் நான் வேடிக்கையான கனவு ஒன்று கண்டேன்---அந்தக் கனவில் திடீரென்று எங்கள் 'கேம்ப்'பில் என்னைக் காணோம். எல்லோரும் என்னைத் தேடுகிறார்கள்.....எனக்கே தெரியவில்லை நான் எங்கிருக்கிறேன் என்று உடம்புக்குச் சுகமான வெதுவெதுப்பும், உள்ளத்திற்கு இதமான குளிர்ச்சியும் உள்ள ஓரிடத்தில் மிருதுவான பூக்கள் குவிந்திருக்க அதன் மத்தியில் முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் என்னைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் தேடுவதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. "இதோ இங்கே இருக்கிறேன்.....தெரியலையா" என்று கத்தினாலும் அவர்களுக்கு என் குரல் கேட்கவில்லை. அப்போ, என் முகத்தின் மேலே..... இல்லை----என்னைச் சுற்றிலும்தான் கண்ணாடிக் கூட்டால் மூடியிருப்பதுபோல் இருக்கே---அதன்மேலே அழகான ஒரு கை பதிந்து தெரியுது..... எனக்குத் தெரிந்த அழகான கை; தங்க வளையல்களும், 'அன்னிக்கி ராத்திரி' நான் போட்ட மோதிரமும் அணிந்த விரலோடு கூடிய உன் கை தெரியுது---இவ்வளவுதான் அந்தக் கனவிலே எனக்கு நினைவு இருக்கு. என் கூட ஒரு சர்தார் இருக்காரு; வயசானவரு; அவருகிட்டே இந்தக் கனவை சொன்னேன்....... 'ஒனக்கு ஆம்பிளைக் குழந்தை பொறக்கப் போகுது'ன்னு சொல்லி என்னைத் தூக்கிக்கிட்டுக் குதிச்சாரு அவர்....ஆமா, கௌரி....கௌரி.....ரொம்ப ஆச்சரியமா இல்லே? நமக்கு ஒரு குழந்தை பொறக்கப் போவுது.....' இப்பவே உன்கிட்டே ஓடி வரணும்னு மனசு துடிக்குது, கௌரி. வந்து....வந்து---இப்ப நான் எழுதறதை 'அசிங்கம்'னு நெனச்சிக்காதே.... ஓர் உயிரைத் தரப் போற, ஒரு பிறவியைத் தாங்கி இருக்கிற தாய்மைக் கோயிலான உன் அழகான வயித்தைத் தடவிப் பாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு..... உள்ளே குழந்தை ஓடுமாமே....அதுக்கு நூறு முத்தம் குடுக்கணும்....இது தாய்மைக்கு செய்கிற மரியாதைன்னு நான் நினைக்கிறேன்....சரி, சரி ஏழாம் மாதம் தான் நான் வரப் போறேனே; தாய்மைக் குரிய காணிக்கைகளைத் தராமலா விடுவேன்....?' --ஒவ்வொரு வரியும் இரண்டு உடல்களை, இரண்டு ஹிருதயங்களைச் சிலிர்க்க வைக்கும் சக்தி-- சிலிர்த்ததின் விளைவு அல்லவா? ஏழாம் மாதம் வந்துவிட்டது. பெரியசாமிப் பிள்ளை எதிர்பார்த்ததுபோல் அந்தக் கடிதம் வந்தது. '...எல்லையில் ஏற்பட்டிருக்கும் யுத்தமும் தேசத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியும் பத்திரிகை மூலம் அறிந்திருப்பீர்கள். போர் வீரனுக்குரிய கடமையை ஆற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் நான் வரமுடியாது. வர விரும்புவது சரியுமில்லை. அதனாலென்ன? நம் வீட்டில் தான் கொள்ளை கொள்ளைப் பூ இருக்கின்றது. பூ முடித்துக் கொள்ளப் பெண்ணும் இருக்கிறாள். மகிழ்ச்சியுடன் சுபகாரியங்களைச் சிறப்பாகச் செய்யவும். நான் வராததற்காக வருந்தாதீர்கள். அங்கு நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு மகிழ்ச்சியுடனிருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு இங்கு நான் உற்சாகமாக இருப்பேன் என்று எண்ணிக் குதூகலமாய் இருக்கவும்...' தந்தைக்கு எழுதிய கடிதத்தோடு கூட மனைவிக்குத் தனியாய் இன்னொரு கடிதம் எழுதியிருந்தான் அவன். அந்தக் கடிதம் பொய்மைகலந்த குதூகலத்தோடும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் விதத்தில் உற்சாகம் மிகுந்திருப்பது போல் காட்டிக் கொள்ளும் வகையிலும் எழுதப் பட்டிருந்ததால்--சிற்சில இடங்களில் 'விரசம்' போலும் வெறியுற்றது போலும் அமைந்திருந்தது. சில மாத பந்தத்திலேயே அவனை நன்கு புரிந்து கொண்டவளாகையால், எந்தச் சூழ்நிலையில், எவ்வித மனோ நிலையில் இக்கடிதம் எழுதப்பட்டிருக்கும் என்பதை கௌரி உணர்ந்தாள். இதன் மூலம் அவள் மனம் ஆறுதலடையும் என்று நம்பி அவனால் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு--அவனது சிறுபிள்ளைத் தனமான வார்த்தைப் பிரயோகங்களுக்காகச் சிரிக்க முயன்று, அதில் மறைந்திருக்கும் துயரத்தின் கனத்தைத் தாங்க மாட்டாதவளாய்--மனம் பொருமி அழுதாள் கௌரி.. சில நாட்களுக்குப் பின் அவனுடைய வேண்டுகோளின்படி அவர்கள் குதூகலமாகவே இருக்க முயன்று, அப்படி இருந்தும் வந்தார்கள். பெரியசாமிப் பிள்ளை 'யுத்தம்' என்று தெரிவித்த அன்றிலிருந்தே மிகவும் துடிப்புடன் காணப்பட்டார். பக்கத்திலிருப்போரிடம் காலையிலும் மாலையிலும் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டு ஒரு கையால் மீசையை முறுக்கியவாறே செய்தி விளக்கம் கூற ஆரம்பித்து, இரண்டாவது அல்லது முதல் மகா யுத்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கதையாகச் சொல்லத்தான் அவரால் முடிந்தது. அவர் கொஞ்சங்கூடக் கவலை இல்லாமல் இப்படி இருப்பது கண்டு முணுமுணுத்துக் கொண்ட மரகதத்தின் குரல் அவர் காதில் விழுந்தது. அவர் மனைவியைப்பார்த்துச் சிரித்தார்; "போடி...போ' போர் வீரனின் சங்கீதமே பீரங்கி முழக்கம் தான்' உனக்கெங்கே அது தெரியும்...உன்வசமே தொடை நடுங்கிக் கும்பல், உன் பையன் வருவான் சிங்கம் மாதிரி, அவனைக் கேளு, சொல்லுவான்..."என்று அவர் சொன்னதைக் கேட்டு சிரித்தவாறு அங்கு வந்த கௌரி, "அவங்க மகன் சிங்கமா இருந்தா, அந்தப் பெருமை அவங்களுக்கு இல்லையா?" என்றாள். "ம்...ம்... பெருமை இல்லேன்னு யாரு சொன்னா? அந்தப் பெருமைக்குக் காரணம் எங்க வம்சம்னேன்... நீ நாளைக்குப் பெத்துக்கப் போறியே அந்தப் பயலுக்காகவும் தான் சொல்றேன்...வீரன் மகன் வீரனாகத்தான் இருப்பான்"என்று அவர் சொன்னபோது, அவளுக்கு வயிற்றில் என்னவோ செய்தது... அந்த இன்பக் கிளு கிளுப்பில் தலை குனிந்தவாறு தன் அறைக்குப் போனாள் கௌரி. நேற்று கௌரிக்குப் பூச்சூட்டல் என்றால் பிள்ளைச் சுமை போதாதென்று பூச்சுமையும் ஏற்றுவதுதானோ? அடர்ந்து நீண்ட கூந்தலில் சண்பகத்தை அடுக்கடுக்காக வைத்துத் தைத்து, இடையிடையே மல்லிகையை விரவி ரோஜாவைப் பதித்து -- 'இந்த அலங்காரத்தில் கௌரியைப் பார்க்க அவன் இல்லையே' என்ற குறை ஒவ்வொருவர் மனத்திலும் ஏதோ ஒரு விநாடியில் நெருடி மறைந்து கொண்டு தானிருந்தது. பூவுக்கும் வாழ்க்கை ஒரு நாள் தானே? நேற்று மலர்ந்து குலுங்கி ஜொலித்தவை யெல்லாம்.... இதோ வாடி வதங்கிக் கசங்கி, மணமிழந்து தலைக்குக் கனமாகிவிட்டன. ......தனியறையில் அமர்ந்து, தலையில் கசங்கிப் போன மலர்களைக் களைந்து கொண்டிருக்கிறாள் கௌரி. அப்பொழுது ஜன்னலுக்கு வௌியே அவனே வந்து எட்டிப் பார்ப்பதுபோல் சண்பகமரக் கிளையின் பூ வடர்ந்த கொப்பொன்று அவளுக்கு எதிரே தெரிந்து கொண்டு தானிருந்தது... 'நேற்று இந்நேரம் இதே போல் செடியிலும் மரத்திலும் மலர்ந்திருந்த பூக்கள் தானே இவையும்?...' என்ற எண்ணம் தொடர்பின்றி அவள் மனத்தில் முகிழ்த்தபோதிலும், அந்த எண்ணத்தைத் தொடர்ந்து பிறந்த அடுத்த விநாடியே சில மாதங்களுக்கு முன்பு சோமநாதன் தோட்டத்தில் அவளிடம் சொன்ன வார்த்தைகளின் தொடர்ச்சியே இது என்று அவளுக்கு விளங்கியது. அன்று... சோமநாதன் கோவாவில் நடந்த யுத்த நிகழ்ச்சிகளை அவளிடம் வீரரசம் மிகுந்த கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். அந்தக் கதைக்குப் பின்னால் உள்ள எத்தனையோ தாய்மார்களின் கண்ணீரும், இளம் பெண்களின் சோகங்களும் அவளுக்குப் புலனாயின. அவள் கெஞ்சுகின்ற குரலில் அவனிடம் கேட்டாள்: "இந்தப் பட்டாளத்து உத்தியோகத்தை நீங்க விட்டுட்டா என்ன? கோரமான சண்டையிலே பொன்னான உயிரையும், இன்பமான வாழ்க்கையையும் எதுக்குப் பலியிடணும்? ஜெயிக்கறது ஒரு பக்கம் இருந்தாலும், துப்பாக்கிக்குப் பலியாகிச் செத்தவனும் ஒரு மனுசனில்லியா?... சண்டை போட்டுச் சாகறதுதானா மனுசனுக்கு அழகு?..." அவள் சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் மௌனமான யோசனையுடன் அவன் கேட்டுக்கொண்டிருந்தான். பிறகு பக்கத்திலிருந்த ரோஜாச் செடியிலிருந்து ஒரு பெரிய பூவைப் பறித்தவாறே அவன் சொன்னான்: "சண்டை வேண்டாம்கிறதுதான் நம்மோட கொள்கை. ஆனா சண்டைன்னு வந்துட்டா, சண்டை போடாமே உயிருக்குப் பயந்து சமாதானம் பேசறது கோழைத்தனம்.சண்டைக்கு எப்படி ரெண்டு பேரும் காரணமோ...ரெண்டு பேரும் அவசியமோ...அதே மாதிரி சமாதானத்துக்கும் ரெண்டு பேருமே காரணமாகவும், அவசியமாகவும் இருக்கணும். ஆனா, நீ கேக்கறது இந்த சண்டையிலே எதுக்குப் பொன்னான உயிரை இழக்கணும்கறது தானே?..." என்று கேட்டுவிட்டுக் கையிலிருந்த ரோஜாவை அவள் கூந்தலில் சூட்டிய பின், ஒரு விநாடி அமைதியாக அவள் முகத்தையும், மலர் சூடிய கூந்தலின் அழகையும்பார்த்தான்; தொடர்ந்துசொன்னான் அவன்; "இதோ இந்தப்பூ, செடியிலே இருக்கறப்போ நல்லாத்தான் இருந்தது. இது நல்லா இருக்கே பறிக்காம இருப்போம்னு விட்டுட்டா, அது உதிராம இருக்கப் போகுதா? இப்ப நான் அதைப்பறிச்சு உன் தலையிலே வெச்சிருக்கேன்...நீ அதைப் பறிச்சி உனக்கு இஷ்டமான ஒரு தெய்வத்துக்கு மாலை கட்டிப் போடறே... அதிலேதான் அந்தப் பூவுக்கு... உதிர்ந்து போகிற சாதாரணப் பூவுக்கு ஒரு மகத்தான அர்த்தம் இருக்கு... இல்லியா?... அது மாதிரிதான், மனுஷன்னுபொறந்தா..பூத்திருக்கிறமலர் உதிர்ந்து போகிறமாதிரி... மனுஷனும் ஒரு நாளைக்கு செத்துத்தான் போவான்... அப்படி விதிமுடிஞ்சி, வியாதி வந்து சாகிற மனுஷன் அந்த உயிரை, தான் நேசிக்கிற தேசத்துக்காக, தான் விரும்பும் ஒரு லட்சியத்துக்காக அர்ப்பணம் பண்ணினா, அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கு இல்லியா? பெண்ணின் கூந்தலை அலங்கரிக்கும் பூவைப்போல, புனிதமான தெய்வத்துக்கு அர்ச்சிக்கப்பட்ட மலரைப் போல... கௌரி, பூ...உதிரும்...மனுஷனும் சாவான்..." என்று அவன் சொல்லிக்கொண்டே இருக்கையில், தானும் தன் எதிரே நிற்கும் கணவனும், தங்களைச் சுற்றிலும் பூத்துச் சிரிக்கும் மலர்களும்... எல்லாமே ஒவ்வொரு சோகமாய் அவள் நெஞ்சில் கனத்தன... கௌரியின் கண்கள் கலங்குவதையும் உதடுகள் சிவந்து துடிப்பதையும் கண்ட சோமநாதன் 'பூ-உதிரும்' என்பது மட்டுமல்ல; புதிய புதிய பூக்கள் மலரும் என்பதும் உண்மை என்று கூறிவிட்டுப் பேச்சை வேறு விஷயங்களில் திருப்பினான். 'ஐயோ இதை ஏன் இப்போது நான் நினைக்கிறேன்... அவர் போர் முனையில் இருக்கும் இந்த நேரத்திலா எனக்கு அந்த நினைவு வரவேண்டும்' என்று ஒரு விநாடி துணுக்குற்று, கட்டிலின் தலை மாட்டில் தொங்கும் கணவனின் படத்தைப் பார்க்கப் பார்க்க விகஸிக்கும் அந்த மாயப் புன்னகையைப் பார்ப்பதற்காகப் படத்தருகே போய் நின்றாள் கௌரி. அப்போது அறைக்கு வௌியே... "சொல்லுங்க, கடுதாசியிலே என்ன சேதி?.... பேச மாட்டீங்களா? ஐயோ தெய்வமே'..... கௌரி....ஈ....." என்று தாய்மையின் சோகம் வெடித்துக் கிளம்பிய பேரோசை கேட்டுக் கௌரி அறைக் கதவை திறந்தாள்..... அப்படியே விழி பிதுங்கிச் சிலையாய் நின்றாள்..... வராந்தா ஈஸிசேரில் கையில் பிரித்த கடிதத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டிருக்கும் பெரியசாமிப் பிள்ளையின் காலடியில், தரையில் நெற்றியை 'மடார் மடா'ரென முட்டிக்கொண்டு கதறுகிறாளே மரகதம். செம்பில் வார்த்து விட்ட சிலை மாதிரி உணர்ச்சி மிகுதியால் உப்பிக் கனத்து இறுகிச் சிவந்த அவர் முகத்தில் சருமம் துடித்தது. மூடிய இமைகளின் வழியே கோடாய் வழிந்த கண்ணீர் நரைத்துப்போன மீசையின் மேல் வடிந்து நின்றது..... "மகனே, சோமு----" என்று வானத்தை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு எழுந்தார். வராந்தாவில் சுவரில் தொங்கும் மகனின் போட்டோவை நோக்கி நடந்தார். "ஐயோ, நீ வீரனய்யா'...." என்று ஒற்றை மரமாய் மகனின் படத்தின் முன் நிமிர்ந்து நின்று ராணுவ முறையில் 'சல்யூட்' வைத்தார். விறைத்து நின்று வீர வணக்கம் செய்த கரத்தைக் கீழிறக்கிய போது முதுமையின் தளர்ச்சி முழுவதையும் திடீரென அனுபவித்த உணர்வுடன் தளர்ந்து உட்கார்ந்தார் பெரியசாமி. "எனக்கு வேறொரு மகன் கூட இல்லையே...." என்று வாய்விட்டுப் புலம்பினார்....அந்த வார்த்தைகளைக்கேட்டு எரித்து விடுவது போல் பெரியசாமியைப் பார்த்த மரகதம், அவரைச் சபிப்பதுபோல் ஆங்காரத்துடன் இரண்டு கைகளையும் அவரை நோக்கி நீட்டியவாறு விரித்த கூந்தலும் வெறித்த விழிகளுமாய் அலறினாள்: "பாவி'....வேறே மகன் நமக்கு கிடையாது--வேண்டாம் பட்டாளத்துக்குன்னு அடிச்சிக்கிட்டேனே கேட்டீங்களா? பட்டாளம் பட்டாளம்ன்னு நின்னு என் அருமைப் புள்ளையெக் கொன்னுட்டீங்களே.... ஐயோ' உங்க பாவத்துக்கு வேறே ஒரு மகன் வேணுமா? பட்டாளத்துக்கு அனுப்பி வாரிக் குடுக்கறத்துக்குத் தானே இன்னொரு மகன் இல்லேன்னு அழறீங்க?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவர் இதயத்தில் குத்துவது போல் கேட்டாள். "ஆமாம்' அதற்குத்தான்...." என்று பெரியசாமி, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய மீசையை முறுக்கிக் கொண்டே மரகதத்தின் கண்களுக்குள் பார்த்தவாறு சொன்னார். அவர் கண்களில் சுரந்த கண்ணீர் இமை விளிம்பில் பாத ரசம்போல் ஜொலித்தது.... அப்போது அறை வாசலில் 'தடா'லெனச் சப்தம் கேட்கவே திரும்பப் பார்த்து மயங்கி விழுந்த கௌரியைத் தூக்குவதற்காக ஓடினார் பெரியசாமி. மரகதத்தின் அலறல் தெருவையே திரட்டியது' பூவின் மேல் ஆசைப்பட்டுப் பூப்பறிக்க வந்த கௌரி, பூவிழந்து விட்டாள்.... ஆனால் சோமுவின் கைகளால் நட்டு வளர்க்கப்பட்ட அந்தச் செடிகளும் மரங்களும் அவன் நினைவாய் இப்போதும் மலர்களைச் சொரிந்து கொண்டு நிற்கின்றன. அவற்றைப் பறித்து ஆரமாய்த் தொடுக்கவும், சோமுவின் படத்திற்கு அழகாய்ச் சூட்டவும், அவனது நினைவையே வழிபட்டு நிற்கவும் அவளிருக்கிறாள்..... சோமுவின் படத்துக்கு மாலையிட்டு விளக்கேற்றி வணங்கிக் கொண்டிருந்தாள் கௌரி..... மாலை மாலையாய்க் கண்ணீர் வழிந்து அவள் உடலை நனைக்கிறது. "நான் வழிபடும் உங்கள் நினைவுக்கு அஞ்சலியாய் சமர்ப்பித்த இந்தப் பூக்களுக்கு ஒரு அர்த்தமிருப்பதுபோல், உங்கள் மரணத்திற்கு ஒரு அர்த்தமிருப்பதுபோல், இரண்டு மாதங்களேயானாலும் வீர புருஷனோடு வாழ்ந்த எனது சாதாரண வாழ்க்கைக்கும் ஒரு மகத்தான அர்த்தம் காண்கிறேன் நான்...... நாளைப் பிறக்கப் போகும் நம் மகன் வாழ்க்கையும் அர்த்தம் நிறைந்திருக்கும்----அவன் ஒரு வீரனின் மகன்' உங்கள் தகப்பனார் இன்னொரு மகன் இல்லையே என்று வருந்துகிறார். அந்தச் சிங்கம் குகைக்குள் இருந்து இன்னும் வௌியே வரவில்லை...... இந்த நாட்டின் பெண் குலம் உள்ளவரை வீரருக்கா பஞ்சம்'..... உங்கள் அம்மாவின் கண்ணீருக்குத்தான் மாற்றே இல்லை.....அவர்கள் எவ்வளவு பாக்கியசாலி...." என்று எவ்வளவு விஷயங்களை அவனோடு அவள் மௌனமாய் பேசுகிறாள்........ திடீரென்று அடிவயிற்றில், விலாப் புறத்தில் சுருக்கெனக் குத்தி வலிக்க கணவனின் படத்தின் முன் கைகூப்பி நின்றிருந்த கௌரிக் கட்டிலின் மீது சாய்ந்து படுத்தாள்...... அவள் கண் முன்னே நூறு வண்ணங்களில் ஆயிரக் கணக்கான பூக்கள் மலர்ந்து ஜொலிக்கின்றன. ----வௌியே திண்ணையிலிருந்து மீசையை முறுக்கியவாறு பெரியசாமிப் பிள்ளை, தன் மகன் யுத்த களத்தில், மறைந்திருந்து குழியிலிருந்து மேலேறி வந்து, முன்னேறி வந்து கொண்டிருக்கும் எதிரிகளில் ஆறுபேரை ஒரே கணத்தில் சுட்டுக் கொன்றதையும், அப்போது தூரத்திலிருந்து வந்த குண்டொன்று அவன் உயிரைப் பறித்துச் சென்றதையும் பத்திரிக்கையில் படித்து யாருக்கோ விளக்கிக் கொண்டிருக்கிறார். ஆம்; ஒரு வீரனின் மரணத்தில் உள்ள சோகம் பனிப்படலம் போல் மறைந்து போகும். அவன் வாழ்ந்தபோது புரிந்த வீர சாகசமே, காலம் காலமாய்ச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும். ----- #9. குறைப் பிறவி "சீக்கிரம் வந்திடு. நீ வந்துதான் பாலுவுக்குக் கஞ்சி குடுக்கணும்" என்று ரஞ்சிதம் தெருவில் போகும் வரை சொல்லிக்கொண்டிருந்தாள் பங்கஜம். பங்கஜத்திற்குச் சொத்தோடு சுகத்தோடு, அன்பும் கனிவும் நிறைந்த கணவனும் இருந்து என்ன பயன்? உடன்பிறந்த நோய் அவளை நித்திய நோயாளியாக்கி இருந்தது. கலியாணம் ஆகி இந்த ஐந்து வருஷங்களில் நான்கு குழந்தைகள் பெற்றாள். வயிற்றில் ஒன்று தரித்ததும், கையிலிருக்கும் மற்றொன்று குழியை அடையும்...இப்படியே மூன்று குழந்தைகளும் இறந்தன. இப்பொழுது வயிற்றில் ஏழுமாதம். திடீரென்று போனவாரம் கைக்குழந்தை பாலுவுக்கு இரண்டு நாள் ஜ்உரம் கண்டிருந்தது; மறுநாள் நெற்றியிலும் முகவாயிலும் ஓரிரு முத்துக்கள் தோன்றின. நான்காம் அவை பெருகின; ஒரு வாரத்திற்குள், அம்மைக் கொப்புளங்கள் இல்லா இடமே தெரியாத அளவுக்கு உடம்பெங்கும் பரந்து.... பங்கஜத்துக்கும் அவள் கணவன் ராஜாரமனுக்கும் 'குழந்தை பிழைக்காது' என்ற எண்ணம் வலுவடைந்தது. பங்கஜத்துக்கோ எழுந்து நடமாட முடியாத பலஹீனம்..... அவளுக்கு டி.பி. இருக்கலாமோ என்று வேறு டாக்டர் சந்தேகிக்கிறார்.... பாலு ஸ்மரணையற்றுக் கிடக்கிறான், அவனைப் பங்களாவின் காம்பவுண்ட் சுவரோரமாக அமைந்திருக்கும் 'அவுட் ஹவுஸி'ல் கட்டிலில் கிடத்தி இருக்கிறார்கள். அவனருகே கூட, பங்கஜம் வரக்கூடாதாம். இது டாக்டரின் யோசனை. சமையல்காரனோ, அவன் ஒரு மாயாவி' அவன் எப்பொழுது வருவான் எப்பொழுது சமைப்பான் என்று யாருக்கும் தெரியாது. காலையில் காப்பி குடிக்கப் போகும்போது 'இன்று என்ன சமைப்பது?' என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொண்டு விட்டால் போதும். அதன்பின் சாப்பாட்டு நேரத்தில் அங்கு எல்லாம் தயாராயிருக்கும். மற்ற நேரத்தில் அவன் கண்ணில் படமாட்டான். குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காகவே ரஞ்சிதம் வேலைக்கு அமர்த்தப்பட்டாள். தன் குழந்தையைத் தானே கவனித்துக்கொள்ள பங்கஜத்திற்குக் கொள்ளை ஆசையிருந்தும் சக்தி இல்லை' வைத்திய சாஸ்திரமும் வாய்த்திருக்கும் கணவனும் அதற்கு அனுமதிக்கவில்லை. 'இப்பொழுதுதான் ரஞ்சிதம் இல்லையே, அவள் வரும் வரை நான் போய்ப் பார்த்துக் கொண்டால்...' பங்கஜம் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு, பாலு படுத்துக்கிடக்கும் அந்தத் தனி வீட்டில் நுழைந்தாள். வேப்பிலை சயனத்தில் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான் பாலு. கட்டிலுக்கு அருகே இருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அதன் விதியைக் கணக்கிடுவதுபோல்--குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பங்கஜம். மணி ஒன்றாயிற்று. இன்னும் ரஞ்சிதத்தைக் காணோம்; குழந்தைக்குப் பங்கஜமே மருந்து கொடுத்தாள். கஞ்சி கொடுத்தாள். வேப்பிலைக் கொடுத்தால் விசிறிக்கொண்டு ரஞ்சிதத்தின் வருகைக்காகக் காத்திருந்தாள். ரஞ்சிதத்தைக் காணோம். பங்கஜத்தின் கணவன் ராஜாராமன் மூன்று மணிக்கு வந்தான். பங்கஜம் பாலுவின் அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டான். "பங்கஜம், என்ன இது' ஏன் இங்கே வந்தே?" "வீட்டுக்குப் போன ரஞ்சிதத்தைக் காணோம்... குழந்தைக்கு யாரு கஞ்சி குடுக்கறது, மருந்து குடுக்கறது...?" சரி சரி, நீ உள்ளே போ, நான் பார்த்துக்கறேன்...." என்று கோட்டையும் 'டை'யையும் கழற்றி அவளிடம் கொடுத்துவிட்டு, அவன் போய் பாலுவின் அருகில் உட்கார்ந்து கொண்டான். ரஞ்சிதமும் செல்லியும் சகோதரிகள். தங்கையின் குடிசையில்தான் செல்லியும் வாழ்கிறாள். ரஞ்சிதத்தின் புருஷன் கொத்தனார் வேலை செய்கிறான். மூத்தவளாய்ப் பிறந்தும் செல்லிக்குக் கலியாணம் ஆகவில்லை; ஆகாது. செல்லிக்கு வயசு இருபதுக்குமேல் ஆகிறது என்றாலும் வளர்ச்சி பன்னிரண்டு வயதோடு நின்றுவிட்டது. முகமோ முப்பதுக்கு மேலே முதுமை காட்டியது...நரங்கிப் போன உருவம்; நாலடிக்கும் குறைவான உயரம்; கறுப்புமல்லாத சிவப்புமல்லாத சோகை பிடித்து வௌிறிப்போன சருமம். தலை முடியெல்லாம் ஒன்று சேர்ந்து சிக்குப் பிடித்து, எலிவால் மாதிரி பின்புறம் தொங்கும். முன் பற்கள் இரண்டும் உதட்டைக் கிழித்துக்கொண்டு வௌித்தெரியும்...அவளை யாரும் மணக்க முன்வராததற்குக் காரணம் இந்த அங்க அவலட்சணங்கள் மாத்திரமேயன்று. அவள் முழுமை பெறாத மனித ராசி; குறைப் பிறவி' குடிசை வாசலில் உட்கார்ந்து முறத்தில் கொட்டிய அரிசியில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் செல்லி. தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதும், அப்படியே உறங்கிப் போவதும் அவளுக்குத் தினசரிப் பழக்கம். ரஞ்சிதத்துக்குத் தன் தமக்கையின் மீது உயிர். செல்லிக்கோ மனிதர்கள் என்றாலே பாசம்தான். மனிதர்கள் என்ன, நாயும் பூனையும்கூட அவளது எல்லையற்ற அன்புக்குப் பாத்திரமாகிவிடும். சொல்லப் போனால் அவைதான் அவளது அன்பை ஏற்றுக் கொண்டன. மனிதர்கள்-- அவள் தங்கையைத் தவிர--மற்றவர்கள் அவளைக் கண்டாலே அருவருத்து ஒதுங்கி நடந்தார்கள். இப்பொழுதும் கூட அவள் அருகே சொறி பிடித்த ஒரு கறுப்பு நாய்க்குட்டி வாஞ்சையுடன் நின்று வாலை ஆட்டிக் கொண்டிருக்கிறது. அவளுக்கும் அதற்கும் அத்யந்த நட்பு. மணி ஐந்தாகியும் ரஞ்சிதம் வேலைக்குப் போகாததைக் கண்டசெல்லி குடிசைக்குள் எட்டிப் பார்த்தாள், "ரஞ்சிதம், நீ வேலைக்குப் போகலியா'..." "இல்லே....நான் போகமாட்டேன்." "ஏண்டி....என்னா நடந்திச்சு?" "அந்த புள்ளைக்கி மாரியாத்தா வாத்திருக்கு...பாத்தாவே பயமா இருக்கு...ஸ்...அப்பா" என்று உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள் ரஞ்சிதம். "யாருக்கு...பாலுவுக்கா?" "டாக்டரு வந்து, அந்த வௌிவூடு இருக்கு பாரு அதிலே கொண்டு போயிப் போடச் சொல்லிட்டாரு புள்ளையெ.....பெத்தவகூட கிட்டப் போகக் கூடாதாம்...என்னெப் பாத்துக்கச் சொன்னாங்க புள்ளையெ...வீட்லே போயிச் சொல்லிட்டு வர்ரேன்னு வந்துட்டேன். நான் போக மாட்டேண்டி அம்மா...எனக்குப் பயமாயிருக்கு...." என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு தலையை உசுப்பினாள் ரஞ்சிதம். "இம்மா நேரம் புள்ளை எப்படித் துடிக்கிறானோ? பெத்தவளும் கிட்ட இல்லாம அந்த ஐயா எப்படித் தவிக்கிறாரோ" என்று சொல்லித் தவித்தாள். அவளது குனிந்த பார்வையில், பாலுவின் சிரித்த முகம் தெரிந்தது. அவனது பிஞ்சுக் கரங்கள் அவள் முகத்தில் ஊர்வதுபோல் இருந்தது. "நான் போய்ப் பாலுவைப் பார்த்துக்கிட்டா....சம்மதிப்பாங்களா?....அந்த ஐயா என்ன சொல்லுவாரோ?...." இந்த யோசனைகள் தோன்றியதும் அந்தப் பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. பாலுவைப் பார்த்துக்கொள்ளும் 'ஆயா' உத்தியோகம் முதலில் செல்லிக்குத்தான் கிடைத்தது. முதல் நாள் அவள் வேலைக்குப் போகும்பொழுது ராஜாராமன் வீட்டில் இல்லை. பங்கஜம் மட்டுமே இருந்தாள். அவளே சம்பளம், வேலை நேரம் எல்லாம் பேசினாள். பங்கஜம் சொன்னது எதுவும் செல்லியின் காதுகளில் விழவில்லை. பங்கஜத்தின் மடியில் உட்கார்ந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கன்னங்கள் குழியச் சிரித்து வரவேற்ற அந்தக் குழந்தையிடம் லயித்தவாறே, அவள் சொல்லுவதற்கெல்லாம் தலையாட்டினாள் செல்லி. குழந்தை செல்லியிடம் தாவினான். செல்லி குழந்தையை வாங்கி அணைத்துக் கொண்டாள். இத்தனை நேரம் குழந்தையைத் தூக்கி வைத்திருந்ததனால் களைத்துப்போன பங்கஜம், அறைக்குள் போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டாள். செல்லி பாலுவைத் தூக்கி கொண்டு தோட்டமெல்லாம், வீடெல்லாம் சுற்றித் திரிந்து மகிழ்ந்தாள். பொம்மைகளையும், சொப்புகளையும் வைத்துக்கொண்டு குழந்தையோடு விளையாடினாள். குழந்தைக்குச் சோறூட்டும்போதும் காலில் கிடத்தித் தாலாட்டும்போதும் அந்தக் குறைப் பிறவிக்கும் கூட நெஞ்சில் நிறைவு பிறந்தது. அன்று மத்தியானம் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை 'ஆயா' என்று அழைத்துக் கொண்டே விழித்தான். கூடத்துத் தூண் ஓரத்தில் கவிழ்ந்த பார்வையுடன் குந்தி உறங்கிக் கொண்டிருந்த செல்லி, தலை நிமிர்ந்து பார்த்தாள். தொட்டிலின் விளிம்பைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தலையை மட்டும் வௌியே நீட்டி அவளைக் கூப்பிட்டுச் சிரித்த குழந்தையின் தோற்றம் அவளை உள்ளும் புறமும் சிலிர்க்க வைத்தது. ஓடிவந்து குழந்தையைக் கைநிறைய வாரிக் கொண்டாள். குழந்தையை மடிமீது இருத்திக் கொஞ்சினாள். காலமெல்லாம், ஆயுள் முழுவதும் இப்படியே ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே கழித்துவிட்டால்?... அந்த பாக்கியம் யாருக்குக் கிட்டும்? செல்லிக்குக் கிட்டும்' பாலு அவன் மடிமீது கிடந்தே வளர்வான்; பள்ளிக்கூடம் போய் வருவான்; பிறகு பெரியவனாகி ஆபீசுக்குப் போவான்....அப்புறம் கலியாணமாகி, அவனும் ஒரு குழந்தையைப் பெற்று அவள் மடிமீது தவழவிடுவான்.... ஒரு தாய்க்கே உரிய அர்த்தமற்ற சிந்தனைகளில் அவன் மகிழ்ந்து கொண்டிருந்தாள். கூடத்துச் சுவரிலிருந்த ஒரு போட்டோ அவள் கண்ணில் பட்டது. "பாலு...அதாரு....?" என்று போட்டோவைக் காட்டினாள் செல்லி. "அம்மா அப்பா...." கைகளைத் தட்டிக் கொண்டு உற்சாகமாகக் கூவினான் பாலு. "அம்மா மூஞ்சி எப்படியிருக்கு?" என்றாள் செல்லி. பையன் முகத்தைச் சுளித்துக்கொண்டு மூக்கை உறிஞ்சிக் காட்டினான். "போதும் போதும்..." என்று சொல்லி சிரித்தாள் செல்லி. குழந்தையும் சிரித்தான்' "அப்பா மூஞ்சி எப்படியிருக்கு?..." மறுபடியும் முகத்தைச் சுளித்து மூக்கை உறிஞ்சி... செல்லி சிரித்தாள்' குழந்தையும்தான். "பாலு மூஞ்சி எப்படியிருக்கு?" கண்களை அகலத் திறந்து முகம் முழுதும் விகசிக்கப் புன்முறுவல் காட்டினான் குழந்தை. "என் ராஜா' " என்று குழந்தையை அணைத்துக் கொண்டாள் செல்லி. "ஆயா மூஞ்சி...." முகம் விகசிக்கக் கண்கள் மலரச் சிரித்துக் கொண்டே செல்லியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான் குழந்தை. அப்பொழுதுதான் ஆபீசிலிருந்து வந்த ராஜாராமன் அவர்களின் பின்னால் வந்து நின்று புது 'ஆயா' வும் குழந்தையும் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருந்தான். குழந்தையின் முத்தத்தை ஏற்றுக் கொண்டவுடன், ஏற்றுப் பிறந்த சாபமே தீர்ந்ததுபோல் அவள் தேகாந்தமும் புளகமுற்றது. குழந்தையை முகத்தோடு அணைத்து முத்தமிட்டாள் செல்லி. ராஜாராமன் அப்பொழுதுதான் அவள் முகத்தைப் பார்த்தான். அவன் முகம் அருவருப்பால் நௌிந்தது; மனம் குமட்டியது. தனது அழகுச் செல்லம் இந்த அசிங்கத்தின் மடியில் அமர்ந்து... அவன் கண்கள் இறுக மூடிக்கொண்டு திரும்பி விட்டான். அப்பொழுதுதான் அவள் அவனைப் பார்த்தாள். ராஜாராமன் விடுவிடென்று தன் மனைவியின் அறைக்குச் சென்றான். குழந்தையின் தொந்தரவோ, அழுகைக் குரலோ இல்லாததால் பங்கஜம் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். "இந்த கோர சொரூபத்தை யாரு பிடிச்சிட்டு வந்தது?" என்று இரைந்தான் ராஜாராமன். பங்கஜம் திடுக்கிட்டு எழுந்தாள். "யாரைச் சொல்றீங்க?" "குழந்தையைப் பாத்துக்க இந்தக் குட்டிச்சாத்தான் தானா கிடைச்சுது?" "யாரு, ஆயாவைச் சொல்றீங்களா?" "ஆமா.....ஆயாவாம் ஆயா....கர்மம், கர்மம்.....பாக்கச் சகிக்கல்லே' கொழந்தை பயப்படலியா?...மூஞ்சியெப் பார்த்தா வாந்தி வருது..." "கொழந்தை ஒண்ணும் பயப்படலே....நீங்கதான் பயப்படுறீங்க..." என்றாள் சிரித்துக்கொண்டே பங்கஜம். --வௌியா குழந்தை அழும் குரல் கேட்டது: "ஆயா...ஹம்ம்...ஆயா....ஆ...' குழந்தையின் குரல் வீறிட்டது. ராஜாராமன் அறையிலிருந்து வௌியே ஓடி வந்தான். பங்களாவின் கேட்டைத் திறந்துகொண்டு வௌியேறிய செல்லி கதவுகளை மூடிவிட்டுத் தெருவிலிறங்கிப் போய்க் கொண்டிருந்தாள். அந்தக் 'குட்டிச்சாத்தா'னை நோக்கி, இரண்டு கைகளையும் ஏந்திக்கொண்டு, அவள் போகும் திக்கைப் பார்த்து வீறிட்டு அலறிக்கொண்டிருந்தான் பாலு. ராஜாராமன் குழந்தையை தூக்கிக்கொண்டபின், அவள் போவதையே பார்த்தவாறு நின்றான். 'நான் சொன்னதைக் கேட்டிருப்பாளோ?....அவள் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் இப்படிப் போவாள்'....சீ' நான் என்ன மனிதன்....?' குழந்தை அழுதது. அதன் பிறகு செல்லி அந்தப் பக்கம்கூட வந்தது கிடையாது. மறுநாள் முதல் அவள் தங்கை ரஞ்சிதம், பாலுவுக்கு ஆயாவானாள்' செல்லிக்கும் மீண்டும் சொறி நாயே துணையாயிற்று' முறமும் கையுமாய்க் குனிந்திருந்த செல்லி, கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்...குடிசைக்குப் பின்புறம் சென்றாள். அவளைத் தொடர்ந்து நாயும் ஓடிற்று. குழந்தையின் அருகில் உட்கார்ந்து வேப்பிலைக் கொத்தால் விசிறிக்கொண்டிருந்தான் ராஜாராமன். குழந்தை அடிக்கொருதரம் வேதனை தாங்கமாட்டாமல் அழத் தெம்பில்லாமல் ஈனமான குரலில் சிணுங்கிச் சிணுங்கி அழுதான். தாயின் அருகே இருக்கக்கூடாத நிலையில், நிராதரவாய்க் கிடந்து நோயில் துடிக்கும் தன் குழந்தையின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது ராஜாராமனின் கண்கள் கலங்கின. இறந்து போன குழந்தைகளின் பயங்கரக் காட்சி அடிக்கடி மனசில் திரை விரித்தது. 'சீ' காசும் பணமும் இருந்து பயன் என்ன?' அவனுக்கு வாழ்கையே அர்த்தமற்றுத் தோன்றியது. மணி ஆறு அடித்தது. இன்னும் ஆயாவைக் காணோம். வாழ்வே இருண்டதுபோல் கைகளில் முகம் புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் ராஜாராமன்: இருள் படரும் நேரத்தில் அவள் வந்தாள். "சாமீ..." 'யாரது? வாசற்படியில் கூனிக் குறுகிக்கொண்டு நிற்கும் அது...யாரது, செல்லியா?' "செல்லி..." "சாமீ....நான்தானுங்க செல்லி வந்திருக்கேன்...." அவள், உடம்பெல்லாம் மஞ்சள் பூசிக் குளித்து, தலை வாரி முடித்து, நெற்றியில் பொட்டிட்டுக்கொண்டு--இயன்ற அளவு தன்னை அலங்கரித்துத் தன் குரூபத் தோற்றத்தை மறைக்க முயலும் புன்னகையோடு எதையோ அவனிடம் யாசிப்பவள் போல் நின்றிருந்தாள். கொளந்தைக்கி ஒடம்பு சரியில்லேன்னு இப்பத்தான் சொன்னா ரஞ்சிதம்...அவளுக்குப் பயமா இருக்காம். எனக்கு மனசு கேக்கலே...பார்க்கலாம்னு வந்தேனுங்க...நீங்க கோவிச்சிக்காமெ...இருந்தா கொளந்தையை ஒடம்பு கொணமாகற வரைக்கும் நானே பாத்துக்கிட்டுமுங்களா..." அவள் தயங்கித் தயங்கித் தொடர்பில்லாமல், மனசில் உள்ளதைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆசையில் பேசினாள். கட்டிலில் கிடந்த குழந்தை புரண்டான்; சிணுங்கி அழுதான். செல்லி உள்ளே ஓடி வந்து அவன் அருகே நின்று விசிறினாள், ராஜாராமன் மீண்டும் முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டான். "அவன் உன் குழந்தை'...அவன் உன் குழந்தை'....என்று முனகிக்கொண்டே வௌியேறினான். இரவெல்லாம் கண் விழித்துக் குழந்தையைப் பாதுகாத்தாள் செல்லி, அந்தக் குழந்தையின் அருகே தனித்திருந்து தானே அதன் தாய்போலப் பணிவிடை புரிவதில் வாழ்வே நிறைவுற்றது போன்ற திருப்தி பிறந்தது அவளுக்கு. குழந்தைக்கு தண்ணீர் விடப்போகிறார்கள். செல்லியின் இடைவிடாத கண்காணிப்பினாலும், பரிவு மிக்க பணி விடைகளினாலும் பாலு நோய் தீர்ந்தான். பெற்றவள் கலி தீர்ந்தாள். ஆனால் குழந்தையின் முகமெல்லாம் அம்மையின் குரூர வடுக்கள் முத்திரை பதித்து அழகைக் கெடுத்திருந்தன; கரிந்து போன மரப்பாச்சி போலிருந்தது குழந்தை. தனது அழகுச் செல்வத்தைக் கண்டு யாரேனும் 'காணச் சகியாத கோரச் சொரூபம்; குட்டிச்சாத்தான்' என்று முகம் சுளிப்பார்களோ என்று எண்ணியபோது ராஜாராமன் மனம் குமுறினான். செல்லியின் கண்களுக்குப் பாலு அழகாய்த்தான் இருந்தான். பிள்ளை தேறினானே, அதுவே பெரும் பாக்கியம் என்று எண்ணி அவள் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். மாலையில் செல்லிக்குத் தலைவலித்தது; உடம்பெல்லாம் வலித்தது. இரவில் காய்ச்சல் வருவது போல் அனத்தியது. பங்களாவின் காம்பவுண்ட் சுவரருகே இருந்த அந்தச் சிறு வீட்டின் வராந்தாவில் கோணியை விரித்து, பழம் புடவையால் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள். மறுநாள் காலை மணி ஒன்பதாகியும் செல்லி எழுந்து வரக்காணோம். தோட்டத்தில் உலாவ வந்த ராஜாராமன் வராந்தாவில் செல்லி படுத்துக் கிடப்பதை பார்த்தான். அருகில் வந்து நின்று "செல்லி.... செல்லி....." என்று அழைத்தான். பதில் குரலைக் காணோம். முகத்தில் மூடியிருந்தத் துணியை மெல்ல விலக்கினான்---- அவள் முகமெல்லாம் அம்மைக் கொப்பளங்கள் முகிழ்ந்திருந்தன. கண்ணிமைகளும், உதடுகளும் துடித்துச் சிவந்து பார்க்கும்போதே அவனுக்கு உடல் சிலிர்த்தது. அவள் மெல்லக் கண் திறந்து ஏதோ முனகினாள். செல்லிக்கு அம்மை கண்டுவிட்டது என்று தெரிந்தவுடன் பங்கஜம் கூட எழுந்து ஓடி வந்தாள். "ஐயோ, நீங்க ஏம்மா வந்தீங்க..... போங்கம்மா.... உள்ளே போங்கம்மா.... " என்று செல்லி கெஞ்சினாள். டாக்டர் வந்தார்; டாக்டரைக் கண்டதும் பங்கஜம் வீட்டுக்குள் நுழைந்தாள். டாக்டர் செல்லிக்கு மருந்து கொடுத்தார். அவள் டாக்டரிடம் வேண்டிக் கொண்டாள்: "சாமி.... நான் ஆசுபத்திரிக்கிப் போயிடுறேனுங்க..... அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க...." "வேண்டாம் செல்லி, வேண்டாம்" என்று ராஜாராமன் இடைமறித்தான். "மிஸ்டர் ராஜாராமன். அந்தப் பொண்ணு சொல்வதுதான் சரி. ஒடம்பு நல்லாகணும்னா, ஆசுபத்திரிக்கு அனுப்பிச்சுடறதுதான் நல்லது" என்றார் டாக்டர். அதன் பிறகு ரஞ்சிதத்துக்குச் சொல்லியனுப்பப்பட்டது. "அடி எம் பொறவி அக்காவே.... நா அப்பவே சொன்னேனே கேட்டியாடி...." என்று அழுது புழம்பிக் கொண்டே ஓடி வந்தாள் ரஞ்சிதம். ராஜாராமன் ஆபீசுக்கு லீவு போட்டு விட்டு வீட்டிலேயே தங்கியிருந்தான். ரஞ்சிதம் தான் செல்லியைப் பார்த்துக் கொண்டாள். பாசம் இருந்தா பயம் அற்று போகாதா, என்ன? சாயங்காலம் நாலு மணி சுமாருக்கு ஆசுபத்திரியிலிருந்து, செல்லியைக் கொண்டு செல்ல 'வான்' வந்து வாசலில் நிற்கிறது' ராஜாராமனும் பங்கஜமும் சவம் போல் வௌிறிப் போய் நிற்கிறார்கள்; ரஞ்சிதம் சேலைத்தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு அழுகிறாள். செல்லி காம்பவுண்ட் சுவரருகே வந்து நின்றாள்' --என்ன பயங்கரத் தோற்றம்' ரஞ்சிதம் ஓடிச் சென்று அவளைக் கைத்தாங்கலாய் அழைத்து வருகிறாள். காரின் அருகே வந்ததும் செல்லி ஒருமுறை சுற்றும் முற்றும் பார்க்கிறாள். அவளருகே ராஜாராமனும் ரஞ்சிதமும் நிற்கின்றனர். காரிலேற முடியாமல் செல்லி தவிக்கிறாள்; பார்வை கலைகிறது' "என்ன வேணும் செல்லி, என்ன வேணும்?.... பயப்படாமல் கேள்.....' " என்கிறான் ராஜாராமன். "பாலு..... பாலுவை ஒருதடவை பாத்திட்டு...." அவள் குரல் அடைத்தது; கண்கள் கலங்கின. "இதோ....உனக்கில்லாத பாலுவா...." என்று உள்ளே ஓடினான்.... கன்னங்கரேலென்று நிறம் மாறி, இளைத்துத் துரும்பாய் உருமாறிப் போன குழந்தையுடன் வந்து அவளருகே நின்றான். "பாலு...." "ஆயா"... குழந்தை சிரித்தான். "பாலு, அப்பா மூஞ்சி எப்படி இருக்கு?" குழந்தை முகத்தைச் சுளித்து வலிப்புக் காட்டினான். "அம்மா மூஞ்சி?" ---மறுபடியும் அதே சுளிப்பு; வலிப்புக் காட்டினான். "பாலு மூஞ்சி எப்படி?" கண்கள் மலரச் சிரித்தான் குழந்தை. "ஆயா மூஞ்சி?" சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிடத் தாவினான் குழந்தை. அம்மைக் கொப்புளங்கள் நிறைந்த முகத்தை மூடிக்கொண்டு விலகிக்கொண்டாள் செல்லி. "ரஞ்சிதம், கொளந்தையைக் கவனமாப் பாத்துக்க. நான் போய் வரேன் சாமி...வரேன் அம்மா" என்று கரம் கூப்பி வணங்கினாள். ராஜாராமன் கண்களைத் துடைத்துக்கொண்டான். "போய் வா'..." என்று கூவினாள் பங்கஜம். அவள் உதடுகள் துடித்தன; அழுகை வெடித்தது. ஆசுபத்திரி கார் அவளை ஏற்றிக்கொண்டு நகர்ந்தது.... கார்மறையும் வரை அவர்கள் எல்லோரும் தெரு வாசலிலேயே நின்றிருந்தனர். எங்கிருந்தோ ஓடிவந்த அந்தக் கறுப்புச் சொறி நாய், ஆசுபத்திரிக் காரைத் தொடர்ந்து ஓடியது' ----- #10. யந்திரம் முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல் பத்து வயதுக்குள் ஒரு மகன் அல்லது மகளிருந்தால் அந்தப் பிஞ்சு மனம் அவளைத் தெரிந்து வைத்திருக்கும். நீ தெரிந்துவைத்திருக்கிறாயே என்கிறீர்களா? அது வேறு விஷயம். எனக்குக் கூடுவிட்டுக் கூடுபாயத் தெரியும். அதன்படி, நான்--குழந்தை, பெண், தாய், கிழவன், கிழவி, மிருகம், பறவை, அசுரன், தேவன்'... அதுபோகட்டும்? அப்படி முத்தாயி என்ன தேவேந்திரப் பெண்ணா என்று கேட்காதீர்கள். அவளை என்னவென்று சொல்வேன்' பாசமும் கனிவும் அன்பும் ஆதரவும் மிக்க ஒரு பாட்டி என்று கூறலாமா?... அல்ல; அவள் ஒரு யந்திரம். எங்கள் காலனியில் முப்பது வீடுகளுக்குக் குறைவில்லை. சராசரி கணக்கெடுத்தால் அவளது துணையுடன் பள்ளி செல்லவேண்டிய பருவத்தில் உள்ள பிள்ளைகள் வீட்டுக்கு ஒன்று தேறும். இது என் மானசிகக் கணிப்புத்தான். தவறாக இடமில்லை. ஏனென்றால் குழந்தைகளை என்னைப்போல் கவனிக்க யாராலும் முடியாது....--எனக்குத்தான் வேறு வேலை'... நாளெல்லாம் வீட்டு வராந்தாவில் நின்றுகொண்டு--அங்கு நின்று பார்த்தால் எங்கள் காலனியில் இருக்கும் எல்லா வீடுகளையும் கவனிக்க முடியும்...காய்கறிக்கரிகளை, பிச்சைக்காரர்களை, பள்ளி செல்லும் மாணவ மாணவிகளை, சமயா சமயங்களில் குறிப்பாகப் பெண்களைக் கவனித்தவாறு நிற்பது எனக்கு ஓர் அருமையான பொழுதுபோக்கு. சிலர் சில சமயங்களில் என்னைப் பார்ப்பார்கள்...நானும் பார்ப்பேன். பார்த்துப் பார்த்துப் பழகிய சிநேகிதிகள் எனக்கு ஏராளம்' பேசவோ பழகவோ நான் விரும்பியதில்லை. அவர்களில் சிலராவது விரும்பினார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக அந்த வட்டாரத்தில் நடமாடும் பெண்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும். எனக்கும் அவர்கள் எல்லோரையும் தெரியும். ஆனால்?... நான் பார்த்தும் என்னைப் பார்க்காத, நான் ஒருவன் அங்கு நின்று விழி வட்டம் போடுவதை அறியாத ஒரு பிறவி அங்கு உண்டு என்றால், அறுபதையும் கடந்த அந்த முதுகிழவி முத்தாயி ஒருத்திதான்' நான் அந்தக் காலனிக்குக் குடிவந்த ஏழு ஆண்டுகளாய் முத்தாயியை அறிவேன். பஞ்சுபோல் நரைத்த சிகை; பழுத்து வதங்கிய சருமம்; குழி விழுந்த தொங்கிய கன்னங்கள்; இன்னும் பற்கள் இருக்கின்றன; நல்ல உயரமானவளாய் இருந்திருக்க வேண்டும். --இப்பொழுது, வாழ்ந்த வாழ்வின் சுமையால் வளைந்து போயிருக்கிறாள். அவள் கண்கள்... அவற்றைத்தான் நான் பார்த்ததில்லையே... எங்கள் காலனியின் நடுவே இருக்கும் மணிக்கூண்டு காலை ஒன்பது மணிக்கு ஒலிக்க ஆரம்பிக்கும்போது அவள் வருவாள். அவள் நடையில் சதா ஒரு வேகம்; அவசரம். --வாழ்வைக் கடக்கப் பறந்தோடும் அவதியா, என்ன?...அவளது இயல்பே அப்படித்தான்' --வாழ்வு நடக்க நடக்க மாளாதது. ஏனென்றால் தனிப்பட்ட ஒருவருடையதா வாழ்க்கை? அது மனித சமூகத்தின் ஆதி அந்தமற்ற சரிதை' அதைப்பற்றியெல்லாம் அவள் சிந்திப்பதில்லை...ஏன், நேரமில்லையா? நேரம் உள்ளவர்களெல்லாம் சிந்திக்க முடியுமா? சிந்தனை' அதன் முழு அர்த்தத்தோடும் சொல்கிறேன்...அது விளக்க முடியாதது...சிந்தனை ஒரு வரப் பிரசாதம்' சிந்தனையின் ஆதியும் அந்தமும்...சிந்திக்கச் சிந்திக்க வியப்பாகத்தான் இருக்கிறது' அவளைப் பார்த்தால் எதைப்பற்றியும் சிந்திப்பவளாகத் தெரியவில்லை. என்ன சொன்னேன்'...ஆமாம்; முத்தாயியைப்பற்றி...அவள் தினசரி காலை ஒன்பது மணிக்கு வருவாள். அவசரம் அவசரமாக வருவாள். வரும்போதே... "பாலா...பாலா...நாழியாச்சே....பொறப்படலியா..." என்ற குரல் நாலு வீடுகளுக்குக் கேட்கும். பாலா என்ற இளஞ் சிறுவன் அந்த வீட்டிலிருந்து தோளில் தொங்கும் பையுடன் அவசரம் அவசரமாக ஒரு காலில் மேஜோடும் மற்றொரு காலில் ஷ்ஊஸ்உமாக நிற்பான்...அதையெல்லாம் அவள் கவனிக்கமாட்டாள். ஒரு காலில் மேஜோடும் ஒரு கையில் ஷ்ஊஸ்உமாக அவனைத் தூக்கிக்கொண்டு, அதை சரியாகவோ சரியில்லாமலோ அவன் காலில் மாட்டியவாறே, அடுத்த வீட்டு வாசலில் நின்று, "சங்கர்...சங்கர்" என்று அவள் கூவுவாள். சங்கர் அப்பொழுதுதான் சாப்பிட்டுக்கொண்டிருப்பான். "சீக்கிரம்...சீக்கிரம்" என்று முத்தாயி குரல் கொடுப்பாள். சாப்பிட்ட வாயைக் கழுவாமல்கூட அவன் ஓடி வருவான். அவனையும் அழைத்துக்கொண்டு அடுத்த வீட்டுக்குச் சென்று, "கௌரி...ராமு..." என்று அவள் கூச்சலிடுவாள். இப்படியாக இருபது முப்பது பிள்ளைகள் புடைசூழ அரைமணி நேரத்தில் காலனியைக் காலி செய்துவிட்டுப் போய்விடுவாள் முத்தாயி. அந்தச் சில நிமிஷங்களில், அந்தத் தெருவில் வானத்து மோகினியே கீழிறங்கி வந்தாலும் என் பார்வை அவள் பக்கம் திரும்பாது. குழந்தைகள்--ஆம்; அந்தக் கொத்துமலர்ப் பூங்கொடிகள்--கும்பல் கும்பலாகப் பவனி செல்வதைப் பார்த்துக்கொண்டே நிற்கும்போது துன்பத்திலும் விரக்தியிலும் காய்ப்பேறிய எனது நெஞ்சத்தில் வாழ்வின்மீது நம்பிக்கை சுரக்கும். நெஞ்சத்தில் காய்த்துப்போன திரடுகள் இளகிக் கனிவு பெறும். ஆமாம்: குழந்தைகள்' அவற்றின் அங்கங்களை, பவள அதரங்களை, பிரபஞ்ச சிருஷ்டியின் ரகசியங்களையெல்லாம், கவிஞனின் கற்பனைகளையெல்லாம் தோற்றோடச் செய்யும் மானிடச் சாதியின் பிஞ்சுப் பருவக் கனவுகள் மின்னும் அந்தக் குழந்தைக் கண்களை நீங்கள் கூர்ந்து பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் பேசும் அறிவாற்றலும் பிரதாபங்களும் அந்தக் கண்ணொளியின் முன்னே மண்டியிடத்தான் வேண்டும். இல்லையா?... இல்லாவிட்டால்...அட சீ' நீ என்ன மனிதன்'... --எனக்கு அந்த முத்தாயியின்மீது அளவு கடந்த வெறுப்பு' ஆம்; வெறுப்புத்தான்' அவள் என்ன மனுஷியா?...பெண்ணா?...தாயா?...சே' யந்திரம்' அந்தக் குழந்தைகளின் முகத்தை ஒருமுறை அவள் பார்த்திருப்பாளா? கனிவு ததும்ப ஒருமுறை பேசி இருப்பாளா' சற்றே கனிவுடன் நயமாக அழைத்துச் செல்கிறாளா? அந்தக் குழந்தைகளை, ஆட்டு மந்தைபோல் ஓட்டிச் செல்கிறாள். அதே மாதிரி கொண்டுவந்து வீடு சேர்க்கிறாள். அவர்களை அலங்கோலமாக, அவர்களின் அழகுத் தோற்றங்களை எல்லாம் கெடுத்து இழுத்துக்கொண்டு போகிறாளே... இவளை நம்பி, இவள் குரல் கேட்டவுடன் தங்களது குலக் கொழுந்துகளை அலங்க மலங்கக் கூட்டியனுப்புகிறார்களே, என்ன பெற்றோர்கள்' ஆமாம்; முத்தாயி ஒரு யந்திரம். அந்த யந்திரம் காலை ஒன்பது மணிக்குப் பிள்ளைகளை அள்ளிக்கொண்டு போகும்; மாலை நாலரை மணிக்கு அத்தனை குழந்தைகளையும் கொண்டு வந்து கொட்டும்' எங்கள் காலனிக்கு அடுத்த தெருவில் இருக்கும் 'கான்வென்'டில் அதற்காக அந்த யந்திரத்திற்குப் பதினைந்து ரூபாய் மாதச் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆயாள் என்ற பட்டம் பெற்ற அந்த யந்திரம்தான் முத்தாயி. அன்று வழக்கம்போல் நான் வராந்தாவில் நின்றிருந்தேன். அதோ, ஒரு வானவில் வருகிறது. அது ஒன்பதாம் நம்பர் வீட்டிலிருந்து வருகிறது... (நான் அந்தக் காலனியில் உள்ள குமரிகளுக்கெல்லாம் மானசிகமாகப் பெயர்கள் வைத்திருக்கிறேன். இவள் எப்பொழுதும் வர்ண பேதங்கள் நிறைந்த ஆடைகளையே அணிவாள்.) என்னைக் கடந்து செல்லும்போது அவள் நடையில் செயற்கையாக வருவித்துக்கொண்ட ஒரு வேகமும் 'படபட'ப்பும்' என்னை நெருங்க நெருங்க அவள் தலை தாழ்ந்து தாழ்ந்து குனிந்து போகும். அவளை எட்டிப் பிடிக்க வருவதுபோல் வருகிறாளே, இவள் தான் 'லைட் ஐஸ்'. --இவள் என்னைப் பார்க்காத மாதிரியே மார்பில் அடுக்கிய புத்தகக் குவியலைப் பார்த்தமாதிரி வருவாள். அருகே வந்தவுடன் நேருக்கு நேராய் ஒருமுறை விழிகளை உயர்த்திப் 'பளிச்' சென்ற பார்வையால் தாக்கி மீண்டும் விழிகளைத் தாழ்த்திக் கொண்டு போவாள்... --இருளில், சாலையில் வரும் ஒரு கார்...'திடும்' என ஒரு சிறு பள்ளத்தில் இறங்கி ஏறினால் எப்படி நம்மீது காரின் வௌிச்சம் விழுந்து தாழும்--அது போன்ற பார்வை--அத்தனை பெரிய கண்கள்' அதோ, அந்த எதிர்வீட்டுச் சன்னலில் கையிலொரு பத்திரிகையுடன் படிக்கும் பாவனையில் அமர்ந்து, என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறதே--ஓர் அகலக்கண்--அதுதான் 'போக்கஸ் லைட்' ' நடன அரங்கில் ஆடுபவளைச் சுற்றி விழுந்துகொண்டு இருக்குமே ஓர் ஔி வட்டம், அதுபோல இவளுடைய கண்கள் என்னையே துரத்திக் கொண்டிருக்கும். "பாலா...பாலா...நாழியாச்சு. பொறப்படலியா?..." என்ற முத்தாயியின் வறண்ட குரல் கேட்கிறது' இனிமேல் நான் ஏன் இந்தப் பெண்களைப் பார்க்கப் போகிறேன்? இதோ, இப்பொழுது ஓடி வரப்போகிறான் அந்த இளம் மதலை' எனது பார்வை முத்தாயி நின்றிருக்கும் வீட்டு வாசலையே நோக்கி நிற்கிறது' "பாலா, பாலா..." --உள்ளிருந்து பாலனின் தாய் வருகிறாள். "ஆயா, அவனுக்கு உடம்பு சரியில்லை; இன்னிக்கு வர மாட்டான்..." அவள் சொல்லி முடிக்கவில்லை; "சங்கர்...சங்கர்..."என்று கூப்பிட்டவாறு அடுத்த வீட்டுக்குப் போய்விட்டாள். --சீ, இவள் என்ன ஜன்மமோ' 'குழந்தைக்கு என்ன' என்று உள்ளே போய்ப் பார்க்கமாட்டாளோ?...பார்க்க வேண்டாம், 'உடம்புக்கு என்ன?' என்று கேட்கவாவது வேண்டாமோ' 'ஐயோ பாவம்' பாலனுக்கு உடம்புக்கு என்னவோ' என்று என் மனம் பதைத்தது. முத்தாயி வழக்கம்போல் மற்றப் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போனாள். மறுநாள்... முத்தாயி வந்தாள். "பாலா..பாலா..." "இன்னிக்கு வரமாட்டான்..." முத்தாயியின் குரல் அடுத்த வீட்டில் ஒலிக்கிறது. "சங்கர்...நாழியாச்சு..." "மணி' " "கௌரி...ராமு..." முத்தாயி போய்விட்டாள். மூன்றாம் நாள். முத்தாயி வந்தாள்... "பாலா...பாலா..." "இன்னிக்கும் ஒடம்பு ரொம்ப மோசமாக இருக்கு ஆயா'..." --பெற்றவளின் குரல் அடைத்தது. "சங்கர்...பொறப்படலியா?..." "மணி..." "கௌரி, ராமு..உம், சீக்கிரம்..." --அந்த யந்திரம் நகர்ந்தது' இப்படியே, நான்கு, ஐந்து, ஆறு நாட்களும் ஓடின... ஆறாம் நாள் இரவு. நான் ஒரு கனவு கண்டே. பொழுதெல்லாம் மழை பெய்துகொண்டே இருக்கிறது... மழையென்றால்...பிரளய கால வருண வர்ஷம்'... வீதியெல்லாம் வெள்ளத்தின் நீர் அலைகள் சுருண்டு மடிந்து புரள்கின்றன. அந்த வெள்ளத்தில் தலைவிரிகோலமாய் முத்தாயி வருகிறாள். முத்தாயியின் கோலம் முதுமைக் கோலமாக இல்லை. நடுத்தர வயதுள்ள ஸ்தீரியாக முத்தாயி வருகிறாள்... "ராசா...ராசா..." என்று திக்குகளையெல்லாம் நோக்கிக் கதறுகிறாள். வெற்றிடங்களை யெல்லாம் நோக்கிப் புலம்புகிறாள்... "ராசா...ராசா..." என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு நீரில் விழுந்து புரண்டு எங்கோ ஓடுகிறாள். வெள்ளம் சுருண்டு புரண்டு அலைகொழித்து மேலேறிச் சீறிப் பெருகுகிறது' அதோ. முத்தாயி ஓடுகிறாள்...இடுப்பளவு நீர் மார்பளவு உயர்கிறது...கைகளை அகட்டி வீசிப் போட்டுப் பாய்ந்து பாய்ந்து செல்கிறாள்...வெள்ளப் பெருக்கில் மூழ்கி மூழ்கிப் போகிறாள்... சற்று நேரம் ஒரே நிசப்தம்...பெருகி வந்த வெள்ளம், மாயம் போல், இந்திரமாசாலம்போல் வடிந்து மறைகின்றது... நீரோடி ஈரம் பரந்து வரிவரியாய், அலை அலையாய் வெள்ளத்தின் சுவடு படிந்த மணல் வௌியில், ஓர் இளம் சிறுவனை மார்புற அணைத்தவாறு பிலாக்கணம் வைத்து அழுதுகொண்டிருக்கிறாள் முத்தாயி... அவள் மடியில் கிடக்கும் சிறுவன் அடுத்த வீட்டுப் பாலனைப்போலவே இருக்கிறான்...நீரில் விறைத்த அச்சிறுவனின் கையில் ஒரு தூண்டில்' ஆமாம்; அவன் மீன் பிடிக்கச் சென்றானாம். "தண்ணியிலே போவாதே என் தங்கத்தொரெ ராசாவே பன்னிப் பன்னிச் சொன்னேனே இந்தப் பாவி சொல்லக் கேட்டாயோ...ஓ...ஓ..." என்ற முத்தாயியின் ஓலம் வயிற்றைக் கலக்கியது... திடுக்கிட்டு விழித்தேன்' கனவு கலைந்தது...எழுந்தேன்; உடல் நடுங்கியது. சன்னலைத் திறந்தேன்... இருள் விலகாத விடிவு நேரம்... பாலன் வீட்டு வாசலில் முகமறியாத மனிதர் பலர் வீற்றிருக்கக் கண்டேன்...தெருவெல்லாம் ஏதோ ஒரு சோக இருள் கப்பிக் கவிந்து அழுதுகொண்டிருந்தது. "பல் விளக்கப் போனாயோ பல் விளக்கப் போகயிலே--என் பாலாவே பழவப்படி சறுக்கிச்சோ பழவப்படி சறுக்கையிலே பாவி எமன் வந்தானோ?... மொகம் கழுவப் போனாயோ மொகம் கழுவப் போகயிலே--என் பாலாவே முத்துப்படி சறுக்கிச்சோ முத்துப்படி சறுக்கையிலே மூர்க்க எமன் வந்தானோ?" என்ற பாலனின் தாயின் குரல் என் நெஞ்சை அறைந்து உலுக்கியது... எனக்கு ஒன்றும் புரியவில்லை...இதுவும் கனவாக இருக்கக்கூடாதா என்று மனம் தவித்தது. மண்டையைச் சன்னலில் மோதினேன்...வலித்தது--ஆம்; இது கனவல்ல' "ஐயோ' பாலா'..." எங்கள் காலனியின் நடுவே உள்ள மணிக்கூண்டு ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது. தெருவில் ஜனங்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். மயானச் சங்கின் ஓலமும், சேகண்டியின் கால நாடியும் சங்கமித்துக் குழம்பி அடங்கின. பாலன் வீட்டில் மனிதர்கள் நிறைந்திருந்தனர். ஆம்; சாவு விரித்த வலையிலே நடந்தவாறே, வாழ்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஜனங்கள்' முத்தாயி வந்தாள்'...பாலன் வீட்டு வாசலில் வந்து நின்றாள். --'பாலா' என்று கூப்பிடவில்லை. --அசையாமல் வெறித்த பார்வையுடன் நின்றிருந்தாள்' முத்தாயியைக் கண்டவுடன் "ஐயோ...ஆயா'...பாலா போயிட்டானே'...நம்ம பாலா போயிட்டாண்டி'..."...அலறியவாறு பூமியில் விழுந்து புரண்டு கதறினாள் பாலனின் தாய்' முத்தாயி நின்றுகொண்டே இருந்தாள்' சித்த வௌியில் எத்தனை மேகங்கள் கவிந்தனவோ?... கண்களில் கண்ணீர் மழை பெருகிக்கொண்டே இருந்தது. அவள் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மரமாய் நின்றாள்; ..நின்று கொண்டே இருந்தாள்' மழை பெய்து கொண்டிருந்தது...கொட்டுகின்ற மழையில் முத்தாயி நின்றுகொண்டிருந்தாள்... நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. நான் குமுறும் இதயத்துடன் உள்ளே போய்ப் படுக்கையில் வீழ்ந்தேன். பாலாவுக்காக, அவன் மரணத்திற்காக வருந்தினேன். எனக்கு அன்று முழுவதும் ஒன்றும் ஓடவில்லை. ஒரு சமயம் அழுகை பலமாக ஒலித்ததை உள்ளிருந்தவாறே கேட்டேன்... ஆம்; அவனைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள்...நான் அதைக் காண விரும்பவில்லை... வெகுநேரம் கழித்துச் சன்னல் வழியாக வௌியே எட்டிப் பார்த்தேன். முத்தாயி நின்றுகொண்டிருந்தாள். அவளை யாருமே கவனிக்கவில்லை; நான்தான் கவனித்தேன். அது அவளுக்கு எப்படித் தெரிந்ததோ' 'சடக்'கென்று அவள் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். அவள் கண்களை நான் அன்றுதான் பார்த்தேன். குழந்தையின் கண்கள், கண்ணீர் நிரம்பித் தளும்பிற்று. "பாலா..." என்று என் உதடுகள் முணு முணுத்ததை அவள் எப்படித் தெரிந்து கொண்டாளோ? "பாலா மீன் பிடிக்கப் போயிருக்கான்" என்று என்னைப் பார்த்துக் கூறினாள்; நான் திடுக்கிட்டேன். அந்த வார்த்தையைக் கூறிவிட்டு அவள் அடுத்த வீட்டை நோக்கி நடந்தாள். "சங்கர்...சங்கர்...நாழியாயிடுச்சி; பொறப்படலியா?" என்ற அவளது குரலோசை கேட்கும்போது காலனி மணிக்கூண்டு நான்கு முறை ஒலித்தது... ஆம்? மாலை மணி நான்கு' எனக்கு ஒன்றுமே புரியவில்லை...அந்த மணிக் கூண்டின் மணியோசை மட்டும் நன்றாகப் புரிந்தது: "அவள் யந்திரமல்ல; யந்திரமல்ல, யந்திரமல்ல, யந்திரமல்ல'" ----- #11. டிரெடில் **1** 'டிரிங்... டிரிங்... டிங்...' -- மை பிளேட் சுற்றுகிறது. மை ரோலர்கள் மேலும் கீழும் ஓடுகின்றன. 'டங் - டட்டங்க்!' --இம்ப்ரஷன்! 'டடக்... டடக்... டடக்... டடக்...' -- மூங்கில் குச்சி போன்ற ஒரு கால் பெடலை மிதிக்கிறது. ஆம் - அந்த இயந்திரத்தின் உயிர் அதில்தான் இருக்கிறது! இந்தச் சப்தமேள சம்மேளத்தின் அர்த்தம்? - இருண்ட குகை போன்ற அந்தச் சிறிய அச்சுக்கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்! அந்த அச்சுக்கூடத்திற்கு வயசு இருபதுக்குமேல் ஆகிறது. அங்கே நடக்கிற சராசரி வேலை கலியாணப் பத்திரிகைதான். சமயா சமயங்களில் 'பில் புக்'குகள், 'லெட்டர் பேடு'கள், 'விஸிட்டிங் கார்டு'கள் இத்யாதி வேலைகளும் இடம் பெறும். அங்கிருப்பதெல்லாம் அந்த 'டிரெடி'லைத் தவிர நாலைந்து 'ஜாப் டைப்கேஸ்'களும் ஒரு சிறிய 'கட்டிங் மிஷி'னும்தான்! - சின்ன பிரஸ்தானே? அப்படி என்ன பிரமாத லாபம் கிடைத்துவிடப் போகிறது? ஆனால் பிரஸ்ஸின் முதலாளியான முருகேச முதலியார் மட்டும் இருபது வருஷங்களூக்குப் பின் எப்படியோ தமக்கென்று ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு விட்டார். கம்பாஸிட்டர் + பைண்டர் + மெஷின்மேன் எல்லாம் - அதோ, டிரெடிலின் அருகே நின்று 'வதக் வதக்'கென்று காலை உதைத்துக் கொள்ளுகிறானே, வினாயகமூர்த்தி - அவன்தான்! மாதம் இருபது ரூபாய்க்குப் பஞ்சமில்லை. சில சமயங்களில் முதலியாரின் 'மூடு' நன்றாக இருந்தால் டீ குடிக்க, 'நாஸ்டா' பண்ண என்ற பேரில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா வரும்படியையும் சேர்த்தால் நிச்சயம் மாதம் முப்பது ரூபாய்க்கு மோசமில்லை! வினாயகமூர்த்தி அந்த அச்சுக்கூடத்தில் 'ஸ்டிக்' பிடித்துக் 'கம்போஸ்' செய்ய ஆரம்பித்தது பன்னிரண்டு வருடங்களுக்கு முந்தி. அவன் முதன்முதலில் செய்த முதல் கம்போஸ் ஒரு கலியாணப் பத்திரிகைதான். அன்று முதல் எத்தனையோ பேருக்கு அவன் கையால் எத்தனையோ விதமான கலியாணப் பத்திரிகைகள் அச்சடித்துக் கொடுத்திருக்கிறான். ஆனால் தனக்கு..? 'எத்தினி பேருக்கு நம்ப கையாலே கலியாண நோட்டிஸ் அடிச்சிக் குடுத்திருக்கோம்... ஹ்ம்...' இவ்விதம் நினைத்துப் பெருமூச்சு விடும் வினாயகத்துக்கு இப்போது வயது முப்பது ஆகிறது. 'இந்த ஓட்டல்லே போடற ஆறணா சோத்தை எவ்வளவு நாளைக்கு துன்னுகிட்டுக் கெடக்கிறது?...' வினாயகத்தின் கை 'பிரேக்'கை அழுத்திற்று. 'பெட'லை உதைத்த கால் நின்றது. டிரெடிலின் ஓட்டம் நின்றது... -- அருகிலுள்ள மை டின்கள் வைக்கும் ஸ்டாண்டின் சந்தில் அவன் விரல்கள் எதையோ துழாவின. விரலில் சிக்கிய பொடி மட்டையைப் பிரித்து ஒரு சிமிட்டா பொடியை உறிஞ்சியவுடன், பொடியைத் துடைத்த புறங்கை அவன் மூக்கின் மீது மையைப் பூசியது! அதைக் கவனிக்காமல் அருகே காயப்போட்டிருக்கும் பத்திரிகைகளில் ஒன்றை அவன் எடுத்துப் பார்த்தான். 'மய்யிதான் இன்னா ஈவனா சப்ளை ஆயிருக்கு... எதுக்கும் அந்தக் கீழ் ரோலரை மாத்திட்டா 'ஸம்'முனு இருக்கும்... இம்ப்ரஷன் கொஞ்சம் கொறைக்கலாமா?... த்ஸ் உம் பரவாயில்ல... ஐயய்யோ!... இந்த எழுத்து இன்னா படலையே! மொக்கையா, இன்னா எழவு? கொஞ்சம் ஒட்டிக்கினா சரியாப் பூடும்." இந்தச் சமயத்தில் 'ஏய், இன்னாடா மிசினை நிறுத்திட்டே? அந்த ஆளு இப்ப வந்துடுவான்டா!" என்று முதலியார் குரல் கொடுத்தார். "ஒரு நாலணா குடு ஸார்! காத்தாலே நாஸ்டா பண்லே; போயிட்டு வந்து மிச்சத்தைப் போடறேன்..." "சீக்கிரம் வா. வேலெ நெறைய கெடக்கு!" என்று நாலணாவை எடுத்து மேசைமீது வைத்தார் முதலியார். "ஆவட்டும், சார்!" -- இது அவனது வழக்கமான பதில். காசை எடுத்துக்கொண்டு டீக்கடைக்கு நடந்தான். **2** ஒரு நாள் - பிரஸ்ஸில் வினாயகத்தைத் தவிர வேறு யாருமில்லை. அன்றைய வேலையில், இரண்டு கலியாணப் பத்திரிகைகளைக் கம்போஸ் செய்து 'புரூப்' போட்டு வைப்பதும், திருத்தி வைத்திருக்கும் வாழ்த்துப் பத்திரத்தைக் 'கரெக்ஷன்' செய்து அச்சேற்ற வேண்டியதுதான் பாக்கி. 'அதுக்கு வேற பேப்பர் வெட்டணும்' என்று முனங்கியபடியே டிரெடிலில் மாட்டியிருந்த 'செஸ்'ஸைக் கழற்றும்போது அவனுக்குத் திடீரென ஓர் ஆசை - சாதாரண ஆசை, சிறுபிள்ளைத்தனமான ஆசை - முளைத்தது. செஸ்ஸைக் கழற்றி ஸ்டோன் மீது போட்டான் - அதுவும் ஒரு கலியாணப் பத்திரிகைதான் - மேட்டரில் மாப்பிள்ளையின் பெயரை அடுக்கியிருந்த டைப்களைப் பிரஷ்ஷால் துடைத்தான். மை நீங்கிய அச்சுக்கள் பளபளத்தன... -- 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' என்ற எழுத்துக்கள் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல் இடம் வலம் மாறித் தெரிந்தன. 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்...' -- 'ஷீட்டிங் ஸ்டிக்'கை ஓரத்தில் நிறுத்தி 'மல்டி'க் கட்டையால் 'மடார் மடார்' என்று இரண்டு போடு போட்டு, வால் கட்டைகளைச் சற்று தளர்த்திய பின் 'பிஞ்ச்ச'ரை எடுத்து, பார்டரை அடுத்திருந்த 'குவாடு'களை அழுத்தி, டைப்புகளை நெம்பி, 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' என்ற பன்னிரண்டு எழுத்துக்களை லாகவமாக வரிசை குலையாமல் தூக்கிக் கேஸ்கட்டை மீது வைத்தான். -- அவன் உதடுகளில் லேசாக ஒரு குறும்புச் சிரிப்பு நௌிந்தது. அவன் கைகள் 'பரபர'வென வேறு பன்னிரண்டு எழுத்துக்களைக் கேஸிலிருந்து பொறுக்கி விரலிடுக்கில் நிறுத்தின. -- பயல், சிரஞ்சீவியை சாப்பிட்டுவிட்டான்! 'கி. வினாயகமூர்த்திக்கும்' என்று சேர்த்துப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான். -- 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' இருந்த இடத்தில் 'கி. வினாயகமூர்த்திக்கும்' என்ற எழுத்துக்கள் இடம் பெற்றன! ஸ்டோன் மீது கிடந்த செஸ்ஸை முடுக்கி, இரண்டு முறை தூக்கித் தூக்கித் தட்டிப் பார்த்துவிட்டு டிரடிலில் மாட்டினான். சற்று நேரம் மை இழைத்தபின் 'வேஸ்ட்ஷீட்' ஒன்றை எடுத்து டிரெடிலில் 'பெட்'டின் மீது வைத்துச் சுருக்கம் நீங்குவதற்காக இரண்டு முறை விரலால் தடவி விட்டான். காகிதத்தின் சுருக்கம் இல்லாவிட்டால் கூட, பேப்பரை 'பெட்'டின் மீது வைத்ததும் டிரெடிலின் தாளகதிக்கேற்ப அவசரத்தோடு அவசரமாய்க் காகிதத்தை ஒருமுறை தடவிக் கொடுப்பது அவன் வழக்கம்! அடுத்தாற்போல் இடது கை பிரேக்கை மாற்றியதும் 'டங்... டட்டங்க்' என்ற இம்ப்ரஷன் சப்தம் எழுந்தது. -- 'பெட்'டிலிருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான். 'கி. வினாயகமூர்த்திக்கும் - சௌபாக்கியவதி அனுசூயாவுக்கும்' என்ற எழுத்துக்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். பத்திரிகையிலிருந்து பெற்றோர் பெயரோ, ஜாதிப் பட்டமோ அவன் பிரக்ஞையில் இடம் பெறவே இல்லை! "சரி. கையோட இதை 'டிஸ்ட்ரிபூட்' போட்டுடுவோமே..." -- செஸ்ஸைக் கழற்றித் துடைத்துச் சுத்தம் செய்து, மேட்டரை எடுத்துக் 'காலிப்' பலகையில் வைத்துக் கொண்டு 'டிஸ்டிரிபூட்' போட முனைந்தான். "இன்னாடா, நீ பண்ற வேலையே ஏடாகோடமா கீதே. உன்னெ யார்ரா 'டிஸ்டிரிபூட்' போடச் சொன்னாங்க?... நான் இன்னா வேலெ சொல்லிட்டுப் போனேன். நீ இன்னா வேலெ செஞ்சிக்கினு கீறே! அதெ முடிச்சிப்பிட்டு அந்த வாய்த்துப் பத்திரத்தை கரெக்ஷன் செஞ்சி மிஷின்லே ஏத்திக்க. ஆமா, அது அவசரம்!" என்று முதலியார் இரைந்தார். "ஆவட்டும், ஸார்" என்று வேலையில் ஆழ்ந்தான் வினாயகம். "மணி இன்னா ஆனாலும் சர்த்தான், இன்னிக்கு அத்தெ முடிச்சிடணும்..." -- இது முதலியாரின் உத்தரவு. **3** மணி மூன்றுக்கு மேலாகி விட்டது. அச்சேற்றி முடித்த கலியாணப் பத்திரிகை மேட்டர் டிஸ்டிரிபூட் போட்டாகி விட்டது. வாழ்த்துப் பத்திர வேலை ஆக வேண்டும். கரங்கள் மும்முரமாய் வேலையில் முனைந்திருக்கின்றன; மனம் தனக்கும் ஒரு கலியாணப் பத்திரிக்கை அச்சடிக்கும் 'அந்த நாளி'ல் லயித்திருக்கிறது... 'சூளை அக்கா கையிலே சொன்னா, சொந்தத்திலே ஒரு பொண்ணெப் பாத்து முடிச்சிடும்..." சூளையில் வினாயகத்தின் ஒன்றுவிட்ட தமக்கை ஒருத்தி இருக்கிறாள். ஹீம்... பொண்ணுக்கா பஞ்சம்? பொழப்புக்குத்தான் பஞ்சம்! மொதல்ல ஒரு நூறு ரூபாயாச்சும் வேணும்; அப்புறம் மாசாமாசம் நாற்பது ரூபா வேணாம்?...' -- திடீரென அவனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது! சிரித்துவிட்டான்! "இன்னாடா, பித்துக்குளியாட்டமா நீயே சிரிச்சிக்கிறே" என்றார் முதலியார். "நீதான் பாரு ஸார்...!" என்று வாழ்த்துப் பத்திரத்தின் புரூப்பை அவரிடம் காட்டினான் அவன். அதைப் பார்த்த முதலியாரும் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். 'வாழ்வின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள மனிதனுக்கு அவசியம் ஒரு துணை தேவை' என்ற வாசகத்தில் உள்ள 'துணை'யில் 'ணை'க்குப் பதிலாக... -- அச்சுப் பேயின் அந்தக் கூத்தை என்னவென்று சொல்ல?... தரக்குறைவான இந்த ஹாஸ்யத்தில் கலந்து கொண்டு சிரித்த முதலியாருக்குத் திடீரென, தாம் ஒரு முதலாளி என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டது. "சிரிப்பு இன்னடா, சிரிப்பு? காலிப்பயலே! வேலையைப் பாருடா, கய்தே!" என்று அவருடைய 'கௌரவம்' குரல் கொடுத்தது. "ஆவட்டும், ஸார்!" என்ற அந்தத் தொழிலாளியின் 'சிறுமை' அதற்கு அடங்கிப் பணிந்தது! **4** இரவு மணி ஏழு! டிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் வாழ்த்துப் பத்திரம் 'ஸ்டிரைக்' ஆகி முடியவில்லை. வீட்டுக்குப் புறப்பட்ட முதலியார் வினாயகத்தின் அருகே வந்து நின்று வேலையைக் கவனிக்கிறார். அவன் மேலெல்லாம் வியர்வைத் துளிகள் அரும்பி உதிர்ந்து வழிகின்றன. 'டடக்... டடக்... டடக்.. டடக்..' கால் 'வதக், வதக்'கெனப் பெடலை உதைக்கிறது. கைகள் பறந்து பறந்து டிரெடிலில் பேப்பரைக் கொடுப்பதும் வாங்குவதுமாக இருக்கின்றன. 'பாவம், மாடு மாதிரி வேலை செய்கிறான்!' என்று மனசில் முனகிக்கொண்டே முதலியார், "இந்தா, இதை ராத்திரி சாப்பாட்டுக்கு வெச்சிக்க... இந்தா சாவி, வரும்போது பூட்டிக்கினு வா... நா போறேன்!" என்று சாவியோடு ஒரு எட்டணா நாணயத்தையும் சேர்த்துக் கொடுத்தார். -- முதலாளியின் மனசைப் புரிந்து கொள்வதில் வினாயகம் அதி சமர்த்தன். "ஸார்...!" என்று பல்லைக் காட்டினான். "இன்னாடா, சும்மா சொல்லு!" என்று முதலியார் சிரித்தார். "ஞாயித்திக்கெயமை, எங்க அக்கா வூட்டுக்குப் போயிருந்தேன்.. அங்கே ஒரு பொண்ணு இருக்காம்..." அதற்கு மேல் அவனால் சொல்ல முடியாமற் போனதற்குக் காரணம், விஷயம் பொய் என்பதல்ல - வெட்கம்தான்! 'அடடே, கலியாண சமாச்சாரமா?... அடி சக்கை, நடக்க வேண்டியதுதான்!" என்று முதலியாரும் குதூகலித்தார். "அதுக்கு அட்வான்ஸா ஒரு நூறு ரூபா..." "உம்... உம் - அதுக்கென்னா, பார்ப்போம். நீ மத்த விஷயமெல்லாம் பேசி முடி!" என்று சொன்னதும் வினாயகத்தின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை இல்லை. வௌியில் போகும்போது முதலியார் தமக்குள் சொல்லிக் கொண்டார்! 'பாவம், பயலுக்கு வயசாச்சி - பதினெட்டு வயசிலே நம்மகிட்டே வந்தவன் - நம்மைத் தவிர அவனுக்குத்தான் வேறே யாரு? - ஒரு கலியாணம்னு செஞ்சி வைக்க வேண்டியதுதான்!' **5** பிரஸ்ஸில் டிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது! 'டக் - டக் - டடக் - டடக் -டடக் - ' திடீரென வினாயகத்தின் பெருந்தொடைக்கு மேலே அடி வயிற்றுக்குள்ளே, குடல் சரிந்து கனன்றது போல், குடற் குழாய் அறுந்து தொய்ந்ததுபோல் ஒரு வேதனை... -- "ஆ!" என்று அவன் வாய் பிளந்தது. அவன் கால் டிரெடிலின் பெடலிலிருந்து 'படீ'ரென விலகியது. கால் விலகிய வேகத்தில், தானே ஓடிய டிரெடிலின் பெடல் 'தடதட'வென அதிர்ந்து ஓய்ந்தது! வினாயகத்துக்கு மூச்சு அடைத்தது. கேஸ்மீது சாய்ந்து பற்களைக் கடித்தவாறு அடி வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டான். நெஞ்சில் என்னவோ உருண்டு அடைப்பது போலிருந்தது - மூச்சுவிடவே திணறினான். மெள்ள மெள்ள நகர்ந்து அருகிலிருந்த பானையிலிருந்து ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்துக் குடித்தான். -- வலி குறைந்தது; ஆனால், வலித்தது! 'இன்னம் கொஞ்சம்தான்; போட்டு முடிச்சிட்டுப் போயிடலாமே?...' முக்கி, முனகி,கால்மாற்றி, பெருமூச்செறிந்து, பல்லைக் கடித்தவாறு, நிறுத்தி நிறுத்தி ஒருவாறாக வாழ்த்துப் பத்திரம் பூராவும் அடித்து முடித்து விட்டான். டிரெடிலிருந்து செஸ்ஸைக் கழற்றக்கூடப் பொறுமையில்லை... -- கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு நடந்தான். நடக்க முடியவில்லை; வலி அதிகரித்தது... வயிற்றில் ஏதோ ஒன்று, இருக்க வேண்டிய இடத்திலிருந்து வேறு எதனுடைய இடத்திற்கோ இடம் மாறி, இடம் பிறழ்ந்து, வேறு எதனுடைய வழியிலோ வந்து அடைத்துக் கொண்டது போல... "அம்...மா" -- அவனால் வலியைப் பொறுக்க முடியவில்லை. பக்கத்திலிருந்த டாக்டர் வீட்டுக்கு ஓடிப்போய்... இல்லையில்லை... துடித்துத் துடித்துச் சாடிப்போய் விழுந்தான். **6** வினாயகத்திற்கு 'ஹெர்ன்யா'வாம். டாக்டரும் முதலியாரும் சேர்ந்து அவனைச் சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அவனுடைய உடல், வைத்திய மாணவர்களின் ஆராய்ச்சிப் பொருளாகியது. டாக்டர்கள் அவனைப் பரிசீலிப்பதற்குப் பதிலாகத் தங்கள் புதிய முறைகளை அவன் மீது பிரயோகம் செய்து தங்களுடைய திறமைகளைப் பரிசீலித்துக் கொண்டனர்... -- நோய்... வேதனை... அவமானம்! நாட்கள் ஓடின. கடைசியில் அவனுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் ஆப்ரேஷன் நடந்தது. அதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்தது. கடைசியில் ஒரு மாதத்துக்குப் பின் ஒருவாறாக அவனுக்கு விடுதலை கிடைத்தது. ஆஸ்பத்திரியை விட்டு வௌியேறும்போது அவனுக்கு டாக்டர் சொன்ன புத்திமதி அவன் ஹிருதயத்தினுள்ளே சப்தமில்லாமல் ஒரு அதிர்வேட்டை வெடித்தது. 'நீ கல்யாணம் செய்து கொள்ளாதே!.. உனக்கே தோணாது... யாராவது கட்டாயப்படுத்தினாலும்...' -- அவன் காதுகள் அதற்குமேல் எதையும் கிரகிக்கவில்லை! **7** வினாயகம் மீண்டும் வேலைக்கு வந்து விட்டான். இருண்ட குகை போன்ற அந்தப் பிரஸ்ஸீக்குள் புகுந்து ஒரு மாசமாய்ப் பிரிந்திருந்த டிரெடிலைப் பார்த்தான்; கேஸைப் பார்த்தான்; ஸ்டிக்கைப் பார்த்தான்.. -- மனசில் என்ன தோன்றியதோ? - டிரெடிலைக் கட்டிக் கொண்டு பெருமூச்செறிந்தான்... "அதோ, அந்தக் கலியாணப் பத்திரிகை முடுக்கி வச்சிருக்கு. அதை மிஷின்லே ஏத்திக்கோ. நீ இல்லாம ஒரு வேலையும் நடக்கலேடா!... மத்தப் பசங்க எல்லாம் பிரயோசனமில்லே; ஒனக்கு அடுத்த மாசத்திலேந்து சம்பளத்திலே பத்து ரூவா கூட்டியிருக்கேன். நீ கேட்டியே கலியாணத்துக்குப் பணம் பதினைஞ்சாம் தேதிக்கு மேலே வாங்கிக்க... இன்னடா, சந்தோஷம்தானே?" என்று முதலியார் கண்களைச் சிமிட்டினார். அவன் தலையைத் திருப்பிக் கொண்டான். அவனையறியாமல் கைகளிரண்டும் முகத்தைப் புதைத்தன; உடல் குலுங்கிற்று - அழுதானா?... "பயலுக்கு ரொம்ப வெக்கம்!" என்று சிரித்தார் முதலியார். அவன் மௌனமாக டிரெடிலின் அருகே சென்று யாரோ கம்போஸ் செய்து வைத்திருந்த யாரோ ஒருவருடைய கலியாணப் பத்திரிகையை மனசில் விருப்போ வெறுப்போ சற்றுமின்றி, யந்திரம்போல் மெஷினில் ஏற்றி, காகிதங்களை ஸ்டான்டின்மீது எடுத்து வைத்துக் கொண்டு, மை இழைக்க ஆரம்பித்தான்... --'டடக்... டடக்...' அவனது கால் பெடலை மிதித்தது. 'டங்... டட்டங்..!' -- இம்ப்ரஷன்... அச்சில் வந்தது ஒரு கலியாணப் பத்திரிகைதான்! மிஷினை நிறுத்திவிட்டு, கேஸ்களுக்கிடையில் செருகி வைத்திருந்த ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்தான்... கி.வினாயகமூர்த்திக்கும் - சௌபாக்கியவதி அனுசூயாவுக்கும்... -- ஆமாம்; அந்த 'வேஸ்ட் ஷீட்' தான்... அன்று வயிறு குலுங்க அவனைச் சிரிக்க வைத்த அந்த விளையாட்டுப் பத்திரிகைதான்... அதன் மீது, அவன் கண்களில் ஊற்றுப் போல் சுரந்து கரித்த இரண்டு வெப்பமிக்க கண்ணீர்த்துளிகள் விழுந்து தெறித்தன!.. "இன்னாடா வினாயகம், மிஷின் நிக்குது... அவன் வந்துடுவானே... அதுக்குள்ளே முடிச்சிடணும்!" என்றார் முதலியார். "ஆவட்டும் ஸார்..." "டடக்... டடக் - டடக்... டடக்..." -- ஆம்; இரண்டு 'டிரெடில்'களும் இயங்க ஆரம்பித்து விட்டன! ----- #12. பிணக்கு மெட்டியின் சப்தம் 'டக் டக்'கென்று ஒலித்தது. வளையொலி கலகலத்தது. கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து வலது புறமும், நான்கு வயதுப் பேத்தி விஜி இடது புறமும் நித்திரையில் ஆழ்ந்திருக்க நடுவே படுத்திருந்த கைலாசம் பிள்ளை தலையை உயர்த்திப் பார்த்தார். கையில் பால் தம்ளருடன் மருமகள் சரஸா மகனின் படுக்கையறைக்குள் நுழைவது தெரிந்தது. தன்மீது விழுந்த பார்வையால் சரஸாவின் தலை கவிழ்ந்தது! கிழவருக்குக் கொஞ்சம் குறும்புதான். கைலாசம் பிள்ளையின் பார்வை அவளைப் பின் தொடர்ந்து சென்றது. அவள் அறைக்குள் நுழைந்தாள். 'கிரீச்' சென்ற ஒலியுடன் கதவு மூடியதும் மேலே செல்ல முடியாமல் அவரது பார்வை கதவில் முட்டிக் கொண்டது. மூடிய கதவின் மீது ஒரு பெண்ணுருவம் சித்திரம் போல் தெரிந்தது. வயது பதினாறுதான் இருக்கும். மழுங்கச் சீவிப் பின்னிய சிகையில் உச்சி வில்லை, தளர்ந்து துவளும் ஜடையில் திருகு வில்லை, நெற்றியில் முத்துச் சுடரை அள்ளி விசிறும் சிட்டியும், பவழ உதடுகளுக்குமேல் ஊசலாடும் புல்லாக்கும் முழங்கைவரை இறங்கிய ரவிக்கையோடு, சரசரக்கும் சரிகை நிறைந்த பட்டுப் புடவை கோலமாக, கருமை படர்ந்து மின்னிய புருவக் கொடிகளின் கீழாய், மை தட்டிப் பளபளக்கும் பெரிய விழிகள் மருண்டு நோக்க, இளமையும் மருட்சியும் கலந்து இழையும் வாளிப்போடும், வனப்போடும், நாணமும் நடுக்கமுமாய் நிற்கும் அந்தப் பெண்... ஆமாம்; தர்மாம்பாள் ஆச்சியின் வாலைப் பருவத் தோற்றம் தான். அது, அந்த உருவம், மூடிய கதவிலிருந்து இறங்கி அவரை நெருங்கி வந்தது. வெட்கம், பயம், துடிப்பு, காமம், வெறி, சபலம், பவ்யம், பக்தி, அன்பு - இத்தனையும் ஓர் அழகு வடிவம் பெற்று நகர்ந்து வருகிறது - கைலாசம் தாவி அணைக்கப் பார்க்கிறார். சமையல் அறை வேலையெல்லாம் முடித்துக் கொண்டு, கூடத்திற்கு வந்த தர்மாம்பாள் பேரப் பிள்ளைகளின் அருகே பாயை விரித்தாள். அருகே ஆளரவம் கேட்கவே நினைவு கலைந்த பிள்ளை மனைவியைப் பார்த்தார். தலை ஒரு பக்கம், கால் ஒரு பக்கமாகப் போட்டபடி உறங்கும் பெரிய பையனைப் புரட்டிச் சரியாகக் கிடத்தினாள். "பிள்ளையோ லெச்சணமோ? பகலெல்லாம் கெடந்து ஆடு ஆடுன்னு ஆடறது, ராவுலே அடிச்சிப் போட்டாப்பிலே பெரக்கனையே இல்லாம தூங்கறது. அடாடா... என்னா ஆட்டம்! என்னா குதிப்பு!.." என்று அலுத்துக் கொண்டே பேரனின் முதுகைத் தடவிக் கொடுத்தாள். ஏக புத்திரன் கண்ணனின் சீமந்த புத்திரனல்லவா? "வயசு எட்டு ஆகுது... வயசுக்குத் தகுந்த வளத்தியா இருக்கு?... சோறே திங்க மாட்டேங்கறான்..." என்று கவலையுடன் பெருமூச்சு விட்டாள் தர்மாம்பாள். இளையவள் விஜயா, நான்கு வயதுச் சிறுமி. எல்லாம் பாட்டியின் வளர்ப்புத்தான் - பாயை விட்டுத் தரையில் உருண்டு கிடந்தாள். அவளையும் இழுத்துப் பாயில் கிடத்தினாள். "ஹீம் பாட்டி" என்று சிணுங்கினாள் குழந்தை. "ஒண்ணுமில்லேடி கண்ணூ... தரையிலே கெடக்கியே. உம் தூங்கு" என்று முதுகில் தட்டிக் கொடுத்தாள். கைலாசம், தனது பசுமை மிக்க வாலிபப் பிராய நினைவுகளில் மனசை மேயவிட்டவராய் மௌனமாக அமர்ந்திருந்தார். "நீங்க ஏன் இன்னும் குந்தி இருக்கீங்க... உங்களுக்கும் ஒரு தாலாட்டுப் பாடணுமா?... பாலைக் குடிச்சிட்டுப் படுக்கக் கூடாதா? கொண்டு வந்து வச்சி எத்தினி நாழி ஆவுது... ஆறிப் போயிருக்கும்..." என்று சொல்லிக் கொண்டே கலைந்து கிடந்த அவரது படுக்கையை ஒழுங்கு படுத்தினாள். "கொஞ்சம் ஒன் கையாலே அந்தத் தம்ளரை எடுத்துக் குடு." பால் தம்ளரை வாங்கும்போது அவள் கையைப் பிடித்துக் கொண்டார். "ஆமா படுத்துத் தூங்குடாங்கிறியே, எந்தச் சிறுக்கி மவ எனக்கு வெத்திலை இடிச்சிக் குடுத்தா" என்று அவள் கையை விடாமல் சிரித்துக் கொண்டே கேட்டார். "சிரிப்புக்குக் கொறைச்சல் இல்லே; பிள்ளை இல்லாத வீட்டிலே கெழவன் துள்ளி வெளையாடினானாம்... கையை விடுங்க." "யாருடி கெழவன்...? நானா?" என்று மனைவியின் கன்னத்தில் தட்டியபடி சிரித்தார். "இல்லே. இப்பத்தான் பதினேழு முடிஞ்சி பதினெட்டு நடக்கு, பொண்ணு ஒண்ணு பாக்கவா?" "எதுக்கு நீதான் இருக்கியே?..." அவள் முந்தியைப் பிடித்து இழுத்தார்... "ஐய, என்ன இது?" மறுபடியும் சிரிப்புத்தான். கிழவர் பொல்லாதவர்... பாலைக் குடித்த பிறகு, உடல் முழுதும் வேர்த்தது. துண்டால் உடம்பைத் துடைத்துக் கொண்டு, "உஸ் அப்பா, ஒரே புழுக்கம். அந்தப் பாயைக் கொண்டு போய் முத்தத்திலே விரி... நா வெத்திலைச் செல்லத்தை எடுத்திட்டு வாரேன்" என்று எழுந்தார். தர்மாம்பாள் பாயைச் சுருட்டிக் கொண்டு கூடத்து விளக்கை அணைத்தாள். முற்றத்தில் பளீரென்று நிலா வௌிச்சம் வீசிய பாகத்தில் பாயை உதறி விரித்தாள். "உஸ்... அம்மாடி, என்னமா காத்து வருது..." என்று காலை நீட்டிப் போட்டு உட்கார்ந்தாள். மேலாக்கை எடுத்து, முன் கையிலும், கழுத்திலும் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள். ரவிக்கையின் பித்தானைக் கழற்றி விட்டு முதுகுப் புறத்தை உயர்த்திக் கையிலிருந்த காம்பினால் பின்புறத்தைச் சொறிந்து கொண்டாள். கைலாசம் பிள்ளை, மனைவியின் அருகே அமர்ந்து நிலவெரிக்கும் வான் வௌியை வெறித்துப் பார்த்தார். ஆகாச வௌியில் கவிந்து மிதந்து செல்லும் மேகத்திரள்கள் நிலவினருகே வரும்போது ஒளிமயமாகவும், விலகிச் செல்கையில் கரிய நிழற் படலங்களாகவும் மாறி மாறி வர்ண ஜாலம் புரிந்தன. இந்த நிலவொளியில் ஆம்; இதே நிலவுதான் காலம் எத்தனையானாலும் நிலவு ஒன்றுதானே. இந்த நிலவில், பாட்டியின் மடியில் அமர்ந்து கதை கேட்டுக் கொண்டு பால் சோறு உண்ட பருவம் முதல், தனக்கு வாய்த்த அருமை மனைவி தர்மாம்பாளின் மடியில் தலை சாய்த்து இன்பக் கனவுகளில் மயங்கியபடியே தாம்பூலம் வாங்கிக் கொண்டதெல்லாம்... அந்த நிகழ்ச்சிகளெல்லாம், நிலவில் படிந்த மேகங்கள் ஒளி பெறுவது போன்று நினைவில் கவிந்து ஒளி பெற்று ஜ்வலித்து, பிறகு விலகி குறைந்து, ஒளி இழந்து கரிய இருள் நிழலாய் மாறி நகர்ந்தன. மேகம் எங்கே? எங்கோ இருக்கும் நிலவு எங்கே? நினைவு எங்கே? இப்பொழுது தான் இருக்கும் நிலை எங்கே?... நினைத்தால்தான் நினைவா? நினைக்காதபோது நினைவுகள் எங்கு இருக்கின்றன? நினைவு ஏன் பிறக்கிறது? எப்படிப் பிறக்கிறது... நினைவு!... அப்படியென்றால்?... நினைப்பதெல்லாம் நடந்தவைதானா? நடக்காதனவற்றை நினைப்பதில்லையா? நினைப்பு என்பது முழுக்கவும் மெய்யா? பொய்யை, ஆசைகளை, அர்த்தமற்ற கற்பனைகளை, அசட்டுக் கற்பனைகளை, நினைத்து நினைத்து நினைவு என்ற நினைப்பிலேயே நிசமாவதில்லையா? "டொடக்... டொடக்" தர்மாம்பாளின் கையிலிருந்த பாக்கு வெட்டி இரவின் நிசப்தத்தில் பாக்கை வெட்டித் தள்ளும் ஒலி... கைலாசம் தன் மனைவியைக் காணும்போது தன்னையும் கண்டார். தர்மாம்பாள், உள்ளங் கையில் வைத்திருந்த வெற்றிலையில், உறைந்து போயிருந்த சுண்ணாம்பைச் சுரண்டி வைத்துத் திரட்டி, பாக்கையும் சேர்த்து, இரும்புரலில் இட்டு 'டொடக் டொடக்' கென்று இடிக்க ஆரம்பித்தாள். கைலாசத்தின் நாவு பற்கள் இருந்த இடத்தைத் துழாவியது. 'உம்.. எனக்கு எப்பவுமே பல்லு கொஞ்சம் பெலகீனம்தான்...' உடம்பை ஒரு முறை தடவிப் பார்த்துக் கொண்டார். முண்டாவையும் புஜங்களையும் திருகிக் கைகளை உதறிச் சொடக்கு விட்டுக் கொண்டார். ரோமம் செறிந்த நெஞ்சிலும் புஜங்களிலும் சருமம் சற்றுத் தளர்ந்திருந்தாலும் தசை மடிப்புக்கள் உருண்டு தெரிந்தன. கைலாசம் உண்மையிலேயே திடகாத்திரமான மனிதர்தான். உடம்பில் அசுர வலு இருந்த காலமும் உண்டு; இப்பொழுது நிச்சயம் ஆள் வலு உண்டு! போன வருஷம்தான் சஷ்டியப்த பூர்த்தி... தர்மாம்பாளுக்கு ஐம்பதுக்கு மேல் அறுபதுக்குள். அவளுக்கு மூங்கில் குச்சி போல் நல்ல வலுவான உடம்புதான். ஒல்லியாயிருந்தாலும் உடலில் உரமும் உண்டு... இல்லாவிட்டால் ஏறத்தாழ நாற்பத்தைந்து வருஷமாக அந்த உடம்புக்கு ஈடு கொடுக்க முடியுமா? கிழவரின் கை மனைவியின் தோளை ஸ்பரிசித்தது... "என்ன?... கொஞ்சுறீங்க, வெத்திலையைப் போட்டுக் கிட்டுப் படுங்க..." என்று இடித்து நசுக்கிய வெற்றிலைச் சாந்தை அவரது உள்ளங்கையில் வைத்தாள்... மீதியை வாயிலிட்டுக் குதப்பி ஒதுக்கிக் கொண்டாள். தர்மாம்பாளுக்குப் பற்கள் இருக்கின்றன. என்றாலும் புருஷனுக்காக இடிப்பதில் மீத்துத் தானும் போட்டுக் கொள்வதில் ஒரு திருப்தி. ஆறு வருடமாய் இப்படித்தான். அந்தத் தம்பதிகளிடையே ஒரு சிறு மனத்தாங்கல் கூட இதுவரை நின்றதில்லை. ஒரு சச்சரவு என்பதில்லை. 'சீ... எட்டி நில்!'- என்று அவர் சொன்னதில்லை. சொல்லி இருந்தால் அவள் தாங்குவாளா என்பது இருக்கட்டும், அவர் நாவு தாங்காது... சிரிப்பும் விளையாட்டுமாகவே வாழ்க்கையைக் கழித்து விட்டார்கள். கழித்து விட்டார்கள் என்று சொல்லிவிட முடியுமா? இதுவரை வாழ்வை அப்படித்தான் கழித்தார்கள்... நிலவு இருண்டது! எங்கும் ஒரே நிசப்தம். கூடத்தில் படுத்திருந்த முத்து, தூக்கத்தில் ஏதோ முனகியவாறே உருண்டான். அறைக்குள்ளிருந்து வளையல் கலகலப்பும், கட்டிலின் கிரீச்சொலியும், பெண்ணின் முணுமுணுப்பும்... எங்கோ ஒரு பறவை சிறகுகளைப் படபடவென்று சிலுப்பிக் கொள்ளும் சப்தம், அதைத் தொடர்ந்து வௌவால் ஒன்று முற்றத்தில் தெரிந்த வான் வௌியில் குறுக்காகப் பறந்தோடியது.. முற்றத்தில் ஒரு பகுதி இருண்டிருந்தது! நிலவு எதிர்ச் சரகக் கூரைக்கும் கீழே இறங்கி விட்டது. அவர்கள் படுத்திருந்த இடத்தில் நிழலின் இருள் நிலவொளிக்குத் திரையிட்டிருந்தது... தர்மாம்பாள் தொண்டைக்குள் 'களகள'வென்று இளமை திரும்பி விட்டது மாதிரிச் சப்தமில்லாமல் சிரித்தாள்... கிழவரின் அகண்ட மார்பில் அவள் முகம் மறைந்தது. பொன் காப்பிட்ட அவளது இரு கரங்களும் கிழவரின் முதுகில் பிரகாசித்தன... இருளோ, நிலவோ, இரவோ, பகலோ, இளமையோ முதுமையோ எல்லாவற்றையும் கடந்ததுதானே இன்பம்! ஆம். அது - இன்பம் மனசில் இருப்பது... இருந்தால் எந்த நிலைக்கும் எந்தக் காலத்துக்கும் யாருக்கும் அது ஏற்றதாகத்தான் இருக்கும். தர்மாம்பாளும் கைலாசமும் மனசில் குறைவற்ற இன்பம் உடையவர்கள்... வயசைப் பற்றி என்ன? 'டொக்... டொக்...' கைலாசம், நிலா வௌிச்சத்தில் பாயை இழுத்துப் போட்டுக் கொண்டு, இரும்புரலில் வெற்றிலை இடிக்கிறார். அருகே தர்மாம்பாள் படுத்திருக்கிறாள்... தூக்கம், அரைத்தூக்கம், மயக்கம்தான்! "நீங்க இன்னும் படுக்கலியா?" "உம்... நீ வெத்திலை போடுறியா?" "உம்... அந்தத் தூணோரம் செம்பிலே தண்ணி வச்சேன். கொஞ்சம் கொண்ணாந்து தாரீங்களா? நாக்கை வரட்டுது" என்று தொண்டையில் எச்சிலைக் கூட்டி விழுங்கினாள். "எனக்கும் குடிக்கணும்!" என்றவாறு எழுந்து சென்று செம்பை எடுத்துத் தண்ணீரைக் குடித்துவிட்டுக் கொண்டு வந்தார் கைலாசம். அவர் வரும்போது நிலவொளியில், அந்த திடகாத்திரமான உருவத்தைக் கண்டு தர்மாம்பாளின் மனம், வாலிபக் கோலம் பூண்டு, அந்த அழகில் லயித்துக் கிறங்கி வசமிழந்து சொக்கியது. அவர் அவள் அருகே வந்து அமர்ந்தார். தாகம் தீரத் தண்ணீர் குடித்த தர்மாம்பாள், ஆழ்ந்த பெருமூச்சுடன் அவர் மேல் சாய்ந்தாள். வலுமிக்க அவரது கரத்தை லேசாக வருடினாள். அவளுக்கே சிரிப்பு வந்தது - சிரித்தாள். "என்னடி சிரிக்கிறே?" "ஒண்ணுமில்லே; இந்தக் கெழங்க அடிக்கற கூத்தை யாராவது பார்த்தா சிரிப்பாங்களேன்னு நெனைச்சேன்!" அவர் கண்டிப்பது போல் அவள் தலையில் தட்டினார். "யாருடி கிழம்?..." கிழவர் சிரித்தார்! அவளும் சிரித்தாள். தர்மாம்பாள் எழுந்து உட்கார்ந்து இன்னொரு முறை வெற்றிலை போட்டுக் கொண்டாள். அவள் பார்வை கவிழ்ந்தே இருந்தது. கிழவர் அவள் முகத்தைத் தடவிக் கொடுத்தார். அவள் விழிகளை உயர்த்திப் பார்த்தாள். அவர் அவள் விழிகளுக்குள்ளே பார்த்தவாறு சிரித்தார். "சே!.. நீங்க ரொம்ப மோசம்!" என்று வெட்கத்துடன், கண்டிக்கும் குரலில் சிணுங்கினாள் தர்மாம்பாள். அனுபவித்த சந்தோஷத்தால் காரணமற்றுச் சிரிப்பும் பொத்துக் கொண்டு வந்தது. கிழவருக்குப் பெருமை தாங்க முடியவில்லை. அவளிடம் ஏதாவது வேடிக்கை பேசி, விளையாடத் தோன்றியது அவருக்கு. உள்ளங்கையில் புகையிலையை வைத்துக் கசக்கியபடி, தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டே, "அந்தக் காலத்திலே நான் அடிச்ச கூத்தெல்லாம் ஒனக்கெங்கே தெரிஞ்சிருக்கப் போகுது" என்று சொல்லிவிட்டுத் தலையை அண்ணாந்து புகையிலையை வாயில் போட்டுக் கொண்டார். "ஏன்? சீமைக்கா போயிருந்தீங்க?" "தர்மு, உனக்குத் தெரியாது. நீ எப்பவும் குழந்தைதான். ஒன்கிட்டே அப்போ நான் சொன்னதே இல்லை. இப்ப சொன்னா என்ன?" கிழவர் கொஞ்சம் நகர்ந்து சென்று சாக்கடையில் எச்சில் துப்பிவிட்டு வந்தார். "நம்ம சந்நிதித் தெரு கோமதி இருந்தாளே, ஞாபகம் இருக்கா?" கால்களிலே சதங்கை கொஞ்ச, கரு நாகம் போன்ற பின்னல் நௌிந்து திரும்பி வாலடித்துச் சுழல, கண்களும் அதரங்களும் கதை சொல்ல, 'இவர்க்கும் எனக்கும் பெரு வழக்கிருக்குது' என்ற நாட்டியக் கோலத்துடன் முத்திரை பாவம் காட்டி, சதிராடி நிற்கும் ஒரு தங்கப் பதுமை போன்ற கோமதியின் உருவம் தர்மாம்பாளின் நினைவில் வந்து நின்றது. ஒரு கணம் மயல் காட்டி மறையாமல் நிலைத்து நின்றது... "என்ன, ஞாபகம் இருக்கா?... அந்தக் காலத்திலெ அவளுக்குச் சரியா எவ இருந்தா?... என்ன இருந்தாலும் தாசின்னா தாசிதான். அவளுகளை மாதிரி சந்தோஷம் குடுக்க வீட்டுப் பொம்பளைங்களாலே ஆகுமா?" "உம்" தர்மாம்பாளின் கண்கள் கிழவரின் முகத்தை அர்த்தத்தோடு வெறித்தன... மனம்?... 'ஓஹோ! அந்தக் காலத்திலே அவ நாட்டியம்னா பறந்து பறந்து ஓடுவாரே அதுதானா?' என்று பற்பல நிகழ்ச்சிகளை முன்னிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தது மனம். கிழவர் குறும்பும் குஷியுமாய்ப் பேசிக் கொண்டிருந்தார். "என்னை ஒரு தடவை நீலகிரிக்கு மாத்தியிருந்தாங்களே, ஞாபகமிருக்கா? கண்ணன் அப்ப வயத்திலே ஏழு மாசம். இல்லையா..." "உம்..." தர்மாம்பாளின் விழிகள் வெறித்துச் சுழன்றன. "இது சத்தியம்! இது சத்தியம்!" என்று அவளூள் ஏதோ ஒரு குரல் எழுந்தது. "அப்போ தனியா போனேன்னா நெனைச்சிட்டிருக்கே... போடி பைத்தியக்காரி! அந்தக் கோமதிதான் என்கூட வந்தா... அவ ஒடம்பு செலை கணக்கா இல்லே இருக்கும்... உம்... அவ என்ன சொன்னா தெரியுமா கடைசியிலே..." கிழவர் தனக்குத் தானே சிரித்துக் கொண்டார். "நானும் இதுவரைக்கும் எத்தனையோ பேரைப் பாத்திருக்கேன் - ஆம்பளைன்னா நீங்கதான்னா..." கிழவர் மறுபடியும் சிரித்தார். அது என்ன சிரிப்பு... பொய்ச் சிரிப்பா, மெய்ச் சிரிப்பா... தர்மாம்பாளின் நெஞ்சில் ஆத்திரமும், துரோகமிழைக்கப்பட்ட - வஞ்சிக்கப்பட்ட ஏமாற்ற வெறியும் தணலாய்த் தகித்தன. "நெசந்தானா!" "பின்ன... பொய்யா?... அதுக்கென்னா இப்போ, எப்பவோ நடந்ததுதானே..." அடப் பாவி, கிழவா? பொய்யோ மெய்யோ அவள் திருப்திக்காகவாவது மாற்றிச் சொல்லக் கூடாதா? தர்மாம்பாள் கிழவிதான்! கிழவி பெண்ணில்லையா...? 'துரோகி, துரோகி' என்று அவள் இருதயம் துடித்தது. 'ஆமாம்; அது உண்மைதான். பொய்யில்லை.' ஏனோ அவள் மனம் அதை நம்பிவிட்டது. பொய்யாக இருக்குமோ என்று சந்தேகிக்கக்கூட இல்லை - அதெல்லாம் தாம்பத்திய ரகசியம்! விருட்டென்று எழுந்து தட்டுத் தடுமாறி நடந்து சென்று கூடத்து இருளில் வீழ்ந்தாள் தர்மாம்பாள். "அடடே, தர்மு கோவிச்சுக்கிட்டியா? பைத்தியக்காரி, பைத்தியக்காரி!" என்று விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே பாயில் துண்டை விரித்துப் படுத்தார் கைலாசம் பிள்ளை. விளையாட்டா? அது என்ன விளையாட்டோ? கிழவரின் நாக்கில் சனியல்லவா விளையாடி இருக்கிறது! மணி பன்னிரண்டு அடித்தது! கிழவர் தூங்கிப் போனார். தர்மாம்பாள் தூங்கவில்லை! மறுநாள்... மறுநாள் என்ன, மறுநாளிலிருந்து வாழ்நாள் வரை... அவருக்கு அவள் தன் கையால் காப்பி கொடுப்பதில்லை; பல் துலக்க, குளிக்க வெந்நீர் கொடுப்பதில்லை. முதுகு தேய்ப்பதில்லை; சோறு படைப்பதில்லை; வெற்றிலை பாக்கு இடித்துக் கொடுப்பதில்லை. பாவம்! கிழவர் அனாதைச் சிசுவைப் போல் தவித்தார். அவளைப் பொறுத்தவரை, கைலாசம் பிள்ளை என்றொரு பிறவியே இல்லாத மாதிரி, அப்படி ஒருவருக்குத் தான் வாழ்க்கைப் படாதது மாதிரி நடந்து கொண்டாள். அவருடன், யாருடனும் அவள் ஒரு வார்த்தை பேசுவதில்லை. மகனும் மருமகளும் துருவித் துருவி அவளை விசாரித்தனர். மௌனந்தான். கிழவர்? - அவர் வாயைத் திறந்து என்னவென்று சொல்லுவார்? மௌனம்தான். அன்று இரவு விஜயா கேட்டாள்: "பாட்டி! நீ தாத்தாவோட 'டூ' வா?..." அவள் ஒன்றும் பேசவில்லை. "ஏன் தாத்தா, பாட்டி ஒன்னோட பேச மாட்டேங்குது? நீ அடிச்சியா?" - என்று முத்து கிழவரை நச்சரித்தான். கிழவரால் பொறுக்க முடியவில்லை. "என்னடி தர்மு - நான் வெளையாட்டுக்கு, பொய்யிதான் சொன்னேன் - என்னை ஒனக்குத் தெரியாதா! மனசார ஒனக்கு நா துரோகம் செஞ்சிருப்பேன்னு நீ நெனைக்கிறியா? இவ்வளவு காலம் என்னோடு வாழ்ந்தும், என்னை நீ தெரிஞ்சுக்கலையா, தர்மு... தர்மு..." 'சீ! வாழ்ந்தேனா? - ஐயோ, என் வாழ்வே! வாழ்ந்ததாக நெனச்சி ஏமாந்து போனேன்..." இதைக்கூட அவள் வௌியில் சொல்லவில்லை. குழந்தைகள் தூங்கி விட்டன. அவர் தானாகவே அன்று வெற்றிலை இடித்துப் போட்டுக் கொண்டார். "தர்மு... என்னை நீ நம்ப மாட்டியா..." அவர் கை அவள் தலையை வருடியது... அடிபட்ட மிருகம் போல் உசுப்பிக் கொண்டு நகர்ந்த அவள் உடம்பு துடித்துப் பதைத்தது. "சீ" என்று அருவருப்புடன் உறுமினாள். "தொட்டீங்கன்னா, கூச்சல் போட்டுச் சிரிக்க அடிச்சிடுவேன்!" அவளுக்கு மூச்சு இளைத்தது - உடல் முழுதும் வேர்த்து நடுங்கியது. அப்படி அவரிடம் அவள் பேசியது அதுவே முதல் தடவை. அவரும் திகைத்துப் போனார்! கிழவர் மனம் குமுறி எழுந்து நடந்தார்... 'என்னை - என்னை சந்தேகிக்கிறாளே' என்று நினைத்த பொழுது மனசில் என்னவோ அடைத்துக் கண்கள் கலங்கின. "போறா, நல்ல கதிக்குப் போக மாட்டா" என்று மனம் சபித்தது. யாருமற்ற, நாதியற்ற அனாதைபோல் தெருத் திண்ணையில் வெறுந்தரையில் படுத்துக் கொண்டார். தர்மாம்பாளைக் கைப் பிடித்தது முதல் அன்றுதான் முதன் முறையாக வர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. 'விதி - விதி!' என்ற முனகல். விதிக்கு வேளை வந்து விட்டது! இரவு மணி எட்டு! தெரு வாசற்படியில் கார் நிற்கிறது. கூடத்து அறையில் தர்மாம்பாள் படுக்கையில் கிடக்கிறாள். அவளைச் சுற்றிப் பேரனும் பேத்தியும் மகனும் மருமகளும் நிற்கின்றனர் - டாக்டர் ஊசி போடுகிறார். தெருவில் திண்ணையோரத்தில் நிற்கும் கைலாசம் பிள்ளை பதைக்கும் மனத்தோடு ஜன்னல் வழியாக எட்டி எட்டிப் பார்க்கிறார். உள்ளே செல்ல அவருக்கு அனுமதி இல்லை. டாக்டர் வௌியே வருகிறார். கண்ணன் பெட்டியை எடுத்துக் கொண்டு அவர் பின்னே வருகிறான். "டாக்டர்... என் உயிர் பிழைக்குமா?" என்ற கைலாசம் பிள்ளையின் குரல் டாக்டரின் வழியில் குறுக்கிட்டு விழுந்து மறிக்கிறது. டாக்டர் பதில் கூறாமல் தலையைக் குனிந்தவாறே கைலாசம் பிள்ளையின் சோகத்தை மிதித்துக் கொண்டு போயே விட்டார். கிழவர், தன்னை மீறி வந்த ஆவேசத்துடன், உள்ளே ஓடுகிறார். 'தர்மு... தர்மு... என்னெ விட்டுப் போயிடாதேடி... தர்மு!' நீட்டி விரைத்துக்கொண்டு கட்டிலில் கிடக்கும் தர்மாம்பாளின் உடலில், அங்கங்களில் அசைவில்லை; உணர்வில்லை. உயிர்?... நெற்றியில் ஒரு ஈ பறந்து வந்து உட்காருகிறது. நெற்றிச் சருமம் - புருவ விளிம்பு நௌிகிறது... கண்கள் அகல விரிந்து ஒருமுறை சுழல்கின்றன. கண்கள் கலங்கிக் கண்ணீர் பெருக, தம்ளரிலிருந்த பாலைத் தாயின் வாயில் வார்க்கிறான் கண்ணன். 'யாரு... கண்ணனா... பாலில்தான்டா உறவு இருக்கு... அந்த உறவும் ரத்தாயிடும்!...' அதோ, ஸரஸா இப்பொழுது பால் வார்க்கிறாள். 'ரெண்டு கொழந்தையையும் வச்சுக்கிட்டுத் தவிப்பியேடி கண்ணே!' பேரன் முத்து - "பாட்டி... பாட்டி..." என்று சிணுங்கியபடியே பாலை ஊற்றுகிறான்... முத்துவை அள்ளி அணைத்துக் கொள்ளத் துடிப்பதுபோல் கண்கள் பிரகாசிக்கின்றன. பயந்து, ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்கும் விஜியின் பிஞ்சுக் கரங்களால் பாட்டியின் உதடுகளுக்கிடையில் பால் வார்க்கும்போது... அதில் தனி இனிப்போ! முகத்தில் அபூர்வக் களை வீசுகிறது... 'மடக்... மடக்'கென்று பால் உள்ளே இறங்குகிறது! மேல் துண்டில் முகத்தை மூடிக் கொண்டு உடல் பதறிக் குலுங்க வந்து நின்றார் கைலாசம். 'இந்த நிலையிலாவது தன்னை மன்னிக்க மாட்டாளா' என்ற தவிப்பு! அவர் கைகள் பால் தம்ளரை எடுக்கும்போது நடுங்குகின்றன. "தர்மு... தர்மு... என்னைப் பார்க்க மாட்டியா, தர்மு?" 'யாரது?' அவள் விழிகள் வெறித்துச் சுழல்கின்றன. தாளாத சோகத்தில் துடிக்கும் உதடுகளில், கண்ணீருடன் புன்சிரிப்பையும் வரவழைத்துக் கொண்டு பால் தம்ளரை அவள் உதட்டில் பொருத்துகிறார் கைலாசம். பற்களைக் கிட்டித்துக் கொண்டு வலிப்புக் கண்டது போல் முகத்தை வெட்டி இழுத்துக் கொண்ட தர்மாம்பாளின் முகம் தோளில் சரிகிறது. கடைவாயில் பால் வழிகிறது! "ஐயோ மாமீ" என்ற ஸரஸாவின் குரல் வெடிக்கிறது... "அம்மா... பாட்டீ ஹ்ம்" முத்து தாயைக் கட்டிக் கொண்டு அழுகிறான். விஜி ஒன்றும் புரியாமல் விழிக்கிறாள் - கண்ணன் தலையைக் குனிந்துகொண்டு கண்ணீர் வடிக்கிறான். கிழவர் நிமிர்ந்து நிற்கிறார். அவர் முகம் புடைத்து, கண்களில் கண்ணீரும் கோபமும் குழம்ப, செக்கச் சிவந்து ஜ்வலிக்கிறது! கைலாசம் கிழவர்தான். என்றாலும் ஆண் அல்லவா! "இவளுக்கு என் கையாலே கொள்ளிகூட வைக்க மாட்டேன்" - கையிலிருந்த பால் தம்ளரை வீசியெறிந்துவிட்டு அறையை விட்டு வௌியேறுகிறார்... முற்றத்து நிலவில், பால் தம்ளர் கணகணவென்று ஒலித்து உருண்டு கிடக்கிறது. அன்று, அந்தக் கடைசி இரவில், அவர்கள் படுத்திருந்த இடத்தில் கொட்டிக் கிடந்த பாலில் நிலவின் கிரணங்கள் ஒளி வீசிச் சிரித்தன. ஆம்; அதே நிலவுதான்! ----- #13. நந்தவனத்தில் ஓர் ஆண்டி தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு! பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த இடுகாட்டின் மேற்கு மூலையில், பனை ஓலைகளால் வேயப்பட்ட சின்னஞ்சிறு குடிசை ஒன்று இருக்கிறது. அதில் தான் ஆண்டி வசிக்கிறான். குடிசைக்கு முன்னே வேப்ப மரக் கிளையில் கட்டித் தொங்கும் தூளியில் அவன் செல்ல மகன் இருளன் சுக நித்திரை புரிகிறான். அதோ அவன் மனைவி முருகாயி வேலியோரத்தில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருக்கிறாள். ஆம்; ஆண்டிக்கு மனைவியும் மகனும் உண்டு. அவன் பெயர் மட்டும் தான் ஆண்டி. அவன் இருக்கும் அந்த இடம் தூரத்துப் பார்வைக்குத்தான் நந்தவனம். ஆண்டி ஒரு வெட்டியான். அவன் வாழும் இடம் இடுகாடு. அந்த மயான பூமிக்கு வரும் பிணங்களுக்குக் குழி வெட்டுவது அவன் தொழில். அதற்காக முனிசிபாலிடியில் மாதம் ஏழு ரூபாய் சம்பளமும், அந்த இடுகாட்டிலேயே வசிக்க ஒரு வீடும் தந்திருக்கிறார்கள். ஆண்டி 'ஒரு மாதிரியான' ஆள்; பைத்தியம் அல்ல. மகிழ்ச்சி என்பது என்னவென்றே தெரியாத மனிதர்கள் எப்பொழுதும் குஷியாகப் பாடிக்கொண்டே இருக்கும் அவனை 'ஒரு மாதிரி' என்று நினைத்தார்கள். அவன் உடம்பில் எப்பொழுதும் அலுப்போ, சோர்வோ ஏற்படுவதே இல்லை. வயது நாற்பது ஆகிறது; இருபது வயது இளைஞனைப்போல் துறுதுறு வென்றிருப்பான். அர்த்தம் புரிந்தோ புரியாமலோ அவன் வாய், உரத்த குரலில் சதா ஒரு பாட்டை அலப்பிக்கொண்டே இருக்கும். 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...' குழி வெட்டும் வேலை இல்லாத சமயத்தில் அவன் நந்தவன வேலையில் ஈடுபடுவான். அவன் உழைப்பால் தான் அந்த இடுகாடு கூட 'நந்தவன' மாகி இருக்கிறது. அவனுக்குச் சோகம் என்பது என்ன வென்றே தெரியாது. செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போதும் சரி, பிணங்களுக்கு குழி பறிக்கும் போதும் சரி - சலனமோ, சங்கடமோ ஏதுமின்றி, உரத்த குரலில் கழுத்து நரம்புகள் புடைக்க அந்தப் பாட்டை தனது கரகரத்த குரலில் பாடுவான். அவனைப் பொறுத்தவரை அந்தப் பாட்டிற்கு அர்த்தம் கிடையாது; வெறும் பழக்கம்தான். அது புதைக்கும் இடமாதலால் பெரும்பாலும் குழந்தைகளின் பிரேதம்தான் அங்கு வரும். 'மூன்றடி நீளம் மூன்றடி ஆழ'க் குழிகள் வெட்டுவது ஆண்டிக்கு ஒரு வேலையே அல்ல. தலையின் இறுகக் கட்டிய முண்டாசுடன், வரிந்து கட்டிய வேட்டியுடன், கால்களை அகட்டி வைத்துக் கொண்டு நிற்பான். அவன் கையிலுள்ள மண்வெட்டி அனாயாசமாகப் பூமியில் விழுந்து மேற்கிளம்பும். ஒவ்வொரு வெட்டுக்கும் ஈர மண் மடிந்து கொடுக்கும். பூமியே புரண்டு கொடுக்கும். '... கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக் கூத்தாடிக்... கூத்தாடிப்... போட்டுடைத்தாண்டி...' அந்தக் 'கூத்தாடி' என்ற வார்த்தையை அழுத்தி அழுத்தி உச்சரித்தவாறு பூமியின் மார்பை அவன் பிளக்கும்போது அவனை யாராவது கண்டால் அந்தப் பாட்டின் பொருள் தெரிந்துதான் அவன் பாடுகிறான் என்றே எண்ணத் தோன்றும். உண்மையில் அந்தப் பாட்டுக்கு உரிய பொருள் அவனுக்குத் தெரியவே தெரியாது. அவன் அந்தப் பாட்டை, எங்கு எப்பொழுது கற்றுக் கொண்டான்? நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக்கொண்டு முதன்முதலில் உச்சரித்தோம் என்று சொல்ல முடியுமா? ஆனால், ஏதோ ஒரு விசேஷமான வார்த்தையைக் குறிப்பாக எண்ணினோமானால் நம்மில் எவ்வளவோ பேர் சொல்லி விடுவோம். ஆண்டி இந்தப் பாட்டை எப்பொழுது எங்கு முதன் முதலில் கேட்டான்? சற்று நினைவு கூர்ந்தால் அவனால் சொல்லிவிட முடியும். ஒரு நாள் காலை, கயிற்றுக் கட்டிலில் உறக்கம் கலைந்து எழுந்த ஆண்டி, தன் கண்களைக் கசக்கிவிட்ட பின் கண்ட காட்சி அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. குடிசை வாசலில், கிழிந்த கோரைப் பாயில், வழக்கத்திற்கு மாறாக இன்னும் உறக்கம் கலையாமல் தன்னை மறந்து கிடக்கிறாள் முருகாயி. அவன், தான் எழுந்தபின் அவள் தூங்கிக் கொண்டிருப்பதை, கலியாணம் ஆகி இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் ஒருநாள் கூடப் பார்த்ததில்லை. "ஏ... முருவாயி..." என்று குரல் கொடுத்தான். அவள் எழுந்திருக்கவில்லை; புரண்டு படுத்தாள். அவன் கயிற்றுக் கட்டிலை விட்டு எழுந்து அவள் அருகே சென்று அமர்ந்தான். 'உடம்பு சுடுகிறதோ' என்ற நினைப்பில் அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. "முருவாயி..." என்று மறுபடியும் உலுப்பினான். மயங்கிக் கிறங்கிய நிலையில் முருகாயி கண்களைத் திறந்தாள். எதிரில் புருஷன் குந்தி இருப்பதைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்து பேந்தப் பேந்த விழித்தாள். "என்ன முருவாயி... ஒடம்புக்கு என்னா பண்ணுது?" என்று பதறினான் ஆண்டி. "ஒண்ணுமில்லே... கையி காலெல்லாம் கொடைச்சலா இருக்கு... ஒடம்பு பூரா அடிச்சி போட்ட மாதிரி... கிர்னு தலை சுத்துது..." என்று சொல்லும்போதே கறுத்த இமைகள் ஒட்டி ஒட்டிப் பிரிந்தன. "கனா ஒண்ணு கண்டேன்." "என்ன கனா புள்ளே?" முருகாயி கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டே கொட்டாவி விட்டாள். "கனாவிலே ஒரு பூச்சி... கறுப்பா... சின்னதா..." அவள் உடல் ஒருமுறை குலுங்கிற்று. "உம்..." "சொல்லும்போதே திரேகம் சிலுக்குது மச்சான்... அந்தக் கறுப்புப் பூச்சி நவுந்து வந்து எங் கையி மேலே ஏறுச்சி... ஏறினவுடனே அது மஞ்சளா மாறிச்சி - ஊஹீம் மஞ்ச நெறமில்லே... தங்க நெறம்... அப்பிடி ஒரு சொலிப்பு சொலிச்சது... அது எங் கையிலே வந்து குந்திக்கிட்டு... 'என்னெத் தின்னுடு என்னெத் தின்னுடு'ன்னு சொல்லிச்சு." "உம் அப்புறம்?..." "தின்னுடு தின்னுடுன்னு சொல்லிக்கிட்டே எங்கையெ கொறிக்க ஆரம்பிச்சது. எனக்கு என்னவோ புத்திக் கொளம்பிப்போய் ஒரு ஆவேசம் வந்திடுச்சி... சீ, இந்த அல்பப் பூச்சி வந்து என்ன தைரியமா நம்மகிட்டே வந்து 'தின்னுடு தின்னுடு'ன்னு சொல்லுது பாத்தியா?... நாம்ப திங்கமாட்டோம்கிற தைரியம் தானேன்னு நெனைச்சி..." அவள் முகம் சிவந்தது, சுளித்தது! "ஒடம்பெல்லாம் கூசுது மச்சான். அந்தப் பூச்சியெ ரெண்டு விரல்லே தூக்கிப் பிடிச்சி வாயிலே போட்டு 'கச முச'ன்னு மென்னு...வ் வோ ஓ!..." அவள் சொல்லி முடிக்கவில்லை, குடலை முறுக்கிக் கொண்டு வந்த ஓங்கரிப்பு பிடரியைத் தாக்கிக் கழுத்து நரம்புகளைப் புடைக்க வைத்தது; தலை கனத்தது; மூச்சு அடைக்க, கண்கள் சிவக்க, "வ் வோ ஓ!..." "மச்சான்... மச்சான்... அந்தப் பூச்சி வவுத்துக்குள்ளே ஓடுது மச்சான்..." மறுபடியும் ஓர் பலத்த ஓங்காரம். அடி வயிற்றைப் பிசைந்துகொண்டே தலை குனிந்து உட்கார்ந்தாள். வாயெல்லாம் வெறும் உமிழ் நீர் சுரந்து ஒழுகியது. "மச்சான்... வவுத்திலே பூச்சி" ஆண்டி புரிந்து கொண்டான். அவன் உடல் முழுதும் இன்பக் கிளுகிளுப்பு ஓடிப் பரவியது. பதினைந்து வருஷமாய் வாய்க்காதது... எத்தனையோ காலம் நினைத்து நினைத்துப் பார்த்து, ஏமாந்து ஏமாந்து, இல்லை என்ற தீர்க்கமான முடிவில் மறந்தே போனபின்... உடலை குலுக்கி, குடலை முறுக்கி ஓங்கரித்தாள்... முருகாயி. ஆ... அதுதான் ஹாஹா... முருகாயி அதுதான்... ஹாஹா!" ஆண்டி சிரித்தான். "வ்வோ ஓ!..." குத்திட்டுத் தலை குனிந்து உட்கார்ந்திருந்த முருகாயியை உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஆண்டி சிரித்தான். "ஹாஹாஹ்ஹா... அதுதான் புள்ளே, அது தான்." பலத்த ஓங்கரிப்புடன் வந்த சிரிப்பைத் தாங்க முடியாது தவித்தாள் முருகாயி. "மச்சான் வவுத்தைப் பொறட்டுதே. தாங்க முடியலியே ஐயோ!..." என்று பதறினாள். "சும்மா, இரு புள்ளே, நம்ம வடிவேலு வைத்தியர் கிட்டே போயி எதனாச்சும் மருந்து வாங்கியாறேன்" என்று மேல் துண்டை உதறித் தோள்மீது போட்டுக் கொண்டு கிளம்பினான் ஆண்டி. முருகாயி சிரித்தாள். "ஏ! சும்மாத்தானே இரு மச்சான். யாராவது சிரிக்கப் போறாங்க" "நீ படற அவஸ்தையைப் பார்க்க முடியலியே புள்ளே..." "நீ ஏன் பாக்கிறே?...அந்தாலே தள்ளிப்போய் நின்னுக்க..." ஆண்டி மனசுக்குள் கும்மாளியிடும் மகிழ்ச்சியுடன் இடுகாட்டின் கேட்டருகே நின்றான். அப்போதுதான் அந்தச் சாலை வழியே சென்ற காவி தரித்த பண்டாரம் ஒருவன் தன்னை மறந்த லயத்தில் அந்தப் பாட்டைப் பாடியவாறு நடந்தான். "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி." இதுவரை அனுபவித்தறியாத ஒரு புதிய உணர்வில் மகிழ்ச்சியில் லயித்து தன் நிலை மறந்து நின்ற ஆண்டியின் மனத்தில், தாள லயம் தவறாமல் குதித்தோடி வந்த அந்தப் பாட்டின் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாய்ப் பதிந்தன. அதைப் பதிய வைப்பதற்காகவே பாடுவதுபோல் அந்தப் பண்டாரம் அந்த நான்கு வரிகளையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு நடந்தான். அன்றுமுதல் தன்னையறியாமல் ஆண்டியும் அந்தப் பாடலைப் பாடிக் குதிக்க ஆரம்பித்தான். "நந்தவனத்தில் ஓர் ஆண்டி" ஆயிரக்கணக்கான மனித உடல்கள் மாண்டபின் புதையுண்ட அந்த மயான பூமியில் ஒரு மனிதன் பிறந்தான். ஆண்டிக்கு ஒரு மகன் பிறந்தான். தாயின் கருவில் அவன் ஜனித்த அந்த நாளில் பிறந்த குதூகலம் ஆண்டிக்கு என்றும் மறையவில்லை. பொழுதெல்லாம் தன் செல்வ மகனைத் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினான். நூற்றுக்கணக்கான குழந்தைகளின் சவங்களுக்குக் குழிபறித்த ஆண்டியின் கரங்கள் தன் செல்வ மகனை மார்போடு அணைத்து ஆரத் தழுவின. தனது மதலையை மார்புறத் தழுவி மகிழ்ந்த ஆண்டியின் கரங்கள் ஊரார் பிள்ளைகளின் சவங்களுக்குக் குழி பறித்தன. ஊராரின் புத்திர சோகம் அவனுக்குப் புரிந்ததே இல்லை. ரோஜாச் செடிக்குப் பதியன் போடும் சிறுவனைப் போல பாட்டுப் பாடிக்கொண்டே குழி பறிப்பான். அருகிலிருக்கும் அந்தப் பச்சைச் சிசுவின் பிரேதத்தைப் பார்த்தும் - அதோ பக்கத்தில், பீறிவரும் அழுகையை அடக்கிக் கொண்டு நிற்கும் அந்தத் தகப்பனைப் பார்த்தும் - நெஞ்சில் ஈரமில்லாமல் பசை இல்லாமல் பாடிக் கொண்டிருக்கிறானே... சீசீ இவனும் ஒரு மனிதனா!... அதனால்தான் அவனை எல்லோரும் 'ஒரு மாதிரி' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். குழி பறித்து முடித்தபின் நேரே தன் குடிசைக்கு ஓடுவான். தூளியில் உறங்கும் இருளனைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவான்; கூத்தாடுவான். அந்த மகிழ்ச்சிக்கு, குதூகலத்திற்கு, பாட்டிற்கு, கும்மாளத்துக்கெல்லாம் காரணம் இருளன்தானா? இரண்டு ஆண்டுகளுக்குப் பின்... எத்தனையோ பெற்றோரின் ஆனந்தத்துக்கு, கனவுகளுக்கெல்லாம் புதை குழியாயிருந்த அந்த இடுகாட்டில் மரணம் என்ற மாயை மறந்து, ஜனனம் என்ற புதரில் மட்டும் லயித்துக் குதித்துக் கொண்டிருந்த ஆண்டியின்... ஆண்டியின்... - சொல்ல என்ன இருக்கிறது? இருளன் ஒருநாள் செத்துப் போனான். வாடியிருந்து வரம் கேட்டு, காத்திருந்து தவமிருந்து காலம் போன ஒரு நாளில், எதிர்பாராமல் - நினைவின் நப்பாசை கூட அறுந்துபோன ஒரு காலமற்ற காலத்தில் வாராமல் வந்து அவதரித்து, ஆசை காட்டி விளையாடி கனவுகளை வளர்த்த இருளன், எதிர்பாராமல் திடீரென்று இரண்டு நாள் கொள்ளையிலே வந்ததுபோல் போய்விட்டான். ஆசைகளையும் கனவுகளையும், பாழுக்கும் பொய்மைக்கும் பறி கொடுத்த முருகாயி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புரண்டு புரண்டு அழுதாள். எத்தனையோ சோகங்களின் திரடுகள் கரடு தட்டி மேடிட்டுப்போன அந்த மயான பூமியில் தனது பங்கிற்காக அந்தத் தாய் ஒப்பாரி வைத்து அழுதாள். வேப்ப மரத்தடியில், கட்டித் தொங்கும் வெறும் தூளியினருகே, முழங்கால்களில் முகம் புதைத்துக் குந்தி இருக்கிறான் ஆண்டி. எங்கோ வெறித்த விழிகள்... என்னென்னமோ காட்சிகள்... எல்லாம் கண்டவை... இனி, காண முடியாதவை... அதோ இருளன்! - வேலியோரத்தில் தவழ்ந்து சென்றதும்... தூளியிலிருந்து உறக்கம் கலைந்த பின் தலையை மட்டும் தூளிக்கு வௌியே தள்ளித் தொங்க விட்டுக் கொண்டு, கன்னம் குழையும் சிரிப்புடன் 'அப்பா' வென்று அழைத்ததும்... செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் போது அவனறியாமல் பின்னே வந்து, திடீரென்று பாய்ந்து புறம் புல்லி உடலைச் சிலிர்க்கவைத்து மகிழ்வித்ததும்... எதிரிலிருக்கும் தட்டத்துச் சோற்றில், வேகமாய்த் தவழ்ந்து வந்து - தனது பிஞ்சுக் கைகளை இட்டுக் குழப்பி விரல்களுக்கிடையே சிக்கிய இரண்டொரு, பருக்கைகளை வாயில் வைத்துச் சுவைத்துச் சப்புக்கொட்டி, கைதட்டிச் சிரித்துக் களித்ததும்... நெஞ்சோடு நெஞ்சாய்க் கிடந்து இரவு பகல் பாராமல் நாளெல்லாம் உறங்கியதும்... பொய்யா?... கனவா?... மருளா?... பித்தா?... பேதைமையா? ஆண்டி சித்தம் குலைவுற்றவன் போல் சிலையாய் உட்கார்ந்திருந்தான். இருளன் தவழ்ந்து திரிந்த மண்ணெல்லாம், அவன் தொட்டு விளையாடிய பொருளெல்லாம், அவன் சொல்லிக் கொஞ்சிய சொல்லெல்லாம் ஆண்டியின் புலன்களில் மோதி மோதிச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன. அதோ குடிசையினுள்ளே அந்தச் சிறு பாலகனின் சடலம் ஊதிப் புடைத்துக் கிடக்கிறது. வாயிலும் கண்களிலும் ஈக்கள் மொய்க்கின்றன. நெற்றியில் சாந்துப் பொட்டு; கறுத்துப் போன இதழ்களுக்கிடையே பால் மணம் மாறாத இளம் பற்கள் மின்னித் தெரிகின்றன. கையையும் காலையும் அகல விரித்துக் கொண்டு... ஆழ்ந்த நித்திரையோ?... 'இல்லை செத்துப் போய்விட்டான்.' வெகுநேரம் தன் செல்வ மகனின் - இனிமேல் பார்க்க முடியாத மகனின் - முகத்தை வெறித்துப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான். வேர்வைத் துளிகள் நெற்றியில் சரம் கட்டி நின்றன. மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டு மண்வெட்டியை எடுத்தான். கால்களை அகட்டி நின்று, கண்களை மூடிக் கொண்டு மண்வெட்டியை ஓங்கி, பூமியில் பதித்தான். 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி!' அந்தப் பாட்டு!... அவன் பாடவில்லை. ஊரார் பிணத்துக்குக் குழி பறிக்கும்போது மனசில் அரிப்போ கனமோ இல்லாமல் குதித்து வருமே அந்தப் பாட்டு... 'பாடியது யார்?'... மீண்டும் ஒருமுறை மண்வெட்டியை உயர்த்தி பூமியைக் கொத்தினான். 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' மீண்டும் அந்தக் குரல்!... 'யாரது!...' புலன்களை எல்லாம் அடக்கிக் கொண்டு மீண்டும் மண்வெட்டியால் பூமியை வெட்டினான். மீண்டும் ஒரு குரல்: "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி..." 'ஐயோ! அர்த்தம் புரிகிறதே!'... ஆண்டி மண்வெட்டியை வீசி எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான். தூணைப் பிளந்து வௌிக் கிளம்பிய நரசிம்மாவதாரம் போன்று, பூமியை, புதைகுழி மேடுகளைப் பிளந்து கொண்டு ஒரு அழகிய சின்னஞ்சிறு பாலகன் வௌிவந்தான். கைகளைத் தட்டித் தாளமிட்டவாறே ஆண்டியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே பாடியது சிசு! "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி... கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி..." குரல்கள் ஒன்றாகி, பலவாகி, ஏகமாகிச் சங்கமித்து முழங்கின. அந்த மயான பூமியில் எத்தனையோ காலத்திற்கு முன் புதையுண்ட முதற் குழந்தை முதல் நேற்று மாண்டு புதையுண்ட கடைசிக் குழந்தைவரை எல்லாம் உயிர்பெற்று, உருப்பெற்று ஒன்றாகச் சங்கமித்து, விம்மிப் புடைத்து விகஸித்த குரலில் - மழலை மாறாத மதலைக் குரலில் - பாடிக்கொண்டு கைத்தாளமிட்டு அவனைச் சுற்றிச் சூழ நின்று ஆடின. வான வௌியெல்லாம் திசைகெட்டு தறிகெட்டுத் திரிந்து ஓடின. ஆண்டி தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தான். அதோ, அவன் இருளனும் அந்தப் பாலகர் நடுவே நின்று நர்த்தனம் புரிகிறான். தாளம் போடுகிறான். பாட்டுப் பாடுகிறான். என்ன பாட்டுத் தெரியுமா?... 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' அடைத்துப் புடைத்து நெருக்கிக்கொண்டு ஓடும் சிசுக்களின் மகா சமுத்திரத்தில் தன் இருளனை தாவி அணைக்க ஓடினான்... இருளனைக் காணோம்... தேடினான், காணோம்... இருளனை மட்டும் காணவே காணோம்... அந்தச் சிசுக்கள் யாவும் ஒன்றுபோல் இருந்தன. என்னுடையது என்றும், இன்னொருவனுடையது என்றும், அவன் என்றும், அதுவென்றும் இதுவென்றும் பேதம் காண முடியாத அந்தச் சமுத்திரத்தில் இருளனை மட்டும் எப்படி இனம் கண்டுவிட முடியும்!... ஆண்டி தவித்தான்! ஆ!... என்ன தவிப்பு... என்ன தவிப்பு... பன்னீர் மரத்தடியில் பிள்ளையின் பிணத்தருகே முகம் புதைத்து வீழ்ந்து கிடக்கும் ஆண்டியைக் கண்டு பதறியடித்துக் கொண்டு ஓடினாள் முருகாயி. அவனைப் புரட்டி நிமிர்த்தி மடிமீது வைத்துக் கொண்டு கதறினாள். அவன் விழிகள் மெல்லத் திறந்தன. தெய்வமே! அவனுக்கு உயிர் இருந்தது; அவன் சாகவில்லை. இன்னும் கூட அவன் அந்த 'நந்தவன'த்தில் தான் வாழ்கிறான். ஆனால் முன்போல் இப்போதெல்லாம் பாடுவதில்லை. இடுகாட்டிற்கு வரும் பிணங்களைப் பார்க்கும் போதெல்லாம் 'கோ'வென்று கதறி அழுகிறான். ஊராரின் ஒவ்வொரு சோகத்திற்கும் அவன் பலியாகிறான்! ஆனால் இப்பொழுதும் ஊரார் அவனை ஒருமாதிரி என்றுதான் சொல்லுகிறார்கள்! ----- #14. நீ இன்னா ஸார் சொல்றே? நான் ஒண்ணும் 'லூஸ்' இல்லே. அதுக்காக என்னெ நான் புத்திசாலின்னு சொல்லிக்கறதா இன்னா... எனக்குக் குடுத்திருக்கிற வேலையை ஒழுங்காகத்தான் செய்யிறேன். அதிலே ஒரு சின்ன மிஷ்டேக் சொல்ல முடியாது. எங்க முதலாளிக்கு மானேஜர் ஸாருக்கு எல்லாருக்கும் என்கிட்டே ரொம்பப் பிரியம். அதான் ஸார்... நவஜோதி ஓட்டல்னு சொன்னா தெரியாதவங்க யாரு? அந்த ஓட்டல்லே மூணாவது மாடியிலே நான் இருக்கேன்... பேரு பாண்டியன். சும்மா ரோட்டுக்கா போய்க்கிட்டிருக்கும் போதே அப்படிப் பார்த்தா நா உங்க கண்ணிலே ஆம்பிட்டுக்குவேன்... ஆனா நம்பகிட்டே ஒரு பழக்கம்... அது நல்லதோ, கெட்டதோ... யாருக்கிட்டேயும் அனாவசியமா பேசிக்க மாட்டேன். நான் பேசறதே இல்லே... பின்னே என்னா ஸார், பேசறதுக்கு இன்னா இருக்குது! ரொம்பப் பேசறவனெ நம்பவே கூடாது ஸார்! அவனுக்குப் புத்தியே இருக்காது. பேசாம இருக்கிறவனையும் நம்பக் கூடாது... ஏன்னா அவன் பெரிய ஆளு ஸார்... சமயம் வாச்சா ஆளையே தீர்த்துப் பிடுவான். "அந்தா பெரிய ஓட்டல்லே நீ இன்னாடா பண்றே பாண்டியா?"ன்னு கேப்பீங்க. ஐயாதான் மூணாவது மாடியிலே வெயிட்டர் பாய். இன்னா ஸார், வெயிட்டர் பாயின்னா கேவலமா பூடுச்சா... நீ கூடப் போட மாட்டே ஸார், அந்த மாதிரி 'ஒயிட் டிரஸ்'; இடுப்பிலே கட்டியிருக்கிற பெல்டு இருக்கே, அசல் சில்க், சார் சில்க்! பொத்தானெல்லாம் சும்மா பளபளன்னு... ஒரு தடவை வந்து நம்மெ கண்டுகினு போ சார்... யார் வேண்ணாலும் வரலாம்... ரூம் வாடகைதான் பதினைஞ்சு ரூபா... மாசத்துக்கான்னு கேக்காதே... இவன் யாரோ சுத்த நாட்பொறம்னு கேலி பண்ணுவாங்க... ஒரு நாளைக்குப் பதினைஞ்சு ரூபா நைனா; ரூமெல்லாம் படா டமாசா இருக்கும்... சோபாவுங்க இன்னா, கட்டிலுங்க இன்னா... கண்ணாடிங்க இன்னா - பாத்ரூம்லே கண்ணாடிங்க வேற - ஷவர்பாத், 'சுட்' தண்ணி, 'பஸ்' தண்ணி - வேற இன்னா வோணும்! மணி அடிச்சா நா ஓடியாந்துருவேன்... ஒரு தடவை வந்து தங்கிப் பாரு சார். படா மஜாவா இருக்கும்... வந்தா மூணாவது மாடியிலே தங்கு சார்... அப்பத்தான் நான் கண்டுக்குவேன் - மத்த பசங்க மாதிரித் தலையை சொறிஞ்சிக்கினு 'பக்சிஸ்' கேக்க மாட்டேன்... குடுத்தாலும் வாங்கிக்க மாட்டேன் - அதிலே நா ரொம்ப ஸ்டிரிக்ட்! மூணாவது மாடியிலேருந்து 'ரூப் கார்டனு'க்கு போறது ரொம்ப சுளுவு... நான் ஏன் இம்மா 'கம்பல்' பண்ணிக் கூப்ட்றேன்னு யோசிக்கிறியா சார்? ஒரு விசயம், ஒண்ணு கேக்கணும்; அதுக்குத்தான். இன்னா விசயம்னு கேப்பீங்க... வந்தாத்தானே சொல்லலாம்... மின்னே மாதிரி இல்லே இப்போ... மின்னேல்லாம் புச்சா யார்னாச்சம் வந்துட்டா, 'சார் ஒரு கடுதாசி எழுதணும் ஒரு கடுதாசி எழுதணும்'னு காயிதத்தைக் கையிலே வெச்சிக்கினு படா பேஜார் குடுப்பேன்... இப்ப அப்படி எல்லாம் இல்லே, நீங்க பயப்படாம வர்லாம். கடுதாசின்னு சொன்னப்புறம் ஞாபகம் வருது சார், எங்கிட்ட அந்த மாதிரி எல்லாருகிட்டயும் எழுதி வாங்கின கடுதாசி நெறைய கெடக்குது... எல்லாம் நனைஞ்சு, எழுத்தெல்லாம் கலைஞ்சி பூட்டுது சார்... எப்பிடி நனைஞ்சிது?... அழுது அழுது நனைஞ்சி போச்சி. இப்பல்லாம் நா அழுவறதே இல்லே - அதெல்லாம் நெனச்சா சிரிப்பு வருது. அப்பல்லாம் எனக்கு என்னமோ ஒரு வேகம் பொறந்துடும். கடுதாசி எழுதலேன்னா தலைவெடிச்சிப் போற மாதிரி. கடுதாசி யாருக்குன்னு கேக்கறியா? ஊர்லே இருக்கிற எங்க மாமனுக்குத்தான். எங்க மாமனை நீங்க பார்த்ததில்லியே சார்... அவரு பெரிய ஜவான்... மீசையெப் பாத்தாவே நீங்க பயந்துடுவீங்க. அவரெ நெனச்சா இப்பக்கூட எனக்குக் கொஞ்சம் 'தில்'லுதான்... தோ, இம்மா ஒசரம், நல்ல பாடி... அந்த ஆளு பட்டாளத்துக்குப் போனவரு ஸார்... சண்டையிலே கொலை யெல்லாம் பண்ணியிருக்காராம். பத்து ஜப்பான்காரன்களைக் கையாலே புடிச்சு அப்படியே கழுத்தை நெரிச்சிக் கொன்னுப் போட்டாராம். அவருதான் சார் எங்க மாமன்! - ஏன் சார்!... எனக்கு ஒரு விசயம் ரொம்ப நாளா கேக்கணும்னு - கொலை பண்ணா ஜெயில்லே பிடிச்சிப் போடறாங்களே... பட்டாளத்துக்குப் போயி கொலை பண்ணா ஏன் சார் ஜெயில்லே போடறதில்லே? மாமனைப் புடிச்சி ஜெயில்லே போடணும் சார். அப்போ பாக்கறத்துக்கு ரொம்ப நல்லாயிருக்கும்! கம்பிக்கு அந்தப் பக்கம் மாமன் நிக்கும். நான் இந்தப் பக்கம் நின்னுக்கிட்டு, 'வேணும் கட்டைக்கு வேணும்; வெங்கலக் கட்டைக்கு வேணும்'னு ஒழுங்கு காட்டிக்கிட்டுச் சிரிப்பேன்... அம்மாடி! அப்போ பாக்கணும் மாமன் மூஞ்சியை... மீசையெ முறுக்கிட்டுப் பல்லைக் கடிச்சிக்கினு உறுமினார்னா - அவ்வளவுதான்... நான் நிப்பனா அங்கே? ஒரே ஓட்டம்! ஹோ; எதுக்கு ஓடணும்? அதுதான் நடுவாலே கம்பி இருக்கே... பயப்படாம... நின்னுக்கிட்டுச் சிரிப்பேன். மாமனுக்கு வெறி புடிச்சி, கோவம் தாங்காம கம்பியிலே முட்டிக்கும் - ஜெயில் கம்பி எம்மா ஸ்ட்ராங்கா போட்டிருப்பாங்க? இவுரு பலம் அதுக்கிட்டே நடக்குமா? மண்டை ஒடைஞ்சி ரத்தம் கொட்டும்... சீ! இது இன்னா நெனைப்பு?... பாவம் மாமன்... என்னமோ கோவத்திலே என்னை வெட்டறதுக்கு வந்துட்டது. அதுக்கு எம்மேலே ரொம்ப ஆசை. அம்மா, அப்பா இல்லாத என்னை வளர்த்து ஆளாக்கினது அதுதானே... மாமன் கிட்டே ஒனக்கு ஏண்டா இம்மாம் கோவம்னு கேப்பீங்க. இதான் சார் விசயம் - மாமனுக்கு ஒரு மவ இருக்கா சார். அவளெ நான்தான் கண்ணாலம் கட்டிக்கணும்னு மாமன் சொல்லிச்சி. நா மாட்டேன்னிட்டேன். அது இன்னா சார் கண்ணாலம் கட்டிக்கிறது? முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். அவன் இன்னா ஆளு? படா கில்லாடியாச்சே, உடுவானா? ஆச்சா போச்சா அறுத்துப் புடுவேன்; வெட்டிப் புடுவேன்னு மெரட்னான் - அவன் பிளான் இன்னா தெரியுமா? கத்தியெக் கையிலே வெச்சிக்கினு 'கட்டுடா தாலியெ'ன்னு சொல்றது. இல்லேன்னா ஒரே வெட்டு; கலியானப் பந்தல்லியே என்னெப் பலி குடுத்துடறதுன்னு... இதெக் கேட்டவுடனே எனக்குக் கையும் ஓடலே, காலும் ஓடலே... அவன் செய்வான் சார், செய்வான்... இந்த நியூஸ் எனக்கு யாரு குடுத்தான்னு கேளுங்க... எங்க மாமன் மவதான். அதுக்கு எங்கிட்டே ரொம்பப் பிரியம் சார். ரெண்டு பேரும் சின்னத்திலிருந்து ஒன்னா வெளையாடினவங்க சார். அது வந்து அழுதுகிட்டே சொல்லிச்சி 'மச்சான் என்னெக் கண்ணாலம் கட்டிக்க ஒனக்கு இஸ்டம் இல்லாட்டிப் போனாப் பரவாயில்லே; இஸ்டமில்லாம கட்டிக்கிட்டு இன்னா பிரயோசனம்? மாட்டேன்னு சொன்னா ஒன்னெ வெட்டிப் போடுவேன்னு அப்பன் சொல்லுது, அப்பன் கொணம்தான் ஒனக்குத் தெரியுமே. நீ எங்கேயாவது போயிடு மச்சான்'னு வள்ளி அழுவும்போது - அதான் அது பேரு - ஒரு நிமிசம் எனக்குத் தோணிச்சி; இவ்வளவு ஆசை வெச்சிருக்காளே, இவளையே கட்டிக்கினா இன்னான்னு. ஆனா அந்தக் கொலைகாரன் மவளைக் கட்டிக்கிட்டா, அவன் 'ஆன்னா ஊன்னா' வெட்டுவேன் குத்துவேன்னு கத்தியெத் தூக்கிட்டு வருவானேன்னு நெனைச்சிக்கிட்டேன். அன்னைக்கு ராவோட ராவா ரயிலேறி மெட்றாஸீக்கு வந்துட்டேன். ரயில் சார்ஜீக்கு கையிலே கொஞ்சம் பணம் கொடுத்தது வள்ளிதான். பாவம் வள்ளி! எங்கனாச்சும் கண்ணாலம் கட்டிக்கினு நல்லபடியா வாழணும்.... அந்த விசயம் தெரிஞ்சிக்கிறதுக்குத்தான் சார் கடுதாசி எழுதணும். அடிக்கடி தோணும். தோணும் போதெல்லாம் யாருகிட்டேயாவது போயி, சொல்லி எழுதச் சொல்றது. எழுதி எங்கே அனுப்பறது? அப்புறம் மாமனுக்குத் தெரிஞ்சிதுன்னா என்னெத் தேடிக்கிட்டு வந்துட்டா இன்னா பண்றதுன்னு நெனைச்சிக்கிட்டு பேசாம வெச்சிக்குவேன். ஆனா பாவம், வள்ளிப் பொண்ணை நெனச்சா வருத்தமா இருக்கும். அவளைக் கண்ணாலம் கட்டிக்காம போனோமேன்னு நெனச்சா அழுகை அழுகையா வரும். நானே கண்ணாலம் கட்டிக்காம ஓடியாந்துட்டேனே. வேற எவன் வந்து அவளைக் கட்டிக்கப் போறான்? யாருமே கண்ணாலம் கட்டாம அவ வாழ்க்கையே வீணாப்பூடுச்சோ? நெனச்சா நெஞ்சே வெடிச்சிப் போற மாதிரி வருத்தமா இருக்குது சார். ஹம்... பொண்ணுன்னு ஒருத்தி பொறந்தா அவளுக்குப் புருசன்னு ஒருத்தன் பொறக்காமலா பூட்றான்!... எல்லாத்துக்கும் கடவுள்னு ஒருத்தன் இருக்கான் சார்... அந்தக் கடுதாசியிலே ஒண்ணை எடுத்துப் படிக்கிறேன் கேக்கிறியா சார்? "தேவரீர் மாமாவுக்கு, சுபம். உன் சுபத்தையும் உன் மவள் அன்புமிக்க வள்ளியின் சுபத்துக்கும் எழுத வேண்டியது. உன் மவளை நான் கட்டிக்கலேன்னு மனசிலே ஒண்ணும் வருத்தம் வெச்சிக்காதே! இவ்வளவு நாளு வள்ளிக்குக் கண்ணாலம் காச்சியெல்லாம் நடந்து, புள்ளைக்குட்டியோட புருசன் வூட்லே வாழும்னு நெனைக்கிறேன். இன்னா பண்றது? நா கொடுத்து வெக்கலே... அதுக்காக எனக்கு ஒண்ணும் வருத்தம் கெடையாது. இந்த சென்மத்திலே இல்லா காட்டியும் அடுத்த சென்மத்திலே நான் வள்ளியெத்தான் கண்ணாலம் கட்டிக்குவேன். ஆனா அப்பவும் அவளுக்கு அப்பனா வந்து நீயே பொறக்காம இருக்கணும். இங்கே நான் ஏதாவது நல்ல பொண்ணா பாத்துக்கிட்டிருக்கேன். கெடைச்சதும் ஒனக்குக் காயிதம் போடறேன். சமாச்சாரம் வந்ததும் நேரிலே வந்து எனக்குக் கண்ணாலம் கட்டிவெக்க வேணும்னு கேட்டுக் கொள்கிறேன்... இப்படிக்கு, உன் அக்கா மவன் பாண்டியன்..." நான் சொன்னதை அப்படியே எழுதிக் கொடுத்தார் சார், அவரு. யாருன்னு கேக்கிறியா?... எத்தினியோ பேரு எழுதிக் குடுத்தாங்க. யாருன்னு சொல்றது. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கடுதாசி எழுதும்போது சொன்னதைத்தான் அப்பிடியே ஞாபகம் வெச்சுக்கிட்டு திருப்பிச் சொன்னேன். இல்லேன்னா, நான் ரொம்பப் படிச்சிக் கிழிச்சேன். .. நெனச்சிப் பாத்தா வள்ளிப் பொண்ணுக்கு என்னம்மோ துரோகம் பண்ணிட்ட மாதிரித் தோணுது. அந்த சமயத்திலே தனியா குந்திக்கினு அழுவேன். நம்ம மானேஜர் இல்லே சார் - ஐயிரு அவுரு என்னெப் பாத்து ஒருநாள் சொன்னாரு 'இவன் ஒரு கேரக்டர்'னு... அப்படின்னா என்னான்னு எனக்குத் தெரியலை. நான் ரொம்ப அழகு சார். நெசமாத்தான்... என்னை மாதிரி இன்னொரு அழகான மனுசனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லே. நான் அவ்வளவு அழகு சார் - என்னெப்பத்தி நானே எப்படி சார் ஒரேயடியா சொல்லிக்கிறது? அதுக்குத்தான் சொல்றேன் ஒரு தடவை இங்கே வந்துட்டுப் போங்கன்னு. கடுதாசி எழுதற பழக்கத்தை எப்படி உட்டேன்னு கேளுங்க, சுகுணா இல்லே சார், சுகுணா - சினிமாவிலே 'ஆக்டு' குடுப்பாங்களே, பெரிய ஸ்டார் - அந்த அம்மாவை நீங்க பார்க்காமயா இருந்திருப்பீங்க? படத்திலேயாவது பாத்து இருப்பீங்களே... அதான் அந்த அம்மா படம் எல்லா பத்திரிகையிலேயும் வந்துச்சே - கார் ஆக்சிடன்டுலே செத்துப்போன உடனே - அதுக்கு முதல் நாளு நம்ம ஹோட்டல்லே இங்கேதான் மூணாவது மாடியிலே ஒன்பதாம் நம்பர் ரூம்லே தங்கி இருந்தாங்க. பாவம்! பத்து வருசத்துக்கு முந்தி அந்த அம்மாவுக்கு இருந்த பேரும் பணமும்... ஹ்ம்! எல்லாம் அவ்வளவுதான் சார். ஆனா நேர்லே பாத்தா அடாடாடா! 'ஸம்'னு இருப்பாங்க சார். அவங்களுக்கு கடைசி காலத்திலே சான்ஸே இல்லியே, ஏன் ஸார்? நான் யாரு கிட்டேயும் பேசாதவன். ஆனா அவுங்க கிட்டே மட்டும் ஏனோ ரொம்பப் பேசுவேன். அவுங்களுக்கும் எங்கிட்டே ரொம்ப ஆசை - அதுக்காகத்தான் இங்கே வந்திருந்தாங்களாம். எதுக்கு? - அதான் பழைய மாதிரி மறுபடியும் பேரும் பணமும் எடுக்கிறதுக்காக... என்னென்னமோ திட்டமெல்லாம் போட்டாங்க... யார் யாரோ வருவாங்க, பேசுவாங்க... நமக்கு அதெல்லாம் இன்னா தெரியுது? அவுங்க யார் யாரையோ புடிச்சி சினிமா படம் பிடிக்கறதுக்குப் பிளான் போட்டாங்க சார். அதிலே ஒரு ஆளு என்னைக் கேட்டான் சார்: 'ஏம்பா, நீ படத்திலே ஆக்ட் குடுக்கிறியா, ஹீரோ பர்சனாலிடி இருக்கே'ன்னு. நானும் 'ஈஈ'ன்னு இளிச்சிக்கிட்டு நின்னேன். அப்புறம் அந்த சுகுணா அம்மாதான் சொன்னாங்க: 'பாண்டியா, நீ குழந்தை. சினிமாவெல்லாம் உனக்கு வேணாம்; அது உன்னைப் பாழாக்கிடும்' - அப்படீன்னு. அவ்வளவுதான்! நமக்கு ஒதறல் எடுத்துக்கிச்சி. அந்த ஆசையை விட்டுப் பிட்டேன். ரெண்டு மூணு நாளிலே நான் ரொம்ப சினேகம் ஆயிட்டேன். அவங்களோட, வள்ளி மேலே வந்த ஆசை மாதிரி அவங்க மேலேயும் லேசா ஒரு ஆசை உண்டாயிடுச்சி. ஜன்னல் வழியா அவுங்க மொகம் தெரியற இடத்திலே நின்னு அவங்களையே பாத்துக்கிட்டிருப்பேன். அவுங்களும் பாப்பாங்க. அவுங்க சிரிப்பாங்க; நானும் சிரிப்பேன். அன்னக்கிப் பாத்து எனக்கு மாமாவுக்குக் கடுதாசி எழுதணுமிங்கிற ஆசை வந்தது. காயிதத்தை எடுத்துக்கிட்டு, சுகுணா அம்மாகிட்டே போனேன். அந்த அம்மா சந்தோசமா கூப்பிட்டு உக்காரச் சொல்லிக் கடுதாசி எழுத ஆரம்பிச்சாங்க. அப்ப அவுங்க பக்கத்திலே ஒரு புஸ்தகம் இருந்தது. அது இங்கிலீஷ் புஸ்தகம். எனக்குப் படிக்கத் தெரியாதே ஒழிய, எது இங்கிலீசு எழுத்து, எது தமிழ் எழுத்துன்னு நல்லாத் தெரியும். இங்கிலீசு எழுத்துத்தான் சார் ரொம்ப அழகு; தமிழ் நல்லாவேயில்லே, என்னமோ புழு நௌியற மாதிரி... அந்த சுகுணா எப்பவுமே ஏதாவது பொஸ்தகத்தைப் படிச்சிகினே இருப்பாங்க - நா அவங்களைக் கேட்டேன்: "நம்ம ஐயிருல்லே - மேனேஜர் - அவரு என்னைப் பார்த்து, 'இவன் ஒரு கேரக்டர்'னு சொன்னார், அப்படின்னா என்னா அர்த்தம்"னு. சுகுணா சிரிச்சிக்கிட்டே சொன்னாங்க: "அவரு சொன்னதிலே ஒண்ணும் தப்பில்லே" அப்படீன்னா... ... அவங்க சொன்ன அர்த்தத்தை அப்படியே எனக்குத் திருப்பிச் சொல்ல வரல்லே. அனா அர்த்தம் மட்டும் புரிஞ்சு போச்சு. நான் இன்னா சார் அப்பிடியா? அந்தச் சுகுணா சொல்வாங்க. என் கண்ணு ரொம்ப அழகாம்; என் உதடு கீழ்உதடு இல்லே. அது ரொம்ப ரொம்ப அழகாம்; நான் மன்மதனாம். எனக்கு அவுங்க அப்படிச் சொல்லும்போது உடம்பெல்லாம், என்னமோ செய்யும். எனக்கு அவுங்க மேலே ஆசை - ஆசைன்னா, காதல் உண்டாயிருச்சி; போ சார், எனக்கு வெக்கமா இருக்கு. அன்னக்கிக் கடுதாசி எழுதறப்போ நான் என் மனசுக்குள்ளே இருந்த ஆசையைச் சொல்லிப்பிட்டேன். கொஞ்சம்கூடப் பயப்படலே! அவுங்க முகத்தைப் பார்த்தப்போ அப்படி ஒரு துணிச்சல்; ஆனா எல்லாம் பொசுக்குனு போயிடுச்சி சார். என் மூஞ்சியையே பார்த்துக்கிட்டிருந்துட்டு திடீர்னு என்னெக் கட்டிப் புடிச்சி, அவுங்க - அந்த சுகுணா - 'ஓ'ன்னு அழுவ ஆரம்பிச்சுட்டாங்க சார். எனக்கும் அழ வந்திடுச்சு. நானும் அழுவறேன். அவுங்களும் அழுவறாங்க... எனக்கு 'ஏன்'னே புரியலே. அப்புறம் அவுங்க சொன்னாங்க... அது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. "நான் பாக்கியசாலிதான்! ஆனா என்னோட இந்த வௌிவேஷத்தைக் கண்டு நீ மயங்காதே. நான் வெறும் சக்கை... விஷச் சக்கை... ஒரு மனுஷனுக்குத் தரக்கூடிய இன்பம் எதுவும் எங்கிட்டே இல்லே. உன்னை அடையறதுக்கு நான் குடுத்து வெக்கலே... அந்தப் பாக்கியம் இருந்தும் இல்லாம போன மாதிரி, அடுத்த ஜென்மத்திலாவது நாம்ப ஒருத்தரை ஒருத்தர் அடையலாம்...". இன்னும் என்னென்னமோ சொல்லிக்கினெ என் கையிலே மொகத்தைப் பொதைச்சுக்கிட்டு கதறிட்டாங்க கதறி - யாரு அவங்க? - பெரிய சினிமா ஸ்டாரு சார்!... பாவம் அடுத்த நாளு அநியாயமா பூட்டாங்களே சார்! அவுங்க குடுத்த மோதிரம் ஒண்ணு - தோ- விரல்லே கெடக்கு... ஆனா, அந்த அம்மா ஐயிரு என்னைச் சொல்றமாதிரி - அவங்களே ஒரு கேரக்டருதான் சார். ஆனா, அவுங்க செத்தப்போ நான் வருத்தப்படவே இல்லை சார்! நான் எப்ப சாகறதுன்னுதான் அடிக்கடி யோசிக்கிறேன் சார்; இதிலே இன்னொரு கஷ்டமும் இருக்கு. அடுத்த ஜென்மத்திலே நா யாரைக் கண்ணாலம் கட்டிக்கறது? வள்ளியையா, சுகுணாவையா?... இந்த ஜென்மத்திலே நான் சொகமாத்தான் இருக்கேன். அடுத்த ஜென்மத்தை நெனைச்சிக்கினா ஒண்ணுமே புரியலை சார்... இதெப்பத்தி உங்களை ஒரு வார்த்தை கேக்கலாம்னுதான் சார் இந்தப் பக்கம் வந்தா வாங்கன்னு சொல்றேன். இங்கே இருக்கிறவங்க, கேட்டா சிரிக்கிறாங்க சார்... "நீ ஒரு 'கேரக்டர்" தான்"னு சொல்றாங்க. பார்க்கப் போனா ஒலகத்திலே ஒவ்வொரு மனுஷனும் ஒரு 'கேரக்டர்' தான்! நீ இன்னா சார் சொல்றே...? ------ #15. புதிய வார்ப்புகள் மாடியறையில் இந்துவைக் காணாமல் அவளது செல்லப் பூனை குறுக்கும் நெடுக்கும் அலைந்துகொண்டு இருந்தது. வராந்தா வழியாக-அவளைத் தேடியவாறு-சுவரோரமாய் நடந்து மாடிப் படியருகே வந்து நின்று, கீழே ஹாலைக் குனிந்து பார்த்தது அந்தக் கருப்புப் பூனை. பொழுது மங்கி வெகுநேரம் ஆகியும் விளக்கைப் பொருத்த வேண்டுமென்ற உணர்வுகூட அற்றவளாய், முன் ஹாலில் இருண்ட மூலையில் கிடந்த ஸ்டூல் ஒன்றில், யாருக்கோ அஞ்சிப் பதுங்கியவள் மாதிரி உட்கார்ந்திருந்த இந்துவின் தாய் குஞ்சம்மாள், தலை நிமிர்த்தி மாடி வராந்தாவைப் பார்த்தாள். இருளில் ஜொலிக்கின்ற அந்தக் கறுப்புப் பூனையின் இரண்டு கொள்ளிக் கண்களையும் காண அவள் அச்சம் கொண்டாள். அந்தப் பூனையும் 'இந்து எங்கே? . . . இந்து எங்கே . . .?' என்று சினம் மிகுந்து அவள் மீது பாய்ந்து குதறுவதுபோல் அலறியவாறு மாடிப் படிகளில் வாலை நௌித்துச் சுழற்றியவண்ணம் இறங்கி வந்து கொண்டிருந்தது. அந்தப் பூனையின் அலறல் மனிதக் குரல்போல் அவளுக்கு 'உருவகம்' கொண்டது. குஞ்சம்மாள் தன் காதுகளைப் பொத்திக்கொண்டாள். அவள் கண்களுக்கு அந்தப் பூனையின் விழிகள், தன் கணவரின் விழிகளைப் போன்று அச்சம் விளைத்தன. அந்தச் சமயத்தில் தன் கணவரின் பிரசன்னத்தைக் கற்பனை செய்தே அவள் உடல் நடுங்கினாள். மாடிப் படிகளில் அலறியவாறே இறங்கி வந்த கறுப்புப் பூனை, குஞ்சம்மாளின் காலைச் சுற்றிச் சுற்றிப் பரிதாபமாய் அழுதது. குஞ்சம்மாள் குனிந்து பூனையைக் கையில் எடுத்தாள். முகத்தோடு அணைத்துக்கொண்டு அழுதாள். தன்னைக் காணும்போதெல்லாம் விரட்டித் துரத்தும் அவளது இந்தப் புதிய செய்கையில் அந்தப் பூனை ஆச்சரியம் கொண்டதுபோல் அமைதியடைந்தது. இந்தப் பூனையின் தவிப்பை அவள் உதாசீனப்படுத்திவிடலாம். இதுபோல் மற்றவர்களின் தவிப்பை உதாசீனப்படுத்த தனக்கு அதிகாரம் இல்லை என்றாலும், சமாதானப்படுத்தி அவர்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதிலாவது தான் வெற்றி காணமுடியுமா என்று எண்ணியபோது, அவள் மலைத்துப்போய்க் குழம்பினாள். அந்தக் குழப்பத்திலும் மலைப்பிலும் அவள் கையிலிருந்து நழுவிக் குதித்தப் பூனை, மீண்டும் இந்துவைத் தேடி அழைத்தவாறு ஒரு குழந்தைபோல் பின்கட்டை நோக்கி ஓடிற்று. அந்தப் பூனையின் குரல் குஞ்சம்மாள் நெஞ்சத்தைக் குடைத்தது. பாவம், எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்துவுக்கு - மாடியறையில் சிறையிடப்பட்டு நாலு வருஷமாய்த் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த இந்துவுக்கு - இந்தப் பூனைதான் உற்ற துணையாய் உடன் இருந்தது. அந்த நாலு வருஷத்தின் ஆரம்ப காலத்தில் - தன் குற்றத்தின் பயங்கரத்தையும், அந்தத் தண்டனையின் கொடுமையையும் அறியக்கூட முடியாத அந்த வயதில் - அவள் நாளெல்லாம் பாடிக்கொண்டும் பூனையோடு விளையாடிக் கொண்டும் இருந்தாள் . . பிறகு சில காலத்தில் பாட்டும் ஆட்டமும் குறைந்து, சதா நேரமும் படித்துக்கொண்டே இருந்தாள் . . சின்னவள் விஜயாவும் லைப்ரரியிலிருந்து புத்தகங்களைக் கொண்டுவந்து அவளுக்காகக் குவிப்பாள். ஆனால் சமீப காலங்களில் அவள் இவற்றிலெல்லாம் நாட்டமின்றி, தன்னுள்ளேயே அரிக்கப்பட்டவள்போல் குன்றிப் போய், சதா நேரமும் ஆழ்ந்த சிந்தனையும், வானத்தை வெறித்த பார்வையும், குமுறி விடுகின்ற பெருமூச்சுகளுமாய்ச் சாம்பிக் கிடந்தாள். அப்போதெல்லாம் அவளுக்கு ஆறுதலாய் அருகில் இருந்து அவள் தனிமையை மாற்றியது இந்தக் கறுப்புப் பூனைதான். அவளும் தனது ஆழ்ந்த சோகங்களின் நடுவே இந்தப் பூனையை எவ்வளவோ அன்போடு பாலூற்றி வளர்த்தாள். இதைவிட்டுப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வ்ந்தது! போகும்போது இதைப்பற்றி நினைத்திருப்பாளா? கதறிக் கதறி அழுதாளே . .அந்த அழுகையில் இந்தக் கறுப்புப் பூனைக்கும் பங்கு உண்டா? அவள்தான் சொல்லிவிட்டாளே! 'யாருக்காகவும் தனது வாழ்க்கையைத் தான் பலியிட முடியாது' என்று . . . 'அவள் சொன்னது இருக்கட்டும். அப்படி ஒரு காரியத்தை என்னால் எப்படிச் செய்ய முடிந்தது' என்ற பிரமிப்பில் குஞ்சம்மாளின் விழிகள் வெறித்தன. செய்த காரியம் சரிதான். ஆனால் சரியான காரியங்களையெல்லாம் செய்துவிட முடிகிறதா? அவ்விதம் தனக்குச் செய்வதற்கான துணிச்சலைத் தந்த அந்த விநாடிகளை அவள் மனத்துள் வாழ்த்தினாள். அதன் விளைவுகளைக் கற்பனை செய்து இப்போது அவள் நடுங்கிக்கொண்டிருக்கும் இந்தநேரத்தில்கூட, அது 'சரி' தான் என்று தோன்றும் அளவுக்கு இந்தக் காரியம் சரியானதாய் இருந்தது. எனினும் அந்த நிலைமை இப்போது இருந்தால் - இந்த நிமிஷம் அந்தத் துணிச்சல் தனக்கு இருக்காது என்றே அவளுக்குத் தோன்றியது. அந்த நிமிஷத்தின் நிர்ப்பந்தம், அந்த நேரத்தில் அவளைப் புதிதாய் வார்த்து, அந்தப் புதுமையான துணிச்சலைத் தந்து அந்தக் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டுவிட்டது . . . அப்படி ஒரு நேரத்தின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் நான்கு வருஷத்துக்கு முன் பதினேழு வயதில் இந்து அவனுடன் ஓடிப்போய் இருக்கவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆமாம்; ஒரு நியாயத்தின் அடிப்படையில்தான் சில நிர்ப்பந்தங்கள் நேர்கின்றன. நிர்ப்பந்தங்கள் நேர்ந்த நிமிஷங்கள் தளர்ந்தாலும் அதன் நியாயங்கள் நிலைத்தே விடுகின்றன. அவளுக்கு நேர்ந்த அந்த நிர்ப்பந்தத்தை நாலு வருஷங்களுக்குப் பிறகுதான் தன்னால் உணரமுடிந்திருக்கிறது என்று நினைத்தபோது, தன்னைப்போல் தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் இதை உணர்ந்துகொள்ள முடியுமா? என்ற் அச்சம் பிறந்தது அவளுக்கு. 'இந்து எங்கே? இந்து எங்கே?' என்று அலறியவாறே மீண்டும் அந்தக் கறுப்புப் பூனை கண்களில் பந்தம் கொளுத்தித் தேடிக்கொண்டு அவள் எதிரே வந்து நின்றது. இன்னும் சற்று நேரத்தில் இதே மாதிரி தன்னைச் சூழ்ந்து நெருக்கிக் கேட்கப்போகும் தன் குடும்பத்தினருக்கு அவள் என்ன பதில் சொல்லப்போகிறாளோ? இந்தக் குடும்பத்தின் அதிகாரமும் பொறுப்பும் மிக்க தலைவி அவளே எனினும், குடும்பம் என்ற கூட்டுக்குள் தனக்குத் தரப்பட்ட, தனக்குரிய, அதிகாரத்தைத் தான் வரம்பு மீறி உபயோகித்து விட்டோம் என்ற பயமே தோன்றி எல்லோர் முன்னிலையிலும் தான் குற்றவாளியாகி நிற்பது போலிருந்தது அவளுக்கு. ஓடிப்போன-தன்னால் ஆசீர்வதித்து அனுப்பப்பட்ட இந்துவைத் தவிர, தற்சமயம் வௌியில் போயிருக்கும் மற்றவர்கள் அனைவரும் ஒருவர்பின் ஒருவராய் நிச்சயம் திரும்பி வருவார்கள். கோயிலுக்குப் போயிருக்கும் மாமியாரோ, டியூஷனுக்குப் போயிருக்கும் அம்பியோ, காலேஜுக்குப் போய்விட்டு ஊர் சுற்றியபின் ஏதேதோ காரணங்கள் கூறிக்கொண்டுவரும் விஜயாவோ, அல்லது இந்நேரம் கிளப்பில் சீட்டாடிக் கொண்டிருக்கும் அவள் கணவரோ - யாரையேனும் அவள் முதலில் சந்திக்க வேண்டியிருக்கும். முதலில் யாரைச் சந்தித்தாலும் மொத்தமாக எல்லோரயும் அவள் சமாளித்தே தீரவேண்டும்! குஞ்சம்மாளுக்கு மீண்டும் முகமெல்லாம் வியர்வை கண்டது. வீடு இருண்டே கிடந்தது. விளக்கைப் பொருத்தவேண்டும் என்ற உணர்வுகூட அவளுக்கு இல்லை. பாட்டிதான் முதலில் வந்தாள். நாளெல்லாம் மழை பெய்து கோயிலின் பிரகாரமெல்லாம் சேறும் சகதியும் குழம்பி நின்றதோடல்லாமல் எந்த நிமிஷமும் மீண்டும் மழைபெய்யகூடும் என்ற அறிகுறியோடு பகலே ஒரு அந்தியாய் இருண்டு கிடந்ததால் வழக்கமாகக் கோயிலில் நடைபெறும் உபன்யாசம் இன்று உட்பிரகாரத்தில்-சாஸ்திரத்துக்குச் சற்று நேரம் - சுருக்கமாகவே நடந்து முடிந்திருந்தது. இல்லாவிட்டால் பாட்டிதான் எப்போதுமே கடைசியாக வருவாள். காம்பவுண்டு கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த பாட்டி, வீடு முழுவதும் இருண்டு கிடப்பதை கண்ணுற்று, "என்னடி பொண்ணே, ஒரே இருளோன்னு கெடக்கே? . . கரண்டு கட்டா? இந்து . . இந்து போன் பண்றத்துக்கு என்ன?" என்று கூப்பாடு போட்டவாறே இருளில் துழாவியவாறு மாடிப்படிகளின் கைப்பிடிச் சுவரை ஒரு கையாலும் வலது முழங்காலை ஒரு கையாலும் தாங்கி விசுக் விசுக்கென்று ஏறி மேலே போனாள். ஒரு நாளைக்கு நூறு தடவை மாடிப்படி ஏறி இறங்குவதானாலும் பாட்டிக்கு அலுக்காது. அந்தக் குடும்பத்திலேயே சின்ன உருவம் பாட்டிதான். ராமபத்திர ஐயருக்கு இவள் அம்மா என்று நினைக்க யாருக்கும் ஒரு வியப்பும் சிரிப்பும் நிச்சயம் வரும். ராமபத்திரனுக்கு இந்த மாடியை நினைத்தாலே பயம்; ஒரு முறை ஏறி இறங்குவதற்குள் அவருக்கு மேல்மூச்சு வாங்கும். அதுவும் இரண்டு வருஷமாய் ரத்த அழுத்த நோயும் ஹிருதய பலவீனமும் ஏற்பட்ட பிறகு, காரைக்கூடப் பதினைந்து மைல் வேகத்திற்கு மேல் அவர் ஓட்டுவதில்லை. ஆகவே மாடிக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. குஞ்சம்மாளுக்கோ மாடியை நினைத்தாலே குடலைப் பிடுங்கிக்கொண்டு வரும். அவ்வளவு ஆத்திரம் இந்துவின்மீது. விஜயாவுக்குப் படிக்க இடைஞ்சலா யிருக்கக்கூடாது என்பதற்காக கீழே பின் கட்டில் தனி அறை. பாட்டியும் அம்பியும் மாடி ஏறி இறங்க அலுக்காதவர்கள். ஏறி இறங்கக் களைப்புத் தெரியாமல் இருக்க பாட்டுப் பாடுவதுபோல் 'இந்து இந்து' என்று பாட்டி அழைப்பாள். குழைந்து குழைந்து பேத்தியை இந்தப் பாட்டி அழைப்பதைக் கேட்கும் போதெல்லாம் குஞ்சம்மாளின் முகம் சுருங்கும். அந்தப் பெயரின்மீதே அவளுக்கு அத்தனை வெறுப்பு. நாலு வருஷத்துக்கு முன் எங்கோ ஓடிப்போன இந்துவை ஒன்றரை மாதத்திற்குப்பின் - ஒரு நாள் கண்டு பிடித்துக்கொண்டு வந்து அந்த அறையில் போட்டு அடைத்தாரே ராமபத்திரன், அன்றைக்கு மாடிக்குப் போய் அவள் எதிரே நின்று, உதட்டைக் கடித்து இரண்டு கைகளையும் அவள் எதிரே நீட்டிக்கொண்டு சப்தமில்லாமல் கனத்த குரலில், "செத்துப் போயேண்டி . . இந்த மானங்கெட்ட உயிரை ஏன் வெச்சிண்டிருக்கே? தூ! நீ ஒரு ஜென்மமா?' என்று இந்துவின் முகத்தில் காறித் துப்பிவிட்டு வந்தாளே, அவ்வளவுதான்! அதன்பிறகு அவளை நேருக்கு நேர் சந்தித்துப் பேசியது இன்றுதான்; இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான். பாட்டி மாடிக்குப் போய் அறையையும் வராந்தாவையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அடுத்த வீடுகளில் விளக்கு எரிவதைக்கண்டு "ஊரெல்லாம் எரியறதே! நம்மாத்திலே மட்டும் என்னடி கோளாறு?" என்று முனகிக்கொண்டே சுவரைத் தடவி ஸ்விட்ச்சைப் போட்டாள். பளீரென்று வீசிய வௌிச்சத்தில் அறை கிடந்த அலங்கோலத்தைப் பார்த்தாள் பாட்டி. அலமாரியின் கதவுகள் இரண்டும் யோரோ அள்ளிக்கொண்டு போய்விட்டதுபோல் விரியத் திறந்து, துணிகளும் பொருள்களும் இறைந்து கிடந்தன. "இந்து . . . அடியே இந்து!" என்று கூவியவாறே மாடிப்படிகளில் இறங்கிவந்த பாட்டி, சமையல் அறையில் தெரிந்த சிறு வௌிச்சத்தைக் கண்டு "குஞ்சு . . . குஞ்சம்மா . . எல்லோரும் எங்கேடி போயிட்டேள்? இந்து . . உள்ளேயா இருக்கே? என்று கேட்டவாறே சமையல் அறையை நோக்கி நகர்ந்தபோது அவள் முதுகுக்குப் பின்னாலிருந்து . . . "இந்து இல்லே . . ." என்று துயரத்தின் கனமேறிய குரல் இருளிலிருந்து ஒலிக்கக் கேட்டு, நின்ற நிலையிலேயே தோள் வழியே முகம் திருப்பிப் பார்த்தாள் பாட்டி. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. சுவரைத் தடவி ஹால் விளக்கின் ஸ்விட்ச்சைப் போட்டாள். "இருட்டிலே உட்கார்ந்துண்டு என்னடி செய்யறே?" என்று கேட்டவாறே குஞ்சம்மாளின் அருகே பாட்டி நெருங்கி வந்தாள். குஞ்சம்மாள் துயரத்தால் உதடுகள் துடிக்க ஒரு விநாடி தலைக்குனிந்து அழுகையை விழுங்கிக்கொண்டு முகம் நிமிர்த்தி மாமியாரைப் பார்த்தாள். சில விநாடிகள் ஒன்றுமே பேசாமல் சிவந்த விழிகளை இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள். பாட்டியும் ஒன்றுமே விசாரிக்காமல் எதையோ விவர விளக்கங்களற்றுப் பொதுப்படையாகப் புரிந்து கொண்டவள்போல் இடுப்பில் ஒரு கையை ஊன்றி மௌனமாக கலவரத்தோடு குஞ்சம்மாளின் முகத்தைப் பார்த்தாள். "எங்கே இந்து?" என்று குரலை அடக்கித் தனது கன்னங்களிரண்டிலும் உள்ளங் கைகளை வைத்து அழுத்திக்கொண்டு கேட்டாள் பாட்டி. "அவன் வந்தான்;அவனோட அவளும் போயிட்டா" என்று கரகரத்தக் குரலில் கூறினாள் குஞ்சம்மாள். "அந்தப் பாவி மகன் எதுக்கு வரணும் இங்கே? இவளை நீ எப்படிப் போகவிட்டே? அவள் அப்பன் கிளப்லே தானே இருப்பான்? போன் பண்ணிருக்கபடாதோ? முன்னே பிடிச்சு ஜெயில்லே போட்ட மாதிரி இந்தத் தடவை தூக்கிலேயே போடுவானே?இப்பிடி அறிவு கெட்டவளா, பயித்தியம் புடிச்ச மாதிரி உட்காந்துண்டு, 'அவ அவனோட போயிட்டா'ங்கரயே? அவ அப்பன் வந்தா உன்னைக் கொன்னுடுவானேடி?" என்று பாட்டி கைகளைப் பிசைந்து, தலையிலடித்துக் கொண்டு அங்கலாய்த்தவாறே பக்கத்தில் கிடந்த சோபாவில் உட்கார்ந்தாள். குஞ்சம்மாள் எல்லாவற்றுக்கும் துணிந்தவள்மாதிரி, எதற்கும் அஞ்சாதவள் போல் தலைக் குனிந்து மௌனமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். பாட்டியம்மாள் அங்கலாய்த்து ஓய்ந்தபின் தரையைக் கால் விரல்களால் தேய்த்தவாறே குஞ்சம்மாள் தௌிவான குரலில் கேட்டாள்: "அவனைப் பிடிச்சு ஜெயில்லே போட்டோம் . . .அவன் செய்யாத குத்தமெல்லாம் சொல்லி, அவனுக்குத் திருடன்னு பட்டம் கட்டி, அதுக்கு அவளையே அவனுக்கு எதிரா சாட்சிச் சொல்ல வச்சு, நாலு வருஷம் ஜெயில்லே போட்டோம். என்ன வாழ்ந்தோம்? என் பொண்ணுக்கு என்ன விமோசனம் ஏற்பட்டது? யோசிக்க வேண்டாமா? நகைக்கு ஆசைப்பட்டு மைனர் பொண்ணைக் கடத்திண்டு போனான்னு நாம்ப சொன்னாலும் - ஒரு மாதத்துக்கு மேலே அவா ரெண்டு பேரும் ஒண்ணா வாழ்ந்திருக்காங்கறதை நாம்ப மறைக்கப் பார்த்தாலும் - ஊரிலே யாரு நம்பறா? என்னத்தான் காசு பணத்தைக் காட்டினாலும், ரொம்ப வேண்டியவாகூட விஜயாவைத்தான் பார்க்க வராளே தவிர, இவளை யாரு சீந்தரா? . . . அப்புறம் இவ என்னதான் ஆறது? உங்க பிள்ளை அவனைத் தூக்கிலேகூடப் போடுவார் . . . அவருக்கு வர்ர கோபத்திலே தானே தன் கையாலே அவனைக் கொன்னாலும் கொன்னுடுவார் . . சரி, அப்புறம் இந்துவோட பிரச்னை அத்தோடு நமக்குத் தீர்ந்துடுமா? அவ நமக்கு ஒரு பிரச்னை இல்லையா? அந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்த நாலு வருஷமா நாம்ப என்ன பண்ணினோம்? என்னப் பண்ணப்போறோம்? என்ன பண்ண முடியும்? யோசிங்கோ மாமி . . ." என்று யோசித்து யோசித்து ஆழமான தொனியில் குஞ்சம்மாள் கூறுவதைக் கவலையோடும் கலங்குகின்ற கண்களோடும் கேட்ட பாட்டிக்கு சில யோசனைகள் பிறக்க ஆரம்பித்தன. மீண்டும் சில நிமிஷ மௌனத்தில் இருவருமே தலை குனிந்து அமர்ந்திருந்தனர். திடீரென்று இருவருமே ஒரே சமயத்தில் தலை நிமிர்ந்து பார்த்தனர். இப்போது பாட்டியின் கண்களுக்கு தனது மருமகள் அறிவு கெட்டவளாகவோ, பைத்தியம் பிடித்தவளாகவோ தோன்றவில்லை; ஆனால் இவ்வளவு நேரம் குஞ்சம்மாளை மட்டும் தனியாகப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த பயமும் 'எப்படிச் சமாளிக்கப் போகிறோம், இதை' என்ற பிரச்னையும் பாட்டியைப் பிடித்து ஆட்ட ஆரம்பின. "என்ன நடந்தது? எதுக்கு அப்படிப் பண்ணினே . . இனிமே என்னடி பண்றது? நேக்கு வயத்தையெல்லாம் என்னமோ பண்றதே . . . முன்னேயே அவ ஓடிப்போனப்போ - எல்லாத்துக்கும் நீயும் நானும்தான் காரணம்னு அவன் பேசல்லியா? நீயும் நானும்தான் அவனோட ஆபீஸ் அட்டண்டரை ஆபீஸ் வேலைக்கே விடாம வீட்டுக்குக் கூப்பிட்டுக் கூப்பிட்டு வேலை வாங்கினமாம். ராத்திரி பகல்னு இல்லாம அந்த வேணுவை உக்காத்திவைச்சு சாப்பாடும் பலகாரமும் காபியும் குடுத்துக் குடுத்து இந்த வீட்டிலே ஒருத்தன் மாதிரி ஆக்கினோமாம் . . இப்படி எவ்வளவு பேசினான் . . இப்போ அவன் வந்து கேப்பானடி? ஏண்டி, நோக்கு பயமா இல்லையா?" என்று உடல் நடுங்க, நடுங்குகின்ற கைகளால் மருமகளைத் தொட்டாள் பாட்டி. குஞ்சம்மாள் தைரியம் அளிப்பவள்போல் தன் கரத்தின் மேல் வைத்த பாட்டியின் கரத்தைப் பற்றிக்கொண்டு பெருமூச்செறிந்தாள். அவள் மனத்தில் ஒரு தைரியமே பிறந்தது. பயந்து நடுங்குகிறவர்களுக்குக் கூடத் தன்னைவிடப் பயந்து நடுங்குகிற இன்னொரு துணை இருந்தால் ஒரு தைரியம் பிறக்கும். பயத்தையும் துயரத்தையும் சமாளிக்கவேண்டுமானால் முதலில் அதைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். குஞ்சம்மாள் நடுங்கிக் கொண்டிருந்தது அதற்குத்தான். தனது பயத்தைப் பகிர்ந்து கொள்ளத் தக்கவர்கள் வராமால், யாரை எண்ணிப் பயந்துகொண்டு இருந்தாளோ அந்தக் கணவரே வந்து விடுவாரோ என்றுதான் அவள் தவிக்க வண்ணமிருந்தாள். இப்போது பாட்டியம்மாளும் தன்னைப்போல், 'இந்துவின் அந்த ஓடிப்போன குற்றத்துக்குத் தண்டனை தந்தது தவிர அவள் எதிர்கால வாழ்க்கைக்காக இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே எதுவும் செய்யவில்லை . . செய்ய முடிந்ததுமில்லை' என்று பொறுப்பான சிந்தனை வயப்பட்டிருக்கிறாள் என்று உணர்ந்தாள் குஞ்சம்மாள். சில மணி நேரங்களுக்கு முன் திடீரெனச் சமையல் அறையிலிருந்து வௌியே வந்து பார்த்தபோது வேணுவும் இந்துவும் நின்றிருந்த முன் வராந்தாப் பகுதியை அவள் பார்வை இப்போது வெறித்தது. அவளுக்கும் முதலில் அவனைப் பார்த்தபோது தன் மகளின் வாழ்வைக் கெடுத்த பாவி வந்திருக்கிறானே என்றுதான் வயிற்றைப் பிடுங்கிக் கொண்டு ஆத்திரம் வந்தது --- அப்போது வௌியே மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது; சாரலைத் தடுப்பதற்காக வராந்தாவின் முன்புறத்தில் தொங்கிய மூங்கில் தட்டியின் மறைவில் கிடந்த பெஞ்சின் மீது அவன் உட்கார்ந்திருந்தான். இந்து அவன் அருகே மிகவும் உரிமையோடு நின்று புடவைத் தலைப்பால் முகத்தை மூடி விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். அவன் கலங்கிய கண்களும், உணர்ச்சி மிகுதியால் துடிக்கின்ற உதடுகளுமாய்ச் சொன்னான்: "இந்து, நான் ஜெயில்லெ இருந்த ஒவ்வொரு நிமிஷமும் 'எனக்கு வேணும்;அறிவில்லாம ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்த எனக்கு இந்த தண்டனை வேணும், வேணும்'னு அனுபவிச்சேன். ஆனா, என்னைத் 'திருடன்'னு உன் நகைக்கு ஆசைப்பட்டு உன்னைக் கடத்திக்கிட்டு போனவன்னு சொன்னாங்களே . . . போகட்டும்! நீயும்கூட அதுக்கு ஆதரவா சாட்சியம் சொன்னியே - அதை நெனச்சப்போ உன் மேலெ எனக்குக் கோபமே வரலே; பரிதாபமா இருந்திச்சு. இந்தக் கொழந்தையை இழுத்துக்கிட்டு போனதுக்கு இப்படி ஒரு தண்டனையும் வேண்டியதுதான்னு நெனைச்சுக்கிட்டேன் . . . ஆனா நெஜமாச் சொல்லு, இந்து . . நாம ரெண்டு பேரும் ஏதோ முடிவிலே, ஏதொ ஒரு வெறியிலே, ரெண்டுபேரும் சம்மதிச்சுத்தானே ஓடினோம்? இப்போ பயித்தியக்காரத்தனமாகத் தோணினாலும் அப்போ ஏதோ புனிதமான காதல்னு நெனைச்சுத்தானே ஓடினோம்? காதலர்களுக்கு வயிறும் பசியும் உண்டுன்னு ஓடறத்துக்கு முன்னே நமக்குத் தோணல்லே . . .எங்கெங்கேயோ வேலை தேடி அலைஞ்சப்புறம் பட்டினி கிடக்க முடியாம நீயே தானே உன் நகைகளைக் கழட்டிக் கொடுத்து விக்கச் சொன்னே? நானும் முதல்லே மாட்டேன்னு மறுக்கல்லியா? 'நானே உனக்குன்னு வந்தப்புறம் இந்த நகை உனக்கு சொந்தமில்லையா'ன்னு நீ கேக்கலியா? அதெல்லாம் வெறும் நடிப்புன்னு நீ நினைக்கிறயா? இப்போ நீ குழந்தையில்லெ . . நல்லதும் கெட்டதும் தெரியும் - இப்ப சொல்லு, உன் நகைக்கு ஆசைப்பட்டுத்தான் உன்னை ஏமாத்தி நான் அழைச்சிக்கிட்டுப் போனேன்னு நீ நெனக்கிறியா, இந்து? . .. . இந்து . . . அழாதே சொல்லு . . ." என்று அவன் பழைய சம்பவங்களை நினைப்பூட்டிக் கேட்கும்போது இந்து கதறி அழுதாள். "வேணு, என்னை மன்னிச்சுடு . . நான் என் கோழைத்தனத்தாலே உன்னை அபாண்டமாய் பழி சுமத்தித் தண்டனைக்கு ஆளாக்கிட்டேன். அப்ப அவ்வளவு பெரிய பாவமா அது தோணலே . . அந்தப் பாவத்தை நான் இப்பொ அனுபவிக்கிறேன் . . சாகற வரைக்கும் அனுபவிப்பேன் . . ." என்று அவள் அழுதாள். "ஸ் . . அழாதே இந்து! எனக்கு நீ ஒரு தீங்கும் செய்யல்லே. நீ மனசார என்னை அப்படி நினைக்கலேன்னா எனக்கு அது போதும் . . ம்ஹூம் . . அழக்கூடாது . . ." என்று அவள் தோளைக் குலுக்கி அவன் சமாதானப்ப்டுத்தினான். குஞ்சம்மாள் ஒரு விநாடியில் கோபமடங்கி, நெஞ்சம் குழைய அவர்களிடையே குறுக்கிட மனமின்றி ஹாலிலேயே ஒதுங்கி நின்றாள். 'யார் பெற்ற பிள்ளையோ இவன்? இவ்வளவு நல்ல பிள்ளையான இந்த வேணு, நான் பெற்ற பெண்ணின்மீது வைத்த ஆசையால் என் கணவரின் முன்கோபத்ததுக்கும் பிடிவாதத்துக்கும் பலியாகி, நாலு வருஷம் அநியாயமாய் ஜெயிலில் இருந்துவிட்டு 'நீ எனக்கு ஒரு தீங்கும் செய்யலே' என்று தனக்கு எதிராகச் சாட்சி சொன்னவளிடம் வந்து சொல்கிறானே' என்று நினைக்கும்போது குஞ்சம்மாளின் கண்கள் குளமாயின. அதே சமயத்தில் அவன் அவளிடன் சொல்லிக் கொண்டிருந்தான்: "சட்டத்தின் தண்டனையிலிருந்து நான் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமா விடுதலையாகிகிட்டே இருந்தேன் . . .அதே நெரத்தில் உன் குடும்பத்திலே நீ ஒவ்வொரு நாளும் மேலே மேலே கடுமையா தண்டிக்கப்பட்டுக்கிட்டிருப்பேன்னு நான் நினைக்காத நாளே இல்லே, இந்து! நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்த ஒரு காரியம் - தப்புதான், என்னைத் தண்டிச்சு விட்டுடுத்து . . ஆனா உனக்கு விடுதலையே கிடையாதா, இந்து? உன் நிலமை எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும் . . நான் என்ன செய்யலாம் சொல்லு . . சொல்லு இந்து" - அவன் தவியாய்த் தவித்த போது, இவ்வளவு நேரம் அழுதுகொண்டே இருந்த இந்த அழுகை அடங்கிய விம்மலோடு திணறித் திணறிப் பேசினாள். "நாம செய்தது-அப்ப செய்தது-தப்பாகவே இருக்கலாம் . . அந்தக் காரியம் தப்பாப் போனதுக்குக் காரணமே நாம் அதை அப்ப செய்ததுதான். நான் அப்போ என் வாழ்க்கையை நானே தீர்மானிக்கிற வயதிலே இல்லே. அப்போ நான் செய்த காரியத்தினாலே என் வாழ்க்கையே கெட்டுப் போயிருந்தது . . . அதே காரியத்தை நான் இப்ப செய்யல்லேன்னா என் வாழ்க்கை கெட்டே போகும் . . என் வாழ்க்கையை நீயே கெடுத்ததாக இருந்தாலும், இனிமே எனக்கொரு வாழ்க்கை இருக்குன்னா அதை உன்னைத்தவிர வேற யாரும் எனக்குத் தரமுடியாது. ஆனா நான் உனக்குச் செய்த தப்புக்கு நீ திரும்பி என்னைத் தேடி வருவேன்னு நான் நினைக்கவே இல்லே, வேணு . . ." என்று பேச முடியாமல் தொண்டை அடைக்கக் கண் கலங்கினாள் இந்து. உள்ளே ஹாலில் நின்றிருந்த குஞ்சம்மாள் சுவரில் முகம் புதைத்துக்கொண்டு ரகசியமாய், தோள்கள் குலுங்க அழுதாள். "நீ என்ன சொல்றே இந்து? நான் நெனைச்சது போலவேதான் நீயும் நெனைக்கிறியா?" என்று மகிழ்ச்சியும் பதட்டமும் கொண்டு கேட்டான் வேணு. அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்து, அழுது சிவந்த முகத்துடன் நிம்மதியோடு பெருமூச்செறிந்தவாறு புன்னகை பூத்தாள். அவளது மூடிய இமைகளின் வழியே கண்ணீர் வழிந்தது. "வேணு . . நான் உன்னோட வந்துடறேன், என்னை அழைச்சிண்டு போ. போறும், இந்த நரகம் போறும்! அம்மா என்னை 'செத்துப் போயேண்டி, செத்துப் போயேண்டி' ன்னு அடிக்கடி சொல்றா, எத்தனையோ தடவை நானும் தற்கொலை பண்ணிக்கலாம்னுகூட நெனைச்சிருக்கேன். ஏனோ முடியலை என்னாலே . . முடியவே இல்லே வேணு" என்று ஏதோ ஒரு நாள் நிகழ்ந்த சம்பவத்தை ஒரு விநாடி நினைவு கூர்ந்து கண்ணீர் சிந்தினாள் இந்து. வேணுவும் புறங்கையால் கண்களைக் கசக்கிக்கொண்டு அடித் தொண்டையில் கமறிச் செருமினான். "நல்ல வேளை வேணு . . நான் அவசரப்பட்டு செத்துப் போகல்லே. நீ வருவேன்னு நான் கனவுகூட கண்டதில்லே. ஆனா இப்பொ தோண்றது; எனக்குத் தெரியாமலே அப்படி ஒரு நம்பிக்கையிலேதான் நான் உயிர் வாழ்ந்தேன்னு . . இல்லேன்னா இவ்வளவு நாள் நான் இந்த உடம்பிலே உயிரை வச்சுண்டு இருந்த்ததுக்குக் காரணமே இல்லே. சரி, நான் உன்னோட வரேன். நாம போயிடுவோம். ஆனா முன்னே மாதிரி யாருக்கும் தெரியாம ரகசியமாப் போகவேண்டாம். பகிரங்கமாகவே போகலாம். எனக்கு அந்த வயசு வந்தாச்சு! அந்த வயசுக்காகத்தான் இந்த வீட்டு மாடிலே நான் காத்துக்கிடந்தேன் போலிருக்கு. ஆனா இந்தத் தடவை எல்லார் கிட்டேயும் சொல்லிட்டே நாம் போகப் போறோம் . . ." என்று அவள் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட வேணு, அவளது துணிச்சலைக் கண்டு வியந்தவன்போல் விழிகளை மலரத் திறந்து அவள் முகத்தைப் பார்த்தான். அந்த முகம்-நான்கு வருஷங்களுக்கு முன் தான் கண்ட உலகம் தெரியாத பேதை முகமல்ல; வாழ்க்கையின் பலத்த அடியை வாங்கிக் கன்றிப்போய், ஏமாற்றம், துயரம், அவமானம் என்ற வடுக்களை ஏற்று, முடிவற்ற தனிமை என்ற இருளில் கிடந்து, இப்போதுதான் காலத்தால் புதிதாக வார்க்கப்பட்டிருப்பதுபோல் அந்த முகத்தில் அஞ்சாமையும் உறுதியும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. பேதையின் சாயல்கூட இல்லாமல் வாழ்க்கையை நெடிது நோக்கும் தீட்சண்யம் அவள் விழிகளில் சுடர் விட்டுக் கொண்டிருந்தது. "இவள் ஒரு புதிய வார்ப்பு! இவளை ஏமாற்றிக் கடத்திக்கொண்டு போய்விட்டதாகக் கூறினால், உலகம் நம்பாது. ஆகவே இவளோடு கைகோத்துக் கொள்வதன்மூலம் உலகத்தை அச்சமற்றுத் தலை நிமிர்ந்து பார்க்கலாம்' என்ற நம்பிக்கையில் அவன் கம்பீரமாய் எழுந்து நின்றான். அப்போதுதான் ஹால் வாசற்படியில் சுவரோரமாய் ஒண்டி நிற்கும் குஞ்சம்மாளை அவன் கண்டான். அவளைக் கண்டதும் அவனுள் ஒரு தாயைக் கண்ட பாசமே சுரத்தது. எத்தனை தடவை அவன் பசியறிந்து அன்போடு அவனுக்கு அவள் உணவு பரிமாறி இருக்கிறாள்! அவன் அவளைக் கரம் கூப்பி நமஸ்கரித்தான். அவளுக்கு நெஞ்சைப் பீறிக்கொண்டு அழுகை வந்தது. இருப்பினும் அழுகையோடு அவன்மீது பெருகிச் சுரந்த அன்பையும் அடக்கிக்கொண்டு, "நீ ஏண்டா வந்தே? என் குடியைக் கெடுக்கவா? போ . . .போ . . " என்று விரட்டினாள் குஞ்சம்மாள். இந்து திரும்பித் தன் தாயைப் பார்த்தாள். "அம்மா!" என்று அழைத்தாள் இந்து. அதற்குமேல் அவளால் பேசமுடியவில்லை. "நானும் போறேம்மா" என்று அழுதாள். "போவேடி போவே . . . என்ன நெஞ்சழுத்தம்?" என்று மகளின் கரத்தைப்பற்றி உள்ளே இழுத்து மாடிப்படியருகே தள்ளினாள். "மாடிக்குப் போ! அங்கேயே வைச்சுப் பூட்டச் சொல்றேன் . . வேணு! நீ போறியா, இல்ல போலீசைக் கூப்பிடவா?" என்று திரும்பி நின்று வேணுவை மிரட்டினாள் குஞ்சம்மாள். மாடிப்படியில் நின்று சாவதானமாய்த் தாயைப் பார்த்தாள் இந்து: "அம்மா, சட்டம் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லே, என் விருப்பத்துக்கு மாறா என்னெப் பூட்டி வைக்க உங்களுக்கு அதிகாரம் இல்லே; நீ போலீசைக் கூப்பிடு. நான் அதை புரிய வைக்கிறேன்" என்று இந்து கூறியபோது குஞ்சம்மாள் மலைத்து நின்றாள். "அடிப் பாவி! அவ்வளவு தூரத்துக்கு ஆயிடுத்தா? உன்னைப் பெத்த பாவத்துக்கு வேணும்டி வேணும். தாய் தகப்பனைவிட உனக்கு இவன் ஒசத்தியா ஆயிட்டான் . . இல்லே?" என்று புலம்பி அழுதாள் குஞ்சம்மாள். "ஆஹா! மகள் மேலே கொண்ட பாசத்திலேதான் இங்கே என்னை ஆயுள் கைதியா வைச்சிருக்கார் அந்தத் தகப்பனார்! நீயும் அதனாலேதானே, ஒவ்வொரு நாளும் மாடியிலே என் பொணம் விழுந்து கெடக்காதான்னு எதிர்பார்த்துண்டே இருக்கே? போதும் உங்க பாசம்! உங்க வீம்புக்கு நான் பலியாக மாட்டேன். அப்பா வரட்டும், நான் போகத்தான் போறேன் " என்று இந்து ஆவேசம் வந்ததுபோல் கத்தி ஆர்ப்பரித்தாள். வேணு வாசற்படியில் இறங்கி மழைச்சாரலில் நனைவதைக் கூடப் பொருட்படுத்தாமல் நின்றிருந்தான். குஞ்சம்மாள் மாடிப்படியில் நின்றிருக்கும் இந்துவையும் வாசற்படியில் நின்றிருக்கும் வேணுவையும் நடுவில் நின்று மாறி மாறிப் பார்த்தாள். மகளின் ஆவேசம் அவளுக்குப் புரிந்தது. அவள் கூறுவதும் உண்மைதானே? இவள் செத்துப் போகட்டும் என்று எத்தனை முறை தெய்வங்களைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கொடுமையை நினைத்தபோது, நெஞ்செல்லாம் வலித்தது அந்தத் தாய்க்கு. 'இவளைச் சாகப் பிரார்த்திக்கும் தாய், உயிரோடு வதைக்கும் தந்தை, யாருமே மதிக்காமல் வீட்டுக்குள்ளேயே தீண்டத் தகாதவளாகப் பவிசிழந்து நிற்க வைத்துவிட்ட குடும்பத்தின் ஓரவஞ்சனை - இவற்றுக்கிடையே அவளுக்கு ஒரு வாழ்க்கையைத் தரக் கூடியவன் இந்த வேணு மட்டுமே அல்லவா?' என்று ஒரு நிமிஷ நிர்ப்பந்ததில் அந்தத் தாயுள்ளம் ஆழமாய் அறிந்துணர்ந்தது. தான் அவனை விரட்டுவதும், அவளை மிரட்டுவதும் உள்ளார்ந்த சம்மத்தோடு அல்ல; மேலெழுந்த வாரியாய்ப் பசையற்று வரண்டு மிதக்கும் வீம்பின் காரணமாகவே தானும் இவ்விதம் இவர்களுக்குக் குறுக்கே நின்று தடுப்பதாகவும் அவளுக்குப் புரிந்தது. அந்த நிமிஷத்தின் நிர்ப்பந்தம் மகத்தான சக்தி வாய்ந்ததுதான்! 'போறதானா போய்த் தொலை! இப்பவே ஓடு . . பகிரங்கமா ஓடப்போறாளாம் . . நீ ஓடினா போறும்; அது பகிரங்கமாயிடும் . . போ! யாரும் தடுக்கல்லே . . தடுக்கறவா யாரும் வர்ரத்துக்குள்ளே போயிடு" என்று அழுதுகொண்டே கூறினாள் குஞ்சம்மாள். வேணுவும் இந்துவும் ஒரு நிமிஷம் திகைத்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது, முகத்தை மூடிக்கொண்டு அழுதவாறே குஞ்சம்மாள் சொன்னாள்: "எனக்குப் புரியறது நீ போறது நியாயம்தான்டீ . . இங்கே ஒரு நாடகம் நடத்தாமே நீ இப்பவே போயிடு! அவருக்கு உடம்பு இருக்கிற இருப்பிலே அவர் தாங்க மாட்டார் . . . அவர் குணம் தெரிஞ்சும் அவரோட மோதிக்கவேண்டாம்னுதான் சொல்றேண்டி, இந்து . . நீ இப்பவே போயிடு . . ." என்று இரண்டு கைகளையும் நீட்டி மகளிடம் அவள் கெஞ்சியபோது . . . "அம்மா . . அம்மா" என்று நெஞ்சு வெடிப்பதுபோல் அரற்றியவாறே தாயின் அருகே வந்து அவளது கைகளுக்கிடையே வீழ்ந்தாள் இந்து! --- ஓ! அப்படி ஒர் ஆதரவைத் தந்து, அப்படி ஒரு பாசத்தை அனுபவித்து நாலு வருஷம் ஆகிறதே! அழுது ஓய்ந்த பிறகு இருவருமே ஒர் அவசரம் கொண்டனர். இந்து மாடிக்கு ஓடினாள். குஞ்சம்மாள் ஒன்றும் புரியாத பிரமிப்பில் சுவரில் தலை சாய்ந்துக் கண்களை மூடியவாறு மூலையில் கிடந்த ஸ்டூலின் மீது அமர்ந்தாள். சிறிது நேரத்துக்குப்பின் கையில் ஒரு ஸூட்கேசுடன் அவள் எதிரே வந்து நின்று, பாசம் பெருகித் தழுதழுத்த குரலில் "அம்மா!" என்று அழைத்து விடைபெற நிற்கும் மகளைக் கண் திறந்து பார்த்தாள் .. "இந்து" என்று பதறி யெழுகையில் தனது பாதங்களில் கண்ணீர் சிந்தி நமஸ்கரித்த மகளை மார்புறத் தழுவி ஆசீர்வதித்தாள். "இந்து . . என் கண்ணே .. தலை விதிப்படிதான் நடக்கும்! கடவுள் உன் பக்கம் இருப்பார். நீ எங்கே இருந்தாலும் ஒரு வரி கடுதாசி எழுதிப் போடு. உனக்காக நான் கடவுளை வேண்டிண்டே இருப்பேன் . . வேற என்னடி செய்வேன்? என்னை மன்னிச்சுடு இந்து! உன்னைப் பெத்து இப்படியெல்லாம் அலைக்கழிக்கிறேனே . . அதுக்காக என்னை மன்னிச்சுடுடி அம்மா . ." என்று மகளின் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள். "அம்மா, நான்தான் நீ என்னை வெறுக்கறேன்னு இவ்வளவு காலம் தப்பா நெனச்சிருந்தேன்" என்று இந்துவும் தாயின் மன்னிப்பைக் கோருவதுபோல் கண்ணீர் சிந்தினாள். அப்போது- அவன் - வேணு படியேறி உள்ளே வந்தான். "இந்து, அதெல்லாம் எதற்கு?" என்று அவள் கொண்டுவந்த பெட்டியைக் காட்டிக் கேட்டான். "வேண்டாம் . . உனக்கு வேணுங்கறதை வாங்கித் தர்ர அளவுக்கு நான் சம்பாதிக்கிறேன் . . கட்டிய துணியோட வந்தாப் போதும். உன்மேல் இருக்கிற நகைகளையும் கழற்றி கொடுத்துவிட்டுத்தான் நீ என்னோட வரணும்" என்று அவன் சொன்னதைக் கேட்டு திருப்தியுடன் அவள் காதில் இருந்த கம்மலைக் கழற்ற ஆரம்பித்தாள். பிறகு ஒவ்வொன்றாய் மூக்குத்தி, வளையல்கள், சங்கிலி, எல்லாவற்றையும் கழற்றி கை நிறைய வைத்துத் தாயின் முன் நீட்டினாள். மொட்டை மரம்போல் நிற்கும் மகளின் கோலத்தைப் பார்க்க முடியாமல் முகம் திருப்பிக்கொண்ட குஞ்சம்மாளால் அவற்றை கை நீட்டி வாங்க முடியவில்லை. இந்து, மௌனமாய், அவற்றைச் சுவரோரமாய்ச் சாத்தி வைத்த பெட்டியின்மீது வைத்துவிட்டு, "அம்மா" என்று மீண்டும் அழைத்தாள். குஞ்சம்மாள் திரும்பி இந்துவின் வெறுங் கழுத்தைப் பார்த்தாள்: "இந்து, மறந்துடாதே! ஏதாவது ஒரு தெய்வ சன்னிதானத்திலே போயி . . இந்த மாதிரி ஒண்ணு கட்டிக்கோடி. பெண்களுக்கு இதுதான் பெரிய நகை!" என்று தன் கழுத்தில் கிடந்த மாங்கல்யக் கயிற்றை வௌியே எடுத்துக் காட்டினாள். "சரிம்மா" என்று மீண்டும் தாயின் காலில் அவள் நமஸ்கரித்தபோது - இதுவரை விலகி நின்றிருந்த வேணுவும் நெருங்கி வந்து குஞ்சம்மாளின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். "போயிட்டு வாங்கோ. நல்லபடியா வாழணும் . . பகவான் கைவிட மாட்டார்" என்று இருவரையும் மௌனமாய் ஆசீர்வத்தாள் குஞ்சம்மாள். வௌியில் மழை நின்றிருந்தது. பொழுதும் சாய்ந்திருந்தது. அவர்களிருவரும் புதிய வாழ்க்கையை நோக்கிப் புறப்பட்டு விட்டனர். வீட்டின் படியிறங்கும்வரை இந்துவின் கால்கள் தயங்கித் தயங்கிப் பின்னின. தெருவை மிதித்ததும், காலிலிருந்த கட்டுகள் அறுந்ததுபோல் - முன்னே நடந்துகொண்டிருந்த அவனை நெருங்க - அவள் நடையில் ஒரு வேகம் பிறந்தது. வீதி முனையில் திரும்பும்போது அவள் மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் தெரிந்த தாயின் உருவத்தைக் கண்ணீர் மறைத்தது. குஞ்சம்மாளின் பார்வைக்கும் அவள் மறைந்தாள். வீட்டிற்குள் வந்த குஞ்சம்மாள் சுவரோரமாய் கிடந்த பெட்டியையும் அதன்மீது வைத்திருந்த நகைகளையும் பார்த்து பெருமூச்செறிந்தாள். அந்த நகைகளை எடுத்து பக்கத்தில் இருந்த ஸ்டாண்டின்மீது வைத்துவிட்டு, "இப்படி ஒரு காரியத்தை தன்னால் எப்படிச் செய்ய முடிந்தது?" என்று பிரமிப்பில் வெறித்த விழிகளுடன் இருளில் கிடந்த அந்த ஸ்டூலின்மீது உட்கார்ந்தாள். நல்லவேளையாக எல்லோருக்கும் முன்பாக பாட்டி வீடு திரும்பியதில் ஒரு வித ஆறுதல் கொண்ட குஞ்சம்மாள் சற்று முன் நடந்த நிகழ்ச்சியை ஒன்று விடாமல் விவரிக்கும்போது பாட்டி அடிக்கடி முந்தானையில் மூக்கைச் சிந்திக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். பாட்டியம்மாள் ரொம்பப் பழைய உலோகம்தான். எனினும் இந்த கலி காலத்தின் அசுரத்தனமான அடிகளில் அவளது தாய்மை உள்ளம் நெகிழ்ந்து குழைந்தது!அவளும் ஆயிரம் யோசனைகளுக்குப் பின் யதார்த்த வாழ்க்கையின் நிர்ப்பந்தத்துக்கு வளைந்து கொடுத்து மருமாளுடன் ஒத்துப்பேசினாள். இருப்பினும் பயமாகவும் வருத்தமாயும் இருந்ததால் அழுதாள். இப்படியெல்லாம் நேர்ந்துவிட்ட காலத்தைச் சபித்தாள். குடும்பத்தின் கௌரவத்தைக் குலைத்துவிட்ட அவளை விரட்டிவிட்டது சரிதான் என்று ஒருவகைக் கோபத்துடன்கூட இந்த முடிவை அவள் ஏற்றாள். இருப்பினும் முன் கோபமும் முரட்டுச் சுபாவமும் உடைய மகனை எண்ணும்போது பீதியடைந்தாள். நடந்தவற்றைப் பாட்டியிடம் விவரித்துக் கொண்டிருக்கையில் தெருவில் ஒரு ஸ்கூட்டர் சப்தம் கேட்டது. அதை ஒரு நிமிஷம் உற்றுக்கேட்ட குஞ்சம்மாள் பாட்டியிடம் சொன்னாள்: "விஜயா வரா, காலேஜுக்குப் போன பொண் வீட்டுக்கு வர நேரத்தைப் பாருங்கோ . . ." என்று சலித்துக் கொண்டாள். மணி எட்டடித்தது. திரும்பிப் பார்த்த பாட்டி, யாரையும் காணாமல் "விஜயாவா, எங்கே?" என்றாள். "இப்பத்தானே அந்தச் சந்து முனையிலே வந்து ஸ்கூட்டர்லே இறங்கிவிட்டிருக்கான் அவன். வருவா, பாருங்கோளேன் " என்றாள் குஞ்சம்மாள். "எவன்?" என்று விழித்தாள் பாட்டி. "எவனோ? . . அவளைன்னா கேக்கணும். எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நெனைச்சிண்டிருக்கா அவ. இவ என்னென்ன நாடகம் நடத்தப் போறாளோ? இவ அவளை மாதிரி ஓடிப்போகல்லேன்னா அதுக்குக் காரணம் இந்துதான். அவ பட்டதை எல்லாம் பார்த்திருக்காளோன்னோ? இந்த மாதிரி அப்பாவுக்கு இந்தக் குடுமப்த்திலே வந்து பொறந்திருக்கே பொண்கள்; எல்லாம் என் தலைவிதிடா ஈஸ்வரா" என்று குஞ்சம்மாள் புலம்பிக்கொண்டிருக்கையில் விஜயா வந்தாள். வந்தவள் ரொம்ப அவசரமாகத் தன் அறைக்குப் போவதைப் பாட்டியும் தாயும் வெறித்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தனர். சற்று நேரத்துக்கெல்லாம் டியூஷனுக்குப் போயிருந்த அம்பியும் வந்து சேர்ந்தான். அறைக்குள்ளிருந்து உடை மாற்றிய பின் வந்த விஜயா, பாட்டியும் தாயும் பேசிக்கொண்டதிலிருந்து நடந்தவற்றை ஊகித்துக்கொண்டு மனப் பதைப்பை அடக்கமாட்டாமல் "அப்பா வந்தா என்னம்மா சொல்லபோறே? இப்படி உன்னை மாட்டி வெச்சுட்டுப் போயிட்டாளே அவ?" என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டு பதறினாள். "ரொம்பதான் அப்பாவுக்குப் பயந்தவள் இல்லியா, நீ?" என்று அவளை விழித்துப் பார்த்தாள் அம்மா. "நான் என்ன பண்ணினேன்?" என்று முகம் சுளித்துக்கொண்டே பாட்டியின் முதுகுக்குப்பின் ஒண்டினாள் விஜயா. "நீ ஒண்ணும் பண்ணல்லே; ஒண்ணும் பண்ணாம இருடியம்மா" என்றாள் பாட்டி. ஒரு நிமிஷ மௌனத்துக்குப்பின் கண்கள் கலங்க விஜயா கேட்டாள்: "அம்மா, இந்து வரவே மாட்டாளா அம்மா? அவளை இனிமே பார்க்கவே முடியாதா? ஐயோ, இந்து! உன்னை நான் எவ்வளவோ கஷ்டப்படுத்தி விட்டேன். சுடு சுடுன்னு எரிஞ்சு விழுந்திருக்கேன் " என்று இந்நேரம் இந்தக் குடும்பத்தை நிரந்திரமாய்ப் பிரிந்து எங்கோ, எவனோடோ போய்க் கொண்டிருக்கும் தமக்கையை எண்ணிக் கண் கலங்கினாள் விஜயா. இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த அம்பிக்கு விஷயங்கள் புரிந்தன எனினும் அதன் கனத்தை உணரும் அளவுக்கு அவன் முதிர்ச்சியடையவில்லை. "இந்து நிஜமாகவே வீட்டில் இல்லையா?" என்று அறிய விரும்புகிறவன்போல் மாடிப்படி ஏறி ஓடி அவள் அறைக்குச் சென்று விளக்கைப் போட்டுவிட்டு இடுப்பில் கையூன்றி நின்று நாலு மூலையும் ஒரு முறை சுற்றிப் பார்த்தான். அதுவரை ஒரு மூலையில் படுத்திருந்த கறுப்புப் பூனை 'இந்து இல்லே . . இந்து இல்லே ' என்று அவனிடம் முறையிடுவதுபோல் கத்திக்கொண்டே அவன் கால்களைச் சுற்றி வந்தது. அன்றிரவு இந்துவின் செல்லப் பூனைக்கு அம்பிதான் பால் ஊற்றினான். மாடி வராந்தாவில் அதற்கென்று இருந்த கோப்பையில் அவன் பாலூற்றிக் கொண்டிருந்தபோது காம்பவுண்டு கேட்டருகே அப்பாவின் கார் வந்து நின்றது. குஞ்சம்மாள ஓடிச்சென்று கேட்டைத் திறந்துவிட்டாள். கீழே நிச்சயம் பயங்கரமான ரகளை நடக்கும் என்று ஊகித்த அம்பி, 'மாடிப்படிப் பக்கம்கூடப் போவதில்லை' என்ற தீர்மானத்துடன் பால் கோப்பையைத் தூக்கிக்கொண்டு இந்துவின் அறைக்குள் போனான். பாதிப்பாலைப் பருகிய பூனை மீதிப் பாலுக்கு அலறியவாறே அவனைப் பின் தொடர்ந்தது. அப்பா வந்துவிட்டார் என்றறிந்த விஜயா, நெஞ்சு 'திக்திக்'கென்று அடித்துக்கொள்ள, தன் அறைக் கதவை இரண்டு அங்குல இடைவௌி விட்டுத் திறந்து வைத்துக் கொண்டு அதன் வழியே ஒரு கண்ணால் ஹாலைப் பார்த்தவாறு ஒளிந்து நின்றாள். பாட்டி மட்டும் மருமகளுக்குப் பாதுகாப்பாகக் கூடவே நின்றிருந்தாள். காரை ஷெட்டில் விட்டபின் உள்ளே வந்த ராமபத்திரன், கோட்டைக்கூடக் களையாமல் தனது கனத்த சரீரத்தை ஹால் சோபாவில் சாய்த்து 'டை'யைத் தளர்த்தி விட்டுக்கொண்டு "ஃபேனைப் போடேண்டி" என்று கட்டைக் குரலில் பணித்தார். குளிர்ந்த காற்று வீசிய ஆனந்தத்தில் "ஆ . . ஊ ' என்று அனுபவித்து முழங்கினார்: "இதோ பார் குஞ்சு! எனக்கு சப்பாத்தி வேண்டாம். கிளப்பிலே ஒரு டின்னர். மொதல்லே வேண்டாம்னுதான் நெனைச்சேன். 'ஒரு நாளுதானே, பரவாயில்லே'ன்னு ரொம்ப கம்பல் பண்ணினான் விசு. சாப்பிட்டுட்டேன்" என்று நாலு வீடுகளுக்குக் கேட்பதுபோல் ஒரே உற்சாகத்தில் இரைந்து பேசினார் ராமபத்திரன். அவருக்கு எப்போதுமே மேல் ஸ்தாயில்தான் சஞ்சாரம். குரலை அடக்கிப் பேசவே முடியாது. குரலை அடக்கினால் வார்த்தைகளே வராது. தொண்டையைத் திறந்து கத்திச் சப்தம் எழுப்பினால்தான் பேச வரும் அவருக்கு. மேலும் சாதாரண விஷயங்களுக்குக்கூட ஒன்று அதீத உற்சாகம், அல்லது அதீத கோபம் என்ற இருவேறு எல்லைகளில் அல்லாமல் இடையில் சமனப்பட முடியாத உணர்ச்சி வயப்பட்டவராதலின், அமைதியின் அவசியமே தெர்யாது பழகிவிட்டவர் அவர். மனுஷன் வீட்டுக்குள்ளிருந்தால், வீடு களேபரம்தான். காதின் இருமங்கிலும் கறுத்தடர்ந்த ரோமம்; பூனைக்கண்கள்; அவரது ஆகிருதியும், குரலும் யாரையுமே அச்சுறுத்தி விடும். அவரைக் கண்டு பயந்தாலும் எதிர் நின்று பேசத் தகுந்த தைரியம் கொண்ட ஒர் ஆத்மா உண்டு என்றால் அது அவரது தாயார்தான். அருகே நின்றால் அவரது முழங்கை உயரம்கூட இல்லாத பாட்டிதான். "ஏண்டா இப்படி ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு ஆர்ப்பாட்டம் பண்றே?" என்று கேட்கையில் "உனக்குத் தெரியாதம்மா" என்று பதில் சொல்லிவிட்டுத் தொடர்ந்து கத்துவார் அவர். கோபமும் சரி, சந்தோஷமும் சரி, வந்ததுபோல் அடங்கியும் போகும் அவருக்கு. "சரி, மருந்தைக் கொண்டுவா" என்று உத்தரவிட்டார் கோட்டைக் கழற்றியபடியே. விருந்து சாப்பிட்டதிலிருந்தே அவருக்கு 'டாக்டரின் உத்தரவை மீறிச் சாதம் சாப்பிட்டு விட்டோமே' என்ற பயம். குஞ்சம்மாள் தம்ளரில் பாலையும் உள்ளங் கைகளில் மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டு அவரிடம் நீட்டினாள். பிறகு அவர் கால்களில் இருந்த பூட்சுகளைக் களைவதற்காகக் காலடியில் உட்கார்ந்தாள். ராமபத்திரன் அண்ணாந்து மாத்திரைகளை வாயிலிட்டு ஒரு மிடறு பாலைக் குடித்தபோது அவரது பூனைக்கண்கள் சுவரோரமாய் இருந்த ஸூட்கேசை வெறித்தன. வாயிலிருந்ததை விழுங்கியதும் 'இதென்ன பெட்டி? ஏன் இங்கே கிடக்கு?" என்று அதட்டினார். குஞ்சம்மாளுக்குக் கண்கள் ஒரு விநாடி இருண்டன. சமாளித்துக் கொண்டு பரிதாபமாய் அவர் முகத்தை நோக்கியவாறு ஒர் அடி பின்வாங்கி, ஈனசுரத்தில் கூறினாள்: "இந்து போயிட்டா. அவன் வந்தான். அவனோட . ." என்று அவள் சொல்லி முடிக்குமுன் அவர் கையில் இருந்த பால் தம்ளர் குஞ்சம்மாளின் வலது புறக்காதோரமாய் 'விர்'ரென்று பாய்ந்து சுவரில் மோதி எகிரி உருண்டது. விசுவரூபம் கொண்டதுபோல் எழுந்து நின்றார் ராமபத்திரன். அவரது பூனைக்கண்கள் புலிக்கண்களாயின. "நீங்கள்லாம் அப்போ எங்கே ஒழிஞ்சுப் போயிருந்தேள்?" என்று அவர் அலறிய குரல் அந்தத் தெருவிலுள்ள மனிதர்களையெல்லலாம் கேட்பதுபோல் ஓங்காரம் பெற்றது. அவரது கேள்விக்கு அருகிலிருந்த யாரும் பதில் சொல்லவில்லை; அவரும் எதிர்ப்பார்க்கவில்லை. அவர் தனது பூட்ஸ் காலைத் தரையில் ஓங்கி மிதித்தார்: "அவ போயிட்டாளாம்! இவ சொல்றா .. உங்களை மாதிரி இளிச்ச வாயா இருந்தா அவளை என்னடி, உன்னையும்கூட எவனாவது வந்து இழுத்துண்டு போயிருப்பான் . . ம்ஹூம் . . பாரு, அவ எங்கே போயிடுவா? விடியறத்துக் குள்ளே அவளைக் கொண்டுவரேன் பாருடி" என்று பெருத்த குரலில் சப்தம் செய்தார் ராமபத்திரன். "இப்ப நீ எங்கேடா போறே?" என்று பின்னால் வந்தாள் பாட்டி. "நான் எங்கேயும் போகல்லே; போலீசுக்குப் போன் பண்ணப்போறேன்" என்று போன் இருந்த மேசையை நெருங்கி ரீஸீவரைக் கையிலெடுத்தார். அவர் டயலைச் சுழற்று முன் வெகு நேர சிரமத்துக்குப் பின் குஞ்சம்மாள் பேசினாள்: "போலீஸ் என்ன பண்ணும்? முன்னே மாதிரி அவள் என்ன மைனர் பொண்ணா? மைனர்ப் பொண்ணைக் கடத்திண்டு போயிட்டான்னு சொல்ல?" ராமபத்திரன் திரும்பிக் குஞ்சம்மாளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு சொன்னார்: "அவ மேலே ஆயிர ரூபாய் நகை இருக்குடி;அதுக்காக கடத்திண்டு போயிட்டான்னுதானே அப்பவும் ரிப்போர்ட் பண்ணினேன் . . " என்று கூறிவிட்டு அவர் டயலை சுழற்றி முடிக்கவில்லை . . "இந்தாங்கோ, உங்க ஆயிர ரூபாய் நகை! அத்தனையும், ஒரு திருகாணிகூட இல்லாம உரிச்சு வெச்சுட்டுத்தான் போயிருக்கா . . ." என்று கை நிறையக் கொணர்ந்த நகைகளை மேசைமீது அவர் முன் வைத்து விட்டு தைரியமாக நின்றாள் குஞ்சம்மாள். அந்த நகைகளை புறங்கையால் வீசித் தள்ளினார் ராமபத்திரன். "பயித்தியக்காரி! . . . எனக்குச் சட்டம் சொல்லித்தரயா? திருடன் திருடிண்டு போனானா இல்லையாங்கரது, கோர்ட்லே! அவனைத் திருடன்னு நான் சொன்னா இவா பிடிப்பா . . ." என்று அவர் மூர்க்கமாகச் சொன்னதும் அதே மூர்க்கத்துடன் குஞ்சம்மாள் கூறினாள்: "நீங்க அவனைத் திருடன்னு சொன்னா, நானே 'இல்லே'ன்னு போய் சாட்சி சொல்வேன்." ராமபத்திரனுக்குக் கோபத்தால் தலை பற்றி எரிந்தது. வலது கையில் டெலிபோன் ரிஸீவரோடு, இடது கையால் - ஒரு பிடியில் - அவளை நொறுக்கத் தயாரானதுபோல் கையை ஓங்கி அவர் எழுந்தபோது, பாட்டி அம்மாள் குறுக்கே ஓடி வந்து நின்றாள். "ஏண்டா இப்படிப் பேய் மாதிரி நிக்கறே? கொஞ்சம் பொறுமையா யோசிடா . . " என்று கெஞ்சினாள் பாட்டி. அவர் பார்வை தன்னை எதிர்த்துத் தாயின் முதுகுக்குப் பின்னால் நிற்கிற குஞ்சம்மாளின் மேல் நிலைகுத்தியிருந்த்து. "நகரு அம்மா. எனக்கு எதிரா சாட்சி சொல்லபோறாளாமே இவ . . ." என்று உருமியவாறு குஞ்சம்மாளை எட்டி பிடித்தார். ராமபத்ரனின் கையைப் பிடித்து இழுத்தவாறு பாட்டி கத்தினாள்: "ஆமாண்டா, நானும்கூடச் சொல்லப் போறேன். மொதல்லே என்னைக் கொல்லு. நான் தான் இந்துவை அனுப்பினேன் . . . என்னைக் கொல்லுடா . . ." என்று சன்னதம் கொண்டவள் போல் மார்பில் தட்டிக்கொண்டு எதிரில் வந்த தாயின் குரலைக் கேட்டதும் ராமபத்திரன் குஞ்சம்மாள் மீதிருந்த பிடியைத் தளர்த்தி விட்டுத் திகைத்து நின்றார். அவர் கண்கள் வெறித்துச் சுழன்றன . . சகிக்கவே முடியாத ஒரு துரோகம், தன் உயிரையே கறுவருக்கும் ஓர் அவமானம் தனக்கு நிகழத் தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களே - பெற்ற தாயும், கட்டிய மனைவியும், பிறந்த பிள்ளைகளும் - சூழ்ச்சி செய்து தனக்கு நிரந்தரப் பகைவர்களாய் மாறி விட்டனர் என்ற உணர்ச்சியில் அவரது பெரிய குரல் தொண்டைக் குழியிலேயே சிக்கிக்கொண்டு அமுங்கித் தவித்தது . . விபரீதமான தொனியில் கிறீச்சிட்டு அலறியவாறே கையிலிருந்த டெலிபோனைத் தூக்கி தரையில் அறைந்தார். அடுத்த விநாடி அந்த ஆஜானுபாகுவான மனிதர் வெட்டி முறித்த மரம் போல் நிலைகுலைவதைக் கண்டு அலறியவாறே குஞ்சம்மாள் ஓடிப்போய்த் தாங்கினாள். "ராமு, ராமு" என்று பாட்டியம்மாள் பாசம் மேலிடக் கதறினாள். 'ஒண்ணுமில்லே . . மயக்கம்தான்" என்று பாட்டிக்குத் தைரியமளித்த குஞ்சம்மாள். 'டாக்டருக்குப் போன்கூடப் பண்ண முடியாதே' என்று உடைந்து கிடக்கும் டெலிபோனைப் பார்த்துக் கை பிசைந்துகொண்டே "அம்பி . . ஓடிப்போயி டாக்டரைக் கூட்டிண்டு வாடா . . " என்று மாடியை நோக்கி அலறினாள். அம்பி மாடியிலிருந்து ஓடிவந்தான். ஒரு விநாடி ஒன்றும் புரியாமல் சோபாவில் நீட்டிக் கிடங்கும் அப்பாவைப் பார்த்தான். அடுத்த விநாடி தெருவில் இறங்கி டாக்டர் வீட்டை நோக்கி இருளில் ஓடினான். "நானும் வரேண்டா, அம்பி?" என்று அவன் பின்னால் அவனுக்குத் துணையாய் விஜயாவும் ஓடினாள. பாட்டி, தான் தினசரி வழிபடும் தெய்வங்களையெல்லாம் வேண்டியவாறு கண்ணீர் வடித்தாள். குஞ்சம்மாள் தனது ஒரே தெய்வத்தின் உருவகமான மாங்கல்ய சரட்டை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு டாக்டரின் வருகைக்காக காத்திருந்தாள். மாடிப் படிக்கட்டில், மேல் மாடியில் வந்து நின்ற அந்த கறுப்புப் பூனை தனது வெள்ளிய விழிகளால் ஹாலில் நடப்பதைக் குனிந்துப் பார்த்தது. மனிதனே ரொம்பப் பழமையான உலோகம்தான். காலம்தான் அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்ப்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள். வளைந்தாலும் சரி, உடைந்தாலும் சரி, காலம் புதிது புதிதாய் மனிதனை வார்த்துச் செல்கிறது. அந்தக் குடும்பம் வாழ்க்கையின் வார்ப்புக்கேற்ப வளைந்திருக்கிறதா, உடைந்திருக்கிறதா? அல்லது, இரண்டுமே நிகழ்ந்திருக்கிறதா? டாக்டர் வந்தபின் தெரியும்! ------ #16. சுயதரிசனம் **1** அந்த வாரப் பத்திரிகையில் தனக்கு உதவி ஆசிரியர் உத்தியோகம் என்று கௌரவமாகச் சொல்லிக் கொண்டு - ஒவ்வொரு நாளும் வந்து குவியும் கதைகளுக்கெல்லாம் அனுப்பியவர்களின் விலாசங்களைப் பதிவு செய்தும், பிரசுரிக்காமல் தள்ளப்பட்ட கதைகளை 'வருந்துகிறோம்' ஸ்டாம்பு குத்தித் திருப்பி அனுப்பியும் - விலாசமெழுதிக் கொண்டிருப்பதையே பணியாகக் கொண்டுள்ள சிவராமனுக்கு, இன்று அவன் பெயருக்கே ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்த நீளக் கவரின் மீது 'சிவராமன், உதவி ஆசிரியர்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டதில் அவனுக்குச் சற்றுப் பெருமிதம்தான்! அந்த நீளக் கவரின் வாய்ப்புறத்தை இரண்டு விரல்களால் பிடித்து லாகவமாக வளைவு வளைவாய்க் கிழித்துப் பிரிக்கிறான் சிவராமன். அதனுள் ஒரு கத்தைக் காகிதமிருந்தும் அதன் நடுவே இருந்து 'இது கடிதம்' என்று சொல்வதுபோல் தனியாக விழுந்த ஒரு காகிதத்தை எடுத்துப் படிக்கிறான் அவன். "சிரஞ்சீவி சிவராமனுக்கு அநேக ஆசிர்வாதம். பகவான் கிருபையால் உனக்கு சகல சௌபாக்கியங்களும் உண்டாகணும். உங்கள் எல்லாரையும் பார்த்து நேரிடையாகச் சொல்லிண்டு வராமப் போனதை நெனைச்சா கஷ்டமாத்தான் இருக்கு... இருந்தாலும் பரவாயில்லை. யோசிச்சுப் பார்க்கச்சே, ஆசையும் உறவும் மனசிலே ஆழமா இருந்தா, உதட்டோட சொல்ற வார்த்தையெல்லாம் அநாவசியம்னு தோண்றது. ஆனாலும் அப்படி யெல்லாம் நெனைச்சுண்டு ஒரு தீர்மானத்தோட நான் சொல்லிக்காம வந்துடல்லே. சொல்லிக்கறதுக்கு எனக்குத் தைரியம் வரலே... சொல்லிக்க முடியல்லே... அவ்வளவுதான்; வந்துட்டேன். ஆமாம்; எதையுமே சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும். என் அனுபவத்திலே செய்யறதுகூட சுலபம்; சொல்றதுதான் கஷ்டமாயிருக்கு.... அதான் சிரமம். நன்னா யோசிச்சுப் பாரு. நீ யோசிக்கிறவன்; கதை எழுதறவன்... நல்லதும் கெட்டதுமா எத்தனையோ விஷயங்களைச் செஞ்சுடறோம்... அதையெல்லாம் அலசிப் பிச்சுச் சொல்றதுன்னா முடியற காரியமா? நான் இப்படி ஓடி வந்துடறதுன்னு முடிவு பண்ணிண்டு உங்ககிட்டேயெல்லாம் சொல்லிண்டு போக வந்திருந்தேன்னா... சொல்லி இருப்பேன் - கடைசியிலே மனசு கேக்காம அங்கேயே உக்காந்துண்டிருந்திருப்பேன். எனக்குத் தெரியும்; நான் போறேன்னா நீங்க யாரும் அழமாட்டேள்னு... ஆனா நான் அழுவேனே!... உன் ஆத்துக்காரி என் காதிலே விழட்டும்னே, நான் இருக்கிறது தெரியாத மாதிரி சொல்லுவாளே 'அசட்டு பிராம்ணன்'னு... அது நெஜந்தான்! சரி. இப்ப நான் வந்துட்டேன். எங்கே இருக்கேன், என்ன பண்றேன்னு எல்லாம் தெரிஞ்சுக்க உன் மனசிலே ஒரு துடிப்பு இருக்கும்னு எனக்குப் புரியறது. இந்தக் கடுதாசியோடு ஒரு கத்தைக் காகிதம் கிறுக்கி அனுப்பி இருக்கேனே... அதை எப்பவாவது போது இருக்கச்சே - போது போகலேன்னா படிச்சுப்பாரு. என்னை, என் மனச்சாட்சியை நீ புரிஞ்சுக்கலாம். நீ புரிஞ்சுப்பேன்னு நெனைக்கறேன்... நீ புரிஞ்சுண்டாலும் புரிஞ்சுக்கல்லேன்னாலும் எனக்குக் கவலை இல்லே... இந்த ஒரு மாசமா உனக்கு ஒரு கடுதாசி எழுதணும் எழுதணும்னு ஏனோ தோணிண்டே, எழுதலியேன்னு உறுத்திண்டே இருந்தது. சத்தியமாச் சொன்னா இந்தக் கடுதாசியைத் தவிர மீதி இருக்கற ஒரு கத்தைக் காகிதத்தை உனக்காக நான் எழுதல்லே... நானா, எனக்குத் தோணினதெ யெல்லாம் எதுக்குன்னு தெரியாமலே எழுதிண்டே இருந்தேன்; இன்னும் எழுதிண்டிருக்கேன்... இது என்னை நானே பார்த்துக்கற பார்வை, சுயவிமரிசனம்.... இல்லே, சுயதரிசனம்! திடீர்னு என்னமோ தோணித்து; எழுதின வரைக்கும் அந்த நோட்டு புக்கிலிருந்து பிச்சு எடுத்து உனக்கு அனுப்பறேன். இதுவும் ஒரு அசட்டுத்தனமோ என்னமோ? ஆனா ஒண்ணு, உன் ஆத்துக்காரியிடம் சொல்லு: 'அசடு பிராம்ணனா இருக்கப்படாது; அசடா இருந்தா அவன் பிராம்மணனில்லே; பிராம்ணன்னா ஞானப் பொக்கிஷம்னு அர்த்தம்'... அந்தக் குலத்திலே பொறந்து, 'கணபதி'ன்னு பெத்தவா சூட்டினபேரை இழந்து 'அசட்டு சாஸ்திரி, தத்தி சாஸ்திரி'ன்னே அறுபது வருஷமா பட்டம் வாங்கிண்டு இருந்திருக்கேன். சரி, போனது போச்சு. இப்ப நான் சந்தோஷமா கௌரவமா - அறுபது வயசுக்கப்புறம் - இப்பத்தான் சந்தோஷமா இருக்கேன். ப்ராப்தம் இருந்தால் எங்கேயோ எப்பவோ நாம சந்திக்கலாம். என்னை நீங்கல்லாம் மறந்துட்டாலும் பாதகமில்லை. என்னால் எதையுமே மறக்க முடியல்லே... இப்படிக்கு உன் தகப்பனார் கணபதி..." கையெழுத்திட்ட இடத்தில் கணபதி சாஸ்திரிகள் என்று எழுதி, சாஸ்திரிகள் என்ற வார்த்தை அடித்து நைக்கப்பட்டிருக்கிறது. கவருக்குள்ளிருந்து அந்த ஒரு கத்தைக் காகிதத்தைப் பத்திரிகை ஆசிரியர் தோரணையில் கையில் எடுத்து எத்தனை பக்கங்கள் என்று அறிய அவன் கடைசித் தாளை நீக்கிப் பார்க்கிறான். அதில் பக்க எண் எதுவுமில்லை. அந்தக் காகிதங்கள் அனைத்தும் ஒரு நோட்டுப் புத்தகத்திலிருந்து பிய்த்தெடுக்கப்ட்டிருந்ததால் ஓரத்தில் ஒழுங்கற்ற பிசிறுகளுடன் இருக்கின்றன. அவற்றில் சில பக்கங்களில் பென்சிலாலும் சில பக்கங்களில் பேனாவாலும் - தீர்க்கமான சிந்தனையோடு பல காலம் மனசில் ஊறிவரும் தௌிவு மிகுந்த கருத்துக்களானதால் - அடித்தல் திருத்தல் ஏதுமின்றி எழுதப்பட்டிருக்கிறது. அவற்றை ஒரே மூச்சில் படித்துவிட வேண்டும் என்ற ஆர்வமிருந்தும் ஆபிசில் அதற்கு நேரமில்லாது வேலை குவிந்திருப்பதால் அந்தக் கடிதத்தைப் பத்திரமாக மடித்துத் தன் கைப்பையில் வைத்துக் கொள்கிறான் சிவராமன். அதைப் பைக்குள் வைக்குமுன் அந்தக் கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்றறிய உறையையும் கடிதத்தையும் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான். அனுப்பியோர் விலாசம் ஏதும் அதில் இல்லை. எனினும் தபால் முத்திரையிலிருந்து அக்கடிதம் புது டில்லியிலிருந்து வந்திருப்பதைக் கண்டு ஒரு வினாடி பிரமித்து விழிக்கிறான் சிவராமன். 'இந்த அப்பா என்ன துணிச்சலோடு இவ்வளவு தூரம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போயிருக்கிறார்!' என்று எண்ணியபோது, கள்ளங் கபடு அறியாத அந்த அப்பாவி உள்ளம் இந்த வாழ்க்கையில் எந்த அளவுக்குக் கைத்து நொந்து போயிருக்கும் என்ற - அறிவில் விளையாத, மனத்தில் சுரந்த - உணர்வில் அவனது கண்கள் கலங்குகின்றன. அந்த வினாடி அவன் தனது தந்தையின், அந்த அசட்டுப் பிராம்மணரின் - தாடி மழிக்காத, நரைத்த ரோமக்கட்டை அடர்ந்த, முன் பல் விழுந்த, அம்மைத் தழும்புகள் நிறைந்த, மாறு கண் பார்வையோடு கூடிய கரிய முக விலாசத்தைக் கற்பனை செய்து கண்ணெதிரே காண்கிறான். **2** கணபதி சாஸ்திரிகள் போன மாசம் அமாவாசைக்கு அடுத்த நாள் திடீரென்று காணாமல் போய்விட்டார்.... முதல் இரண்டு நாட்கள் அவரது குடும்பத்தினர் - குடும்பத்தினர் என்றால் வேறு யார்? அவரது இரண்டு பிள்ளைகளான சிவராமனும் மணியும்தான் - அவர்கள் அதற்காக அதிகம் கவலை கொள்ள வில்லை. நான்கைந்து சாஸ்திரிகளோடு அவர் காஞ்சிபுரம் போயிருப்பதாக யாரோ சொல்லக் கேட்டு, "போகிற மனுஷர் ஆத்திலே வந்து ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போகப்படாதோ? நெனச்சப்போ வரதும் போறதும்... இது என்ன சத்திரமா சாவடியா?" என்று மொறுமொறுவென அவரைத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள் அவரது மாட்டுப் பெண் ராஜம். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்த நான்கு சாஸ்திரிகளூம் திரும்பி வந்து கணபதி சாஸ்திரிகள் தங்களுடன் வரவில்லை என்று தெரிவித்த அந்த நிமிஷமே ராஜம் ஒரு வினாடி திகைத்து, அந்தத் திகைப்புக்குப் பின்னர் அவரைத் திட்டுவதை நிறுத்திக் கொண்டாள். 'எங்கே போயிருப்பார்? எங்கே போயிருப்பார்?' என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டாள். வேறு மகளோ, அவரை மதித்து அன்புடன் உபசரிக்கும் உறவினரோ யாருமில்லாத அவரது நிலையை எண்ணி யெண்ணித் தனக்குள் பெருமூச்செறிந்தாள். சிவராமனின் மனத்திலும் லேசான கலக்கம் குடிகொண்டது. தினசரி மாலையில் ஆபிசிலிருந்து வரும்போது, வழியில் உள்ள தெப்பக்குளச் சுவரின்மீது வரிசையாய் உட்கார்ந்து உரத்த குரலில் வாக்கு வாதங்களில் ஈடுபட்டிருக்கும் சாஸ்திரிகளின் சபையில் தன் தகப்பனார் இருக்கிறாரா? என்று சிவராமனின் கண்கள் அலைந்து அலைந்து தேடி ஏமாந்தன. அவனுக்குத் தெரியுமா, ஊரில் இருக்கும்போது கூட, இந்தக் கூட்டத்திலிருந்து ஒதுங்கித் தனித்தே அவர் நிற்பார் என்பது... அது சரி, அந்த அசட்டு பிராம்மணரை யார்தான் சேர்த்துக் கொள்வார்கள். நாளுக்கு நாள் தன் தந்தையின் மீது 'அவர் என்ன ஆனாரோ, எங்கே நிற்கிறாரோ, அல்லது வேறு ஏதாவது'... என்று எண்ணியெண்ணி அவர்பால் தன் மனத்துக்குள் ஒரு ரகசியமான ஏக்கம் மிகுந்து கனப்பதை அவன் உணர ஆரம்பித்தான். எனினும் அது பற்றி வௌிப்படையாய் விசாரிக்கவோ பேசவோ அவன் வெட்கப்பட்டான். தன் மனைவி ராஜம் 'லோகத்திலே இல்லாத அப்பாவைப் படைச்சுட்டேளே... ஒரேயடியா உருகிப் போகாதேங்கோ' என்று எரிந்து விழுவாளோ என்று அஞ்சினான். தன் தம்பியும் தன்னைப் போலவே உள்ளூர அப்பாவுக்காக ஏங்குகிறானோ, அல்லது, 'அந்த அசட்டுக் கிழம் எங்கே தொலைந்தால் என்ன?' என்று அசட்டையாக இருக்கிறானோ என்று அறிய முடியாமல் தவித்தான். அப்படி அசட்டையாக இருந்தால் அது மகா பாவம் என்று தோன்றியது. சின்ன வயசில் - சின்ன வயசில் என்ன - இப்போது கூடத்தான் அவரை அப்பா என்றூ சொல்லிக் கொள்ளவே தானும் தன் தம்பியும் வெட்கப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் அவன் நினைவுக்கு வந்தன. கணபதி சாஸ்திரிகள் போன்ற ஓர் அழகற்ற கறுப்புப் பிராம்மணர் அசட்டுச் சிரிப்புடன், மாறு கண் பார்வையோடு எதிரில் வந்து நின்றால் யாருக்குமே மதிப்பான எண்ணம் பிறக்காதுதான். அவரைப் பார்த்தால் சிலருக்குப் பரிதாபமாக இருக்கும்; சிலருக்குப் பரிகாசமாக இருக்கும்; அவரும் 'ஈஈ' என்று ஓட்டை வாய்ச் சிரிப்புடன் குழந்தைபோல் எதையாவது பேசுவார். பேச்சில் பொதிந்துள்ள அர்த்தத்தை யார் கவனிக்கிறார்கள்? ஆகவே அது பலருக்கு ஒரு, 'போரா'கவே இருக்கும். பரிதாபத்துக்கும் பரிகசிப்புக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் தன்னை அப்பா என்று சொல்லிக் கொள்ளவே தன் பிள்ளைகள் வெட்கப்படுவதில் ஒரு நியாயமிருப்பதாகக் கருதி வந்தார் கணபதி சாஸ்திரிகள். மொத்தத்தில் கணபதி சாஸ்திரிகளை ஊரில் யாரும் மதித்ததில்லை. சில சமயங்களில் அவமதித்ததுண்டு.... மற்ற சாஸ்திரிகளுக்கு எதையாவது பேசி அவர் வாயைக் கிளறி மகிழ அவர் ஒரு பொழுதுபோக்குச் சாதனம். வீட்டில் அவரது பிள்ளைகளூக்கு அவரால் அவமானம்; வெட்கம். அவரது மாட்டுப் பெண்ணுக்கு அவர்மீது வெறுப்பு! ராஜத்துக்கு அவர் மீது தனியாக விசேஷமான வெறுப்பு ஒன்றும் கிடையாது. சதா நேரமும் சிடுசிடுத்துக் கொண்டிருப்பது அவள் சுபாவம். அந்தச் சிடுசிடுப்பில் அடிக்கடி வந்து சிக்கிக் கொள்பவர் அவர்தான் என்றால் அதற்கு அவளா பழி? இவ்விதம் யாருக்கும் வேண்டாதவராயிருந்த கணபதி சாஸ்திரிகள் எங்கோ ஓடிப் போனதில் யாருக்கு என்ன நஷ்டம்? "இன்னியோட பத்து நாளாச்சு. இருபது நாளாச்சு..." என்று அவர்கள் ஏன் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? "இப்படி நம்ம தலையிலே பழியைப் போடணும்னு காத்துண்டு இருந்திருக்கார் மனுஷர். ஊர்லே என்னைத் தானே சொல்லுவா? நான் அவரை ஒரு வார்த்தை பேசினது உண்டா?... மனுஷன் இருந்தும் என் பிராணனை வாங்கினார். இப்போ இல்லாமலும் என் பிராணனை வாங்கறார்" என்று பொழுது விடிந்து பொழுது போனால் தன் மாமனாரின் பிரிவுக்காக அவளும் தன் சுபாவப்படி ஏங்கிக்கொண்டு தானிருந்தாள்... அவர் இருக்கும்போது, ஒரு வார்த்தை கூட அவரைக் கடிந்து தான் பேசினதில்லை என்று நிஜமாகவே நினைக்கிறாள் ராஜம். இந்த ஒருமாதப் பிரிவின் காரணமாக - தங்களை விட்டு விலகிப் போன கணபதி சாஸ்திரிகள் உயிருடனாவது இருக்கிறாரா? என்று அறிந்து கொள்ள விரும்பும் துடிப்பில் அவர் குடும்பத்தினருக்கு அவர் மீது ஒருவித ஏக்கமும் அன்பும் பிறந்திருக்கிறது. அவர் இப்படி எங்கோ அனாதை போலப் போய்விட்டதை எண்ணியெண்ணி 'அவர் எங்கே அனாதைப் பிணமாகக் கிடக்கிறாரோ' என்ற பயங்கரமான கற்பனைகளில் சிக்கிக் கொண்டு, 'இந்தப் பாபத்துக்கு நான் தான் காரணமோ?' என்று உள்ளூர விளைந்த நடுக்கத்துடன் ரகசியமாகக் கண்ணீர் வடிக்கிறாள் ராஜம். இந்த விஷயம் சிவராமனுக்கோ மணிக்கோ தெரியாது. பத்து நாட்களுக்கு முன்பு ஆபிசில் இருந்து வருகின்றபோது, தெப்பக் குளக்கரையில் கூடி நின்ற சாஸ்திரிகள் கும்பலில் சிவராமனின் பார்வை - கட்டை குட்டையாய் கன்னங் கரேலெனத் துண்டாகத் தென்படும் - தன் தந்தையைத் தேடி வழக்கம்போல் துழாவியபோது அவனைப் பார்த்துவிட்டார் வெங்கிட்டுவையர்... அவனைப் பின் தொடர்ந்து கடைத் தெருவரை வந்தார்... பிறகு தன் பின்னால் யாரும் வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு "என்னடா சிவராமா..." என்றழைத்தார். சிவராமன் திரும்பினான். "என்ன, உங்கப்பாவைப் பத்தின தகவல் ஏதாவது கிடைச்சுதோ?" என்று நெருக்கமாய் வந்து கேட்டார். வெங்கிட்டுவையர், கணபதி சாஸ்திரிகளின் பால்ய சினேகிதர்; ஒத்த வயது. சிவராமனுக்கு ஏனோ தான் பெரிய தவறு புரிந்துவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டுக் குனிந்த தலையோடு, "ஒரு தகவலும் இல்லை... எங்கே போயிருப்பார்ன்னு தெரியல்லே... ஏன் போனார்னும் தெரியல்லே... ஆத்திலே கூட ஒண்ணும் வருத்தம் இல்லே... ம்... உங்களுக்குத் தெரியாதா நாங்க எப்படி அவரை வெச்சிருந்தோம்னு" என்று மென்று மென்று விழுங்கினான் சிவராமன். அவனுக்குக் குற்றமுள்ள மனசு குமைந்தது... "அட அசடு.. அதுக்கு நீ என்ன செய்வே?... அப்படியே இருந்தாலும் தோப்பனுக்கும் மகனுக்கும் ஆயிரம் இருக்கும்... அதுக்காக ஒருத்தன் ஆத்தை விட்டே போயிடுவானோ? அது சரி, உனக்கு விஷயமே தெரியாதா?..." என்று சுற்று முற்றும் பார்த்தார். பிறகு குரலைத் தாழ்த்தி "இப்படி வா சொல்றேன்" என்று நடுத் தெருவிலிருந்து ஓரமாய், பஜனை மடத்தருகே அவனை அழைத்து வந்தார் வெங்கிட்டுவையர். கணபதி சாஸ்திரிகள் ஊரைவிட்டே ஓடிப் போவதற்கு முதல் நாள் தெப்பக் குளக்கரையில் நடந்த சம்பவத்தை அவர் நினைத்துப் பார்த்தார். தெரு ஓரமாய் இருவரும் வந்து நின்றபின், தனது இடுப்பில் செருகி இருந்த பொடி மட்டையை எடுத்து ஒரு சிமிட்டா பொடியை விரல்களில் இடுக்கியவாறு அவர் சொன்னார்: "அவனுக்கு மனசே வெறுத்துப் போச்சுடா. அவனை அப்பிடி அவமானப் படுத்திட்டார் வேற யாரு, சுந்தரகனபாடிகள் தான்..." என்று சொல்லி விட்டுக் கையிலிருந்த பொடியைக் காரமாய் உறிஞ்சினார் வெங்கிட்டுவையர். பொடியின் காரத்தில் கலங்கிய கண்களோடு சிவராமனை வெறித்துப் பார்த்தார். சிவராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. சுந்தரகனபாடிகள் கணபதி சாஸ்திரிகளை அவமானப்படுத்தினாரா?... ஏன்? சிவராமனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் சுந்தரகனபாடிகள் மீது அளவற்ற மரியாதையும் பக்தியும் உண்டு. கணபதி சாஸ்திரிகளின் குருநாதர் அவர்தான். அந்தக் காலத்தில் மகா பண்டிதராய் விளங்கிய கணபதி சாஸ்திரிகளின் தந்தையான பரமேஸ்வர கனபாடிகளின் உயிருக்கு உயிரான சீடர் சுந்தரகனபாடிகள் என்கிற விஷயம், ஒரு குடும்பப் பெருமையாய்ப் போற்றிவந்த செய்தி. அவரிடம் தான் கணபதி சாஸ்திரிகள் வேதம் பயின்றார். 'எழுபத்தைந்து வயதுக்கு மேலாகிப் பழுத்த பழமாய்ப் பார்த்தவர் வணங்கும் தோற்றமும் தன்மையும் பொருந்திய கனபாடிகள், பாவம், தன் தந்தையை என்ன காரணத்தினால் அவமானப்படுத்தி இருக்க முடியும்? அப்படியே கொஞ்சம் முன்கோபியான கனபாடிகள் ஏதாவது சொல்லியிருந்தாலும், யார் என்ன கூறிப் பழித்தாலும் அதனைப் பொருட்படுத்தாத 'பரப்பிரம்மமான' தன் தந்தை, அதற்காகவா ஊரை விட்டு ஓடிப்போயிருப்பார்?' என்றெல்லாம் யோசித்த தயக்கத்துடன் "நீங்க என்ன சொல்றேள்?" என்று வெங்கிட்டுவையரின் முகத்தைப் பார்த்தான் சிவராமன். "நான் பார்த்ததைத்தாண்டா சொல்றேன்... நேக்கென்னடா பயம்? மத்தவாள்ளாம் ஒரு கட்சி மாதிரி, இந்த அநியாயத்தைப் பத்தி ஒரு வார்த்தை பேச மாட்டேங்கறாளே... சுந்தரகனபாடிகள் ரொம்பப் பெரியவர்தான்... நான் இல்லேங்கலே.... ஆனாலும் அவருக்கு இந்த வயசிலே இப்படி ஒரு கோபம் கூடாது... மனுஷன் என்ன, இப்படியா அசிங்க அசிங்கமாப் பேசுவார்? இவர் தகுதிக்கு ஆகுமா?... சீ!" என்று படபடவென்று பேசி அலுத்துக் கொண்ட வெங்கிட்டுவையர், அதற்குமேல் விஷயத்தை அறிந்து கொள்ள அவன் ஆர்வம் காட்டுகிறானா என்று அறிய மௌனமாய் சிவராமனின் முகத்தைப் பார்த்தார். "என்னதான் நடந்தது... எனக்கு ஒண்ணுமே தெரியாதே!" பதைத்தான் சிவராமன். "எனக்கும்தான் தெரியாது... நான் கோயில்லேருந்து வந்துண்டிருந்தேன். குளத்தங்கரையிலே ஒரே சத்தமா, ஏக களேபரமா இருந்தது. பார்த்தா உங்கப்பன் - கணபதி தேமேன்னு நின்னுண்டிருக்கான். கனபாடிகள் அடிக்கப் போறவர் மாதிரிக் கையைக் கையை ஓங்கிண்டு ஆவேசம் வந்த மாதிரி குதிக்கறார். அவனை அவர் அடிக்கக் கூட பாத்தியதை உள்ளவர்தாண்டா, நான் இல்லேங்கல்லே... ஆனாலும் கன்னா பின்னான்னு - சீ! ஒரு பிராமணன் பேசக் கூடிய பேச்சா? அப்பிடி அசிங்க அசிங்கமா திட்டினார்... கணபதி அப்படியே கூனிக் குறுகி நின்னுண்டிருந்தான்... கடைசியிலே - அவன் மட்டும் என்ன மனுஷன் இல்லியா? நேக்கே தோணித்து... அதை அவன் கேட்டுட்டான்; அப்படி ஒண்ணும் தப்பா பேசிடலே. "ஓய்.. இப்படி அசிங்க அசிங்கமா பேசறீரே... நீர் ஒரு பிராமணனாய்யா"ன்னு கேட்டான்...! எவ்வளவு பேச்சுக்குத்தான் ஒரு மனுஷன் பேசாம இருப்பான்? நறுக்குன்னு கேட்டான்... அவ்வளவுதான்! அந்தக் கிழவரைப் பார்க்கணுமே... கணபதி கழுத்திலே போட்டிருந்த துண்டை இழுத்து முறுக்கிப் பிடிச்சுண்டார்... ஆவேசம் வந்ததுமாதிரி காயத்திரி மந்திரத்தைக் கூவினார். "சொல்லுடா, இதுக்கு அர்த்தம் சொல்லு. நீ பிராமணனுக்குப் பொறந்தவனானா சொல்லுடா.... என்னைப் பார்த்தா கேட்டே... பிராமணனான்னு?... இவன் பிராமணனான்னு எல்லாரும் கேளுங்கோ..."ன்னு அசிங்க அசிங்கமாத் திட்டினார் - ஒரே கும்பல் கூடிடுத்து... நான் போய் விலக்கப் பார்த்தேன். அந்தக் கிழவனுக்குத்தான் என்ன பலமோ? என்னைப் பிடிச்சு ஒரு தள்ளு தள்ளினார் பாரு... நான் போயி குளக்கரை சுவர் மேலே விழுந்தேன்.... தள்ளிட்டுக் கத்தறார்.... மனுஷனுக்கு வெறி! ஒண்ணு மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லு.... இல்லேன்னா 'நான் பிராமணன் இல்லே'ன்னு ஒத்துக்கோ... என்னெக் கேட்டியேடா, என்ன தைரியம்?" என்று உறுமினார். அவர் பிடியிலே பாவம், கணபதிக்கு உடம்பே நடுங்கறது. நாங்க அவர்கிட்டே பேச முடியல்லே... அந்தக் கெழம்தான் மூர்க்கமாச்சேன்னு கணபதிகிட்டே கெஞ்சினோம்.... 'சொல்லுமோய்யா... மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லிட்டுப்போமே... பிடிவாதம் பிடிக்காதீர்'ன்னு நானும் கிட்டே போயி சொன்னேன்... கணபதி என் மூஞ்சியை வெறிச்சிப் பார்த்தான். பார்த்துட்டு 'ஓ'ன்னு கொழந்தை மாதிரி அழுதான்... 'நேக்கு மந்தரம் தான் தெரியும்... அர்த்தம் தெரியாதே'ன்னு அவன் அழறப்போ, அம்பது வருஷத்துக்கு முந்தி நானும் அவனும் ஒண்ணா படிச்சதெல்லாம் நேக்கு ஞாபகம் வந்து நானும் அழுதுட்டேன். திடீர்னு உங்கப்பன் கனபாடிகள் கையைத் தள்ளி உதறினான். எல்லாரும் என்ன நடக்கப் போறதோன்னு திகைச்சுப் போனோம். பல்லைக் கடிச்சுண்டு உடம்பிலேருந்த பூணூலை வெடுக்குனு பிச்சு அறுத்து, கனபாடிகள் மூஞ்சிலே எறிஞ்சுட்டு 'போங்க... நான் பிராமணன் இல்லே... நான் பிராமணன் இல்லே'ன்னு கோஷம் போடற மாதிரிக் கத்திண்டு ஓட்டமும் நடையுமா நாலுவீதியும் சுத்திண்டு அப்ப போனவன்தான்; என்ன ஆனானோ, எங்கே போனானோன்னு உன்னடை வந்து விசாரிக்கணும்னுதான் நெனைச்சிண்டிருந்தேன்... நீ என்னடான்னா இந்த விஷயமே தெரியாதுங்கறே?..." என்று, தான் சம்பந்தப்படாத - இந்தக் காலத்து பிராமணர்களாகிய தாங்கள் யாருமே சம்பந்தப்படாத - கணபதி சாஸ்திரி என்ற தனிப்பட்ட ஒருவனின் விவகாரம்போல் அன்று நடந்த நிகழ்ச்சியை விளக்கினார் வெங்கிட்டுவையர். வெங்கிட்டுவையர் விவரித்த சம்பவத்தில் பொதிந்துள்ள ஒரு சமூகச் சீரழவின் கொடுமையை ஆழ்ந்து உணர்ந்த வேதனையில் வாய்மூடி மௌனியனான் சிவராமன். அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளாமலேயே குனிந்த தலையோடு, கலங்குகின்ற கண்களோடு அவன் வீடு நோக்கி நடந்தான். வீட்டிற்குப் போனதும் ஒரு மூலையில் கவிழ்ந்து படுத்துக் கதறி அழவேண்டும் என்று வழியெல்லாம் நினைத்துக் கொண்டே அவன் நடந்தான்... ஆனால் அன்று அவன் வீடு சென்றதும் அவ்விதம் செய்யவில்லை. தந்தையின் பிரிவை எண்ணித் தான் அழுவதைக் கண்டு 'அவள்' கோபிப்பாள் என்ற அச்சத்தில் அவன் அந்த 'ஆசை'யைக் கைவிட்டு விட்டான். தாழ்ந்த குலத்தில் பிறந்த கொடுமைக்கு அழுதால் அதற்கு ஓர் அர்த்தமும் இருக்கும்; அனுதாபமும் கிடைக்கும். உயர்ந்த குலத்தில் பிறந்தும் கலியின் விளைவால் விபரீதமாய்ப் போன இந்தக் கொடுமைக்கு அழத்தான் முடியுமா? அனுதாபந்தான் கிடைக்குமா? **3** சிவராமன் ஆபிசிலிருந்து வரும்போது வழியில் குறுக்கிட்ட தெப்பக்குளக்கரை சாஸ்திரிகள் கூட்டத்தில் அவன் பார்வை இன்று யாரையும் தேடவில்லை. வீடு சென்றதும் தபாலில் வந்த அந்தக் காகிதக் கத்தையில் பென்சிலாலும் பேனாவாலும் எழுதப்பட்டிருக்கும் செய்திகளை, காலத்தின் அடியை நெஞ்சில் ஏற்றதால் ஒரு வயோதிக இதயத்திலிருந்து தெறித்து விழுந்த ரகசியமான உதிரத் துளிகளின் அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவசரத் துடிப்பில் நடந்து கொண்டிருந்த அவன், அந்தக் கூட்டத்தையே கவனிக்கவில்லை. சிவராமன் வீட்டை அடையும்போது ராஜம் அடுக்களையில் இருக்கிறாள். மணி இன்னும் வீட்டுக்கு வரவில்லை. அவனுக்கு மவுண்ட் ரோடிலுள்ள ஒரு பெரிய பாதரட்சைக் கடையில் சேல்ஸ்மேன் உத்தியோகமானதால், இரவு எட்டு மணிக்குமேல் கடை அடைத்த பின்பே வீட்டுக்கு வர முடியும்... தனது அறையில் சென்று உடைகளைக் களைந்தபின் முதல் வேலையாகக் கைப் பையைத் திறந்து அந்த நீளக் கவரின் உள்ளே இருந்த காகிதக் கத்தையை எடுத்து அந்தரங்கமாய்ப் படிக்க ஆரம்பிக்கிறான் சிவராமன். அவன் படித்த முதல் வரியே ஒரு மகத்தான இலக்கியத்தின் ஆரம்ப வாசகம்போல் அமைந்து இருக்கிறது: "இதோ! என் கண்முன்னே ஆயிரக்கணக்கான மனுஷா சஞ்சரிச்சுண்டிருக்கா. ஒவ்வொரு மனுஷாளூம் ஒவ்வொரு விதமா இருக்கா. ஒருவிதம் மாதிரி இன்னொரு விதம் இல்லே. ஆயிரமும் ஆயிரம் விதம்! இந்த மைதானத்திலே எனக்கு முன்னேயும் எனக்குப் பின்னேயும் ஆயிரம் ஆயிரமா மனுஷா போயிண்டும் வந்துண்டும் இருக்கா.... சின்ன வயசிலே குடை ராட்டினத்திலே முதல் தடவை சுத்தினப்ப ஏற்பட்ட மயக்கம் மாதிரி இந்த நிமிஷம் என்னைச் சுத்தி ஆயிரம் ஆயிரமா ஜனங்கள் சுத்திண்டு இருக்கச்சே ஒரு பிரமை தட்டறது. நானும் திருவிழாக் கும்பல்லே வழி தவறிச் சிக்கிண்ட கொழந்தெ மாதிரி திருதிருன்னு முழிச்சுப் பாக்கறேன். இந்த ஆயிரக்கணக்கான மனுஷா முகத்திலே ஒண்ணுகூட தெரிஞ்ச முகமா இல்லே. என்னைக் கவனிக்கிற முகம் இதிலே ஒண்ணுகூட இல்லேங்கறதை நெனச்சுப் பார்க்கறப்போ பரம சுகமா இருக்கு. இந்த டில்லி இருக்கே, ரொம்ப புராதன நகரம். அசோகன் என்ன, பாதுஷாக்கள் என்ன, வெள்ளைக்காரா என்ன - இந்த தேசத்தையே எத்தனையோ வருஷங்களா ஆண்டு வர்ர நகரம் இது. இன்னிய தேதியிலே நாமெல்லாம் உக்காந்துண்டு சொந்தம் கொண்டாடறோம். எத்தனை தலைமுறைகளை இந்த லோகம் பாத்துண்டே இருக்கு. இந்த நிமிஷம் உயிர் வாழற மனுஷ ஜாதியிலே ஒரு நபர் கூட இருநூறு வருஷத்துக்கு முன்னாலே இல்லை; இருநூறு வருஷத்துக்கு முன்னாலே வாழ்ந்த மனுஷ ஜாதியின் ஒரு ஜீவன் கூட இப்போ இல்லே. அது ஒரு பிரிவு; இது ஒரு பிரிவு. அந்தப் பிரிவு எப்போ எப்படிப் போயி இந்தப் பிரிவு எப்போ எப்படி வந்ததுன்னு யார் சொல்ல முடியும்? இது மட்டும் சத்தியம். அது முழுக்கப் போயிடுத்து, இது முழுக்க வந்துடுத்து. ஆழமா யோசிக்காம எடுத்த எடுப்பிலே பார்த்த உடனே இந்த உலகத்திலே உள்ள எல்லாமே ஒரு அதிசயமாத்தான் இருக்கு. அதுமாதிரிதான் இந்த விஷயமும் - இருநூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்தவா முழுக்கப் போனதும், இப்ப உள்ளவா முழுக்க வந்துட்டதும் ஆச்சரியமாத்தான் இருக்கு - அவா கொஞ்சம் கொஞ்சமா போனா; இவா கொஞ்சம் கொஞ்சமா வந்தா. இதுமாதிரிதான் போறதும் வர்ரதும். கடவுள் விதிப்படி இந்தக் காரியம் தடங்கல் இல்லாமல்தான் நடக்கறது. மனுஷ விதிப்படியும் இப்படித்தான் நடக்கணும்; நடக்கும். இயற்கையிலே ஒரு சிக்கலும் இல்லை. சிக்கலே இல்லேன்னா அது செயற்கையே இல்லை. இப்படி ஒரு செயற்கையான சிக்கல்லேதான் நான் சிக்கிண்டேன். அப்படி சிக்கிக்கறதுதான் வாழ்க்கை... சிக்கல் விடுபடலேன்னா அதுக்கு நாமதான் பொறுப்பு..." அந்தக் காகிதங்களில் இதுவரை பென்சிலால் எழுதப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு ஆரம்பமாகிற பக்கங்கள் பேனாவால் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த வித்தியாசத்தை ஒரு அத்தியாயப் பிரிவு போல் உருவகித்துக் கொண்டு, தான் படித்த கனமான விஷயங்களைக் கருத்தூன்றிச் சிந்திக்கிறான் சிவராமன்... அவனது சிந்தனைகளை மறித்துக் கொண்டு 'இந்த அசட்டு அப்பாவா இப்படி யெல்லாம் சிந்திக்கிறார்' என்ற வியப்புணர்ச்சியே மேலிடுகிறது. இந்த வினாடி அவன் தனது தந்தையின், அந்த அசட்டுப் பிராமணரின், தாடி மழிக்காத ரோமக்கட்டை அடர்ந்த, முன்பல் விழுந்த, அம்மைத் தழும்பு நிறைந்த, மாறுகண் பார்வையோடு கூடிய கரியமுக விலாசத்தைக் கற்பனை செய்து கண்ணெதிரே காண்கிறான். எழுத்தைத் தொழிலாகக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு ஒரு பத்திரிகையில் பணியாற்றும் தனது சிந்தனையில் ஏற்பட முடியாத எண்ணங்களூம், தன்னால் எழுத்தில் வடிப்பதற்குக் கைவரப் பெறாத கலையும் - காலமெல்லாம் எல்லோருடைய கேலிக்கும் அவமதிப்புக்கும் ஆளான அந்த அப்பாவி பிராமணனுக்கு எப்படி சித்தியாயிற்று! என்ற பிரமிப்பில் விளைந்த நடுக்கத்தோடு அவன் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கிறான். "என் தகப்பனாரின் முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லே. அவர் சாகறப்ப எனக்கு வயசு ஒன்பது; நியாயமா அது எனக்கு ஞாபகம் இருக்கணும். நான்தான் அசடாச்சே, மறந்துட்டேன். ஆனா வயசு ஆக ஆக அவரைப் பத்தி எல்லாரும் பேசிக்கறதிலே இருந்து நானும் அவரைப்பத்தி ரொம்பத் தெரிஞ்சுண்டேன். அவர் மகா பண்டிதர். எந்த அளவு அவருக்கு சம்ஸ்கிருதத்தில் பாண்டியத்தம் உண்டோ அந்த அளவுக்குத் தமிழிலும் உண்டாம். சுந்தர கனபாடிகள் மாதிரி பெரியவாள்ளாம் அவர்கிட்டே படிக்கக் கொடுத்து வச்சவா. எனக்குத்தான் கொடுத்து வைக்கல்லே. அம்மா சொல்லுவா; அப்பா மாதிரி நானும் மகா பண்டிதனாகணும்னு. அதுதான் அப்பாவுக்கும் ஆசையாம்; ம்.... அதெல்லாம் அந்தக் காலத்துப் பிராமணத் தம்பதிகளின் லட்சியம்; தன் பிள்ளை பிராமண தர்மத்தின் பிரதிநிதியா ஆகணும்கறது. இந்தக் காலத்திலே எவன் இருக்கான்? நான் ஏன் எவனையோ தேடணும்? அப்படிப் பட்டவாளுக்குப் பொறந்த நானிருந்தேனா அவா மாதிரி?... நான் எவ்வளவோ சொன்னேன்: அந்தச் செருப்புக் கடை வேலை வாண்டாம்னு, இந்த மணி கேட்டானா?... 'உனக்கு ஒண்ணும் தெரியாது. இதுக்கே நான் என்ன சிரமப்பட்டிருக்கேன்... மாசம் இருநூத்தைம்பது ரூபா சம்பளம். வருஷத்திலே மூணுமாச போனஸ் இந்த வேலைக்கு என்ன குறைச்சல்! அங்கே ஒண்ணும் மாட்டை அறுத்துத் தோல் எடுத்துச் செருப்புத் தைக்கிற வேலை இல்லே. டப்பாவிலே வர்ர செருப்பை எடுத்து விக்கறதுதான். உனக்கு ஒண்ணும் தெரியாது, நீ ஒரு பஞ்சாங்கம்... சும்மா இரு'ன்னு என் வாயை அடைச்சுட்டுப் போயிட்டான் அந்த வேலைக்கு. அது அவன் தப்பா? இல்லை, அது ஒரு தப்பான்னு யோசிச்சுப் பார்த்தா இந்தக் கலியிலே எல்லாம் சரிதான்னு தோண்றது. ஏன்னா, என் பிள்ளைகள் என்னைப் போல குடுமி வச்சுண்டு, உடம்பிலே சட்டையும், கால்லே செருப்பும் போட உரிமை இல்லாம - இந்தக் காலம் பார்த்துப் பரிகசிக்கிற ஒரு ஒதுக்கப்பட்ட கூட்டமா வாழணும்னு நான் ஆசைப்படலே. அதனாலேதான் அவாளை இங்கிலீஷ் படிக்க வச்சேன். கிராப்பு வச்சுக்கச் சொன்னேன். இதுக்கு அர்த்தம் என்ன? நான் எப்படி இருக்கணும்னு ஆசைப்பட்டு என்னாலே இருக முடியலையோ அப்படி யெல்லாம் அவாளை ஆக்கித் திருப்தி பட்டுண்டேனா? ஆமாம்; 'ஒதுங்கிப்போ ஒதுங்கிப்போ'ன்னு சொல்லிச் சொல்லி நானேதான் ஒதுங்கிப் போயிட்டேனே!... ஒரு ஜாதி தாழ்ந்தது எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் இன்னொரு ஜாதி உயர்ந்ததும். இது எப்போ தெரியறதுன்னா தாழ்த்தி ஒதுக்கப்பட்ட ஜாதியைப் போலவே உயர்ந்து ஒதுங்கிப்போன ஜாதியும் படற கஷ்டத்திலே எனக்குத் தெரியறது. என் பிள்ளைகள் பேருக்கு உயர்ந்த ஜாதின்னு சொல்லிண்டாலும், ஊருக்குப் பூணூல் போட்டுண்டாலும் நல்ல வேளை! - என்னைப்போல ஒதுங்கிப் போன ஜாதி ஆயிடலே. ஆனா அவாகூட என்னை ஒதுக்கி வச்சுட்டாளே. என்னை அப்பான்னு சொல்லிக்க, அவ சமமா பழகறவா மத்தியிலே என்னை அப்பான்னு காட்டிக்க எவ்வளவு வெக்கப்பட்டாங்கறதை நான் எத்தனையோ தடவை பார்த்திருக்கேன். ம்... முகம் தெரியாத அப்பாவை நெனச்சு நான் பெருமைப் பட்டுண்டிருக்கேன்... கண்ணெதிரே இருக்கிற அப்பனைப் பார்த்து என் பிள்ளைகள் வெக்கப்பட்டுண்டிருக்கு! அது சரி, நானே என்னை நெனச்சு வெக்கப்படறச்சே, அவா படறது தப்பா?" மீண்டும் இந்த இடத்திலிருந்து பென்சில் எழுத்துக்கள் ஆரம்பமாகின்றன. சிவராமனின் கண்களில் சுரந்த கண்ணீரால் அந்த எழுத்துக்களும் மறைகின்றன. அவன் சில விநாடிகள் மேல் துண்டால் முகத்தை மூடிக் கொள்கிறான். அழுகிறானா? பிறகு ஒரு முறை பெருமூச்செறிந்து சிவந்த கண்களூம் துடிக்கின்ற உதடுகளுமாய்த் தொடர்ந்து படிக்கிறான்: "பாரதியார் ரொம்ப கோபத்தோடு கடுமையாய்த்தான் சொல்லியிருக்கார்: 'அர்த்தம் தெரியாம மந்திரம் சொல்றதைவிட செரைக்கப் போகலாம்'னு. ஒரு பத்து வருஷத்துக்கு முன்னே இதை எங்கேயோ படிச்சேன். நான் சொல்ற மந்திரத்துக்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியுமா?ன்னு நான் யோசிச்சுப் பார்த்தேன். அன்னிக்குப் பூரா முகந் தெரியாத என் தகப்பனாரை - அந்த மகா பண்டிதரை நெனச்சு, நெனச்சு, நான் அழுதேன். அந்த மகா பண்டிதரிடம் - என் தகப்பனாரிடம் - படிச்ச சுந்தர கனபாடிகளும் மகா பண்டிதர்தான். அவரிடம் படிச்சவன் நான். ஆனா எனக்கு அவர்கிட்டே ஆசான் என்கிற பக்தியைவிட 'அடிப்பாரே' என்கிற பயம்தான் அதிகமாக இருந்தது. ஒரு தடவைக்கு மேலே கேட்டா அவருக்குப் பொல்லாத கோபம் வரும். அந்த பயத்திலே அவர் ஒரு தடவை சொல்றதைக் கூட நான் ஒழுங்காப் புரிஞ்சுக்கல்லே. நான் கிளிப்பிள்ளைமாதிரி வேதம் படிச்சேன். அப்போ அது எனக்கு தப்புன்னு தோணலே... ... மந்திரங்கள் தெய்வீகமான, புனிதமான, பவித்திரமான விஷயங்களைப் பத்திப் பேசறதுங்கற நம்பிக்கையிலேயே அதை நான் மனனம் பண்ணிட்டேன். 'தாய்ப்பால்லே என்னென்ன வைட்டமின் இருக்குன்னு தெரிஞ்சுண்டா குழந்தை குடிக்கிறது! ஆனாலும் அது அவசியமில்லையா? நோயாளிக்கு மருந்துதான் முக்கியமே ஒழிய, ஒவ்வொரு மாத்திரையிலேயும் என்னென்ன ரசாயனம் கலந்து இருக்குங்கிற ஞானம் அவசியமா என்ன? அதுபோலதான் மந்திரம்! உனக்கு அது தேவை; அதை ஜபிப்பதன் மூலம் அதற்குரிய பலன்கள் உன்னை அடையும்'னு ஒரு பெரிய மேதை எழுதியிருந்தார். அதைப் படிச்சப்பறம்தான் எனக்கு ஒரு ஆறுதல் பிறந்தது. ஆனா, அந்த ஞானியின் இந்த வாதமும் எனக்குத் தக்க சமயத்தில் கை கொடுக்கல்லே... ஒரு தடவை வக்கீல் ராகவைய்யர் ஆத்துக்கு தர்ப்பணம் பண்ணி வைக்கப் போயிருந்தேன். அவர் ரொம்பப் பெரியவர். என் தகப்பனார் மேலே வச்சிருந்த பக்தியை தகுதி இல்லாத என்பேர்லே அப்படியே வச்சிருந்தார். நாற்பது வருஷமா என்னை அவருக்குத் தெரியும். போன வருஷம் ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போயிருக்கச்சே, அவர் மருமான், வைத்தியநாத அய்யர்னு டில்லியிலேருந்து வந்திருந்தார். அவருக்கும் அன்னிக்கி தர்ப்பணம் பண்ணி வைக்க வேண்டியிருந்தது. அவரைப் பார்த்தா ஆள் வெள்ளைக்காரன் மாதிரி இருந்தார். அந்தப் பட்டுவஸ்திரத்தை அவர் கட்டியிருந்த முறையிலேயே மனுஷன் வேஷ்டி கட்டிப் பழகாதவர்னு தெரிஞ்சுண்டேன். நாலு அங்குலத்துக்குச் சரிகைக் கரை வேஷ்டியும் பட்டுத் துண்டுமா அவர் மாடியிலேருந்து எறங்கி வர்ரச்சே பளபளன்னு கால்லே சிலிப்பர் வேறே... என்ன பண்றது?... காலம்! நான் முகத்தைச் சுளிச்சுண்டு 'தர்ப்பணம் பண்ணச்சே அதைக் கழட்டிடணும்'னு சொன்னேன். 'ஐ ஆம் ஸாரி'ன்னு ஞாபக மறதிக்கு அவரும் வெக்கப்பட்டுண்டார். நானும் 'இட் இஸ் ஆல்ரைட்' சொன்னேன்... நானும் அடிக்கடி ஏதாவது ரெண்டு இங்கிலீஷ் வார்த்தையைக் கலந்து பேசறதுதான்!... உலகம் என்னை ஒதுக்கி வச்சிருந்தாலும் ஓடி ஓடி வந்து ஒட்டிக்கிற குணம் அது. எனக்கும் அன்னிக்கி பல எடத்துக்குப் போக வேண்டியிருந்தது. அவசர அவசரமா கடமையை முடிச்சுண்டு எழுந்திருக்கச்சே பார்த்தா தட்சணை குறைவா இருந்தது. 'இந்த மனுஷனுக்கு ஒண்ணுமே தெரியலையே'ங்கற அலட்சியத்தோட, 'என்ன ஸ்வாமி தட்சணை குறையறதே'ன்னேன். அவர் என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே 'மந்திரமும் குறைஞ்சிருந்ததே'ன்னார்... அன்னிக்கு மாதிரி வாழ்க்கையிலே அதுக்கு முன்னே நான் இப்படி அவமானப்பட்டதில்லே. அப்புறமான்னா தெரிஞ்சது அவர் டில்லியிலே பெரிய சம்ஸ்கிருத புரொபஸர்னு... அவர் என்னைக் கேட்டார்: 'உங்க பீடத்துக்கு நாங்க வெச்சிருக்கற மதிப்பை நீங்க காக்க வேண்டாமா? அர்த்தம் தெரியாம மந்திரம் சொல்லித் தரலாமா?'ன்னு... நான் சொன்னேன்: 'மருந்தைச் சாப்பிட்டா போறும்; மருந்திலே என்ன இருக்குன்னு தெரிஞ்சா என்ன, தெரியாட்டா என்ன?'ன்னு எப்பவோ படிச்சதை எடுத்துவிட்டேன். அவர் என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே, 'மருந்து சாப்பிடறவனுக்குத் தெரியாட்டா பாதகமில்லே. மருந்து கொடுக்கிறவருக்குத் தெரிஞ்சிருக்கணுமே?'ன்னார்... ஒரு நிமிஷம் யோசித்துப் பார்த்தேன்...! என்ன சொல்றதுன்னு புரியல்லே.... 'மன்னிச்சுக்கோங்கோ ஸ்வாமி'ன்னு கை எடுத்து கும்பிட்டுட்டு சைக்கிள்லே ஏறி ஓடி வந்துட்டேன்." மணி எட்டு அடிக்கிறது. ராஜம் அடுக்களையிலிருந்து அறைக்குள் வந்து அவன் முதுகில் உரசியவாறு நின்று அவன் தோள் வழியே அவன் படிக்கும் காகிதங்களைப் பார்க்கிறாள்; ஏதோ ஆபீஸ் விவகாரம் என்ற அலட்சியத்தோடு. "இன்னும் முடியலையா? சாப்பிட வரேளா?" என்ற குரல் கேட்டு அவன் கவனம் கலைந்து அவளைப் பார்க்கிறான். "மணியும் வந்துடட்டுமே" என்று ஒரு பயந்த புன்னகையோடு அவன் வேண்டிக் கொள்கிறான். "இந்தக் குப்பைகளையெல்லாம் ஆபீசோட வச்சுக்கப்படாதோ?" என்று சிடுசிடுத்தவாறு மேஜைமீது கிடந்த ஒரு வாரப் பத்திரிகையை எடுத்துப் பிரித்துக் கொண்டு சுவரோரமாக உட்காருகிறாள் ராஜம். அவன் அடுத்த காகிதத்தைப் புரட்டுகிறான். "அறுபது வருஷமா அர்த்தமில்லாமல் பேத்திண்டே வாழ்ந்திருக்கேன்! என்னைப்போல மனுஷாளாலேதான் பிராம்மண தர்மமே அவமானப் பட்டுடுத்து. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் சந்தியாவதனம் பண்றச்சேயெல்லாம் ஏதோ குத்தம் செய்யறமதிரி ஒரு உறுத்தல். பொய்யாவே வாழ்ந்துட்டமாதிரி ஒரு புகைச்சல்... சாஸ்திரங்கள், வேதங்கள் எல்லாம் இந்தக் காலத்தினாலே மதிப்பிழந்து போயிடுத்துன்னு நான் சொல்லமாட்டேன். அதுக்கு உரிய மதிப்பை, மரியாதையை நாமே உணர்ந்துக்கலேங்கறதுதான் எனக்குத் தெரியற உண்மை. இந்த ஒரு மாசமாத்தான் நானே ஒரு மனுஷன்னு எனக்குத் தெரியறது. இதுக்கு முன்னே நாடகத்திலே வர்ரமாதிரி நான் வேஷம் போட்டுண்டு, யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசறமாதிரி மந்திரங்களை மனசிலே ஒட்டாம உதட்டிலே ஒட்டிண்டு திரிஞ்சேன். ... எனக்குத் தெரிஞ்சவா இப்ப யாராவது என்னெப் பார்த்தா அவாளுக்குத் தெரிஞ்ச கணபதிசாஸ்திரி நான்தான்னு சொன்னால் கூட, நம்பவேமாட்டா. எங்கேயாவது கண்ணாடியிலே என் உருவம் திடீர்னு தெரியறப்போ எனக்கே என்னை நம்ப முடியலே. ஆமாம்; என் மனசிலே இருக்கிற என் உருவம் குடுமி வச்சுண்டிருக்கு; பத்தாறு தரிச்சிண்டிருக்கு... அறுபது வருஷ நெனைப்பு அவ்வளவு சீக்கிரம் மாறிடுமா? ம்... நினைப்புத்தான்... இப்ப நான் பிராமணனும் இல்லே, சாஸ்திரியும் இல்லே. எனக்கு, என் மனசாட்சிக்குத் துரோகம் செஞ்சுக்காத ஒரு நேர்மையான மனுஷன் நான்! நான் பொறந்த குலத்தை நான் ரொம்பவும் மதிக்கிறேன். ரொம்பப் பெரியவாள் செய்ய வேண்டிய காரியத்தை எல்லாம் போலித்தனமா நான் செஞ்சுண்டு இருக்கறது, அவாளை நான் மதிக்கிறது ஆகாது. எல்லாரும் என்னைக் 'கிறுக்கு'ன்னுதான் சொல்லுவா இப்பவும். சொல்லட்டுமே... அன்னிக்கி, குளத்தங்கரையிலேருந்து வந்த கோலத்தைப் பார்த்தவா எனக்குப் பயித்தியம் பிடிச்சுடுத்துன்னுதான் நெனச்சுண்டு இருப்பா. சுந்தர கனபாடிகள் மாதிரி இருக்கிறவாளுக்கு புரோகிதம் கௌரவமான ஜீவிதம்தான். அவன் என்னை என்னதான் வைதிருந்தாலும், அவரை நினைச்சு நான் நமஸ்காரம் பண்றேன். என் கண்ணைத் திறந்துவிட்ட குரு அவர்தான். இந்த உலகமே அவர் ரூபத்திலே வந்து என்னைப் பிடிச்சுண்டு 'நீ பிராமணனா சொல்லு, இந்த மந்திரத்திற்கு அர்த்தம் தெரியாதவன்... நீ பிராமணனா சொல்லு'ன்னு உலுக்கின மாதிரி இருந்தது... அவர்தான் எனக்கு பிரம்மோபதேசம் செஞ்சு வச்சு பூணூல் போட்டவர்.... அவர் சொல்லிக் கொடுத்ததைத்தான் நான் இத்தனை காலமா சொல்லிண்டு இருந்தேன். அது தப்புன்னு அவரே சொல்லிட்டார். எப்படிப் பார்த்தாலும் அவர்தான் என் குருநாதர். அவரை நான் நமஸ்காரம் பண்றேன். இப்போ நான் கிராப்பு வச்சுண்டுட்டேன். சட்டை போட்டுண்டென், செருப்பு போட்டுண்டேன். இதெல்லாம் நன்னாத்தான் இருக்கு. எனக்கு நெனச்சுப் பார்த்தா சிரிப்பு சிரிப்பா வரது. சாஸ்திரிகள்னா செருப்புப் போட்டுக்கப்படாதாமே... ஆனா சைக்கிள்லே மட்டும் போலாமாம். என்னோட சைக்கிள் - நாற்பது ரூபாய்க்கு சிவராமன்தான் வாங்கித் தந்தான். வாங்கும்போதே அது கிழம்... இப்ப யாரு அதை உபயோகப் படுத்திண்டிருப்பா? சிவராமனா? மணியா?... கிழங்களும் உபயோகப்படுமே, சாகற வரைக்கும்." படித்துக் கொண்டிருந்த சிவராமன் தலைநிமிர்ந்து கூடத்துச் சுவரோரமாக நிறுத்தி இருந்த சைக்கிளைப் பார்க்கிறான். அவன் முகத்தைப் பார்த்து அவன் பார்வை வழியே முகம் திரும்பி, கூடத்தில் நிறுத்தி இருந்த கணபதி சாஸ்திரிகளின் சைக்கிளை ராஜமும் பார்க்கிறாள். அந்த நிமிஷம் வார்த்தைகள் ஏதுமற்ற மௌனத்திலேயே, அவர்கள் இருவரும் ஒரே விஷயத்தைப்பற்றிப் பேசாமலேயே மன உறுத்தலைப் பரஸ்பரம் பரிமாறி உணர்ந்து கொள்கின்றனர். திடீரென ஒரு விம்மலுடன் ராஜம் அந்த மௌனத்தைக் கலைக்கிறாள்: "இந்தப் பாழும் பிராம்மணர் எங்கே போய்த் தொலைஞ்சாரோ? ஒரு சேதியும் தெரியல்லையே... நாள் ஆக ஆக, என் மனசைப் போட்டு என்னென்னமோ செய்யறதே!... உங்ககிட்டே இப்ப மனசை விட்டுச் சொல்றேனே. அவர் இல்லாம எனக்கு இந்த வீடே வெறிச்சுனு இருக்கு; நீங்க ஏதாவது சண்டை போட்டேளா? இப்படி ரெண்டு பிள்ளைகள் மலையாட்டமா இருந்தும், இப்படி அனாதையாய்ப் போகணும்னு அவர் தலையிலே எழுத்தா?" என்று கையிலிருந்த வாரப் பத்திரிகையால் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள் ராஜம். 'ஒன்றுமே தெரியாத அசடு' என்று தான் தீர்மானித்திருந்த தன் தந்தையின் உள்ளுணர்வுகளை அறிந்து பிரமித்தது போலவே, அவர் மீது வெறுப்பைத் தவிர வேறு பாசமேதும் இல்லாதவள் என்று இதுநாள் வரை தான் எண்ணியிருந்த ராஜத்தின் மன உணர்வுகளைத் திடீரென அறிய நேர்ந்ததும் எல்லா விஷயங்களிலும் ஏதோ ஒரு மகத்துவம் நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கிறது என்ற உணர்வில் மெய்சிலிர்க்கிறான் சிவராமன். மேஜை மீதிருந்த காகிதக் கத்தையில் தான் படித்திருந்த பக்கங்களை எடுத்து மௌனமாய் அவளிடம் நீட்டுகிறான். அப்போது அவன் விழிகளில் தைரியமான இரண்டு சொட்டுக் கண்ணீர் துளித்திருந்து பொட்டென உதிர்கிறது! "என்ன கடுதாசியா... அவரா எழுதியிருக்கார்?" என்ற பரபரப்போடு அவர் எங்கோ உயிரோடு இருக்கிறார் என்ற ஒரே திருப்தியில் ஆனந்தமயமாகி அதை வாங்கிப் படிக்க ஆரம்பிக்கிறாள் ராஜம். இப்போதுதான் வீட்டிற்குள் வந்த மணி, அவள் வார்த்தைகளை அரைகுறையாய்க் கேட்டவாறு, "அப்பாவா? எங்கே இருக்கார்? என்று கூவியவாறு ராஜத்தின் அருகே உட்கார்ந்து அவளோடு சேர்ந்து அந்தக் கடிதத்தைப் படிக்க முயல்கிறான். மணி ஒன்பது அடிக்கிறது... அவர்களில் யாரும் இன்னும் சாப்பிடப் போகவில்லை. அந்த ஒரு கத்தைக் காகிதம் இப்போது முடிவதாக இல்லை. தன்னை விட்டு எங்கோ விலகிக் கிடக்கும் அவரை முழுமையாக அறிந்துகொள்ளும் ஆவலில் ஆளுக்கு ஒரு பக்கத்தை அவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். அந்தக் காகிதத்தில் ஏதோ ஒரு பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்த மணி திடீரெனக் கூவுகிறான்: "வெல்டன்... பாதர்..." அந்தக் காகிதங்களில் அவர்கள் அறிவது, அவர்கள் கண்களுக்குத் தெரிவது, அவர்கள் தரிசிப்பது - அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த, இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழ நேர்ந்துவிட்ட, கணபதி சாஸ்திரிகள் என்ற தனிப்பட்ட ஒரு பிராம்மணரை மட்டும்தானா? ----- #17. அக்ரஹாரத்துப் பூனை எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத்தானிருக்க வேண்டும். முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அங்கே, அந்தத் தெருவில் ஓர் பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிருகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும், நினைவுகளும் தானே! நான் பார்த்த ஊரும் - 'இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முடியாது' என்று உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப் போன அந்த அக்ரஹாரத்து வீடுகளூம், 'இவர்கள் என்றைக்கும் புதுமையுற மாட்டார்கள்' என்கிற மாதிரி தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும், அவர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதிலே ஒரு அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது. நான் இப்போது ரொம்பவும் வளர்ந்து விட்டேன்; ரொம்பவும் விஷயங்கள் தெரிந்து கொண்டு விட்டேன். என்னிடமிருந்த குறும்புத்தனங்கள் எவ்வளவோ நீங்கி விட்டன. ஆனாலும் கற்பனையாக இத்தனை மைல்களூக்கப்பாலிருந்து அந்த ஊரின் தெருவுக்குள் பிரவேசிக்கும் போது - கற்பனையால் தூரத்தை மட்டும்தான் கடக்க முடியுமா? - காலத்தையும் கடந்து நான் ஒரு பத்து வயதுச் சிறுவனாகவே நுழைகிறேன். அந்தக் குளத்தங்கரை ஓரமாக நான் வரும்போது, எனது பிரசன்னத்தைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்கள் குளித்து கொண்டிருக்கும்போது, குளக்கரைப் படியிலே நான் சற்று உட்கார்ந்து கொள்கிறேன். அங்கு சுகமாகக் காற்று வரும். குளத்திலே தண்ணீருக்கு மேல் ஓர் அடி உயரத்துக்கு மீன்கள் துள்ளிக் குதிக்கும் - கூழாங் கற்களைப் பொறுக்கிக் குளத்துக்குள் எறிந்தவாறு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாமே - எங்கெங்கே பரந்து என்ன வாரிக் கட்டிக் கொண்டோம்? வெங்கிட்டு, உத்தண்டம், சுந்தரம், தண்டபாணி எல்லாரும் பெண்கள் படித்துறைக்கும் ஆண்கள் படித்துறைக்குமிடையே உள்ள கட்டைச் சுவரின் மீது வரிசையாக வந்து நின்று, ஒவ்வொருவராக 'தொபுக்' 'தொபுக்' என்று குதித்த பின்னர், ஈரம் சொட்டச் சொட்ட ஒரு 'ரிப்பன்' கோவணத்தை இழுத்துச் செருகிக் கொண்டு மறூபடியும் சுவரின் மீது ஏறி வந்து வரிசை அமைக்கின்றனர். நான் எப்போதுமே தனி. என்னை அவர்கள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். நான் துஷ்டனாம். நான் அந்தச் சிறுவர்களுடன் சேராமல் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் பெரியவர்கள் என்னை உதாரணம் காட்டிப் பேசுவார்கள். நான் விஷமம் செய்யாமல் 'தேமே'னென்றிருக்கிறேனாம். நான் அடக்கமான பதிவிசான பையனாம்.... 'சீ, பாவம்டா! அவனையும் சேத்துண்டு வெளையாடுங்களேன். போனா போறது; நீ வாடா அம்பி. அவா உன்னை சேத்துண்டு வெளையாடலேன்னா ஒண்ணும் கொறைஞ்சு போயிட மாட்டே... நீ வாடா, நான் உனக்கு பட்சணம் தர்றேன்... காப்பிப் பொடி அரைக்கலாம் வரயா?...' என்றெல்லாம் என் மீது அன்பைச் சொரிகின்ற பெரியவர்களின் அரவணைப்பு எனக்கு மனசுக்கு இதமாக வெது வெது என்றிருக்கும். நான் அவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்துக் கொடுக்கிறதிலிருந்து சில நேரங்களில் கால் அமுக்கி விடுவது வரை எல்லாக் காரியங்களும் செய்வேன். என் அம்மா சொன்னால் மட்டும் கேட்க மாட்டேன். 'போ! போ!' என்று ஓடுவேன். எனக்குப் பத்து வயசாகறதுக்குள்ளேயே என் அம்மாவுக்கு ஐந்து கொழந்தைகள். தாயின் அன்போ அரவணைப்போ எனக்கு நினைவு கூட இல்லை. என் அம்மா என்னைக் கூப்பிடற பேரே 'ஏ! கடன்காரா' தான். ஊருக்கு, தெருவுக்கு, மற்றவர்களுக்குப் பதிவிசாகத் 'தேமே'னென்று தோற்றமளிக்கிற நான் வீட்டில் அவ்வளவு விஷமங்கள் செய்வேன். என்ன விஷமம்? ஏதாவது ஒரு குழந்தை ஓடி வரும்போது 'தேமே'னென்று உட்கார்ந்திருக்கும் நான் 'தேமே'னென்று குறுக்கே காலை நீட்டுவேன்... கீழே விழுந்து 'ஓ' வென்று அழும் குழந்தைக்குச் சில சமயங்களில் மோவாயிலிருந்தோ பல்லிலிருந்தோ ரத்தம் ஒழுகும். நான் 'தேமே'னென்று உட்கார்ந்திருப்பேன். அந்தச் சனிகள் பேசத் தெரியாவிட்டாலும் அழுது கொண்டே, கையை நீட்டிச் சாடை காட்டி, தான் விழுந்ததுக்கு நான் தான் காரணம் என்று எப்படியோ சொல்லிக் காட்டிக் கொடுத்து விடும்கள்! "கடன்காரா! செய்யறதையும் செய்துட்டுப் பூனை மாதிரி உக்காந்திருக்கியா?" என்று அம்மா வந்து முதுகில் அறைவாள். அறைந்து விட்டுக் "கையெல்லாம் எரியறது... எருமை மாடே!" என்று நொந்து கொண்டு விரட்டுவாள். "ஏண்டி அவனை அடிக்கறே! பாவம், அவன் 'தேமே'ன்னு தானே இருக்கான்" என்று யாராவது அடுத்த வீட்டு - எதிர் வீட்டு மாமி வந்து - அவள் வந்த பிறகு அழ ஆரம்பித்த என்னைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போவார்கள். பட்சணம் கிடைத்த பிறகு நான் சமாதானம் அடைவேன். ஆனாலும் அங்கேயும் 'தேமே'னென்று இருந்து கொண்டே ஏதாவது செய்து விடுவேன். எப்படியோ பழியிலிருந்து மட்டும் தப்பித்துக் கொள்வேன்... காப்பிப் பொடி அரைக்கிற மிஷின்லே மண்ணைக் கொட்டி அரைக்கிறது... திடீர்னு "மாமி... இங்கே வந்து பாருங்கோ. யாரோ மிஷின்லே மண்ணெப் போட்டு அரைச்சிருக்கா"ன்னு கத்துவேன். "வேற யாரு? எங்காத்துக் கடன்காரனாத்தான் இருக்கும்" என்று அவர்கள் வீட்டுக் 'கடன்கார'னைத் தேடிப் பிடித்து நாலறை வாங்கி வைத்துப் பார்த்தால்தான் ஒரு சந்தோஷம்; ஒரு நிம்மதி. என் அம்மா மட்டும் என் மேல் அனுதாபம் காட்டுகிற மாமிகளை எச்சரித்துக் கொண்டே இருப்பாள்: "அவனை நம்பாதீங்கோ... பார்த்தா 'மொசு மொசு'ன்னு பூனை மாதிரி இருந்துண்டு உடம்பே வெஷம்... என்னமோ சொல்லுவாளே, பூனை செய்யறதெல்லாம் வெஷமம்... அடிச்சா பாவம்னு - அந்த மாதிரி..." அதைக் கேட்டு "ஏண்டா, அப்படியா?" என்று அந்த மாமி என்னைப் பார்ப்பாள். நான் 'தேமே'னென்று அவளைப் பார்ப்பேன்... "சீ, போடி! என்னத்துக்குக் கொழந்தையெ இப்படிக் கரிச்சுக் கொட்டறே! நீ வாடா..." என்கிற அந்த அணைப்பும் அன்பும் எவ்வளவு இதமாக, சுகமாக இருக்கும்! ஆனால் அந்த அனுதாபம் காட்டுகிற அவர்களுக்குக் கூட நான் உண்மையாக, வெள்ளையாக இல்லை என்பது எனக்கல்லவா தெரியும்! சரி! நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்! அந்த அக்ரஹாரத்துப் பூனையெப் பத்தி சொல்ல வந்து - அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியும் என்னைப் பத்தியும்னா சொல்லிண்டு இருக்கேன்! - இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னே பத்து வயசு வரைக்கும் வாழ்ந்திருந்த ஒரு கிராமத்தையும் ஒரு அக்ரஹாரத்தையும் அதிலே வாழ்ந்த மனுஷாளையும் பத்தி இன்னும் எவ்வளவு நாளைக்கி வேணும்னாலும் என்னால் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். எனக்கு அலுக்காது, சலிக்காது. பார்க்கப் போனா, நான் சொல்லிக் கொண்டு, பேசிக் கொண்டு, எழுதிக் கொண்டு இருக்கிற எல்லாமே ஒரு ஊரை, ஒரு தெருவைச் சேர்ந்தவாளைப் பத்திதான். மீனா, ருக்கு, பட்டு, லலிதா, கௌரிப் பாட்டி, ஆனந்த சர்மா, வைத்தா, ராகவய்யர், கணபதி ஐயர், சங்கர சர்மா இவர்கள் எல்லோருக்குமே ஒருத்தரை ஒருத்தர்க்குத் தெரியும். இவா அப்ப இருந்தது, இப்ப எப்பிடி இருப்பான்னு நான் இப்பக் கற்பனை பண்றது, இவர்களிலே சில பேர் எக்கச் சக்கமா பட்டணத்தின் 'மெர்க்குரி லைட்' வௌிச்சத்திலே என்னிடம் வந்து சிக்கிக் கொண்டது, காலத்தினுடைய அடிகளினாலே இவர்கள் வளைஞ்சு போனது, உடைஞ்சு போனது, அடிபடாமல் ஒதுங்கி ஓடிப்போனது, அடிபட்டும் 'ஒண்ணுமில்லை'யென்னு உடம்பெத் தொடச்சு விட்டுண்டது, எங்கேயோ பட்ட அடிக்கு, எங்கேயோ போய் முட்டிண்டது, சமயத்திலே என்னண்டையே வந்து முட்டிக் கொண்டு குட்டு வாங்கிக் கொண்டது இதைப்பத்தியெல்லாம் எழுதறதிலே எனக்குச் சலிப்பே கிடையாது; அலுப்பே கிடையாது. எனக்கு அவா மேலே அப்படி ஒரு பிரேமை. அவா சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு ரொம்ப ஒஸத்தி! ஆனால், அவர்கள்லே சிலருக்கு இதுவே அலுத்துப் போச்சுப் போலே இருக்கு... ம்ஹ்ம்! பயமா இருக்குப் போலே இருக்கு... என்னமோ சங்கடப் பட்டுக்கறா, 'என்ன ஸார், அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியே எழுதிண்டு'ன்னு. நான் என்ன பண்ணுவேன்? எனக்குத் தெரிஞ்சதைத் தானே எழுதுவேன். சரி. இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு எனக்குத் தெரிஞ்ச ஒரு பூனையைப் பற்றி எழுதப் போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ சலிப்போ பயமோ சங்கடமோ வராது. பூனைகள் கதை படிக்கிறதோ, கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத் தான் 'ஆஷாடபூதி' மாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரி குணமெல்லாம் நிச்சயம் கிடையாது. எனக்குப் பூனைகளைக் கண்டால் கொஞ்சம் கூடப் பிடிக்கிறது இல்லை. ஒரு அவெர்ஷன்! சாதாரணமா எனக்கு எந்தச் செல்லப் பிராணிகளையும் பிடிக்காது. அருவருப்பா இருக்கும். சிங்கம், புலி இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்! அதையெல்லாம் பார்த்ததில்லையல்லவா? அதனாலே பிடிக்கும்! பார்த்துப் பழகிட்டா, எதுவுமே பிடிக்காமல் போறது மனுஷ இயல்புதானே? அதுவும் பூனை, நாய், பெருச்சாளி இதையெல்லாம் யாருக்குத் தான் பிடிக்கும்? யாருக்குமே பெருச்சாளி பிடிக்காது! - அப்போவெல்லாம் எனக்கு பொழுதுபோக்கே கொலை பண்றதுதான். 'தேமே'ன்னு உக்கார்ந்துண்டு ஒரு கட்டெறும்பைப் பிடிச்சு ரெண்டு காலைக் கிள்ளிட்டு அது ஆடற நடனத்தை ரசிக்கிறது... ஒரு குச்சியாலே அதன் நடு முதுகிலே அழுத்திக் குத்தி, அதெ ரெண்டாக்கி, அந்த ரெண்டு துண்டும் எப்படித் துடிக்கிறதுன்னு ஆராயறது; பல்லியெ அடிச்சு, வால் துடிக்கிறதெப் பாக்கறது. தும்பியெப் பிடிச்சு, வாலிலே நூல் கட்டி, சங்கீதம் பாட வைக்கிறது. மரவட்டை, வளையல் பூச்சி, ஓணான் இதுக்கெல்லாம் அந்தக் காலத்திலே நான் ஒரு யமகிங்கரன்! எங்க தெருவிலே நுழையற எந்த நாயும் என்னைப் பார்த்துட்டா அதுக்கப்புறம் தைரியமா முன்னேறி வராது. அப்படியே வாபஸ்தான்! ஜெயா மாமி வீட்டுத் திண்ணையில் நான் பாட்டுக்குத் 'தேமே'ன்னு உக்காந்திண்டிருக்கேன். பக்கத்துலே ஒரு குவியல் கருங்கல். நானே செலக்ட் பண்ணிப் பொறுக்கு சேர்த்து வச்சது. அதோ! தூரத்திலே ஒரு நாய் வரது. இதுக்கு முன்னேயே ஒரு தடவை அதை மூணு காலிலே ஓட வச்சிருக்கேன். உடனே நான் தூணிலே மறையறேன். அடிக்கிறவனுக்கே இவ்வளவு உஷார் உணர்ச்சி இருந்தா, அடிபடுகிற அதுக்கு இருக்காதா? இரண்டு காதையும் குத்திட்டு நிமிர்த்திண்டு சட்டுனு என்னைப் பார்த்துடுத்து! 'டேய்! அடிப்பியா? நான் பாட்டுக்குப் போயிடறேண்டா' என்பது போல் ஒரு பார்வை. நான் உடனே அதைப் பாக்காத மாதிரி முகத்தைத் திருப்பிண்டுடறேன். அதுக்குக் கொஞ்சம் தைரியம். அந்த எதிர் வீட்டு வரிசை ஓரமா இரண்டு பின்னங்காலுக்கும் நடுவிலே வாலை இடுக்கிண்டு என் மேலே வச்ச கண்ணை எடுக்காமலேயே நகர்ந்து வரது. என் கையெல்லாம் பரபரக்கறது. பல்லைக் கடிச்சுண்டு என்னை அடக்கிக்கிறேன். இதோ அது எனக்கு நேரே வந்துட்டது... சீ! அந்த வேகமெல்லாம் இப்ப வராது. நான் என்ன பண்ணினேன்னு யாருக்கும் தெரியாது. தெருவையே கூட்டற மாதிரி கத்திண்டு என்ன ஓட்டம் ஓடறது அது! தலையிலே குறி வச்சாதான் காலிலே படும். பட்டுடுத்து! நான் 'தேமே'ன்னு உக்காந்திருக்கேன். சத்தம் கேட்டு ஜெயா மாமி உள்ளேருந்து வரா. 'சடக்'னு திண்ணையிலிருந்து கல்லையெல்லாம் கீழே தள்ளிடறேன். "ஏண்டா, நாயை யாரு அடிச்சது?" "ஐயையோ, நான் இல்லே மாமி." "சரி, யாரையாவது கூப்பிடு. வெந்நீர் உள்ளே ஒரு பெருச்சாளி வௌியே போக முடியாம நிக்கறது. யாரையாவது கூப்பிடுடா அம்பி." அவ்வளவுதான் ஒரு விறகுக் கட்டையைத் தூக்கிண்டு நான் போறேன். மாமி கத்தறா. "வேண்டாண்டா, வேற யாரையாவது கூப்பிடு. அது உன் மேலே பாஞ்சுடும்." வெந்நீர் உள் மூலையிலே அதைக் 'கார்னர்' பண்ணிட்டேன் நான். பெருச்சாளி தலையைத் தூக்கி என்னைப் பாத்து சீறிண்டு நிக்கறது. தலையைக் குறிபார்த்து, 'நச்'னு ஒரு அடி. சனியன்! தன்னையே பிரதட்சிணம் பண்ணிக்கிற மாதிரி சுத்திச் சுத்தி வெந்நீருள் பூரா ரத்தம் கக்கிச் செத்துடுத்து. ஜெயா மாமி பயந்துட்டாள். நானும் பயந்த மாதிரி "மாமி மாமி"ன்னு கத்தினேன். ஜெயா மாமி ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சிண்டா. "நோக்கு இந்த வேலை வேண்டாம்னு சொன்னேனோன்னா... கருமத்தைப் பார்க்காதே... வா. ராக்காயி வந்தால், கழுவிவிடச் சொல்லலாம்." பயந்து நின்னுண்டிருக்கிற என்னை ஆதரவா ஜெயா மாமி அணைச்சுக்கிறாள். பெரியவா அணைச்சுண்டா என்ன சுகமா இருக்கு! அந்தப் பெருச்சாளி என்னைப் பார்த்துச் சீறலைன்னா எனக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது. அது மட்டும் என்னைப் பார்த்துச் சீறிட்டுத் தப்பிச்சும் போயிருந்தால் நான் அழுதிருப்பேன். கொலை செய்யறதைத் தவிர இன்னொரு பொழுது போக்கும் எனக்கு உண்டு. அது என்னன்னா, கொலை பண்றதையும், கூறு போட்டு விக்கறதையும் வேடிக்கை பார்க்கறது. அந்த அக்ரஹாரத்துக் கடைசீலே ஒரு திடல் உண்டு. அந்தத் திடல்லே இருக்கிறவாளெல்லாம் என்னமோ ஒரு பாஷை பேசுவா. ஆடு, மாடு, கோழி எல்லாம் வச்சிருப்பா. அங்கே ஒரு கடா மீசைக்காரன் இருப்பான். வெங்கிட்டு, சுந்தரம், உத்தண்டம் இவங்களுக்கெல்லாம் அவனைக் கண்டாலே 'டபிள்ஸ்' தான். எனக்கு அவனைக் கண்டா பயமே கிடையாது. அவன் எப்போடா நம்ம தெரு வழியா வருவான்னு காத்துண்டே இருப்பேன். அவன் சாயங்காலம் நாலு மணிக்கு எங்க தெரு வழியா அந்தத் திடலுக்கு திரும்பிப் போவான். நான் அவனையே பாத்துண்டிருப்பேன். அவன் மீசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு துருப்பிடிச்ச கறுப்பு சைக்கிளிலே அவன் வருவான். அந்த சைக்கிளிலே அவனைப் பார்த்தா ஆடு மேலே ஒரு ஆள் உக்காந்து சவாரி பண்றாப்பலே இருக்கும். சைக்கிள் ஹாண்ட் பார்லே ஒரு காக்கி பை இருக்கும். அதுலெ ரத்தக்கறையா இருக்கும்; ஈ மொய்க்கும்; அது உள்ளே இருக்கற கத்தியோட பிடி மட்டும் தெரியும். நான் பெரியவனானப்புறம் அவனை மாதிரியே மீசை வச்சுண்டுடுவேன். இன்னும் பெரிய கத்தியா வெச்சுக்குவேன். யாரானும் சண்டைக்கு வந்தால், வெட்டிடுவேன். பெரியவனானால் நிச்சயமா மனுஷாளையும் வெட்டுவேன். என்னைக் கண்டு எல்லோரும் பயப்படணும். இல்லாட்டா, கத்தியாலெ வெட்டுவேன். - நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்? அக்ரஹாரத்துப் பூனையைப் பத்தியல்லவா சொல்ல வந்தேன்? பரவாயில்லை. பூனையைப் பத்தி சொல்ல இடம் வந்தாச்சு. சொல்லிடறேன். எங்க அக்ரஹாரத்திலே ஒரு பூனையும் உண்டு. ரொம்ப 'நொட்டோரியஸ்!' பூனைன்னா, ஒரு சின்னப் புலி மாதிரி இருக்கும். உடம்பெல்லாம் வரி வரியா இருக்கும். இந்தச் சனியனுக்கு அக்ரஹாரத்துலே என்ன வச்சிருக்கோ? பூனை மாமிச பட்சிணிதானே! அது மாமிசம் கிடைக்கிற இடத்தையெல்லாம் விட்டுட்டு, இந்த அக்ரஹாரத்துலே இருக்கு. அதனாலே இந்த அக்ரஹாரத்துப் பூனை கம்பல்ஸரியா சைவப் பூனை ஆயிடுத்து. எனக்கும் அதுக்கும் ஓர் ஒத்துமை உண்டு. நானும் 'தேமே'ன்னு இருப்பேன். அதுவும் 'தேமே'ன்னு இருக்கும். நானும் விஷமம் பண்ணுவேன். அதுவும் விஷமம் பண்ணும். நானும் எல்லாராத்துலேயும் போய் விஷமம் பண்ணுவேன். அதுவும் எல்லார் ஆத்துலேயும் போய் விஷமம் பண்ணும். ஒருநாள் ஜெயா மாமி 'ஓ'ன்னு அலறிண்டு சபிச்சா: "இந்தக் கட்டேல போற பூனை ஒரு படி பாலையும் சாச்சுக் கொட்டிடுத்தே...! அந்தப் பெருச்சாளியை அடிச்ச மாதிரி இதை யாராவது அடிச்சுக் கொன்னாக் கூடத் தேவலை." ஊஞ்சல்லே படுத்துண்டு விசிறிண்டிருந்த மாமா சொன்னார்: "வாயெ அலம்புடி... பாவம்! பாவம்! பூனையைக் கொல்றதுன்னு நெனைச்சாலே மகாபாவம்!" - நான் 'தேமே'ன்னு நின்னுண்டு கேட்டுண்டிருந்தேன். பெருச்சாளியை அடிச்ச மாதிரி பூனையை அடிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். பெருச்சாளி சீறித்தே - ஆனா, பூனை பாஞ்சு கொதறிப்பிடும் கொதறி... பூனை மொதல்லே பயப்படும், கத்தும்; ஓடப் பார்க்கும்; ஒண்ணும் வழியில்லேன்னா ஸ்ட்ரெய்ட் அட்டாக் தான்!... எனக்கு ஞாபகம் இல்லாத வயசிலே ஒரு பூனை என் வயத்தைக் கீறின வடு இப்பவும் அரைஞாண் கட்டற எடத்துலே நீளமா இருக்கே... சின்னக் குழந்தையா தவழ்ந்துண்டு இருந்த பருவம்... பூனையைப் பிடிச்சுண்டு சர்க்கஸ் பண்ணி இருக்கேன். எக்குத் தப்பா கழுத்தெப் புடிச்சுட்டேனாம்.... சீறிக் கத்திண்டு அது என்னைப் பொறண்டறதாம். நான் 'ஓ'ன்னு அலறிண்டு அதன் கழுத்தை விடாம நெருக்கறேனாம்.... அம்மா இப்பவும் சொல்லுவா... அந்த வடு இப்பவும் அடி வயத்திலே இருக்கு. அன்னிக்கி சாயங்காலம் எங்க வீட்டுத் தோட்டத்திலே அந்தப் பூனையை நான் பார்த்தேன். எங்கு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் நடுவே வேலியோரமாப் போய்க்கொண்டிருந்தது அந்தப் பூனை. போற போக்கிலே ஒரு தடவை திரும்பிப் பார்த்தது. நானும் பார்த்தேன். மொறைச்சுப் பார்த்தேன். உடனே அதுவும் கொஞ்சம் உஷாராகி நன்னா திரும்பிண்டு என்னையே மொறைச்சுப் பார்த்தது. நான் அது மேலே பாய்கிற மாதிரி குதிச்சுப் பயம் காண்பிச்சேன். அது பயப்படலே. கொஞ்சம் தரையிலே பம்மி நிமிர்ந்தது; அவ்வளவுதான். 'இது என்ன பயப்பட மாட்டேங்கறதே'ன்னு எனக்குக் கோவம். ஆத்திரத்தோட நானும் மொறைக்கறேன். அலட்சியமா அதுவும் மொறைக்கிறது... அது ஒரு மௌனமான சவால் மாதிரி இருந்தது. சிவப்பா வாயைத் தெறந்து என்னைப் பார்த்துண்டே... 'மியாவ்!'..ன்னு அது கத்தினப்போ - அது தன் பாஷையிலே என்னை சவாலுக்கு அழைக்கிற மாதிரியே இருந்தது. 'அதெல்லாம் பெருச்சாளிக்கிட்டே வெச்சிக்கோ... நம்ம கையிலே நடக்காது.' 'இரு... இரு. ஒரு நாளைக்கு உன்னைப் பிடிச்சுக் கோணியிலே அடைச்சுத் துவைக்கிற கல்லிலே அடிச்சுக்...' 'மியாவ் - சும்மா பூச்சி காட்டாதே; முதல்லே என்னைப் பிடிக்க முடியுமா உன்னாலே' - சட்டுன்னு வேலியைத் தாண்டிடுத்து. அடுத்தாத்துத் தோட்டத்துலே நின்னுண்டு வேலி வழியா என்னைப் பார்த்து மொறைக்கிறது. 'எங்கே போயிடப் போறே? உன்னைப் பிடிக்கலேன்னா பேரை மாத்தி வெச்சிக்கோ'ன்னேன் நான். அதுக்குப் பதில் சொல்ற மாதிரி ஒரு சின்ன மியாவ் - 'பார்ப்போமா?'ன்னு அதுக்கு அர்த்தம். 'ம்... பார்க்கலாம்...'ன்னேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கலை. அந்தப் பூனையும் தூங்கலை. ராத்திரிப் பூரா குடுகுடுன்னு ஓட்டு மேல ஓடறது. இன்னொரு பூனையையும் ஜோடி சேர்த்துண்டு ஒரு ராட்சஸக் குழந்தை அழற மாதிரி ரெண்டும் அலறிண்டு 'காச்சு மூச்சு'ன்னு கத்தி ஒண்ணு மேலே ஒண்ணு பாஞ்சு பிறாண்டிண்டு... எங்க வீட்டு ஓட்டுக் கூரை மேல ஒரே ஹதம். எங்கேயோ ஒரு ஓடு வேறே சரிஞ்சு 'பொத்'துனு தரையிலே விழறது. திண்ணையிலே படுத்துண்டிருந்த தாத்தா, தடியை எடுத்துத் தரையிலே தட்டி 'சூசூ'ன்னு வெரட்டறார். ரெண்டும் ஒண்ணு பின்னாடி ஒண்ணு குதிச்சுத் தெருவிலே குறுக்கா ஓடி ஜெயா மாமி ஆத்துக் கூரையிலே ஏறினதை நிலா வௌிச்சத்திலே நான் நன்னாப் பார்த்தேன். அடுத்த நாள் அதை வேட்டையாடிடறதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன். ஜெயா மாமி ஆத்து வெந்நீருள்ளே ஒரு தட்டு நிறையப் பாலை வெச்சேன். ஒரு கதவை மட்டும் திறந்து வெச்சிண்டேன். ஜன்னல் கதவை மூடிட்டேன். மத்தியானம் சாப்பிடக்கூட ஆத்துக்குப் போகாமே காத்துண்டிருந்தேன்... கடைசிலே மத்தியானம் மூணு மணிக்குப் 'பூனைப் பெரியவாள்' வந்தா.... நான் கிணற்றடியிலிருந்து இவ்வளவையும் பார்த்துண்டே இருக்கேன்... மெதுவா அடிமேலே அடி வச்சுப் பூனை மாதிரி போனேன். 'அவா' பின்னம் பக்கம் மட்டுந்தான் தெரியறது. ஒரு தட்டுப் பாலையும் புகுந்து விளாசிண்டிருக்கா. 'டப்'னு கதவை மூடிட்டேன்... உள்ளே சிக்கிண்ட உடனே பாலை மறந்துட்டுக் கதவைப் பிறாண்டறதே! "மாமி... மாமி, ஓடி வாங்கோ, 'பெரியவா' இங்கே சிக்கிண்டா"ன்னு கத்தறேன். மாமி வந்து பாக்கறா... பூனை உள்ளேயே கத்திண்டிருக்கு. "என்னடா, வெந்நீர் உள்ளே பூனையெ வெச்சு மூடிட்டா நாம எப்படி உள்ளே போறது? நாம உள்ளே போறச்சே அது வௌியே போயிடாதோ!" "இப்பத்தான் முதல் கட்டம் முடிஞ்சிருக்கு மாமி. அதிலேயே ஜெயம். நீங்க உள்ளே போங்கோ... கடைசி கட்டத்திலே கூப்பிடறேன்." மாமி மனசிலே அந்தப் பெருச்சாளி வதம் ஞாபகம் வரது போல இருக்கு. "அம்பி வேண்டாண்டா. அதை ஒண்ணும் பண்ணிடாதே. ஜன்மத்துக்கும் மகா பாவம், வேண்டாம்." "நான் அதைக் கொல்லலை மாமி. கோணியிலே போட்டுக் கொண்டு போய் வெரட்டி விட்டுடறேன்..." "ஆமா... வெரட்டிட்டு நீ திரும்பி வரதுக்குள்ளே அது இங்கே வந்து நிக்கும்" - ஜெயா மாமி பரிகாசம் செய்து விட்டுப் போனாள். நான் மனத்திற்குள்ளே நெனச்சுண்டேன்; அதைத் 'திரும்பி வராத ஊரு'க்கு அனுப்பிச்சுட்டுத் தானே வரப் போறேன். அக்ரஹாரத்திலே அன்னிக்கு நான்தான் ஹீரோ! விளையாடும் போது என்னைச் சேர்த்துக்காத பையன்களெல்லாம் அன்னிக்கு என் பின்னாடி வரான்கள். நான் பூனையைக் கோணியிலே கட்டிண்டு போறேன். 'ஹோ'ன்னு கத்திண்டு என் பின்னாடி பையன்களெல்லாம் வரா. எங்கம்மா வாசல்லே வந்து நின்னுண்டு திட்டறா. "ஏ, கடன்காரா, கட்டேலே போறவனே.... அழிஞ்சி போகாதே; பூனை பாவத்தைக் கொட்டிக்காதே. ஒரு முடி விழுந்தாலும் எடைக்கு எடை தங்கம் தரணும்பா. உங்கப்பா வரட்டும்... சொல்லி உன்னைக் கொன்னு குழியை வெட்டி..." அதை நான் காதிலேயே வாங்கிக்கலை. கோணியைத் தூக்கிண்டு தெருக் கோடியிலே இருக்கற மண்டபத்திலே போய் உக்காந்துட்டோம் எல்லோரும். "கோணியிலேருந்து பூனையை எடுத்து ஒரு கயித்திலே கட்டிப் பிடிச்சுண்டா, வேடிக்கை காட்டலாம்டா"ன்னு உத்தண்டம் யோசனை சொல்றான். ஆனால், பூனைக்கு யார் கயிறு கட்டறது? "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அந்தக் கடா மீசைக்காரன் இப்போ வருவான். அவன் கிட்டே குடுத்தாப் போறும். அப்படியே கோணியோட வச்சு ஒரு 'சதக்'... ஆட்டம் குளோஸ்!" "அவன் கிட்டே நீதான் கேக்கணும்" என்று அவன் வருவதற்கு முன்னாடியே பயப்பட ஆரம்பிச்சுட்டான் சுந்தரம். இந்தப் பையன்களை வெச்சிண்டு இந்தக் காரியம் செய்யறது சரின்னு தோணலை; பயந்துடுவான்கள். "டேய்! நீங்கள்ளாம் ஆத்துக்குப் போங்கோ. அவன் வெட்டறதைப் பாத்து பயப்படுவேள். அப்புறம் உங்கம்மா என்னை வைவா!" பையன்களையெல்லாம் வெரட்டறேன். "அன்னிக்கு அங்கே ஆட்டை நறுக்கினானே... நீ காட்டினியே... நான் பயந்தேனா?... நான் இருக்கேண்டா." "ஆனா, ஒண்ணு... இந்த விஷயத்தை யாரும் ஆத்துலே போய் சொல்லப்படாது. சத்தியம் பண்ணுங்கோ!"ன்னு கேட்டேன். "சத்தியமா சொல்ல மாட்டோம்." - எல்லோரும் சேர்ந்து ஒரு கோரஸ். கடா மீசைக்காரனை நாங்களெல்லாம் எதிர்பார்த்துண்டிருக்கோம். கடைசியிலே சாயங்காலம் நாலு மணிக்கு ஆட்டு மேலே உட்கார்ந்து ஆள் சவாரி பண்ற மாதிரி தெருக் கோடியிலே அவன் வரது தெரியறது. பையன்களெல்லாம் மண்டபத்துலே ஆளுக்கொரு தூண் பின்னாலே ஒளிஞ்சிண்டான்க. "நாங்கெல்லாம் இங்கேயே இருக்கோம். நீ போய் கேளுடா"ன்னு என்னைத் தள்ளி விட்டான்கள். எனக்கென்ன பயம்? கடா மீசைக்காரன் கிட்டக்கே வந்துட்டான். நான் ஒரு குட் மார்னிங் வச்சேன். அவனும் எனக்கு ஒரு சலாம் போட்டானே! அவன் என் பக்கத்திலே வந்து இரண்டு காலையும் தரையிலே ஊணிண்டு சைக்கிள்லேருந்து எழுந்திருக்காமலே நிக்கறான். அம்மாடி... அவன் எவ்வளவு உசரம்! நான் அவனை அண்ணாந்து பார்த்துச் சொல்றேன்: "ஒரு சின்ன உதவி..." "அதென்ன கோணியிலே?" - அவன் குரல் கிருஷ்ண லீலாவிலே வர்ற கம்சன் குரல் மாதிரி இருந்தது. "பூனை... ரொம்ப லூட்டி அடிக்கறது. அதுக்காக அதை கொன்னுடறதுக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன்." "நீயேவா புடிச்சே?" - நான் பெருமையா தலையை ஆட்டறேன். அவன் மண்டபத்திலே ஒளிஞ்சிண்டிருக்கிற பையன்களையெல்லாம் ஒரு தரம் பார்க்கறான். என்னையும் பார்க்கறான். நான் அந்தக் காக்கிப் பைக்குள்ளே இருக்கற கத்தியோட பிடியையே பார்க்கறேன். "வெட்டறதுக்குக் கத்தி வேணுமா?"ன்னு அவன் என்னைப் பார்த்துக் கேட்கிறான். "ஊஹீம்.... நீங்கதானே ஆடெல்லாம் வெட்டுவேள். அதனாலே நீங்களே இதை வெட்டணும்." "ஓ!"ன்னு யோசிச்சிண்டே அந்தக் கத்தியை எடுக்கறான். பெரிய கத்தி! விளிம்பிலே கட்டை விரலை வெச்சு கூர் பார்த்துண்டே அவன் சொல்றான்: "பூனையை இதுவரைக்கும் நான் வெட்டினதே இல்லே... ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே... நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா?" "உவ்வே!... வெட்டிக் குழியிலே புதைச்சுடலாம்." "அப்பத்தான் பாவம் இல்லே. நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன்? எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடலேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப நீ பார்த்திருக்கிறியா?" "ஓ, பார்த்திருக்கேனே. நீங்க ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க. அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே." "மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம்பிக்கறப்ப ஆண்டவனைத் தொளுவறது இல்லையா? அதுதான். வெட்டறது விளையாட்டு இல்லே தம்பி. அதுதான் என் குடும்பத்துக்கெல்லாம் கஞ்சி ஊத்தற தொளில். அதுக்காவ உங்கிட்டே காசு கீசு கேக்கலே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை; அது பாவம்! என்னா சொல்றே?" "இன்னிக்கு மட்டும் ஒரு தடவை விளையாட்டுக்காக இந்தப் பூனையை வெட்டுங்களேன்." அவன் லேசாச் சிரிச்சு, என் மோவாயை நிமிர்த்தி, கையிலே ஏந்திண்டே சொன்னான்: (அவன் விரல் எல்லாம் பிசுபிசுன்னு இருந்தது.) "வெளையாட்டுக்குக் கொலை பண்ணச் சொல்றியா, த்சு... த்சு...! வெளையாட்டுக்கு வெட்ட ஆரம்பிச்சா, கத்தி பூனையோட நிக்காது தம்பி. நான் உன்னைக் கேக்கறேன்? விளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன?..." எனக்கு உடல் வெடவெடக்கிறது. "ம்... அந்தப் பூனை விஷமம் பண்றதே?" "நீ வெஷமம் பண்றது இல்லியா? பூனைன்னா வெஷமம் பண்ணும். வெஷமம் பண்ணாத்தான் பூனைன்னு பேரு. அதே மாதிரி நீயும் வெஷமம் பண்ணுவே. சின்னப் பிள்ளைங்கன்னா வெஷமம் பண்ணும்தான். பூனையும் வெஷமம் பண்ணட்டுமே! வீட்டிலே அடுப்பங்கரையைப் பூட்டி வெக்கச் சொல்லு"ன்னு சொல்லிண்டே என் கையிலே இருந்த கோணியைப் பிரிச்சு உதறினான். ஒரே ஜம்ப்! திரும்பிப் பார்க்காமே ஓடிட்டுது பூனை. பையன்களெல்லாம் சிரிச்சாங்க. கடா மீசைக்காரனும் சிரிச்சான். நானும் சிரிச்சேன். அன்னிக்கு ராத்திரியெல்லாம் நான் அழுதேன். பூனை தப்பிச்சுப் போயிடுத்தேன்னு இல்லே... நான் விளையாட்டா கொலை செஞ்ச வளையல் பூச்சி, மரவட்டை, தும்பி, ஓணான், பெருச்சாளி, பாவம்! அந்த நாய்... எல்லாத்தையும் நெனைச்சுண்டு அழுதேன்... நான் இப்ப அந்த அக்ரஹாரத்திலே இல்லை. இப்பவும் அந்த அக்ரஹாரத்திலே அந்த மாதிரி ஒரு பூனை இருக்கும்! இல்லையா? ----- #18. அக்கினிப் பிரவேசம் மத்தியானத்திலிருந்தே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது... மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸீக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற 'வேனு'ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் அந்த பஸ் ஸ்டாண்டு மரத்தடியில் கொட்டும் மழையில் பத்துப் பன்னிரண்டு குடைகளின் கீழே கட்டிப் பிடித்து நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்கிறது. நகரின் நடுவில் ஜனநடமாட்டம் அதிகமில்லாத, மரங்கள் அடர்ந்த தோட்டங்களின் மத்தியில், பங்களாக்கள் மட்டுமே உள்ள அந்தச் சாலையில் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், மேலாடை கொண்டு போர்த்தி மார்போடு இறுக அணைத்த புத்தகங்களும் மழையில் நனைந்து விடாமல் உயர்த்தி முழங்காலுக்கிடையே செருகிய புடவைக் கொசுவங்களோடு அந்த மாணவிகள் வெகுநேரமாய்த் தத்தம் பஸ்களை எதிர்நோக்கி நின்றிருக்கின்றனர். வீதியின் மறுகோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது. "ஹேய்... பஸ் இஸ் கம்மிங்!" என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலிக்கின்றன. வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த 'டீஸல் அநாகரிகம்' வந்து நிற்கிறது. "பை... பை..." "ஸீ யூ!" "சீரியோ!" கண்டக்டரின் விசில் சப்தம். அந்தக் கும்பலில் பாதியை எடுத்து விழுங்கிக் கொண்டு ஏப்பம் விடுவதுபோல் செருமி நகர்கிறது அந்த பஸ். பஸ் ஸ்டாண்டில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் மட்டுமே நின்றிருக்கின்றனர். மழைக் காலமாதலால் நேரத்தோடே பொழுது இருண்டு வருகிறது. வீதியில் மழைக் கோட்டணிந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரன் குறுக்கே வந்து அலட்சியமாக நின்று விட்ட ஓர் அநாதை மாட்டுக்காகத் தொண்டை கம்மிப் போன மணியை முழக்கிக் கொண்டு வேகமாய் வந்தும் அது ஒதுங்காததால் - அங்கே பெண்கள் இருப்பதையும் லட்சியப் படுத்தாது அசிங்கமாகத் திட்டிக்கொண்டே செல்கிறான். அவன் வெகு தூரம் சென்ற பிறகு அவனது வசை மொழியை ரசித்த பெண்களின் கும்பல் அதை நினைத்து நினைத்துச் சிரித்து அடங்குகிறது. அதன் பிறகு வெகு நேரம் வரை அந்தத் தெருவில் சுவாரசியம் ஏதுமில்லை. எரிச்சல் தரத்தக்க அமைதியில் மனம் சலித்துப் போன அவர்களின் கால்கள் ஈரத்தில் நின்று நின்று கடுக்க ஆரம்பித்து விட்டன. பஸ்ஸைக் காணோம்! அந்த அநாதை மாடு மட்டும் இன்னும் நடுத் தெருவிலேயே நின்றிருக்கிறது; அது காளை மாடு; கிழ மாடு; கொம்புகளில் ஒன்று அதன் நெற்றியின் மீது விழுந்து தொங்குகிறது. மழை நீர் முதுகின் மீது விழுந்து விழுந்து முத்து முத்தாய்த் தெறித்து, அதன் பழுப்பு நிற வயிற்றின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாய் வழிகிறது. அடிக்கடி அதன் உடலில் ஏதேனும் ஒரு பகுதி - அநேகமாக வலது தொடைக்கு மேல் பகுதி குளிரில் வெடவெடத்துச் சிலிர்த்துத் துடிக்கிறது. எவ்வளவு நாழி இந்தக் கிழட்டு மாட்டையே ரசித்துக் கொண்டிருப்பது; ஒரு பெருமூச்சுடன் அந்தக் கும்பலில் எல்லாவிதங்களிலும் விதி விலக்காய் நின்றிருந்த அந்தச் சிறுமி தலை நிமிர்ந்து பார்க்கிறாள். ...வீதியின் மறு கோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது. பஸ் வந்து நிற்பதற்காக இடம் தந்து ஒதுங்கி அந்த மாடு வீதியின் குறுக்காகச் சாவதானமாய் நடந்து மாணவிகள் நிற்கும் பிளாட்பாரத்தருகே நெருங்கித் தனக்கும் சிறுது இடம் கேட்பது போல் தயங்கி நிற்கிறது. "ஹேய்... இட் இஸ் மை பஸ்!..." அந்தக் கூட்டத்திலேயே வயதில் மூத்தவளான ஒருத்தி சின்னக் குழந்தை மாதிரிக் குதிக்கிறாள். "பை... பை..." "டாடா!" கும்பலை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு, பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில் ஒருத்தி அந்தச் சிறுமி. மற்றொருத்தி பெரியவள் - இன்றைய பெரும்பாலான சராசரி காலேஜ் ரகம். அவள் மட்டுமே குடை வைத்திருக்கிறாள். அவளது கருணையில் அந்தச் சிறுமி ஒதுங்கி நிற்கிறாள். சிறுமியைப் பார்த்தால் கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை. ஹைஸ்கூல் மாணவி போன்ற தோற்றம். அவளது தோற்றத்தில் இருந்தே அவள் வசதி படைத்த குடும்பப் பெண் அல்ல என்று சொல்லிவிட முடியும். ஒரு பச்சை நிறப் பாவாடை, கலர் மாட்சே இல்லாத... அவள் தாயாரின் புடவையில் கிழித்த - சாயம் போய் இன்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒருவகை சிவப்பு நிறத் தாவணி. கழுத்தில் நூலில் கோத்து 'பிரஸ் பட்டன்' வைத்துத் தைத்த ஒரு கருப்பு மணிமாலை; காதில் கிளாவர் வடிவத்தில் எண்ணெய் இறங்குவதற்காகவே கல் வைத்து இழைத்த - அதிலும் ஒரு கல்லைக் காணோம் - கம்மல்... 'இந்த முகத்திற்கு நகைகளே வேண்டாம்' என்பது போல் சுடர் விட்டுப் பிரகாசித்துப் புரண்டு புரண்டு மின்னுகின்ற கறை படியாத குழந்தைக் கண்கள்... அவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக, அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும், புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களூம் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக் கொண்டு, சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய் விடலாம் போலக் கூடத் தோன்றும்... "பஸ் வரலியே; மணி என்ன?" என்று குடை பிடித்துக் கொண்டிருப்பவளை அண்ணாந்து பார்த்துக் கேட்கிறாள் சிறுமி. "ஸிக்ஸ் ஆகப் போறதுடீ" என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துச் சலிப்புடன் கூறிய பின், "அதோ ஒரு பஸ் வரது. அது என் பஸ்ஸாக இருந்தால் நான் போயிடுவேன்" என்று குடையை மடக்கிக் கொள்கிறாள் பெரியவள். "ஓ எஸ்! மழையும் நின்னுருக்கு. எனக்கும் பஸ் வந்துடும். அஞ்சே முக்காலுக்கு டெர்மினஸ்லேருந்து ஒரு பஸ் புறப்படும். வரது என் பஸ்ஸானா நானும் போயிடுவேன்" என்று ஒப்பந்தம் செய்து கொள்வது போல் அவள் பேசுகையில் குரலே ஓர் இனிமையாகவும், அந்த மொழியே ஒரு மழலையாகவும், அவளே ஒரு குழந்தையாகவும் பெரியவளுக்குத் தோன்ற சிறுமியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி... "சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ" என்று தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொள்கிறாள். பஸ் வருகிறது... ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு பஸ்கள் வருகின்றன. முதலில் வந்த பஸ்ஸில் பெரியவள் ஏறிக் கொள்கிறாள். "பை... பை!" "தாங்க் யூ! என் பஸ்ஸீம் வந்துடுத்து" என்று கூவியவாறு பெரியவளை வழி அனுப்பிய சிறுமி, பின்னால் வந்த பஸ்ஸின் நம்பரைப் பார்த்து ஏமாற்றமடைகிறாள். அவள் முக மாற்றத்தைக் கண்டே இவள் நிற்பது இந்த பஸ்ஸீக்காக அல்ல என்று புரிந்து கொண்ட டிரைவர், பஸ் ஸ்டாண்டில் வேறு ஆட்களூம் இல்லாததால் பஸ்ஸை நிறுத்தாமலே ஓட்டிச் செல்லுகிறான். அந்தப் பெரிய சாலையின் ஆளரவமற்ற சூழ்நிலையில் அவள் மட்டும் தன்னந் தனியே நின்றிருக்கிறாள். அவளுக்குத் துணையாக அந்தக் கிழ மாடும் நிற்கிறது. தூரத்தில் - எதிரே காலேஜ் காம்பவுண்டுக்குள் எப்பொழுதேனும் யாரோ ஒருவர் நடமாடுவது தெரிகிறது. திடீரென ஒரு திரை விழுந்து கவிகிற மாதிரி இருள் வந்து படிகிறது. அதைத் தொடர்ந்து சீறி அடித்த ஒரு காற்றால் அந்தச் சாலையில் கவிந்திருந்த மரக் கிளைகளிலிருந்து படபடவென நீர்த் துளிகள் விழுகின்றன. அவள் மரத்தோடு ஒட்டி நின்று கொள்கிறாள். சிறிதே நின்றிருந்த மழை திடீரெனக் கடுமையாகப் பொழிய ஆரம்பிக்கிறது. குறுக்கே உள்ள சாலையைக் கடந்து மீண்டும் கல்லூரிக்குள்ளேயே ஓடிவிட அவள் சாலையின் இரண்டு பக்கமும் பார்க்கும்போது, அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வேகமாய் வந்து அவள் மேல் உரசுவது போல் சடக்கென நின்று, நின்ற வேகத்தில் முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது. அவள் அந்த அழகிய காரை, பின்னால் இருந்து முன்னேயுள்ள டிரைவர் ஸீட்வரை விழிகளை ஓட்டி ஓர் ஆச்சரியம் போலப் பார்க்கிறாள். அந்தக் காரை ஓட்டி வந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடது புறம் சரிந்து படுத்துப் பின் ஸீட்டின் கதவைத் திறக்கிறான். "ப்ளிஸ் கெட் இன்... ஐ கேன் டிராப் யூ அட் யுவர் பிளேஸ்" என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான். அவனது முகத்தைப் பார்த்த அவளூக்குக் காதோரமும் மூக்கு நுனியும் சிவந்து போகிறது; "நோ தாங்க்ஸ்! கொஞ்ச நேரம் கழிச்சு... மழை விட்டதும் பஸ்ஸிலேயே போயிடுவேன்..." "ஓ! இட் இஸ் ஆல் ரைட்... கெட் இன்" என்று அவன் அவசரப் படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை... அவள் ஒரு முறை தன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். மழைக்குப் புகலிடமாய் இருந்த அந்த மரத்தை ஒட்டிய வளைவை இப்போது அந்தக் கிழ மாடு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அவளுக்கு முன்னே அந்தக் காரின் கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. தனக்காகத் திறக்கப்பட்டிருக்கும் அந்தக் கதவின் வழியே மழை நீர் உள்ளே சாரலாய் வீசுவதைப் பார்த்து அவள் அந்தக் கதவை மூடும்போது, அவள் கையின் மீது அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுந்துகையில், அவள் பதறிப் போய்க் கையை எடுத்துக் கொள்கிறாள். அவன் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள். அவன் தான் என்னமாய் அழகொழுகச் சிரிக்கிறான். இப்போது அவனும் காரிலிருந்து வௌியே வந்து அவளோடு மழையில் நனைந்தவாறு நிற்கிறானே... "ம்... கெட் இன்." இப்போது அந்த அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லையே... அவள் உள்ளே ஏறியதும் அவன் கை அவளைச் சிறைப்பிடித்ததே போன்ற எக்களிப்பில் கதவை அடித்துச் சாத்துகிறது. அலையில் மிதப்பது போல் சாலையில் வழுக்கிக் கொண்டு அந்தக் கார் விரைகிறது. அவளது விழிகள் காருக்குள் அலைகின்றன. காரின் உள்ளே கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அந்த வௌிறிய நீல நிறச் சூழல் கனவு மாதிரி மயக்குகிறது. இத்தனை நேரமாய் மழையின் குளிரில் நின்றிருந்த உடம்புக்கு, காருக்குள் நிலவிய வெப்பம் இதமாக இருக்கிறது. இந்தக் கார் தரையில் ஓடுகிற மாதிரியே தெரியவில்லை. பூமிக்கு ஓர் அடி உயரத்தில் நீந்துவது போல் இருக்கிறது. 'ஸீட்டெல்லாம் எவ்வளவு அகலமா இருக்கு! தாராளமா ஒருத்தர் படுத்துக்கலாம்' என்ற நினைப்பு வந்ததும் தான் ஒரு மூலையில் மார்போடு தழுவிய புத்தகக் கட்டுடன் ஒடுங்கி உட்கார்ந்திருப்பது அவளூக்கு ரொம்ப அநாகரிகமாகத் தோன்றுகிறது. புத்தக அடுக்கையும் அந்தச் சிறிய டிபன் பாக்சையும் ஸீட்டிலேயே ஒரு பக்கம் வைத்த பின்னர் நன்றாகவே நகர்ந்து கம்பீரமாக உட்கார்ந்து கொள்கிறாள். "இந்தக் காரே ஒரு வீடு மாதிரி இருக்கு. இப்படி ஒரு கார் இருந்தா வீடே வேண்டாம். இவனுக்கும் - ஐயையோ - இவருக்கும் ஒரு வீடு இருக்கும் இல்லையா?... காரே இப்படி இருந்தா இந்தக் காரின் சொந்தக்காரரோட வீடு எப்படி இருக்கும்! பெரிசா இருக்கும்! அரண்மனை மாதிரி இருக்கும்... அங்கே யாரெல்லாமோ இருப்பா. இவர் யாருன்னே எனக்குத் தெரியாதே?... ஹை, இது என்ன நடுவிலே?... ரெண்டு ஸீட்டுக்கும் மத்தியிலே இழுத்தா மேஜை மாதிரி வரதே! இதுமேலே புஸ்தகத்தை வச்சுண்டு படிக்கலாம். எழுதலாம் - இல்லேன்னா இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் தலையை வச்சுண்டு 'ஜம்'னு படுத்துக்கலாம். இந்தச் சின்னவிளக்கு எவ்வளவு அழகா இருக்கு, தாமரை மொட்டு மாதிரி இருக்கு. ம்ஹீம். அல்லி மொட்டு மாதிரி! இதை எரிய விட்டுப் பார்க்கலாமா? சீ! இவர் கோபித்துக் கொண்டார்னா!" "அதுக்குக் கீழே இருக்கு பாரு ஸ்விட்ச்" அவன் காரை ஓட்டியவாறே முன்புறமிருந்த சிறிய கண்ணாடியில் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு கூறுகிறான். அவள் அந்த ஸ்விட்சைப் போட்டு அந்த விளக்கு எரிகிற அழகை ரசித்துப் பார்க்கிறாள். பின்னர் 'பவரை வேஸ்ட் பண்ணப்படாது' என்ற சிக்கன உணர்வோடு விளக்கை நிறுத்துகிறாள். பிறகு தன்னையே ஒரு முறை பார்த்துத் தலையிலிருந்து விழுகின்ற நீரை இரண்டு கைகளினாலும் வழித்து விட்டுக் கொள்கிறாள். 'ஹம்! இன்னிக்கின்னு போய் இந்த தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுண்டு வந்திருக்கேனே' என்று மனத்திற்குள் சலித்துக் கொண்டே, தாவணியின் தலைப்பைப் பிழிந்து கொண்டிருக்கையில் - அவன் இடது கையால் ஸ்டியரிங்கிற்குப் பக்கத்தில் இருந்த பெட்டி போன்ற அறையின் கதவைத் திறந்து - 'டப்' என்ற சப்தத்தில் அவள் தலை நிமிர்ந்து பார்க்கிறாள் - 'அட! கதவைத் திறந்த உடனே உள்ளே இருந்து ஒரு சிவப்பு பல்ப் எரியறதே'- ஒரு சிறிய டர்க்கி டவலை எடுத்துப் பின்னால் அவளிடம் நீட்டுகிறான். "தாங்ஸ்" - அந்த டவலை வாங்கித் தலையையும் முழங்கையையும் துடைத்துக் கொண்டு முகத்தைத் துடைக்கையில் - 'அப்பா, என்ன வாசனை!' - சுகமாக முகத்தை அதில் அழுந்தப் புதைத்துக் கொள்கிறாள். ஒரு திருப்பத்தில் அந்தக் கார் வளைந்து திரும்புகையில் அவள், ஒரு பக்கம் 'அம்மா'' என்று கூவிச் சரிய ஸீட்டின் மீதிருந்த புத்தகங்களூம் மற்றொரு பக்கம் சரிந்து, அந்த வட்ட வடிவமான சின்னஞ்சிறு எவர்சில்வர் டிபன் பாக்ஸீம் ஒரு பக்கம் உருளுகிறது. "ஸாரி" என்று சிரித்தவாறே அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தபின் காரை மெதுவாக ஓட்டுகிறான் அவன். தான் பயந்துபோய் அலறியதற்காக வெட்கத்துடன் சிரித்தவாறே இறைந்து கிடக்கும் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு எழுந்து அமர்கிறாள் அவள். ஜன்னல் கண்ணாடியினூடே வௌியே பார்க்கையில் கண்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. கண்ணாடியின் மீது புகை படர்ந்ததுபோல் படிந்திருந்த நீர்த் திவலையை அவள் தனது தாவணியின் தலைப்பால் துடைத்துவிட்டு வௌியே பார்க்கிறாள். தெருவெங்கும் விளக்குகள் எரிகின்றன. பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட கடைகளின் நிழல்கள் தெருவிலுள்ள மழை நீரில் பிரதிபலித்துக் கண்களைப் பறிக்கின்றன. பூலோகத்துக்குக் கீழே இன்னொரு உலகம் இருக்கிறதாமே, அது மாதிரி தெரிகிறது...! "இதென்ன - கார் இந்தத் தெருவில் போகிறது?" "ஓ! எங்க வீடு அங்கே இருக்கு" என்று அவள் உதடுகள் மெதுவாக முனகி அசைகின்றன. "இருக்கட்டுமே, யார் இல்லேன்னா" என்று அவனும் முனகிக்கொண்டே அவளைப் பார்த்துச் சிரிக்கிறான். "என்னடி இது வம்பாப் போச்சு" என்று அவள் தன் கைகளைப் பிசைந்து கொண்ட போதிலும், அவன் தன்னைப் பார்க்கும்போது அவனது திருப்திக்காகப் புன்னகை பூக்கிறாள். கார் போய்க்கொண்டே இருக்கிறது. நகரத்தின் ஜன நடமாட்டம் மிகுந்த பிரதான பஜாரைக் கடந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் நிறைந்த அகலமான சாலைகளைத் தாண்டி, அழகிய பூங்காக்களும் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, நகரத்தின் சந்தடியே அடங்கிப்போன ஏதோ ஒரு டிரங்க் ரோடில் கார் போய்க் கொண்டிருக்கிறது. இந்த மழையில் இப்படி ஒரு காரில் பிரயாணம் செய்து கொண்டிருப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவமானபடியினால் அதில் ஒரு குதூகலம் இருந்த போதிலும், அந்தக் காரணம் பற்றியே அடிக்கடி ஏதோ ஒரு வகை பீதி உணர்ச்சி அவளது அடி வயிற்றில் மூண்டு எழுந்து மார்பில் என்னவோ செய்து கொண்டிருக்கிறது. சின்னக் குழந்தை மாதிரி அடிக்கடி வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனை நச்சரிக்கவும் பயமாயிருக்கிறது. தன்னை அந்த பஸ் ஸ்டாண்டில் தனிமையில் விட்டுவிட்டுப் போனாளே, அவளைப் பற்றிய நினைவும், அவள் தன் கன்னத்தைக் கிள்ளியவாறு சொல்லிவிட்டுப் போனாளே அந்த வார்த்தைகளூம் இப்போது அவள் நினைவுக்கு வருகின்றன: "சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ." 'நான் இப்ப அசடாயிட்டேனா? இப்படி முன்பின் தெரியாத ஒருத்தரோட கார்லே ஏறிண்டு தனியாகப் போறது தப்பில்லையோ?... இவரைப் பார்த்தால் கெட்டவர் மாதிரித் தெரியலியே? என்ன இருந்தாலும் நான் வந்திருக்கக் கூடாது - இப்ப என்ன பண்றது? எனக்கு அழுகை வரதே. சீ! அழக் கூடாது... அழுதா இவர் கோபித்துக் கொண்டு 'அசடே! இங்கேயே கிட'ன்னு இறக்கி விட்டுட்டுப் போயிட்டா? எப்படி வீட்டுக்குப் போறது? எனக்கு வழியே தெரியாதே... நாளைக்கு ஜீவாலஜி ரெக்கார்ட் வேற ஸப்மிட் பண்ணணுமே! வேலை நிறைய இருக்கு.' அவளது பார்வை எதிர்ப்புறக் கண்ணாடியின் மீது கிடந்து அவளைப்போல் தத்தளித்துக் கொண்டிருக்கும் 'வைய்ப்பரை'யே வெறித்துக் கொண்டிருக்கிறது. கடைசியில் தைரியமாக அவளை அறியாமலேயே அந்த வார்த்தைகளை அவள் கேட்டு விடுகிறாள். "இப்ப நாம எங்கே போறோம்" - அவளது படபடப்பான கேள்விக்கு அவன் ரொம்ப சாதாரணமாகப் பதில் சொல்கிறான். "எங்கேயுமில்லை; சும்மா ஒரு டிரைவ்..." "நேரம் ஆயிடுத்தே - வீட்டிலே அம்மா தேடுவா..." "ஓ எஸ் திரும்பிடலாம்" கார் திரும்புகிறது. டிரங்க் ரோடை விட்டு விலகிப் பாலைவனம் போன்ற ஒரு திடலுக்குள் பிரவேசித்து, அதிலும் வெகு தூரம் சென்று அதன் மத்தியில் நிற்கிறது கார். கண்ணுக்கெட்டிய தூரம் இருளும் மழையும் சேர்ந்து அரண் அமைத்திருக்கின்றன. அந்த அத்துவானக் காட்டில், தவளைகளின் கூக்குரல் பேரோலமாகக் கேட்கிறது. மழையும் காற்றும் முன்னைவிட மூர்க்கமாய்ச் சீறி விளையாடுகின்றன. காருக்குள்ளேயே ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை. திடீரென்று கார் நின்றுவிட்டதைக் கண்டு அவள் பயந்த குரலில் கேட்கிறாள்: "ஏன் கார் நின்னுடுத்து? பிரேக் டௌனா?" அவன் அதற்குப் பதில் சொல்லாமல் இடிஇடிப்பது போல் சிரிக்கிறான். அவள் முகத்தைப் பார்ப்பதற்காகக் காரினுள் இருந்த ரேடியோவின் பொத்தானை அமுக்குகிறான். ரேடியோவில் இருந்து முதலில் லேசான வௌிச்சமும் அதைத் தொடர்ந்து இசையும் பிறக்கிறது. அந்த மங்கிய வௌிச்சத்தில் அவள் அவனை என்னவோ கேட்பதுபோல் புருவங்களை நெறித்துப் பார்க்கிறாள். அவனோ ஒரு புன்னகையால் அவளிடம் யாசிப்பது போல் எதற்கோ கெஞ்சுகிறான். அப்போது ரேடியோவிலிருந்து ஒரு 'ட்ரம்ப்பட்'டின் எக்காள ஒலி நீண்டு விம்மி விம்மி வெறி மிகுந்து எழுந்து முழங்குகிறது. அதைத் தொடர்ந்து படபடவென்று நாடி துடிப்பதுபோல் அமுத்தலாக நடுங்கி அதிர்கின்ற காங்கோ 'ட்ரம்'களின் தாளம்... அவன் விரல்களால் சொடுக்குப் போட்டு அந்த இசையின் கதிக்கேற்பக் கழுத்தை வெட்டி இழுத்து ரசித்தவாறே அவள் பக்கம் திரும்பி 'உனக்குப் பிடிக்கிறதா' என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவள் இதழ்கள் பிரியாத புன்னகையால் 'ஆம்' என்று சொல்லித் தலை அசைக்கிறாள். ரேடியோவுக்கு அருகே இருந்த பெட்டியைத் திறந்து இரண்டு 'காட்பரீஸ்' சாக்லெட்டுகளை எடுத்து ஒன்றை அவளிடம் தருகிறான் அவன். பின்னர் அந்த சாக்லெட்டின் மேல் சுற்றிய காகிதத்தை முழுக்கவும் பிரிக்காமல் ஓர் ஓரமாய்த் திறந்து ஒவ்வொரு துண்டாகக் கடித்து மென்றவாறு கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஒரு கையால் கார் ஸீட்டின் பின்புறம் ரேடியோவிலிருந்து ஒலிக்கும் இசைக்கெற்பத் தாளமிட்டுக் கொண்டு ஹாய்யாக உட்கார்ந்திருக்கும் அவனை, அவள் தீர்க்கமாக அளப்பது மாதிரிப் பார்க்கிறாள். அவன் அழகாகத்தான் இருக்கிறான். உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, 'ஒட்டு உசரமாய்'. அந்த மங்கிய ஒளியில் அவனது நிறமே ஒரு பிரகாசமாய்த் திகழ்வதைப் பார்க்கையில், ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. பின்னாலிருந்து பார்க்கையில், அந்தக் கோணத்தில் ஓரளவே தெரியும் அவனது இடது கண்ணின் விழிக்கோணம் ஒளியுமிழ்ந்து பளபளக்கிறது. எவ்வளவு புயலடித்தாலும் கலைய முடியாத குறுகத் தரித்த கிராப்புச் சிகையும் காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும் கூட அந்த மங்கிய வௌிச்சத்தில் மினுமினுக்கின்றன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது அந்த ஒளி வீசும் முகத்தில் சின்னதாக ஒரு மீசை இருந்தால் நன்றாயிருக்குமே என்று ஒரு விநாடி தோன்றுகிறது. ஓ! அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது! அவன் உட்கார்ந்திருக்கும் ஸீட்டின் மேல் நீண்டு கிடக்கும் அவனது இடது கரத்தில் கனத்த தங்கச் சங்கிலியில் பிணிக்கப்பட்ட கடிகாரத்தில் ஏழு மணி ஆவது மின்னி மின்னித் தெரிகிறது. அவனது நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன. அவனது புறங்கையில் மொசு மொசுவென்று அடர்ந்திருக்கும் இள மயிர் குளிர் காற்றில் சிலிர்த்தெழுகிறது. "ஐயையோ! மணி ஏழாயிடுத்தே!" சாக்லெட்டைத் தின்றவாறு அமைதியாய் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள், திடீரென்று வாய்விட்டுக் கூவிய குரலைக் கேட்டு அவனும் ஒரு முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான். காரின் முன்புறக் கதவை அவன் லேசாகத் திறந்து பார்க்கும்போது தான், மழையின் ஓலம் பேரோசையாகக் கேட்கிறது. அவன் ஒரு நொடியில் கதவைத் திறந்து கீழே இறங்கி விட்டான். "எங்கே?" என்று அவள் அவனிடம் பதற்றத்தோடு கேட்டது கதவை மூடிய பிறகே வௌியே நின்றிருக்கும் அவனது செவிகளில் அமுங்கி ஒலிக்கிறது. "எங்கே போறீங்க?" "எங்கேயும் போகலே... இங்கேதான் வரேன்" என்று ஆங்கிலத்தில் கூறியவாறு அந்தச் சிறுபோதில் தெப்பலாய் நனைந்துவிட்ட அவன் பின் ஸீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறான். அவள் அருகே அமர்ந்து, ஸீட்டின் மீது கிடந்த - சற்று முன் ஈரத்தைத் துடைத்துக் கொள்வதற்காக அவளுக்கு அவன் தந்த டவலை எடுத்து முகத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டபின், கையிலிருந்த சாக்லெட் காகிதத்தைக் கசக்கி எறிகிறான். அவள் இன்னும் இந்த சாக்லெட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுக்கிறான். அதனுள் அடுக்காக இருக்கும் மிட்டாய் போன்ற ஒன்றை எடுத்து வாயிலிட்டுக் கொண்டு அவளிடம் ஒன்றைத் தருகிறான். "என்ன அது?" "சூயிங்கம்." "ஐயே, எனக்கு வேண்டாம்!" "ட்ரை... யூ வில் லைக் இட்." அவள் கையிலிருந்த சாக்லெட்டை அவசர அவசரமாகத் தின்றுவிட்டு அவன் தருவதை மறுக்க மனமின்றி வாங்கக் கை நீட்டுகிறாள். "நோ!" - அவள் கையில் தர மறுத்து அவள் முகத்தருகே ஏந்தி அவள் உதட்டின்மீது அதைப் பொருத்தி லேசாக நெருடுகிறான். அவளூக்குத் தலை பற்றி எரிவதுபோல் உடம்பெல்லாம் சுகமான ஒரு வெப்பம் காந்துகிறது. சற்றே பின்னால் விலகி, அவன் கையிலிருந்ததைத் தன் கையிலேயே வாங்கிக் கொள்கிறான்: "தாங்க் யூ!" அவனது இரண்டு விழிகளும் அவளது விழிகளில் செருகி இருக்கின்றன. அவனது கண்களை ஏறிட்டுப் பார்க்க இயலாத கூச்சத்தால் அவளது பலஹீனமான பார்வை அடிக்கடி தாழ்ந்து தாழ்ந்து தவிக்கிறது. அவளது கவிழ்ந்த பார்வையில் அவனது முழந்தாள் இரண்டும் அந்த ஸீட்டில் மெள்ள மெள்ள நகர்ந்து தன்னை நெருங்கி வருவது தெரிகிறது. அவள் கண்ணாடி வழியே பார்க்கிறாள். வௌியே மழையும் காற்றும் அந்த இருளில் மூர்க்கமாய்ச் சீறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவள் அந்தக் கதவோடு ஒண்டி உட்கார்ந்து கொள்கிறாள். அவனும் மார்பின் மீது கைகளைக் கட்டியவாறு மிகவும் கௌரவமாய் விலகி அமர்ந்து, அவள் உள்ளத்தைத் துருவி அறியும் ஆர்வத்தோடு அவளைப் பயில்கிறான். "டூ யூ லைக் திஸ் கார்?" "- இந்தக் கார் உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவனது குரல் மந்த்ரஸ்தாயில் கரகரத்து அந்தரங்கமய் அவளது செவி வழி புகுந்து அவளுள் எதையோ சலனப்படுத்துகிறது. தனது சலனத்தை வௌிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்னகையுடன் சமாளித்து அவளும் பதில் சொல்கிறாள்: "ஓ! இட் இஸ் நைஸ்." அவன் ஆழ்ந்த சிந்தனையோடு பெருமூச்செறிந்து தலை குனிந்தவாறு ஆங்கிலத்தில் சொல்கிறான்: "உனக்குத் தெரியுமா? இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாலேயே அலைஞ்சிண்டிருக்கு - டூ யூ நோ தட்?" என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய் மறந்து போகிறாள். "ரியலி...?" "ரியலி!" அவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது. அவனது ரகசியக் குரல் அவளது இருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது. "டூ யூ லைக் மீ?" 'என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?' "ம்" விலக இடமில்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான். வௌியே மழை பெய்து கொண்டிருக்கிறது. ரேடியோவிலிருந்து அந்த 'ட்ரம்ப்பட்'டின் இசை புதிய புதிய லயவிந்நியாசங்களைப் பொழிந்து கொண்டிருக்கிறது. "ரொம்ப நல்லா இருக்கு இல்லே?" - இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான். "நல்லா இருக்கு... ஆனா பயம்மா இருக்கே..." "பயமா? எதுக்கு... எதுக்குப் பயப்படணும்?" அவளைத் தேற்றுகின்ற தோரணையில் தோளைப் பற்றி அவன் குலுக்கியபோது, தன் உடம்பில் இருந்து நயமிக்க பெண்மையே அந்தக் குலுக்கலில் உதிர்ந்தது போன்று அவள் நிலை குலைந்து போகிறாள்: "எனக்குப் பயம்மா இருக்கு; எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு..." "எதுக்கு இந்த ஸர்டிபிகேட் எல்லாம்?" என்று தன்னுள் முனகியவாறே இந்த முறை பின்வாங்கப் போவதில்லை என்ற தீர்மானத்தோடு மீண்டும் அவளை அவன் நெருங்கி வருகிறான். "மே ஐ கிஸ் யூ?" அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்துத் தேகம் பதறுகிறது. திடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டதைப் போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, "ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி... அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப் போகிறது. அவனைப் பழி தீர்ப்பதுபோல் இப்போது அவளது கரங்கள் இவனது கழுத்தை இறுகப் பின்னி இணைந்திருக்கின்றன. வௌியே... வானம் கிழிந்து அறுபட்டது! மின்னல்கள் சிதறித் தெறித்தன! இடியோசை முழங்கி வெடித்தது! ஆ! அந்த இடி எங்கோ விழுந்திருக்க வேண்டும். "நான் வீட்டுக்குப் போகணும், ஐயோ! எங்க அம்மா தேடுவா..." காரின் கதவைத் திறந்து கொண்டு பின் ஸீட்டிலிருந்து அவன் இறங்குகிறான். அந்த மைதானத்தில் குழம்பி இருந்த சேற்றில் அவனது ஷீஸ் அணிந்த பாதம் புதைகிறது. அவன் காலை உயர்த்தியபோது 'சளக்' என்று தெறித்த சேறு, காரின் மீது கறையாய்ப் படிகிறது. திறந்த கதவின் வழியே இரண்டொரு துளிகள் காருக்குள் இருந்த அவள் மீதும் தெறிக்கின்றன. உடலிலோ மனத்திலோ உறுத்துகின்ற வேதனையால் தன்னை மீறிப் பொங்கிப் பொங்கி பிரவகிக்கும் கண்ணீரை அடக்க முடியாமல் அவனறியாதவாறு அவள் மௌனமாக அழுது கொண்டிருக்கிறாள். முன்புறக் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்த அவன் சேறு படிந்த காலணியைக் கழற்றி எறிகிறான். ரேடியோவுக்கருகில் உள்ள அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, மூசு மூசென்று புகை விட்டவாறு 'சூயிங்கம்'மை மென்று கொண்டிருக்கிறான். இந்த விநாடியே தான் வீட்டில் இருக்க வேண்டும் போலவும், அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு 'ஹோ' வென்று கதறி அழுது இந்தக் கொடுமைக்கு ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டும் போலவும் அவள் உள்ளே ஓர் அவசரம் மிகுந்து நெஞ்சும் நினைவும் உடலும் உணர்ச்சியும் நடுநடுங்குகின்றன. அவனோ சாவதானமாக சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அதைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது. அந்தக் காருக்குள்ளே இருப்பது ஏதோ பாறைகளூக்கு இடையேயுள்ள ஒரு குகையில் அகப்பட்டது போல் ஒரு சமயம் பயமாகவும் மறு சமயம் அருவருப்பாகவும் - அந்த சிகரெட்டின் நெடி வேறு வயிற்றைக் குமட்ட - அந்த மைதானத்தில் உள்ள சேறு முழுவதும் அவள் மீது வாரிச் சொரியப்பட்டது போல் அவள் உடலெல்லாம் பிசுபிசுக்கிறதே... நரி ஊளைமாதிரி ரேடியோவிலிருந்து அந்த 'ட்ரம்ப்பட்'டின் ஓசை உடலையே இரு கூறாகப் பிளப்பது போல் வெறியேறிப் பிளிறுகிறதே... அவள் தன்னை மீறிய ஓர் ஆத்திரத்தில் கிறீச்சிட்டு அழுகைக் குரலில் அலறுகிறாள். "என்னை வீட்டிலே கொண்டுபோய் விடப்போறீங்களா, இல்லையா?" அவனது கை "டப்" என்று ரேடியோவை நிறுத்துகிறது. "டோண்ட் ஷவ்ட் லைக் தட்!" அவன் எரிச்சல் மிகுந்த குரலில் அவளை எச்சரிக்கிறான். "கத்தாதே!" அவனை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிப் பரிதாபமாக அழுதவாறு அவள் கெஞ்சுகிறாள். "எங்க அம்மா தேடுவா; என்னைக் கொண்டுபோய் வீட்டிலே விட்டுட்டா உங்களூக்குக் கோடிப் புண்ணியம்" என்று வௌியே கூறினாலும் மனதிற்குள் "என் புத்தியைச் செருப்பால் அடிக்கணும். நான் இப்படி வந்திருக்கவே கூடாது. ஐயோ! என்னென்னவோ ஆயிடுத்தே" என்ற புலம்பலும் எங்காவது தலையை மோதி உடைத்துக் கொண்டால் தேவலை என்ற ஆத்திரமும் மூண்டு தகிக்கப் பற்களை நறநறவென்று கடிக்கிறாள். அந்த விநாடியில் அவள் தோற்றத்தைக் கண்டு அவன் நடுங்குகிறான். "ப்ளீஸ்... டோண்ட் க்ரியேட் ஸீன்ஸ்" என்று அவளைக் கெஞ்சி வேண்டிக் கொண்டு, சலிப்போடு காரைத் திருப்புகிறான்... அந்த இருண்ட சாலையில் கண்களைக் கூசவைக்கும் ஓளியை வாரி இறைத்தவாறு உறுமி விரைந்து கொண்டிருக்கிறது கார். "சீ! என்ன கஷ்டம் இது! பிடிக்கலேன்னா அப்பவே சொல்லி இருக்கலாமே. ஒரு அருமையான சாயங்காலப் பொழுது பாழாகி விட்டது. பாவம்! இதெல்லாம் காலேஜீலே படிச்சு என்ன பண்ணப் போறதோ? இன்னும் கூட அழறாளே!" அவன் அவள் பக்கம் திரும்பி அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான். "ஐ ஆம் ஸாரி... உனது உணர்ச்சிகளை நான் புண்படுத்தி இருந்தால், தயவுசெய்து மன்னித்துக் கொள்." ...அவளை அவளது இடத்தில் இறக்கி விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியையே மறந்து நிம்மதி காண வேண்டும் என்கிற அவசரத்தில் அவன் காரை அதிவேகமாக ஓட்டுகிறான். இன்னும் மழை பெய்துகொண்டு இருக்கிறது. சந்தடியே இல்லாத ட்ரங்க் ரோட்டைக் கடந்து, அழகிய பங்களாக்களூம் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் மிகுந்த அந்தப் பிரதான பஜாரில் போய்க்கொண்டிருந்த கார் ஒரு குறுக்குத் தெருவில் திரும்பி அவளது வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. 'இங்கே நிறுத்துங்கள். நான் இறங்கிக் கொள்ளுகிறேன்' என்று அவளாகச் சொல்லுவாள் என்று அவளது தெரு நெருங்க நெருங்க அவன் யோசித்துக் காரை மெதுவாக ஓட்டுகிறான். அவள் அந்த அளவுக்குக்கூட விவரம் தெரியாத பேதை என்பதைப் புரிந்துகொண்டு அவனே ஓரிடத்தில் காரை நிறுத்திக் கூறுகிறான். "வீடு வரைக்கும் கொண்டு வந்து நான் விடக்கூடாது. அதனாலே நீ இங்கேயே இறங்கிப் போயிடு... ம்" அவளைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாயும் வருத்தமாயும் இருக்கிறது. ஏதோ குற்ற உணர்வில், அல்லது கடன் பட்டுவிட்டது போன்ற நெஞ்சின் உறுத்தலில் அவனது கண்கள் கலங்கி விவஸ்தையற்ற கண்ணீர் பளபளக்கிறது. அவனே இறங்கி வந்து ஒரு பணியாள் மாதிரி அவளுக்காகக் காரின் கதவைத் திறந்து கொண்டு மழைத் தூறலில் நின்று கொண்டிருக்கிறான். உணர்ச்சிகள் மரத்துப்போன நிலையில் அவள் தனது புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு கீழே விழுந்திருந்த அந்தச் சிறிய வட்ட வடிவமான எவர்சில்வர் டிபன் பாக்ஸைத் தேடி எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கி அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறாள். அந்தச் சிறிய தெருவில், மழை இரவானதால் ஜன நடமாட்டமே அற்றிருக்கிறது. தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்கின் மங்கிய வௌிச்சத்தில் தன் அருகே குள்ளமாய்க் குழந்தை மாதிரி நின்றிருக்கும் அவளைப் பார்க்கும்போது அவன் தன்னுள்ளே தன்னையே நொந்து கொள்கிறான். தனக்கிருக்கும் அளவிறந்த சுதந்திரமே தன்னை எவ்வளவு கேவலமான அடிமையாக்கி இருக்கிறது என்பதை அவன் எண்ணிப் பார்க்கிறான். "ஆம். அடிமை! - உணர்ச்சிகளின் அடிமை!" என்று அவன் உள்ளம் உணருகிறது. அவன் அவளிடம் ரகஸியம் போல் கூறுகிறான்: "ஐ ஆம் ஸாரி!" அவள் அவனை முகம் நிமிர்த்திப் பார்க்கிறாள்... ஓ! அந்தப் பார்வை! அவளிடம் என்னவோ கேட்க அவன் உதடுகள் துடிக்கின்றன. "என்ன..." என்ற ஒரே வார்த்தையோடு அவனது குரல் கம்மி அடைத்துப் போகிறது. "ஒண்ணுமில்லே" என்று கூறி அவள் நகர்கிறாள். அவளுக்கு முன்னால் அந்தக் கார் விரைந்து செல்கையில் காரின் பின்னால் உள்ள அந்தச் சிவப்பு வௌிச்சம் ஓடி ஓடி இருளில் கலந்து மறைகிறது. கூடத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கு அணைந்து போயிருந்தது. சமையலறையில் கை வேலையாக இருந்த அம்மா, கூடம் இருண்டு கிடப்பதைப் பார்த்து அணைந்த விளக்கை எடுத்துக்கொண்டு போய் ஏற்றிக் கொண்டு வந்து மாட்டியபோது, கூடத்துக் கடிகாரத்தில் மணி ஏழரை ஆகிவிட்டதைக் கண்டு திடீரென்று மனசில் என்னவோ பதைக்கத் திரும்பிப் பார்த்தபோது, அவள் படியேறிக் கொண்டிருந்தாள். மழையில் நனைந்து தலை ஒரு கோலம் துணி ஒரு கோலமாய் வருகின்ற மகளைப் பார்த்ததுமே வயிற்றில் என்னமோ செய்தது அவளுக்கு: "என்னடி இது, அலங்கோலம்?" அவள் ஒரு சிலை அசைவது மாதிரிக் கூடத்துக்கு வந்தாள்; அரிக்கேன் விளக்கு வௌிச்சத்தில் ஒரு சிலை மாதிரியே அசைவற்று நின்றாள். "அம்மா!" என்று குமுறி வந்த அழுகையைத் தாயின் தோள்மீது வாய் புதைத்து அடைத்துக் கொண்டு அவளை இறுகத் தழுவியவாறே குலுங்கிக் குலுங்கி அழுதாள்! அம்மாவின் மனசுக்குள், ஏதோ விபரீதம் நடந்து விட்டது புரிவது போலவும் புரியாமலும் கிடந்து நெருடிற்று. "என்னடி, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு நேரம்? அழாமல் சொல்லு" தன்மீது விழுந்து தழுவிக்கொண்டு புழுமாதிரித் துடிக்கும் மகளின் வேதனைக்குக் காரணம் தெரியாவிட்டாலும், அது வேதனை என்ற அளவில் உணர்ந்து, அந்த வேதனைக்குத் தானும் ஆட்பட்டு மனம் கலங்கி அழுது முந்தானையோடு கண்களைத் துடைத்தவாறு மகளின் முதுகில் ஆதரவோடு தட்டிக் கொடுத்தாள்: "ஏன்டி, ஏன் இப்படி அழறே? சொல்லு" தாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் தோளில் முகம் புதைத்தவாறு அவள் காதில் மட்டும் விழுகிற மாதிரி சொன்னாள். அழுகை அடங்கி மெதுவாக ஒலித்த குரலில் அவள் சொல்ல ஆரம்பித்த உடனேயே தன்மீது ஒட்டிக் கிடந்த அவளைப் பிரித்து நிறுத்தி, விலகி நின்று சபிக்கப்பட்ட ஒரு நீசப் பெண்ணைப் பார்ப்பதுபோல் அருவருத்து நின்றாள் அம்மா. அந்தப் பேதைப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். "மழை கொட்டுக் கொட்டுனு கொட்டித்து! பஸ்ஸே வரல்லே. அதனால்தான் காரிலே ஏறினேன் - அப்புறம் எங்கேயோ காடுமாதிரி ஒரு இடம்... மனுஷாளே இல்லை... ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா எனக்கோ வழியும் தெரியாது... நான் என்ன பண்ணுவேன்? அப்புறம் வந்து வந்து... ஐயோ! அம்மா... அவன் என்னெ..." அவள் சொல்லி முடிப்பதற்குள் பார்வையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த அறை அவளது காதிலோ, நெற்றிப் பொருத்திலோ எங்கேயோ வசமாய் விழுந்தது. கூடத்து மூலையில் அவள் சுருண்டு விழ, கையில் இருந்த புத்தகங்கள் நாற்புறமும் சிதறி டிபன் பாக்ஸ் கீழே விழுந்து கணகணத்து உருண்டது. "அடிப்பாவி! என் தலையிலே நெருப்பைக் கொட்டிட்டாயே..." என்று அலறத் திறந்த வாய், திறந்த நிலையில் அடைபட்டது. அது நான்கு குடித்தனங்கள் உள்ள வீடு. சத்தம் கேட்டுப் பின் கட்டிலிருந்து சிலர் அங்கே ஓடி வந்தார்கள். "என்னடி, என்ன விஷயம்?" என்று ஈரக்கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு சுவாரசியமாய் விசாரித்த வண்ணம் கூடத்துக்கே வந்து விட்டாள் பின் கட்டு மாமி. "ஒண்ணுமில்லை, இந்தக் கொட்டற மழையிலே அப்படி என்ன குடி முழுகிப் போச்சு? தெப்பமா நனைஞ்சுண்டு வந்திருக்காள். காசைப் பணத்தைக் கொட்டிப் படிக்க வெச்சு, பரீட்சைக்கு நாள் நெருங்கறப்போ படுத்துத் தொலைச்சா என்ன பண்றது? நல்ல வேளை, அவ அண்ணா இல்லே; இருந்தால் இந்நேரம் தோலை உரிச்சிரிருப்பான்" என்று பொய்யாக அங்கலாய்த்துக் கொண்டாள் அம்மா. "சரி சரி, விடு. இதுக்குப் போய் குழந்தையே அடிப்பாளோ?" பின் கட்டு அம்மாளுக்கு விஷயம் அவ்வளவு சுரத்தாக இல்லை. போய்விட்டாள். வாசற் கதவையும் கூடத்து ஜன்னல்களையும் இழுத்து மூடினாள் அம்மா. ஓர் அறையில் பூனைக் குட்டி மாதிரிச் சுருண்டு விழுந்து - அந்த அடிக்காகக் கொஞ்சம் கூட வேதனைப் படாமல் இன்னும் பலமாகத் தன்னை அடிக்க மாட்டாளா, உயிர் போகும் வரை தன்னை மிதித்துத் துவைக்க மாட்டாளா என்று எதிர்பார்த்து அசைவற்றுக் கிடந்த மகளை எரிப்பது போல் வெறித்து விழித்தாள் அம்மா... 'இவளை என்ன செய்யலாம்?... ஒரு கௌரவமான குடும்பத்தையே கறைப்படுத்திட்டாளே?... தெய்வமே! நான் என்ன செய்வேன்?' என்று திரும்பிப் பார்த்தாள். அம்மாவின் பின்னே சமையலறையிலே அடுப்பின் வாய்க்குள்ளே தீச்சுவாலைகள் சுழன்றெரியக் கங்குகள் கனன்று கொண்டிருந்தன... 'அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி வந்து இவள் தலையில் கொட்டினால் என்ன' என்று தோன்றிற்று. அவள் கண் முன் தீயின் நடுவே கிடந்து புழுவைப் போல் நௌிந்து கருகிச் சாகும் மகளின் தோற்றம் தெரிந்தது... 'அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போய் விடுமா? ஐயோ! மகளே உன்னை என் கையால் கொன்ற பின் நான் உயிர் வாழவா?... நானும் என் உயிரைப் போக்கிக் கொண்டால்?' 'ம்... அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போயிடுமா?' அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மகளின் கூந்தலைப் பற்றி முகத்தை நிமிர்த்தித் தூக்கி நிறுத்தினாள் அம்மா. நடுக் கூடத்தில் தொங்கிய அரிக்கேனின் திரியை உயர்த்தி ஒளி கூட்டி அதைக் கையில் எடுத்துக் கொண்டு மகளின் அருகே வந்து நின்று அவளைத் தலை முதல் கால்வரை ஒவ்வோர் அங்குலமாக உற்று உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தாங்க மாட்டாமல் அவள் முகத்தை மூடிக் கொண்டு "ஐயோ அம்மா! என்னைப் பார்க்காதேயேன்" என்று முதுகுப் புறத்தைத் திருப்பிக் கொண்டு சுவரில் முகம் புதைத்து அழுதாள்... "அட கடவுளே! அந்தப் பாவிக்கு நீ தான் கூலி கொடுக்கணும்" என்று வாயைப் பொத்திக் கொண்டு அந்த முகம் தெரியாத அவனைக் குமுறிச் சபித்தாள் அம்மா. அவளைத் தொடுவதற்குத் தனது கைகள் கூசினாலும், அவளைத் தானே தீண்டுவதற்குக் கூசி ஒதுக்கினால் அவள் வேறு எங்கே தஞ்சம் புகுவாள் என்று எண்ணிய கருணையினால் சகித்துக் கொண்டு தனது நடுங்கும் கைகளால் அவளைத் தொட்டாள். 'என் தலையெழுத்தே' என்று பெருமூச்செறிந்தவாறு, இவளைக் கோபிப்பதிலோ தண்டிப்பதிலோ இதற்குப் பரிகாரம் காண முடியாது என்று ஆழமாய் உணர்ந்து அவளைக் கைப்பிடியில் இழுத்துக்கொண்டு அரிக்கேன் விளக்குடன் பாத்ரூமை நோக்கி நடந்தாள். 'இப்ப என்ன செய்யலாம்? அவனை யாருன்னு கண்டு பிடிச்சுட்டா?... அவன் தலையிலேயே இவளைக் கட்டிடறதோ? அட தெய்வமே... வாழ்க்கை முழுதும் அப்படிப்பட்ட ஒரு மிருகத்தோட இவளை வாழ வச்சுடறதா? அதுக்கு இவளைக் கொன்னுடலாமே? என்ன செய்யறது!' என்று அம்மாவின் மனம் கிடந்து அரற்றியது! பாத்ரூமில் தண்ணீர்த் தொட்டியின் அருகே அவளை நிறுத்தி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு, தானறிந்த தெய்வங்களையெல்லாம் வழிபட்டு இந்த ஒன்றுமறியாப் பேதையின்மீது பட்டுவிட்ட கறையைக் கழுவிக் களங்கத்தைப் போக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டாள் அம்மா. குளிரில் நடுங்குகிறவள் மாதிரி மார்பின்மீது குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு கூனிக் குறுகி நின்றிருந்தாள் அவள். கண்களை இறுக மூடிக்கொண்டு சிலை மாதிரி நிற்கும் மகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளது ஆடைகளை யெல்லாம் தானே களைந்தாள் அம்மா. இடுப்புக்குக் கீழ் வரை பின்னித் தொங்கிய சடையைப் பிரித்து அவளது வெண்மையான முதுகை மறைத்துப் பரத்தி விட்டாள். முழங்கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு யந்திரம் மாதிரிக் குறுகி உட்கார்ந்த அவள் தலையில் குடம் குடமாய்த் தொட்டியிலிருந்த நீரை எடுத்துக் கொட்டினாள். அவள் தலையில் சீயக்காய்த் தூளை வைத்துத் தேய்த்தவாறு மெல்லிய குரலில் அம்மா விசாரித்தாள்: "உனக்கு அவனைத் தெரியுமோ?..." "ம்ஹீம்..." "அழிஞ்சு போறவன். அவனை என்ன செய்தால் தேவலை!" பற்களைக் கடித்துக் கொண்டு சீயக்காய் தேய்த்த விரல்களைப் புலி மாதிரி விரித்துக் கொண்டு கண்களில் கொலை வெறி கொப்பளிக்க வெறித்த பார்வையுடன் நிமிர்ந்து நின்றாள். 'ம்... வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்' - என்று பொங்கி வந்த ஆவேசம் தணிந்து, பெண்ணினத்தின் தலை எழுத்தையே தேய்த்து அழிப்பதுபோல் இன்னும் ஒரு கை சீயக்காயை அவள் தலையில் வைத்துப் பரபரவென்று தேய்த்தாள். ஏனோ அந்தச் சமயம் இவளை இரண்டு வயசுக் குழந்தையாக விட்டு இறந்து போன தன் கணவனை நினைத்துக் கொண்டு அழுதாள். 'அவர் மட்டும் இருந்தாரென்றால் - மகராஜன், இந்தக் கொடுமையெல்லாம் பார்க்காமல் போய்ச் சேர்ந்தாரே?' "இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே! தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சு போகும். நம் வீட்டிலேயும் ஒரு பொண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே மாட்டா. பரம்பரை துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணிடுவா... மத்தவாளைச் சொல்றேனே. இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா? வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு!" என்று புலம்பிக் கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையைத் துவட்டியபின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள் கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள். "நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்லே. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ, பளிங்கு. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பார்க்கறே? தெரிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பாக்கறியா? என்னடி தெரியப் போறது? எவனோடயோ நீ கார்லே வந்தேன்னுதானே தெரியப் போறது? அதுக்கு மேலே கண்ணாலே பார்க்காததெப் பேசினா அந்த வாயைக் கிழிக்க மாட்டாளா? ம்... ஓண்ணுமே நடக்கலேடி, நடக்கலே! கார்லே ஏறிண்டு வந்ததை மட்டும் பார்த்துக் கதை கட்டுவாளோ? அப்பிடிப் பார்த்தா ஊர்லே எவ்வளவோ பேரு மேல கதை கட்ட ஒரு கும்பல் இருக்கு. அவாளே விடுடி... உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமா இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி... நீ நம்பு... நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம், நீ சுத்தமாயிட்டே....? ஆமா - தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்... அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் - எல்லாம் மனசுதான்டி.... மனசு சுத்தமா இருக்கணும்... ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் போகலை. அதனாலேதான் ராமரோட பாததுளி அவமேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா... வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு... கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு... உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே..." கொடியில் துவைத்து உலர்த்திக் கிடந்த உடைகளை எடுத்துத் தந்து அவளை உடுத்திக் கொள்ளச் சொன்னாள் அம்மா. "அதென்ன வாயிலே 'சவக் சவக்'ன்னு மெல்லறே?" "சூயிங்கம்." "கருமத்தைத் துப்பு... சீ! துப்புடி. ஒரு தடவை வாயைச் சுத்தமா அலம்பிக் கொப்புளிச்சுட்டு வா" என்று கூறிவிட்டுப் பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா. சுவாமி படத்தின் முன்னே மனம் கசிந்து உருகத் தன்னை மறந்து சில விநாடிகள் நின்றாள் அம்மா. பக்கத்தில் வந்து நின்ற மகளை "கொழந்தே, 'எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடு'ன்னு கடவுளை வேண்டிக்கோ. இப்படி எல்லாம் ஆனதுக்கு நானுந்தான் காரணம். வயசுக்கு வந்த பொண்ணை வௌியே அனுப்பறமே, உலகம் கெட்டுக் கெடக்கேன்னு எனக்கும் தோணாமே போச்சே? என் கொழந்தே காலேஜீக்கும் போறாளேங்கிற பூரிப்பிலே எனக்கு ஒன்னுமே தோணல்லே. அதுவுமில்லாம எனக்கு நீ இன்னும் கொழந்தை தானே! ஆனா நீ இனிமே உலகத்துக்குக் கொழந்தை இல்லேடி! இதை மறந்துடு என்ன, மறந்துடுன்னா சொன்னேன்? இல்லே, இதை மறக்காம இனிமே நடந்துக்கோ. யார்கிட்டேயும் இதைப் பத்திப் பேசாதே. இந்த ஒரு விஷயத்திலே மட்டும் வேண்டியவா, நெருக்கமானவான்னு கிடையாது. யார்கிட்டேயும் இதைச் சொல்லலேன்னு என் கையில் அடிச்சு சத்தியம் பண்ணு, ம்" ஏதோ தன்னுடைய ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கு வாக்குறுதி கேட்பதுபோல் அவள் எதிரே கையேந்தி நிற்கும் தாயின் கை மீது கரத்தை வைத்து இறுகப் பற்றினாள் அவள்: "சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்..." "பரீட்சையிலே நிறைய மார்க் வாங்கிண்டு வராளே, சமத்து சமத்துன்னு நினைச்சிண்டிருந்தேன். இப்பத்தான் நீ சமத்தா ஆயிருக்கே. எப்பவும் இனிமே சமத்தா இருந்துக்கோ" என்று மகளின் முகத்தை ஒரு கையில் ஏந்தி, இன்னொரு கையால் அவள் நெற்றியில் விபூதியை இட்டாள் அம்மா. அந்தப் பேதையின் கண்களில் பூஜை அறையில் எரிந்த குத்து விளக்குச் சுடரின் பிரபை மின்னிப் பிரகாசித்தது. அது வெறும் விளக்கின் நிழலாட்டம் மட்டும் அல்ல, அதிலே முழு வளர்ச்சியுற்ற பெண்மையின் நிறைவே பிரகாசிப்பதை அந்தத் தாய் கண்டு கொண்டாள். அதோ, அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் செல்லுகின்ற பாதையில் நூற்றுக்கணக்கான டாம்பீகமான கார்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. ஒன்றையாவது அவள் ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே! சில சமயங்களில் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் தன் வழியில் அந்தக் காரோ அந்தக் காரின் வழியில் தானோ குறுக்கிட்டு மோதிக்கொள்ளக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி மட்டுமே இருக்கிறது. ----- #19. புது செருப்புக் கடிக்கும் அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வௌியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை மூடுகிறவரை எங்கு போகவேண்டும் என்றோ, எங்காவது போக வேண்டுமா என்றோவெல்லாம் அவன் நினைக்கவே இல்லை. அவள்மீது கொண்ட கோபமும், தன்னை அவமதிக்கிற மாதிரி தனது உணர்ச்சிகளை அசட்டை செய்துவிட்டுச் சுவரோரமாகத் திரும்பிக் கொண்டு தூங்குகிற அவளுக்குத் துணையாக விழித்துக்கொண்டிருக்கிற - 'ஏன் படுக்கவில்லையா?' என்று அவள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிற - அவமானம் தாங்கமாட்டாமல்தான் அவன் வௌியில் வந்து கோபமாகக் கதவை அறைந்து மூடினான். அவள் நிஜமாகவே தூங்கியிருந்தால் இந்தச் சத்தத்தில் விழித்திருக்க வேண்டும். இந்தச் சத்தத்தில் பக்கத்துப் போர்ஷன்காரர்கள் யாரேனும் விழித்துக் கொண்டுவிட்டார்களோ என்று தன் செய்கைக்காக அவன் அவமானத்தோடு அச்சம் கொண்டு இருள் அடர்ந்த அந்த முற்றத்தில் மூடியிருக்கும் எதிர் போர்ஷன் கதவுகளைப் பார்த்தான். உள்ளே விடிவிளக்கு எரிவது கதவுக்கு மேலுள்ள 'வென்டிலேட்டர்' வழியாய்த் தெரிந்தது. டேபிள்ஃபேன் சுற்றுகிற சத்தம் 'கும்'மென்று ஒலித்தது. மணி பதினொன்று இருக்கும். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இருட்டில் தெரியவில்லை. எங்காவது போய்விட்டு விடிந்த பிறகு வந்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது. எப்படிக் கதவைத் திறந்து போட்டுவிட்டுத் தனிமையில் இவளை விட்டுப் போவது என்ற தயக்கமும் ஏற்பட்டது. அவள் வேண்டுமென்றே அடமாகப் படுத்துக் கொண்டு அழும்பு செய்கிறாள் என்று மனத்துக்குப் புரிந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தன் மீதே ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றியது. இதெல்லாம் தனக்கு வீண் தலைவிதிதானே என்று மனம் புழுங்கிற்று. தானுண்டு, தன் வேலையும் சம்பாத்தியமும் உண்டு என்று சுதந்திரமாகத் திரிகிற வாழ்க்கையின் சந்தோஷத்தை அல்லது வெறுமையை அனுபவித்துக் கொண்டிருந்தவனை, அப்படியே வாழ்ந்து விடுவது எனத் தீர்மானித்திருந்தவனை இந்தக் கல்யாணம், பெண்டாட்டி, குடும்பம் என்றெல்லாம் இதில் ஏதேதோ பெரிய சுகம் இருப்பதாகவும், மனுஷ வாழ்க்கையின் அர்த்தமே அதில் அடங்கி இருப்பதாகவும் கற்பித்துக் கொள்கிற பைத்தியக்காரத்தனத்தில் சிக்க வைத்த அந்தச் சைத்தானின் தூண்டுதலை எண்ணிப்பார்த்த பெருமூச்சுடன் வீட்டிற்குள் போகாமல் வாசற்படியில் அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு இருளும் நட்சத்திரமும் கவிந்த வானத்தைப் பார்த்தான். 'அந்தச் சைத்தான்' என்ற முனகலில் அவனுக்குக் கிரிஜாவின் நினைவு வந்தது. அவள் எவ்வளவு இனியவள். இங்கிதம் தெரிந்தவள். சைத்தானைக் கட்டிக் கொண்டு வந்து வீட்டில் வைத்துக்கொண்டு அவளைப் போய்ச் சைத்தான் என்று நினைக்கிறேனே- என்று அந்த நினைவைக் கடிந்து கொண்டான் நந்தகோபால். ஆனாலும், தான் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தக் காரணமாக இருந்தவள் அந்த கிரிஜாதான் என்பதால் தனக்கு அவள் மீது வருகிற இந்தக் கோபத்துக்கு நியாயம் இருப்பதாக நினைத்தான் அவன். 'இப்போது, இந்த நேரத்தில் அவளைப் போய்ப் பார்த்தால் என்ன?' என்ற எண்ணம் வந்தது அவனுக்கு. அவளை எப்போது வேண்டுமானாலும் போய்ப் பார்க்கலாம். இந்த ஆறுமாத காலமாக - கல்யாணமாகி ஒவ்வொரு நாளும் இவளோடு மனஸ்தாபம் கொண்டு 'ஏன் இப்படி ஒரு வம்பில் மாட்டிக் கொண்டோம்' என்று மனம் சலிக்கிற போதெல்லாம் அவன் கிரிஜாவை நினைத்துக் கொள்ளுவது உண்டு. என்றாலும் அங்கே போகலாம் என்ற எண்ணம் இப்போதுதான் தோன்றியது. 'தான் இவளைக் கல்யாணம் செய்து கொள்ளுவதற்கு முன்பு எப்படியெல்லாம் இருந்தபோதிலும், இப்போது இவளை இங்கு தனியே விட்டுவிட்டு, அங்கே போவது இவளுக்குச் செய்கிற துரோகமில்லையா?' என்று நினைத்துப் பார்த்தான். இவள் என்னதான் சண்டைக்காரியாக இருந்தாலும், இவள் மீது தனக்கு எவ்வளவுதான் கோபம் இருந்தபோதிலும், தன் மீதுள்ள வெறுப்பினால், அதற்கு ஆறுதலாக இருக்கும் பொருட்டு, இவள் அந்த மாதிரி ஏதாவது செய்தால் அதைத் தன்னால் தாங்க முடியுமா என்றும் எண்ணி அந்த எண்ணத்தையே தாங்க முடியாமல் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான். கடிகாரத்தின் ஒற்றை மணியோசை கேட்டது. மணி இன்னும் ஒன்றாகி இருக்காது. மூடியிருந்த கதவை லேசாகத் திறந்து கைக்கடிகாரத்தை உள்ளே இருந்து வீசும் வௌிச்சத்தின் ஒரு கீற்றில் பார்த்தான். இவனது வாட்சில் மணி பதினொன்றரை ஆகவில்லை. அடித்தது பதினொன்றரைதான் என்ற தீர்மானம் கொண்டு கதவின் இடைவௌி வழியாக அவளைப் பார்த்தான். அவள் அசையாமல் புரண்டு படுக்காமல் முன் இருந்த நிலையிலேயே முதுகைத் திருப்பிக் கொண்டு படுத்திருந்தாள். இவனுக்குக் கோபம் வந்தது. எழுந்து போய் முதுகிலே இரண்டு அறையோ, ஓர் உதையோ கொடுக்கலாமா என்று ஆங்காரம் வந்தது. "சீ" என்று தன்னையே அப்போது அருவருத்துக் கொண்டான் அவன். அப்படிப்பட்ட குரூரமான ஆபாசமான சம்பவங்களை அவன் சிறுவயதில் அடிக்கடி சந்தித்திருக்கிறான். திடீரென நள்ளிரவில் அவனுடைய தாயின் தீனமான அலறல் கேட்கும். விழித்தெழுந்து உடலும் உயிரும் நடுங்க இவன் நின்றிருப்பான். இவனுடைய தந்தை வெறி பிடித்தாற்போல் ஆவேசம் கொண்டு இவனுடைய தாயை முகத்திலும் உடலிலும், காலாலும் கையாலும் பாய்ந்து பாய்ந்து தாக்க, அவள் "ஐயோ பாவி சண்டாளா..." என்று அழுதுகொண்டே ஆக்ரோஷமாகத் திட்டுவாள். இவள் திட்டத் திட்ட அவர் அடிப்பார்... அந்த நாட்கள் மிகக் குரூரமானவை. மறுநாள் ஒன்றுமே நடவாத மாதிரி அவர்கள் இருவரும் நடந்து கொள்ளுவது - அவள் அவருக்குப் பணிவிடை புரிவதும், அவர் அவளைப் பேர் சொல்லி அழைத்து விவகாரங்கள் பேசுவதும் - இவனுக்கு மிக ஆபாசமாக இருக்கும். இதெல்லாம் என்னவென்றே புரியாத அருவருப்பைத் தரும். பதினைந்து வயது வரைக்கும் இந்த வாழ்க்கையை அனுபவித்திருக்கிறான் அவன். அவர்களது சண்டையை விடவும் அந்தப் பெற்றோரின் சமாதானங்கள் அவன் மனசை மிகவும் அசிங்கப்படுத்தியிருக்கின்றன. அவன் தகப்பனாரை மனமார வெறுத்திருக்கிறான். 'குடும்ப வாழ்க்கையும் தாம்பத்தியம் என்பதும் மிகவும் அருவருப்பானவை' என்ற எண்ணம் இள வயதிலே அவனுக்கு ஏற்பட இந்த அனுபவங்கள் காரணமாயின போலும். இப்போது அவன் தகப்பனார் இல்லை. அவனுடைய விதவைத் தாய் வயோதிக காலத்தில் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தான் சாகுமுன் இவனுக்குக் கல்யாணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்ற தன் ஆசையை இவனிடம் தெரிவிக்கும் போதெல்லாம் அவளது வாழ்க்கையைச் சுட்டிக் காட்டித் தாயைப் பரிகாசம் செய்வான். அவளுக்கு அப்போது வருத்தமாகவும் கோபமாகவும் கூட இருக்கும். விட்டுக் கொடுக்காமல், 'நான் வாழ்ந்ததற்கு என்ன குறை?' என்று பெருமை பேசுவாள். கடைசியில் ' கலியாணம் பண்ணிக்க முடியாது' என்று அவள் முகத்தில் அடித்துப் பேசிவிட்டு வந்துவிடுவான் நந்தகோபால். பட்டனத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு தனி வாழ்க்கைக்குப் பழகி இப்படியே முப்பது வயது கடத்திவிட்ட அவனுக்குக் கல்யாண ஆசையையும் குடும்பத்தைப் பற்றிய சுய கற்பனைகளையும் வளர்த்து அதற்குத் தயாராக்கியது கிரிஜாவின் உறவுதான். கிரிஜாவுக்கு முன்னால் அவனுக்கு அது மாதிரியான உறவு வேறு எந்தப் பெண்ணோடும் ஏற்பட்டிருந்ததில்லை. அவளுக்கு இவன் மிகவும் புதியவனாக இருந்தான். ஆனால், அவள் அப்படியல்ல என்று இவனுக்கு மாத்திரமல்லாமல் வேறு பலருக்கும் பிரசித்தமாகி இருந்தது. அவளும் அதையெல்லாம் மறைக்கக் கூடிய நிலையில் இல்லை. எனினும் இவனோடு இருந்த நாட்களில் அவள் மிகவும் உண்மையாகவும் அன்பாகவும், ஒரு பெண்ணின் உடனிருப்பும் உறவும் ஓர் ஆணுக்கு எவ்வளவு இன்பமானது, வசதியானது என்பதை உணர்த்துகின்ற முறையிலும் வாழ்ந்தாள். அந்த இரண்டு மாத காலம் மிக மேன்மையான இல்லறம் என்று இந்த நிமிஷம் - இவனை அவமதித்தும் புறக்கணித்தும் வாசற்படிக்கு வௌியே இந்த நள்ளிரவில் நிறுத்தி வைத்துவிட்டு இறுமாப்போடு படுத்துக் கொண்டிருக்கிறாளே, அவள் மீது பற்றிக்கொண்டு வருகிற கோபத்தில் - நினைத்துப் பெருமூச்சும் கண்ணீருமாய்ப் பரிதாபமாக மறுபடியும் உள்ளே திரும்பிப் பார்த்தான் நந்தகோபால். நிச்சயம் அவள் எழுந்திருக்கவோ சமாதானமுறவோ போவதில்லை. இந்த ஆறு மாத அனுபவத்தில் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அவனுக்குப் பழக்கமாகிப் போனதால் இதன் தொடக்கமும் இதன் போக்கும் இதன் முடிவும் அவனுக்கு ஒவ்வொரு தடவையும் முன் கூட்டியே தெரிகிறது. என்றாலும் இதனைத் தவிர்க்கத்தான் முடியவில்லை. பிறகு யோசித்துப் பார்க்கையில் அவனது அறிவுபூர்வமான எந்த நியாயத்துக்கும் இந்தச் சச்சரவுகள் ஒத்து வருவதில்லை. நாளுக்கு நாள் இந்த வாழ்க்கை அவமானகரமானதாகவும் துன்பம் மிகுவதாகவும் மாறிக்கொண்டே இருப்பதை எப்படித் தாங்குவது என்று புரியவில்லை. உள்ளே மங்கிய விளக்கொளியில், கொடிகளில் கிடக்கும் துணிகளும், நிழலில் தெரிகிற சமையலறையினுள் பாத்திரங்களின் பளபளப்பில் அவை இறைந்து கிடக்கிற கோலமும் மிகச் சோகமாய் அவனுக்குத் தெரிந்தன. ஒரே அறையும் அதைத் தொடர்ந்து கதவில்லாத ஒரு சுவரால் பிரிகிற சிறு சமையல்கட்டும் அதனுள்ளேயே அடங்கிய தொட்டி முற்றமாகிய பாத்ரூம் உள்ள அந்தப் போர்ஷனுக்கு நாற்பத்தைந்து ரூபாய் வாடகை. குடும்பச் செலவுக்கு மாதம் நூற்றைம்பது ரூபாய் ஆகிறது. நந்தகோபாலுக்கு சம்பளம் கிட்டத்தட்ட முந்நூறு ரூபாய். மனமொத்து வாழ்ந்தால் இந்த நெருக்கடி ஒரு துன்பமல்ல. ஆறேழு பேர் சேர்ந்து ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து எல்லா வசதிகளோடும் வாழ்ந்த அந்த 'மெஸ்' வாழ்க்கைக்கு இப்போது மனசு ஏங்க ஆரம்பிப்பதன் பரிதாபத்தை நினைத்து அவன் மனம் கசந்தான். ஒரு பெருமூச்சுடன் எழுந்தான். கிரிஜாவைப் போய்ப் பார்த்துவிட்டு இரவை அவளுடன் கழிப்பது மனதுக்கு ஆறுதல் தரும் என்று தோன்றியது. 'வேறு எதற்காகவும் இல்லை' என்ற நினைப்பில் இதைப் பற்றிய உறுத்தலை உதறி ' அவளோடு பேசிக்கொண்டிருப்பது எனக்கு நிம்மதியைத் தரும்' என்கிற சமாதானத்தோடு புறப்பட்டான். உள்ளே போய் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டான். நைட்லாம்ப் எரிந்து கொண்டிருந்த மங்கிய வௌிச்சத்துடன் நாற்பது வோல்ட் விளக்கையும் போட்டவுடன் வௌிச்சம் கண்ணைக் கூசிற்று. "ஏய்!..." என்று அவளை மெல்லத் தட்டினான். அவள் அசையவில்லை. "இப்ப உன்னை கொஞ்சறதுக்கு எழுப்பலே; நான் வௌியே போறேன். கதவைத் தாப்பாப் போட்டுக்க" என்று அவள் புஜத்தைக் கொஞ்சம் அழுத்தி வலிக்கிற மாதிரிப் பிடித்து முரட்டுத்தனமாகத் திருப்பினான். அவள் எழுந்து உட்கார்ந்து அவனை வெறுப்புடன் முகம் சுளித்த எரிச்சலுடன் பார்த்தாள். இவ்வளவு நேரம் எழுந்திருக்காதவள், தான் போகிறோம் என்றதும் கதவைத் தாழிடத் தயாராய் எழுந்து உட்கார்ந்திருப்பது அவனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. 'இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்' என்று கேட்பதுதானே நியாயம்? ஆனால், அவள் கேட்கவில்லை. 'போறதானால் தொலைய வேண்டியதுதானே... நான் நிம்மதியாகப் படுத்துக் கொள்ளுவேன்' என்கிற மாதிரி அவள், அவன் சட்டையை மாட்டிக்கொண்டு நிற்பதைப் பொருட்படுத்தாமல் எழுந்து எரிச்சலுடன் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவன் கட்டிலுக்கடியில் குனிந்து செருப்பைத் தேடினான். கட்டிலின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிற அவளது சேலையின் நிழலோ காலின் நிழலோ மறைத்தது. தான் கட்டிலுக்கடியில் குனிந்து செருப்பைத் தேடும்போது அவள் இப்படி மறைத்துக் கொண்டு - தான் மறைக்கிற விஷயம் அவளுக்குத் தெரியாது என்றும் அவனுக்குத் தெரிந்தது - கட்டிலின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிற காரியம் அவமரியாதை என்று அவனுக்குத் தோன்றியது. அந்தக் கோபத்துடன் அவன் செருப்பைத் தேடி எடுத்துக் கொண்டு நிமிரும்போது கட்டிலின் விளிம்பில் தலையை இடித்துக் கொண்டான். கண்ணில் தண்ணீர் வருகிற மாதிரி வலித்தது. அவள் கொஞ்சம்கூடப் பதட்டம் காட்டாதிருந்தாள். இதே மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் அவளுக்கு இப்படித் தலையில் ஓர் இடியோ, விரலில் ஒரு காயமோ ஏற்பட்டால் தன்னால் பதட்டமுறாமலிருக்க முடியாதே என்று எண்ணிய நினைப்பில் அவன் தன்னிரக்கத்தோடு முகம் திருப்பிக் காலில் செருப்பை மாட்டிக்கொண்டு புறப்பட்டான். திறந்த கதவை மூடாமல் நிதானமாக அவன் முற்றத்தில் நடந்து தாழ்வாரத்தில் தூணோரமாக நிறுத்தியிருந்த சைக்கிளின் 'லாக்'கைத் திறக்கையில் இருட்டில் நிற்கிற தன்னை அவள் பார்க்க முடியாது என்பதால் அவள் வௌியே தலை நீட்டிப் பார்க்கிறாளா என்று கவனித்தான். அவன் மனம் சோர்வு கொள்ளத் தக்க வண்ணம் அவள் கதவைப் பட்டென்று மூடித் தாழிட்டுக் கொண்டாள். அவள் வௌியே தலை நீட்டிப் பார்க்காதது மிகவும் வருத்தம் தந்தது இவனுக்கு. அறைக்குள் எரிந்த நாற்பது வோல்ட் வௌிச்சம் அணைந்து நைட்லாம்பின் வௌிச்சம் வெண்டிலேட்டர் வழியே தெரிந்தது. நந்தகோபால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தான். வாசற்புறத்தில் முறைவாசல் செய்கிற கிழவி தன் படுக்கையில் உட்கார்ந்து இருமிக்கொண்டிருந்தவள், அவன் வௌியே சென்றதும், 'திரும்பி எப்போ வருவே அப்பா' என்று கேட்டு, இவன் 'இல்லை' என்று சொன்னதும் பிறகு கதவைத் தாழிட்டாள். வௌியில் வந்து நின்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டபோது, தெரு விளக்குகள் திடீரென அணைந்தது. டைனமோ வௌிச்சம் பளீரென்று வழிகாட்ட அவன் சைக்கிளில் ஏறி மிதித்தான். கிரிஜாவின் வீடு மேற்கு மாம்பலத்தில் குண்டும் குழியும் சாக்கடையும் எருமை மாடும் நிறைந்த ஒரு தெருவில் இருக்கிறது. தெருப்புறம் மாடிப் படியுள்ள ஒரு வீட்டின் மேல் போர்ஷனில் அவள் சுதந்திரமாக வாழ்கிறாள். அவளுக்குத் தாய் இருக்கிறாள். அவள் எங்கோ ஒரு பணக்காரர் வீட்டில் ஆயாவாக வேலை செய்கிறாள். எப்போதாவது வந்து மகளைப் பார்த்துவிட்டு அசைவச் சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போவாள். அவள் வேலை செய்கிற வீட்டில் அது கிடைக்காதாம். கிரிஜாவுக்கு இருபத்தைந்து வயதான தம்பி ஒருவன் உண்டு. அவனுக்கு ஏதோ ஒரு சினிமாக் கம்பெனியில் வேலை. அவனும் எப்போதாவது தான் வருவான். அவள் பத்தாவதுவரை படித்திருக்கிறாள். நிரந்தரமாக இல்லாவிட்டாலும் டெம்ப்ரரியாகவே அவள் ஒவ்வோரிடமாக வேலை செய்து கொண்டிருக்கிறாள். முப்பது வயதாகிறது. இப்படியொரு நிராதரவான நிலையற்ற வாழ்க்கையிலும் அவள் நிறைவோடும் மலர்ச்சியோடும் இருக்கிறாள். நந்த கோபால் வேலை செய்கிற காஸ்மெடிக்ஸ் கம்பெனியார் எக்ஸிபிஷனில் ஒரு ஸ்டால் போட்டிருந்தார்கள். அங்கு அவள் வேலை செய்து கொண்டிருந்தபோது தான் போன டிசம்பரில் அவளை இவன் சந்திக்க நேர்ந்தது. அவளைப் பார்த்தவுடன் அவளை இதற்கு முன்பு எங்கோ பார்த்த மாதிரியானதொரு இணக்கம் அவள் முகத்தில் இவனுக்குத் தோன்றியது. இந்த ஸ்டாலில் விற்பனைப் பணிப் பெண்ணாக வேலை செய்வதற்காகக் கொண்ட முகபாவமோ அது என்றுதான் முதலில் அவன் நினைத்தான். பிறகுதான் தெரிந்தது; அவன் டெஸ்பாட்சிங் கிளார்க்காக வெலை செய்யும் அந்த காஸ்மெடிக்ஸ் கம்பெனியில் நாள்தோறும் பார்சல் பார்சல்களாக அனுப்பப்படுகிற அந்தப் பவுடர் டின்களின் மேல் இருக்கின்ற உருவமே அவளுடையதுதான் என்று. இரண்டு மாத காலம் மாலை நேரத்தில் மட்டும் 'பார்ட் டய' மாக அவனும் எக்ஸிபிஷனிலே வேலை செய்த காலத்தில் அவளுடன் ஏற்பட்ட நட்பின்போது அவளைப் பற்றி அவன் தெரிந்து கொண்டான். ஒரு கௌரவமான நிரந்தர உத்தியோகத்துக்காக அவள் ஒவ்வொருவரிடமும் சிபாரிசு வேண்டியபோது இவன் அவளுக்காகப் பரிதாபப்பட்டான். ஆனாலும் அவளுக்கு உதவும் காரியம் தனது சக்திக்கு மீறியது என்று அவளைப் பற்றிய கவலையிலிருந்து ஒதுங்கியே நின்றான். அவள் எல்லோருடனும் கலகலவென்று பேசுவாள். இவனை அவள்தான் முதலில் டீ சாப்பிட அழைத்தாள். இவனோடு பேச்சுக் கொடுத்தாள். இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பும்போது சில நாட்களில் அந்த ஸேல்ஸ் மானேஜர் தான் காரில் போகும் வழியில் இவளை இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச் செல்வார். அவரைப் பற்றி ஆபிசில் ஒரு மாதிரி பேசிக் கொள்வார்கள். அவருடன் அவள் போவது இவனுக்கு என்னமோ மாதிரி இருக்கும். ஒருநாள் அதுபோல் மானேஜர் தன்னுடன் அவளை அழைத்தபோது அவள் நந்தகோபாலைக் காட்டி, " மிஸ்டர் நந்தகோபால் எங்க வீட்டுக்குப் போற வழியிலேதான் சார் இருக்காரு. நாங்க பேசிக்கிட்டே போயிடுவோம் சார்... என்னாங்கோ மிஸ்டர்?" என்று இவனைப் பார்த்துச் சிரித்தபோது இவனும் சம்மதித்தான். அவள் பேசுவது இவனுக்கு வேடிக்கையாக இருக்கும். 'என்னாங்கோ, சரீங்கோ... ஆமாங்கோ..' என்று அவள் கொஞ்சம் நீட்டிப் பேசுவாள். அவள் வீட்டில் பேசுகிற பாஷை தெலுங்கு என்று பின்னால் தெரிந்தது இவனுக்கு. படித்ததெல்லாம் தமிழ்தான். தெலுங்கு என்றால், மெட்ராஸ் தமிழ் மாதிரி மெட்ராஸ் தெலுங்காம். 'அவள் எப்படிச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள்!' என்று நினைத்துக் கொண்டு சைக்கிளை வேகமாய் மிதித்தான் நந்தகோபால். அவள் நிஜமாகவே சந்தோஷமாக இருக்கிறாள் என்று, அவளோடு பழகிய பிறகுதான் இவன் தெரிந்து கொண்டான். எக்ஸிபிஷன் ஸ்டால் வேலை முடிந்த பிறகு டெலிபோன் சுத்தம் செய்து அதில் ஸென்ட் போடுகிற ஒரு கம்பெனியில் வேலைக்கமர்ந்து டெலிபோன் இருக்கிற வீடுகளிலும் கம்பெனிகளிலும் ஏறி இறங்கி வருகையில் ஒருநாள் தெருவில் அவளை இவன் பார்த்தான். இப்படி ஏதாவதொரு கௌரவமான உத்தியோகம் செய்து அவள் சம்பாதித்தாள். வயது முப்பது ஆவதால் இதற்கிடையில் நம்பிக்கை அல்லது தேவை காரணமாகச் சில ஆண்களோடு அவளுக்கு உறவு நேர்ந்திருக்கிறது என்றாலும் அதை ஒரு பிழைப்பாகக் கொள்ளும் இழி மனம் அவளுக்கு இல்லை என்று அவன் அறிந்தான். எப்போதாவது இவன் அவளைத் தேடிக் கொண்டு போவான். இருவரும் பேசிக்கொண்டு இருப்பார்கள். இவனுக்கு அவள் காபி மட்டும் தருவாள். அவள் சினிமாப் பத்திரிகைகள் எல்லாம் வாங்குவாள். கையில் காசு இருக்கும் போதெல்லாம் சினிமாவுக்குப் போவாள். நேரம் இருக்கும்போதெல்லாம் சினிமாக்களைப் பற்றியும் சினிமா சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் ரொம்பத் தெரிந்தவள் மாதிரி சுவாரஸ்யமாக அரட்டை அடிப்பாள். சினிமா கம்பெனியில் வேலை செய்கிற அவளுடைய தம்பி ' நீ என்ன வேணும்னாலும் செய்... ஆனா சினிமாவிலே சான்ஸீ குடுக்கறேன்னு எவனாவது சொன்னா - அத்தெ நம்பிக்கினு மட்டும் போயிடாதே... நான் அங்கே இருக்கறதுனாலே என் மானத்தெக் காப்பாத்தறதுக்கோசரம் அந்தப் பக்கம் வராதே' என்று எப்போதோ சொல்லி வைத்திருந்ததைத் தான் உறுதியாகக் கடைபிடிப்பதை இவனிடம் அவள் ஒரு முறை கூறினாள். அவளோடு அவன் இரண்டு மாதம் வாழ்ந்திருக்கிறான். அதை நினைக்கையில் இப்போதும் மனசுக்குச் சுகமாக இருக்கிறது. அருமையாக நேர்ந்த அந்த வாழ்க்கையை விடுத்து வேறு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட குற்றத்துக்கான தண்டனைதானோ இப்போது தான் அனுபவிக்கிற வேதனைகளும் அவமானங்களும் என்று எண்ணியவாறே அவன் சைக்கிளை மிதித்தான். இன்னும் ஒரு மைலாவது இருக்கும். தொடர்ந்து ஒரு வேலையும் கிடைக்காமல் இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நந்தகோபால் வேலை செய்யும் இடத்துக்கு இவனைத் தேடி வந்தாள் கிரிஜா. ஆபீஸ் முடிகிற நேரமானதால் இவளைக் கொஞ்ச நேரம் காத்திருக்கச் செய்த பின் இவளுடனே அவனும் வௌியில் வந்தான். இருவரும் ஓட்டலுக்குப் போயினர். அவள் மிகவும் களைத்திருந்தாள். இவன் இரண்டு காபிதான் சொல்ல இருந்தான். அதை எப்படியோ புரிந்து கொண்டு அவள் சொன்னாள்: "எனக்கு வெறும் காபி மட்டும் போதாதுங்கோ... எதனாச்சும் சாப்பிடணுங்கோ" அவள் மனசின் வெண்மை இவனைக் கனிய வைத்தது. அன்று அவளை மிகுந்த அன்போடு இவன் உபசரித்தான். பகல் முழுதும் அவள் சாப்பிடாதிருந்தாள் என்றும் இப்போது வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறாள் என்றும் தெரிந்தபோது அவளுக்காக மனம் வருந்தினான். அவள் அவனிடம் ஏதாவது வேலைக்குச் சிபாரிசு செய்யச் சொன்னாள். நம்பிக்கை இல்லாமலே அவன் அவளுக்கு வாக்குறுதி தந்தான். மாலையில் அவளுடன் அவனும் அவள் வீடுவரைச் சென்று சமையலுக்கான பொருள்களைக் கூட இருந்து வாங்கி, அதற்கு இவன் பணம் கொடுத்தான். அன்றிரவு இவனை இவள் தன்னுடன் வீட்டில் சாப்பிடச் சொன்னாள். அவள் சமையல் செய்கிற அழகைப் பக்கத்திலிருந்து அவன் பார்த்துக் கொண்டிருந்தான். இரவு அங்கு அவன் சாப்பிட்டான். அவனுக்குத் தன் தாயின் பரிவும் அவள் கைச் சமையலின் ருசியும் நினைவுக்கு வந்தது. அவள் தன் சமையல் அவன் ருசிக்கு ஏற்கிறதா என்று மிகவும் பக்தி சிரத்தையுடன் வினவி வினவிப் பரிமாறினாள். அன்றிரவு இவன் அங்கே தங்க நேர்ந்தது. அந்த இரவில் தான் அவள் தன்னைப் பற்றியும் தன் தாய் தம்பி வாழ்க்கை நிலைமைகளைப் பற்றியெல்லாம் இவனோடு மனம் விட்டுப் பேசினாள். திடீரென்று தோன்றிய ஒரு யோசனையை அவனிடம் அவள் வௌியிட்டாள். அவள் சொன்னாள்: "நீங்க மெஸ்ஸீக்குக் குடுக்கிற பணத்தை இங்கே கொடுத்தால் உங்களுக்கும் சமைச்சுப் போட்டு நானும் சாப்பிடுவேன்... என்னாங்கோ- உங்களுக்கு சௌகரியப்படுமாங்கோ?..." அவன் வெகுநேரம் யோசித்த பிறகு சம்மதித்தான். இதுவரை அவர்களிடையே வெறும் நட்பாக இருந்த உறவு அன்று அவனுக்கொரு புதிய அனுபவமாயிற்று. அது வாழ்க்கையிலேயே அவனுக்குப் புதிது. அதே மாதிரி ஒரு புதிய மனிதனைச் சந்திப்பது அவளுக்கும் முதலும் புதிதுமான அனுபவம். தான் எதனாலோ வெறுத்தும் பயந்தும் ஒதுக்கி வைத்த குடும்ப வாழ்க்கை என்பது, ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்தல் என்பது எவ்வளவு சுகமான, சுவையான, அர்த்தமுள்ள அனுபவம் என்பதை அவன் கண்டு மயங்கினான். அந்த வீடும் அந்த வாழ்க்கையும் மிக மிக எளிமையானது. மாடியின்மீது கூரை போட்ட ஒரே அறையில் தான் சமையல், படுக்கை எல்லாம். குளிப்பதற்குக் கீழே வரவேண்டும். குண்டும் குழியுமான தரையில் பாய் விரித்துப் படுக்க வேண்டும். அவளுடைய அம்மாவோ, தம்பியோ - அவர்கள் பகலில்தான் வருவார்கள் - அப்போது அங்கே இருக்க நேர்ந்தால் இப்போதுதான் வந்ததுபோல் நடிக்க வேண்டும். இதெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தான் கல்யாணமே வேண்டாம் என்று பயந்திருந்த காரணங்களை அவளிடம் சொன்னபோது அவள் சிரித்தாள். "உங்க நைனா, அம்மாவைக் கொடுமைப்படுத்தினாருன்னா பயந்துகினு இருந்தீங்கோ? ஒரு பொண்ணுக்கு இந்த பயம் வந்தா நாயம்... ஆம்பளைக்கு இதிலே என்னாங்கோ பயம்?... அவரை மாதிரி நீங்க உங்க பெண்சாதியே அடிக்காம இருந்தா சரியாப்பூடுது..." அவன் அவளிடம் கல்யாணத்தைப் பற்றியும், ஊரிலிருந்து அம்மா எழுதுகிற கடிதங்களைப் பற்றியும் பேசினான். இருவரும் ஒன்றாக வாழ்ந்துகொண்டு தான் இன்னொருத்தியைக் கல்யாணம் செய்து கொள்கிற விஷயமாக அவன் அவளிடம் பேசுவதும், அதற்கு உடன்பாடாக அவளும் அவனை வற்புறுத்துவதும் முரண்பாடான விஷயமாகவோ பொருத்தமற்றதாகவோ இருவருக்குமே தொன்றவில்லை. தனித்தனியாக இருக்கிற நேரத்தில் மனசின் ஆழத்தில் அந்த முரண்பாடு தோன்றியதன் காரணமாகவே அவர்கள் அது குறித்து மிகச் சாதாரணமாகவும் அதிகமாகவும் பேசினார்கள் போலும். கடைசியில் ஒருநாள் நந்தகோபால் தன் தாய் வற்புறுத்திச் சொல்கிற, தனது சொந்தத்துப் பெண்ணும், பத்தாவது படித்தவளும், மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டவளூம், இதற்கு முன்னால் இவனே பார்த்து அழகிதான் என்று ஒப்புக் கொள்ளப்பட்டவளுமான வத்ஸலாவைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்துக் கடிதம் எழுதியபின் அந்தச் செய்தியை கிரிஜாவிடமும் கூறினான். அவள் மனத்தினுள் அவளே உணராத வண்ணம் ரகசியமான ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தாலும் மனம் நிறைந்த சந்தோஷத்துடனும் சிரிப்புடனும் அவனைப் பாராட்டினாள். 'புது மாப்பிள்ளை புது மாப்பிள்ளை' என்று பரிகாசம் செய்தாள். என்னென்னவோ புத்திமதிகள் கூறினாள். அவனைவிட அனுபவமும் முதிர்ச்சியும் உடையவள் என்பதால் அவனுக்கு நிறையவும் கற்றுத் தந்தாள். அதற்காக அவன் அவளிடம் மிகுந்த நன்றி பாராட்டினான். பெண் என்றாலே பயந்தும் வெறுத்தும் ஓடிய தன்னைக் கல்யாணத்துக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் தயார்ப்படுத்திய பொறுப்பு அவளுடையதுதான் என்று அவன் நம்பியது மாத்திரமல்லாமல் அவளிடமே அதைத் தெரிவித்தான். அப்போதெல்லாம் என்னவென்று விளங்காத ஓர் உணர்ச்சியுடன் வாய்க்குள் அவள் சிரித்துக் கொள்வாள். அவளோடு சேர்ந்து இவன் இருந்த அந்த இரண்டு மாத காலத்தில், பக்கத்திலுள்ள ஒரு நர்சரி பள்ளியில் 'அன்ட்ரெயின்ட்' டீச்சராக, ஒரு டெம்பரரி வேலையும் அவள் சம்பாதித்துக் கொண்டிருந்தாள். மாலை நேரங்களில் தையல் கிளாசுக்குப் போனாள். ஏற்கனவே அவளுக்கு டெய்லரிங் கொஞ்சம் தெரியுமாம். அவனுடைய கல்யாணத்துக்குத் தேதி குறிக்கும்வரை அவன் அவளோடுதான் இருந்தான். பின்னர் அவளேதான் கூறினாள். "நான் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்கோ. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கிறது கல்யாணத்துக்கு. நீங்க உங்க மெஸ்ஸீக்கே போயிடுங்கோ. உடம்பெ நல்லாப் பாத்துக்குங்கோ... நல்லாச் சாப்பிடுங்கோ... கல்யாணத்துக்கு அப்பாலே ஒரு ஃபிரண்டு மாதிரி வந்து பாருங்கோ. எனக்குச் சந்தோஷமா இருக்கும்." அப்போது அவள் கண் கலங்கியதை எண்ணி இப்போது மனம் பொருமிய நந்தகோபால் அவள் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு மாடியை அண்ணாந்து பார்த்தான். மாடி மீதுள்ள கூரையின் சிறிய ஓட்டைகளினூடே உள்ளே விளக்கு எரிவது தெரிந்தது. தீக்குச்சியைக் கிழித்து வாட்சில் மணி பார்த்தான். பன்னிரண்டு. திடீரென்று தன்னைப் பார்க்கும் அவளுடைய ஆச்சரியத்தை எண்ணிக்கொண்டு, அவளைப் பார்க்கப் போகிற ஆவலில் நெஞ்சு படபடக்க அவன் படியேறினான். மேல் படியிலிருந்து அவன் தலை தெரியும்போது காலடிச் சத்தம் கேட்டுத் தையல் மிஷின் அருகே ஸ்டூலில் உட்கார்ந்து, எதையோ ஊசியால் பிரித்துக் கொண்டிருந்த கிரிஜா, "யாரது?" என்ற அதட்டல் குரலுடன் எழுந்தாள். "நான் தான்" என்று இவன் பேரைச் சொல்லுவதற்கு முன் அவள் சந்தோஷம் தாங்க முடியாமல் "ஹை! நீங்களா! வாங்கோ" என்று வரவேற்றாள். அவனைத் தழுவிக் கொள்ளப் பரபரத்த கைகளின் விரல்களைத் திருகித் திருகி நெட்டி முறித்துக் கொண்டே, "என்ன இந்த நேரத்திலே? உக்காருங்கோ. சாப்பாடெல்லாம் ஆச்சா?" என்று பலவாறு கேட்டுக்கொண்டே பாயை எடுத்து விரித்து உட்காரச் சொன்னாள். "திடீர்னு உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சு - வந்தேன்" என்றான். அவள் கலவரமடைந்தாள். அது அவனுக்குத் தெரியாத வண்ணம் சமாளித்துச் சிரித்தாள். "தாகத்துக்குச் சாப்பிடுங்கோ" என்று தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். இருவருக்குமே திகைப்பும் படபடப்பும் அடங்கச் சற்று நேரம் பிடித்தது. அவன் அந்தப் புதிய தையல் மிஷினைப் பார்த்து அதைப் பற்றி விசாரித்தான். அவள் தான் டெய்லரிங் பாஸ் பண்ணியதையும், இன்ஸ்டால்மெண்டில் இதை வாங்கி இருப்பதையும், இதில் நிறையச் சம்பாதிப்பதையும், இந்த மாதம் மூணு பவுனில் ஒரு செயின் வாங்கிப் போட்டுக் கொண்டதையும் காட்டி - "ஸ்கூல் வேலையை விட்டுடலீங்கோ" என்று கூறித் தனது நல்ல நிலைமையை விளக்கி அவனைச் சந்தோஷப்படுத்தினாள். அவன் மனசுக்கு அவள் கூறியவை மிகவும் இதமாக இருந்தன. அவன் ரொம்ப மகிழ்ச்சியடைந்தான். "நீங்க எப்படி இருக்கிறீங்கோ?... உங்க 'வய்ப்' நல்லா இருக்காங்களாங்கோ?" என்று குதூகலமாய் அவள் விசாரித்தபோது அவன் பெருமூச்சுடன் அவளைப் பார்த்து வருத்தமாகச் சிரித்தான். அவள் தையல் மிஷின் மீது குவிந்து கிடந்த தைத்த, தைக்க வேண்டிய, வெட்டிய, வெட்ட வேண்டிய புதுத்துணிகளையெல்லாம் எடுத்துப் பிரித்து ஒவ்வொன்றாக ஒரு பெட்டியினுள் மடித்து வைத்து இவனோடு பேசிக் கொண்டிருப்பதற்காக வேலைகளை 'ஏறக் கட்டி'க் கொண்டிருந்தாள். அவன் ஏதோ வருத்தத்தில் இருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது. அதற்காகத்தான் அவன் சந்தோஷப்படத்தக்க விஷயங்களை முந்திக்கொண்டு அவள் சொன்னாள். இதனை புத்திசாலித்தனத்தால் செய்ய வில்லை; நல்லியல்பால் செய்தாள். எனவே இப்போது அவன் வருத்தம் அறிவுக்குப் புரிய, தானும் வருந்தினாள். அவன், ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு நெஞ்சு நிறையப் புகையிழுத்துக் கூரையை நோக்கி நீளமாக ஊதிவிட்டான். சிகரெட்டின் சாம்பலை மிகக் கவனமாக விரலிடுக்கில் உருட்டி தட்டிக்கொண்டே அவள் முகத்தைப் பாராமல் வருத்தம் தோய்ந்த குரலின் சொன்னான்: "நான் உனக்குச் செஞ்ச பாவத்துக்கு இப்ப அனுபவிக்கிறேன். நான் உன்னையே கல்யாணம் பண்ணிக் கிட்டிருக்கலாம். ஓ! இப்ப என்ன பண்றது?" என்று புலம்பிக்கொண்டிருந்தவனின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டாள் கிரிஜா. கல்யாணம் முடிந்து தன்னோடு புறப்பட்டபோது அவள் ஆரம்பித்த அழுகையை இன்னும் நிறுத்தவில்லை என்றும், அவளுக்குத் தன்னோடு வாழ்வதில் சந்தோஷமில்லை என்றும், தன்னை அவள் அவமதிப்பதையும், இன்று கூடத் தலையில் அடித்துக் கொண்டதையும் அவன் வாய் ஓயாமல் வத்ஸலாவைப் பற்றிப் பேசித் துயரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தான். தையல் மிஷினுக்குப் பக்கத்திலிருந்து எண்ணெய் போடுகிற 'ஆயில் கேனை' எடுத்துக் கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையேயுள்ள புண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டே, அவன் புலம்புவதையெல்லாம் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் கிரிஜா. "பாவங்கோ அது. அறியாப் பொண்ணு தானேங்கோ?" என்று அவள் சொன்னதைக் கேட்டு அவன் ஒன்றும் புரியாமல் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான். "உங்களைக் கல்யாணம் பண்ணிக்கினதுனாலேயே உங்களுக்குச் சமமா ஆயிடுவாங்களாங்கோ அவுங்க?... அப்பா அம்மாவுக்கு ரொம்பச் செல்லப் பொண்ணுன்னு நீங்க தானேங்கோ சொல்லியிருக்கீங்கோ? எல்லாரையும் விட்டுட்டு வேற ஒரு ஊரிலே தனியா உங்களேட வந்து வாழறப்ப அந்தக் கொழந்தை மனசு எப்படிங்கோ இருக்கும்? அதெப் புரிஞ்சு நீங்கதான் - அட்ஜஸ்ட் பண்ணி நடக்கணும். நீங்க 'டிரெய்ன்ட்' இல்லீங்களா? ஒரு ஆம்பிளைங்கறதே அவுங்களுக்குப் புதுசு இல்லீங்களா? பயமா இருக்கும்ங்கோ; அருவருப்பாகூட இருக்கும்ங்கோ... நான் உங்ககிட்ட அப்படியெல்லாம் இருந்தேன்னா அதுக்குக் காரணம் என்னாங்கோ? நான் 'எக்ஸ்பீரியன்ஸ்ட்' இல்லீங்களா? யாருங்கோ 'வய்ஃபா' இருக்கிறதுக்கு டிரெய்ன்ட் ஹாண்ட் கேக்கறாங்கோ? இப்ப சொல்றீங்களே - என்னையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு - அப்ப ஏங்க அது தோணலே? நான் ஏற்கனவே 'டிரெய்ன்ட்'ங்கற 'டிஸ்குவாலிஃபிகேஷன்' தாங்கோ அதுக்குக் காரணம்! அதனாலே, உங்க வய்ஃபை விட நீங்க அனுபவஸ்தர்ங்கிறதை நெனைப்பிலே வெச்சிக்கணும். அவுங்க கொழந்தைன்னு புரிஞ்சுக்கணும். நான் உங்ககிட்டே இருந்த மாதிரி நீங்க அவுங்ககிட்டே இருக்கணும். அப்படித்தான் போகப் போக எல்லாம் சரியாப் போயிடுங்கோ..." என்று அவள் எல்லாவற்றையும் லேசாக்கி விட்டதை நினைத்து அவன் ஆச்சரியப்பட்டான். இவளிடம் வரவேண்டுமென்று தான் நினைத்தது எவ்வளவு சரியானது என்று எண்ணினான். அவன் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததால் நிறுத்தியிருந்த - கால் விரலிடுக்கில் எண்ணெய் விடுகிற - காரியத்தில் மறுபடியும் முனைந்தாள். "என்ன காலிலே?" என்று அவள் அருகே நகர்ந்து குனிந்து பார்த்தான் அவன். "போன வாரம் புதுசா செருப்பு வாங்கினேன். கடிச்சிடுச்சுங்கோ. மிஷின் தைக்கறதிலே விரல் அசையறதனாலே சீக்கிரம் ஆற மாட்டேங்குது" என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்: "பார்த்தீங்களாங்கோ... செருப்புக்கூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ... அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களாங்கோ?" அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதுவிட்டான். ----- #20. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ? நாற்பது வருஷம் ஆச்சு... இந்தாத்துக்கு மாட்டுப் பொண்ணா வந்து... கை நெறைய ஒரு கூடைச் சொப்பை வச்சுண்டு... அப்பா தூக்கிண்டு வந்து விட்டாளே... அப்போ அம்மா, - அவர்தான் எங்க மாமியார் இருந்தார்... மாமியாருக்கு மாமியாரா அம்மாவுக்கு அம்மாவா... பெத்த தாய்க்கு மகளாயிருந்தது அஞ்சு வருஷ காலந்தானே!... மிச்ச காலத்துக்கும் மாமியாருக்கு... மாட்டுப் பொண்தானே... கூடத்துலே என்னை இறக்கி விட்டுட்டு மேல் துண்டாலே முகத்தை மூடிண்டு அப்பா என்னத்துக்கு அழுதார்னு இப்பவும் நேக்குப் புரியலை... இதோ இந்த முற்றத்துலே - அப்பவே அடத்துக்குக் குறைச்சலில்லே. அந்தச் செங்கல் தரையிலேதான் பம்பரம் விட்டாகணும்னு நாக்கைத் துருத்திக் கடிச்சுண்டு சொடுக்கிச் சொடுக்கிப் பம்பரம் விட்டுண்டு நிக்கறாரே, இவர் நேக்கு ஆத்துக்காரர்னு, புரியறதுக்கே ரொம்ப நாளாச்சே... அதுக்காக 'நறுக் நறுக்' குனு வந்து தலையிலே குட்டறதோ?... 'போடா'ன்னு ஒரு நாள் நன்னா வெசுட்டேன்... சமையலுள்ளே காரியமா இருந்த அவர், ஓடி வந்தார். "ஐயையோ... என்னடீது? அவன்... இவன்னு... அவனை." "அவன் மட்டும் என்னைக் குட்டலாமோ?"... அம்மாவுக்கு ஒரு பக்கம் சிரிப்பா வரது... என்னைக் கட்டி அணைச்சுண்டு எங்க உறவைப் பத்தி விளக்கிச் சொல்றார்... ஆனால், எல்லாம் புரியும் காலம் வரச்ச தானே புரியறது.... நெனைச்சுப் பார்த்தா, எல்லாமே ஆச்சரியமா இருக்கு... இவர் கிட்டே நேக்கு எப்படி இத்தனை பயம் வந்தது! பயம்னா, அது சந்தோஷமான பயம்... மரியாதையான பயம், பயம்ங்கறதைகூடச் சரியில்லே... அது ஒரு பக்தின்னு தோண்றது... எப்படியோ வந்துடுத்தே... ம்..ம்!... நாற்பது வருஷத்துக்கு மேலே ஆச்சு... 'இந்த மனுசனைக் கட்டிண்டு நான் என்னத்தைக் கண்டேன். ஒரு அது உண்டா, ஒரு இது உண்டா'ன்னு குளத்தங்கரைலேயிருந்து கோயில் பிரகாரம் வரைக்கும் அலுத்துண்டு அழுதுண்டு சில பேர் அழிச்சாட்டியம் பண்ணிண்டு திரியறாளே, அவாளெல்லாம் என்ன ஜன்மங்களோ அம்மா! நேக்கு ஒரு குறையும் இல்லை... ஆமாம்... எந்தக் கோயிலிலே வந்து வேணாலும் நின்னு ஈரத் துணியைக் கட்டிண்டு சொல்வேன் - எனக்கு ஒரு குறையும் இல்லை... பாக்கறவா சொல்லுவா... நேக்கு குழந்தை இல்லைங்கறதைப் பெரிய குறையாச் சொல்லுவா... சொல்றா... நானே கேட்டிருக்கேன். எதுக்கு... பொய் சொல்லுவானேன்... நேக்கும் அப்படி ஒரு குறை கொஞ்ச நாள் இருந்திருக்கு. அது எவ்வளவு அஞ்ஞானம்னு அப்பறமாத்தான் புரிஞ்சது... நேக்கே சொந்தமா ஒண்ணும் புரிஞ்சுடலை... அவர் புரிய வச்சார். அவராலேதான் அது முடியும். பேச ஆரம்பிச்சார்னா எங்கேருந்துதான் அந்தச் சூத்திரங்களெல்லாம் கையைக் கட்டிண்டு வந்து நிக்குமோ! சாஸ்திரங்களிலேருந்தும் வேதங்களிலேருந்தும் நிரூபணங்கள் எடுத்துக் காட்டி... எப்பேர்ப்பட்ட சந்தேகங்களானாலும் சரி, என்ன மாதிரியான அஞ்ஞானக் கவலைகளானாலும் சரி, அவரோட பேச்சினாலேயே அடிச்சு ஓட்டற சாமார்த்தியம்... அப்படி ஒரு வாக்கு பலம்... அப்படி ஒரு ஞானம்... அது அவருக்கு மட்டுந்தான் வரும்... ஏதோ, எங்க ஆத்துக்காரர்ங்கறதுக்காக ஒரேயடியாப் புகழ்ந்துடறேன்னு நெனைச்சுக்காதேங்கோ... அவரைப் புகழற அளவுக்கு நேக்கு ஞானம் போறாது. அப்பேர்ப்பட்ட வித்துவானுக்குச் சரியான நிரட்சரகுஷி வந்து சகதர்மிணியா வாச்சிருக்கேன் பாருங்கோ. இதைப் பத்தி நானே ஒரு தடவை அவர் கிட்டே சொன்னேன். பெரிய பிரசங்கமே பண்ணிட்டார். அவருக்கு நான் சகதர்மிணியா இருக்கறது எவ்வளவு பாந்தம்கிறதைப் பத்தி... அவருக்கு... அதுலே எவ்வளவு சந்தோஷம்கிறதைப் பத்தி. அவர் என்கிட்டே சொன்னதெல்லாம் நான் எப்படிச் சொல்றது? அவருக்குச் சகதர்மிணியாக இருக்கறதுக்கு நேக்குத் தகுதி இருக்குங்கறது வாஸ்தவமாகவே இருக்கட்டுமே! அதனாலே அவரைப் புகழற தகுதி நேக்கு வந்துடுத்துன்னு அர்த்தமாயிடுமா? மகா வித்துவான் ஸரீாமான்..னு சொன்னா இந்த ராஜதானி பூராத் தெரியும். இவரோட பிரக்கியாதி சென்னைப் பட்டணம் என்ன, காசி வரைக்கும் பரவி இருந்தது... இவர்கிட்டே படிச்சவாள், இந்தாத்துலே நேக்குக் கூடமாட வேலை செஞ்சவாள் எத்தனை பேர் கலெக்டராகவும் பெரிய பெரிய உத்தியோகத்திலேயும் இருக்கா தெரியுமோ? நாமே பெத்து, நாமே வளத்து, நாயும் பூனையுமா நின்னிண்டிருந்தாத்தானா? "இதோ, இப்பவும் சங்கர மடத்துத் திண்ணையிலே, எதிரே வரிசையாக் குழந்தைகளை உட்கார்த்தி வச்சுண்டு அவர் வித்தியாப்பியாசம் பண்ணி வச்சிண்டிருக்கார்... அவர் குரல் மட்டும் தனியா, ஒத்தையா, கனமா, நாபிலேருந்து கிளம்பி ஒலிக்கறதைக் கேக்கறச்சே, உடம்பெல்லாம் சிலிர்க்கறது. அப்புறம் இந்த வாண்டுப் 'படை' களெல்லாம் கூடச் சேர்ந்துண்டு முழங்கறதே... அந்தக் குழந்தைகள் அத்தனை சிரத்தையோட, பக்தியோட மெல்லீசுக் குரலிலே அவர் மாதிரியே சொல்லணும்னு பிரயாசைப் பட்டு, அந்தக் கனம் இல்லாம அந்த ஸ்தாயியை மட்டும் எட்டறதுக்கு வயத்தை எக்கிண்டு, மார்மேலே கையையும் கட்டிண்டு உச்சாடனம் பண்றாளே... அது வந்து காதிலே விழறச்சே, வயத்தை என்னமோ செய்யறதே, அது பெத்தவாளுக்கு மட்டுந்தான் வருமோ?..." அவர்தான் சொல்லுவார்... 'குழந்தையைப் பெத்துக்கறது ஒண்ணும் பெரிய காரியமில்லை; அதுக்கு வயத்தை அடைச்சு வளத்துடறதும் ஒண்ணும் பெரிய காரியமில்லை. அறிவையும் ஒழுக்கத்தையும் தந்து அவனை ஞானஸ்தனாக்கறதுதான் பெரிய காரியம். நாமெல்லாம் சாதாரணக் குழந்தைகளைப் பெத்தவாள்ங்கற பெயரைவிட இந்த மாதிரி ஞானஸ்தர்களை உற்பத்தி பண்ணினவாள்ங்கற பேருதான் சிரேஷ்டமானது...' இன்னும் என்னென்னமோ சொல்லுவார். நேக்கு எங்கே அதெல்லாம் திருப்பிச் சொல்ல வரது?... ஆனா, அது எவ்வளவு சத்தியம்னு மனசுக்குப் புரியறது. இவர்ட்டே படிச்சுட்டு இப்போ பட்டணத்துலே ஏதோ காலேஜிலே ஸம்ஸ்கிருத புரபசரா இருக்கானே சீமாச்சு... இப்போ பண்டித ஸரீனிவாச ஸாஸ்திரிகள்னு பேராம்... கேக்கறச்சே என்னமா மனசுக்குக் குளிர்ச்சியா இருக்கு... பெத்தாத்தான் வருமோ... பெத்தவள் இங்கேதான் இருக்காள்... தன் பிள்ளை தன்னைச் சரியாகக் கவனிக்கலேன்னு காலத்துக்கும் சபிச்சிண்டு... ஒண்ணொண்ணும் அவர் சொல்றச்சே, என்னமோ சமத்காரமா தர்க்கம் பண்ணிச் சாதிக்கற மாதிரித் தோணும். திடீர்னு, அன்னிக்கே அவர் எவ்வளவு சரியாச் சொன்னார்னு நெனச்சு நெனச்சு ஆச்சர்யப்படற மாதிரி ஒண்ணொண்ணும் நடக்கும். அன்னிக்குக் கோயிலுக்குப் போயிட்டு வரச்சே சீமாச்சுவோட அம்மா, ஒரு நாழி நிறுத்தி வச்சு, அந்தச் சீமாச்சு இவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமே மாமியார் வீடே கதின்னு போய்ட்டதையும், அவனை வளக்கறதுக்கும் படிக்க வைக்கறதுக்கும் அவள் பட்ட கஷ்டத்தையெல்லாம் கொஞ்சங்கூட நன்றியில்லாமல் அவன் மறந்துட்டதையும் சொல்லிப் புலம்பிண்டு, அழுதுண்டு அவனைச் சபிச்சாளே... அப்போ நேக்குத் தோணித்து... இப்படிப் பெக்கவும் வேண்டாம், இப்படிச் சபிக்கவும் வேண்டாம்னு... ஏதோ அவள் மனசு சமாதானத்துக்காக நானும் தலையைத் தலையை ஆட்டிண்டிருந்தேனே ஒழிய, நேக்குப் புரிஞ்சது; இந்தக் கிழவி பொறாமையாலே கிடந்து எரிஞ்சுண்டிருக்காள்னு... கிழவிக்கு இங்கே ஒரு குறைச்சலும் இல்லே... நன்னா சௌக்கியமாத்தான் இருக்காள்... இருந்தாலும் தான் பெத்த பிள்ளையினாலெ மத்தவா இன்னும் சுகப்பட்டுடுவாளோங்கற ஆத்திரம், கிழவி மனசை அலக்கழிக்கறது... பாத்யதை கொண்டாடறவாளாலே எப்படிப் பாசம் கொண்டாட முடியறதே இல்லேன்னு--- எல்லாம் இவர் சொல்லித்தான் நேக்கும் புரியறது... இல்லேன்னா இந்தக் கிழவியோட சேந்துண்டு நானும் சீமாச்சுவை ஒரு பாட்டம் பாடிட்டுத்தானே வந்திருப்பேன். இவர் எல்லாத்தையும் எப்படித்தான் கறாரா, தீர்க்கமா அலசி அலசிப் பாத்துடறாரோ? தனக்கு அதனாலே நஷ்டமா லாபமானுகூட யோசிக்க மாட்டார். எத்தனை பேர் அதை ஒத்துக்கறா, எத்தனை பேர் ஒத்துக்கலேங்கறதெப் பத்தியும் கவலைப்பட மாட்டார். அவரோட சாஸ்திரத்துக்கு, தர்க்கத்துக்கு ஒத்துவராத ஒரு காரியத்தை லோகமே அவர் மேலே திணிச்சாலும், 'தூ'னு தள்ளி எறிஞ்சுடுவார் - அப்படி அதைத் தூர எறிஞ்சது எவ்வளவு நியாயம்னு, லோகத்தையே இழுத்து வச்சுண்டு வாதம் பண்ணவும் தயாரா இருப்பார். நானும் இத்தனை காலமா பாத்துண்டிருக்கேனே... ஒத்தராவது, 'அதென்னமோ, நீங்க சொல்றது சரியில்லை ஸ்வாமி'ன்னு சொல்லிண்டு போனதில்லை. அப்படிச் சொல்லிண்டு வருவா. அவாளோடெல்லாம் திண்ணையிலே உக்காந்து இவர் பேசிண்டிருக்கறச்சே, நான் அவர் முதுகுக்குப் பின்னாலே அறையிலே உட்கார்ந்து கேட்டுண்டிருப்பேன். அவர் பேசறதிலே ரொம்ப விஷயங்கள் எனக்குப் புரியறதே இல்லை. அவர் என்னமா இங்கிலிஷ் பேசறார். நேக்குத் தெரிஞ்சு இருபது வயசுக்கு மேலே இவர் இங்கிலீஷ் படிச்சார். ஒத்தருக்கு ஸம்ஸ்கிருத பாடம் சொல்லிக் கொடுத்துண்டு - அவருக்கு இவரைவிட வயசு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் - அவர்கிட்டே இவர் இங்கிலீஷ் கத்துண்டார். இங்கேருந்து கும்பகோணத்துக்குப் போயிப் போயி என்னென்னமோ பரீட்சையெல்லாம் எழுதினார். இப்போ, இவர் எழுதின புஸ்தகங்களை அங்கெல்லாம் படிக்கிறவாளுக்குப் பாடமா வெச்சிருக்காளாம். பத்து வருஷத்துக்கு முன்னே காசியிலே ஏதோ மகாநாடுனு இவர் போறச்சே, நானும் கூடப் போனேன். இவருக்கு என்னென்னமோ பட்டம் எல்லாம் குடுத்தா... நேக்கு ரொம்பப் பெருமையா இருந்தது. நான் வெள்ளிக் குடத்து நிறைய கங்கா தீர்த்தம் எடுத்துண்டு வந்து, ஊர்லே இருக்கிறவாளுக்கெல்லாம் குடுத்தேன். நேக்கென்ன குறைச்சல்? அப்போதான் காசிலேருந்து திரும்பி வரச்சே சென்னப் பட்டணத்துலே சீமாச்சு ஆத்திலே தங்கினோம். பட்டணத்துப் பெரிய ரயிலடிக்கு, சீமாச்சு மோட்டார் காரோட வந்திருக்கான். ரயிலடியிலேயே எங்களை நிறுத்தி வச்சு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிண்டான். சமுத்திரக் கரையை எல்லாம் சுத்திக் காட்டினான். சென்னப் பட்டணத்துலே மோட்டார் கார் இல்லாமே ஒண்ணும் முடியாதாம். அப்பவும் முன்னே மாதிரியே இவர்கிட்டே வந்து கையைக் கட்டிண்டு நின்னுண்டு ஏதேதோ சந்தேகமெல்லாம் கேட்டுண்டான். ஆனால், அவன் காலேஜீக்குப் போறச்சே அவனைப் பாக்கறதுக்கு நேக்கே பயமாயிருந்தது. துரை மாதிரி என்னென்னத்தையோ மாட்டிண்டிருக்கான். இவர் என்னடான்னா அதைப் பார்த்துட்டு 'ஓ'ன்னு சிரிக்கிறார். அதுக்கு அப்பறந்தான் ஒரு நாள் இந்தாத்துக்கு முன்னாடி ஒரு பெரிய கார் வந்து நின்றது. யார் யாரோ பெரிய மனுஷாள் - சீமாச்சு புரபசரா இருக்கானே அந்தக் காலேஜை சேர்ந்தவாளாம் - எல்லாம் வந்து - இந்தாத்துத் திண்ணையிலேதான் உட்கார்ந்துண்டா... சீமாச்சு மட்டும் சொந்தமா அடுக்களை வரைக்கும் வந்துட்டான். நான் அவன்ட்டே அடிக்கடி ஒரு நடை வந்து தாயாரைப் பார்த்துட்டுப் போகப்படாதோன்னு கேட்டேன்... 'எனக்கெங்கே முடியறது... என்னோட வந்துடுனு கூப்பிட்டாலும் வரமாட்டேங்கறாளே'ன்னு சொல்லி வருத்தப்பட்டுண்டான். அப்பறமா அவன் வந்திருக்கிற காரியத்தைச் சொன்னான். அவன் வேலை பாக்கற காலேஜிலே இவரை ஏதோ பெரிய உத்தியோகத்துலே வச்சுக்கறதுக்குத் தவம் கெடக்கறாளாம். ஆனால், இவரைக் கேக்கறதுக்குப் பயப்படறாளாம். 'நான் கேட்டு அவரைச் சம்மதிக்க வெக்கறேன்'னு தைரியம் குடுத்து இவன் அழைச்சிண்டு வந்திருக்கானாம்... இன்னும் என்னென்னமோ சொன்னான்... நேக்குக் கூட ரொம்ப ஆசையாத்தான் இருந்தது. இவர் வந்ததும், எல்லாரும் திண்ணையிலே உக்காந்துண்டு பேசினா, பேசினா அப்பிடிப் பேசினா. நான் அறைக்குள்ளே உக்காந்து கேட்டுண்டே இருந்தேன். நேக்கு அவர் பேசினது ஒண்ணும் புரியலை. ஆனால், ஒண்ணு புரிஞ்சது... அவா ஜம்பம் இவாகிட்டே சாயலைன்னு... கடைசியிலே அன்னிக்கு அவாள்ளாம் போனப்பறம் நானே கேட்டுட்டேன்: "உங்களுக்கு இந்த உத்தியோகத்தெ ஒத்துண்டா என்ன? அங்கே படிக்கிறவாளும் மாணவர்கள்தானே?... உங்களுக்கு என்ன இப்படி ஒரு பிடிவாதம்? பாவம்! சீமாச்சு ரொம்ப ஆசை ஆசையா நம்பிக்கையோட வந்தான்!" - நான் சொன்னதெக் கேட்டு அவர் சிரித்தார். இவருக்கு இது ஒண்ணு. உடம்போடயே பொறந்தது அந்தச் சிரிப்பு. அதுவும் இந்தச் சிரிப்பு இருக்கே என்கிட்டே மாத்திரம்தான். சிரிச்சுண்டே சொன்னார்: "சீமாச்சு கட்டிண்டு திரியறானே அந்த மாதிரி என்னை வேஷம் கட்டிப் பாக்கணும்னு நோக்கு ஆசையா இருக்காக்கும்... வித்தியாப்பியாசம் பண்ணி வெக்கறதுக்கு கூலி வாங்கப் படாதுங்கறது உனக்குத் தெரியாதா? ஆசிரியனுக்குக் கூலி கொடுத்துட்டப்பறம் மாணாக்கனுக்கு அவர் கிட்டே என்ன மரியாதை இருக்கும்? எப்படி மரியாதை இருக்கும்? இவன் கூலி வாங்கறவன் ஆயிடறானே... கூலி பத்தாதுன்னு கொடி புடுச்சிண்டு கொஷம் போட்டுண்டு - என்னைக் கொடி புடிக்கவும் கோஷம் போடவும் கூப்பிட மாட்டான்னாலும் - அந்தக் கும்பலுக்குத் தலைவரா வாங்கோம்பா... எனக்கு இதெல்லாம் ஆகிற காரியமா? நீயே சொல்லு"ன்னார். நான் என்னத்தைச் சொல்றது?... பேசாம அவர் பேசிண்டிருந்ததெ வாயை மூடிண்டு கேட்டுண்டு இருந்தேன். இவர் உடம்பிலே ஒரு சட்டையெப் போட்டுண்டு நிக்கற மாதிரி நெனச்சுப் பாக்கிறப்பவே நேக்குச் சிரிப்புச் சிரிப்பா வரது? அந்த நெனப்பே ஒரு பாந்தமில்லாம இருக்கே... நானும் அவரோட சிரிச்சிட்டு, அந்த விஷயத்தை அதோட விட்டுட்டேன். அவரைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சிருந்தும் நான் போயி அவரைக் கேட்டதை நெனச்சித்தான் வெட்கப்பட்டேன். ஆனாலும், இந்த நாற்பது வருஷத்தில் அசடாவேதான் இருக்கேன்... புதுசு புதுசா ஏதாவது அசட்டுத்தனம் பண்ண வேண்டியது. அவர் சிரிக்க வேண்டியது - இப்படி ஒரு ஜன்மமாயிட்டேன். ஒரு பத்து நாளக்கி முன்னே பாருங்கோ... இப்படித்தான் - இவர்ட்டே படிக்கிற பையன் ஒருத்தன்... ஏதோ ஒரு சீட்டை எடுத்துண்டு வந்து, மாமி மாமி... இது கெவர்மண்ட் நடத்தற பரிசுச் சீட்டோ அதிர்ஷ்டச் சீட்டோ... என்னமோ சொல்லி, ஒரு ரூபாதான் வாங்கிக்கோங்க... கெடைக்கறதே கஷ்டம்... உங்களுக்காகச் சேத்து நான் வாங்கிண்டு வந்தேன்னு தந்தான்... நானும் அதெப் பத்தி ஒண்ணும் பிரமாதமா நெனச்சுக்காம, ஏதோ கொழந்தை நம்மை நெனச்சிண்டு அக்கறையோட வாங்கி வந்திருக்கேன்னு ஒரு ரூபாயைக் கொடுத்து வாங்கிட்டேன். அந்தக் கொழந்தை அதெப்பத்தி பெரிய பிரசங்கமே பண்ணினான்.... எத்தனையோ பேர் அதிலே பிரைஸ் வந்து லட்சாதிபதியா ஆயிட்டாளாம்... ஏழைகளுக்குத்தான் அதுவும் விழறதாம்... இன்னும் என்னென்னவோ சொன்னான்.... நான் சும்மா ஒரு வெளையாட்டுக்குத்தான் வாங்கினேன்... ஆனாக்க அன்னிக்கி சாயந்திரமே இவர் திண்ணையிலே உக்காந்துண்டு ஒரு அஞ்சாறு பேர்கிட்டே இந்தப் பரிசுச் சீட்டைக் கிழிச்சிக் கட்டிண்டிருந்தாரே பார்க்கலாம். அறையிலே உக்காந்து கேட்டுண்டு இருக்கறப்ப - என்னை அப்படியே செவுள்லே 'பளார் பளார்'னு பிடிச்சிண்டு அறையற மாதிரி இருந்தது. அதுவும் அன்னிக்கி அவர் பேசறச்சே, அது சாதாரணமா எப்பவுமே பண்ணுவாரே அந்த மாதிரி நிதானமா வாதம் மாதிரி இல்லே. இந்த லோகத்தையே சபிக்கப் பொறப்பட்டவர் மாதிரி ஆவேசமா கத்தினார். என்னத்துக்கு இவருக்கு இதிலே இவ்வளவு கோபம்னு நேக்குப் புரியவே இல்லே. "இந்த தேசத்திலே இது நடக்கலாமாங்காணும்... சூதாடி சூதாடட்டும். சோரம் போறவா சோரம் போகட்டும்... ராஜரீகம் பண்றவா, லோக பரிபாலனம் பண்றவா இதைச் செய்யலாமாங்காணும்... கலி முத்தி, நாம அழியப் போறொம்கறத்துக்கு இதாங்காணும் அத்தாட்சி. நெறி தவறாம ராஜபரிபாலனம் பண்ணின தருமன் எப்பிடி அழிஞ்சான்?... யோசிச்சுப் பாரும்... தருமனே சூதினாலேதானே அழிஞ்சான்.... சூதிலே ஜெயிச்சவனும் வாழறதில்லே, தோத்தவனும் வாழறதில்லேங்கற சத்யத்தைத்தானே ஐயா, மகாபாரதம் பேசறது... சூதாட்டத்துக்கும் ஒரு தர்மம் இருக்கு, கேளும்.... சம அந்தஸ்திலே இருக்கிறவாதான் சூது ஆடலாம்... அதுவே பாவம்தான்... அந்தப் பாவத்துக்கும் ஓர் அத்து வெச்சிருக்கா... ராஜரீகம் பண்றவா, ராஜ்ய பரிபாலனம் செய்யறவா பாமர மக்களை எல்லாம் இப்படி மாயாஜாலம் பண்ணி சூது ஆடறாளே, இது அடுக்குமா? போச்சு... எல்லாம் போச்சு... இனிமே இந்த ஜன சமூகத்திலே எந்த விவஸ்தையும் இருக்காது... ஓய வறுமையினாலே அழியறதைவிட சூதினாலேதான் ஜன சமூகமே அழிஞ்சு போயிடும். திருவள்ளுவருக்குத் தெருத் தெருவா சிலை வெச்சு பிரதிஷ்டை பண்ணாப் போறுமா... அவர் சூதுன்னு பொருள்பால்லே ஓர் அதிகாரமே எழுதி வெச்சிருக்காரே..."ன்னு அந்தப் பத்துப்பாட்டையும் எடுத்தெடுத்துச் சொன்னார். அர்த்தம் சொன்னார்... மகாபாரதத்திலேருந்து ஸ்லோகங்கள் பாடினார். 'உருப்படமாட்டேள்... உருப்படமாட்டேள்'னு தலையிலே அடிச்சிண்டார்... எனக்கு வயத்திலே புளி கரைக்க ஆரம்பிச்சுடுத்து... ஏண்டா, இந்தச் சனியனை ஒரு ரூபா குடுத்து வாங்கினோம்னு இருந்தது. ஆனாலும், என்னத்துக்கு இவர் இதுக்காகப் போயி இவ்வளவு ஆவேசம் காட்டறார்னும் புரியலை. இவர் சட்டை போட்டுக்கறதில்லே; லோகமே அதுக்காக இவர் மாதிரி சட்டையில்லாம, குடுமியும் வெச்சுண்டு, பஞ்சாங்கம் பாத்து க்ஷவரம் பண்ணிண்டு இருக்கணும்னு சொல்வாரோன்னு நான் பண்ணின காரியத்துக்கு வசதியாக மனசுக்குள்ளே, எதிர்வாதம் பண்ணிண்டேன். அந்தச் சீட்டை வாங்கி வச்சுண்டதனாலேயே இப்ப என்ன கெட்டுப் போயிட்டுதுன்னு சமாதானப்பட்டுண்டாலும், திடீர்னு நம்ம போறாத வேளை ஒரு நூறு ரூபா விழுந்து வெக்கறதுன்னு வெச்சுக்கோங்கோ... ஊரு பூரா இதுன்னா ஒரே அக்கப்போராயிடும்!... அதுவும் இவர் இந்த மாதிரிப் பேசிண்டு இருக்கறச்சே... நான் வாங்கி அது பரசியமா ஆயிடுத்துன்னா, இவரோட நாணயத்தைன்னா, எல்லாரும் சந்தேகப்படுவான்னு நேக்கு மனசைக் கொழப்பிண்டே இருந்தது... அந்தக் கொழந்தை - அவன்தான் சீட்டுக் குடுத்தவன் - சொல்லித்து. பத்திரிகைக்காரா எல்லாம் போட்டோ பிடிக்கறவனையும் அழைச்சிண்டு எந்தப் பட்டிக்காடா இருந்தாலும் தேடிண்டு வந்துடறாளாம்... சென்னப் பட்டணத்திலே இதுக்காகப் பெரிய திருவிழா நடத்தி, ரொம்பப் பெரிய பெரிய மனுஷாள் கையாலேதான் இதெத் த்ருவாளாம்...அட கஷ்ட காலமே!... சரி, என்னமோ வாங்கிட்டேன்; இதெல்லாம் என்ன வீண் கற்பனைன்னு அவர்கிட்டே இது விஷயமா நான் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கலே... வேணும்னே அன்னிக்கு அவருக்கு சாதம் போடறச்சே நானே பேச்சைக் கிளப்பினேன்... "என்ன அது? என்னமோ பிரைஸ் சீட்டாம்... ஒரு ரூபா குடுத்து வாங்கினவாளுக்கு ஒரு லட்சம் ரூபாய் கெடைக்கறதாம் - கெவர்மெண்டாரே நடத்தறதனாலே பொய், மோசடி ஒண்ணும் கெடையாதாம். நாணயமா நடக்கறதாம். பக்கத்தாத்துப் பொண்ணு பத்து ரூபாய்க்கு ஒரேயடியா வாங்கி இருக்காளாம். அது என்ன அது?..."ன்னு கேட்டு வெச்சேன். "அது நம்மாத்து அடுக்களை வரைக்கும் வந்தாச்சா? அது ராஜாங்கம் நடத்தற சூதாட்டம் - அவ்வளவுதான். வாந்தி பேதி மாதிரி ஜனங்களை வெரட்டி வெரட்டிப் புடிக்கறது இது. வாந்தி பேதி, வைசூரி வராம தடுக்கிற காரியத்தைச் செய்யற கெவர்மெண்டார் தான் இதையும் செய்யறா. அதனாலே அவாளுக்குப் பணம் கெடைக்கறதாம். ஏழைகள் லட்சாதிபதியாறாளாம்... எப்படியும் போகட்டும். நீயும் நானும் லட்சாதிபதியாகலேன்னா அழறோம்? நமக்கென்ன அதைப்பத்தி"ன்னார். "ஒரு லட்சத்தைக் கொண்டு வந்து உங்களண்ட கொடுத்தா, வேணாம்னு சொல்லிடுவேளா?"ன்னேன். இவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். எனக்கு அவமானமா இருந்தது... உடம்பு கூசித்து. "நாற்பது வருஷம் என்னோடே வாழ்ந்த உனக்கா, இப்படி ஒரு சந்தேகம் வந்தது"ன்னு கேக்கற மாதிரி இருந்தது அந்தச் சிரிப்பு... நான் தலையைக் குனிஞ்சிண்டேன். "நீங்க வேணாம்னு சொல்லுவேள்; அது எனக்குத் தெரியும். ஏன் அப்படிச் சொல்லணும்னு கேக்கறேன்?... உங்க கொள்ளூப் பாட்டனாருக்கு மானியமா கெடச்ச இந்த வீட்டுக்கு, அந்த மேற்கு மூலையிலே மூணுவருஷமா சுவத்திலே விரிசல் கண்டு, மழை பேயறச்சே ஒரே தெப்பமா ஆறதே - அதெ சரி பண்றதுக்கு வழி இல்லாம இருக்கோமே - நமக்கும் பணம் அவசியமாத்தானே இருக்கு... எதுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை அலட்சியம் பண்ணணும்னு யோசிக்கிறேன். அது தப்பா?"ன்னு கேட்டேன். "ஓ! நீ பேசறதெப் பாத்தா உனக்கு அந்தச் சீட்டு வாங்க ஒரு ஆசை; அப்படித்தானே?"ன்னு கேட்டார். நான் பேசாம இருந்தேன். "அசடே... அசடே... ஆசைதான் மானத்துக்குச் சத்ரு. அதிலே பரிசு வராதுங்கறதினாலே நான் அது தப்புன்னு சொல்லலே. வந்தாலும் அது அதர்மமா வந்த, பலபேரை வயிறெரிய வச்சு சம்பாதிக்கிற பணம்னு சொல்றேன். தரும வழியில் சம்பாதிக்காம வர்ற செல்வம், பாப மூட்டைன்னா... நீ சொன்னயே எங்க கொள்ளுப் பாட்டனாரைப் பத்தி... அவாள்ளாம் உஞ்சவிருத்தி பண்ணித்தான் மகா மேதைகளா இருந்தா... நேக்கு நன்னா ஞாபகமிருக்கு... அப்பா, இதே சங்கர மடத்திலே பகலெல்லாம் வித்தியாப்பியாசம் பண்ணி வைப்பார்... சாயங்காலம் காலக்ஷேபம் பண்ணுவார். காலையிலே உஞ்சவிருத்திக்கிப் போவார்... மறுவேளைக்கு மீதி இல்லாம சேருகிற அளவுதான் அந்தப் பாத்திரம் இருக்கும். ஸ்லோகத்தெச் சொல்லிண்டு அவர் நடு வீதியிலேதான் நடப்பார்... வீட்டுக்குள்ளேயிருந்து அந்தாத்துக் கொழந்தை கையினாலே ஒரு பிடி அரிசி அளவா எடுத்துண்டு நடு வீதியிலே வந்து அவருக்கு பிக்ஷை தருவா... எதுக்குத் தெரியுமா கொழந்தையின் கையை அளவா வெச்சா... பெரியவா கை அளவானா நாலு வீட்டோட பாத்திரம் நெறைஞ்சி போயிடும்... மத்தவா வீட்டிலே வெச்சுண்டு காத்திருப்பாளே, அந்தப் பிக்ஷயைத் தடுத்த பாவம், அதிகமா போட்டவாளுக்கு வந்துடாதோ?... அதுக்காகத்தான். அந்த மாதிரிப் பாத்திரம் நெறைஞ்சப்புறமும் யாராவது கொண்டு வந்தா, அதெ வாங்க மாட்டார் - பிக்ஷை போட வந்தவா தலையிலே ரெண்டு அட்சதையை இவர் பாத்திரத்திலேருந்து போட்டு ஆசிர்வாதம் பண்ணிட்டு வருவார்... அந்த வம்சத்திலே வந்த புண்ணியம்தான் இந்த ஞானம் பிடிச்சிருக்கு. இதைவிட அதிர்ஷ்டம் என்னன்னு எனக்குத் தெரியலே... இந்த நிம்மதியை இந்த மனஸ் ஆரோக்கியத்தை எத்தனை லட்சம் தரும்?... சூதாட்டத்துலே, பணத்தாலே லட்சாதிபதிகளை இந்த அரசாங்கம் உருவாக்கலாம். ஒரு ஞானஸ்தனை, ஒரு சதுர்வேத பண்டிதனை உருவாக்கச் சொல்லேன், பார்க்கலாம்"னு அன்னிக்குப் பூரா, போய் வந்து போய் வந்து என்னண்ட பேசிக் கொண்டிருந்தார். இதெல்லாம் நடந்து பத்து நாளைக்கு மேலே ஆயிடுத்து... அந்தச் சீட்டுச் சமாசாரத்தையே நான் மறந்துட்டேன்... நேத்து அந்தக் கொழந்தை - சீட்டு கொண்டு வந்து குடுத்தானே - ஒரு பேப்பரை எடுத்துண்டு வந்து 'பரிசு கெடைச்சவா நம்பரெல்லாம் வந்திருக்கு... உங்க சீட்டைக் கொண்டு வாங்கோ பார்க்கலாம்'னு உற்சாகமாக் கத்திண்டு ஓடி வந்தான். நல்ல வேளை! அந்தச் சமயம் அவர் ஆத்துலே இல்லை... எனக்கு வயத்தை என்னமோ பண்ணித்து. 'ஈஸ்வரா, என்னைக் காட்டிக் குடுத்துடாதே'ன்னு வேண்டிண்டப்ப, ஒரு யுக்தி தோணித்து. 'அதெ எங்கே வெச்சேனோ காணோம்டா அப்பா'ன்னு அவனண்ட பொய் சொல்லிட்டேன்... அதிலே ஏதாவது நம்பர் வந்து தொலைஞ்சிருந்தா, ஊரே வந்து இங்கே கூடிடாதோ?' அந்தக் கொழந்தெக்கு அப்பிடியே மொகம் வாடிப் போயிடுத்து. கோவிச்சுக்கற மாதிரி பாத்துட்டு அந்தப் பேப்பரையும் போட்டுட்டுப் போயிட்டான். அவன் போனப்பறம் நான் அந்தப் பேப்பரை எடுத்துண்டு அறைக்குள்ளே போயி, தனியா வெச்சிண்டு பார்த்தேன். நேக்குப் படிக்கத் தெரியாதுன்னாலும் எண்கள் தெரியும். அந்த எண்களுக்கு முன்னாலே ஏதோ எழுத்துப் போட்டிருக்கு... அது என்னன்னு தெரியலை. ஆனா, அதே மாதிரி இந்தச் சீட்டிலே இருக்கான்னு தேடிப் பார்த்தேன். தெய்வமே! எடுத்தவுடனே மொதல் மொதல்லே அதே மாதிரி ரெண்டு எழுத்து... அப்பறம் அதே மாதிரி மூணு...ஏழு, சுன்னம்... ஒண்ணு... ஒண்ணு... ஆறு!... அப்படீன்னா, ஒரு லட்ச ரூபாய் எனக்கே அதிர்ஷ்டம் அடிச்சிருக்கா?... ஐயையோ... இப்ப நான் என்ன செய்வேன்? மத்தியானம் அவர் வந்தப்ப, சீட்டைக் கொண்டு போயி அவர் காலடியிலே வெச்சு ' என்னை மன்னிச்சுடுங்கோ'ன்னு அழுதேன். "நான் வெளையாட்டா அந்தக் கொழந்தை வற்புறுத்தினானேன்னு வாங்கிட்டேன். இதெப்பத்தி நீங்க இவ்வளவு கோவமா இருக்கேள்ன்னு அப்பறம்தான் தெரிஞ்சது... நமக்கு எங்கே விழப்போறதுன்னு அசட்டையா இருந்துட்டேன்... பிரைஸ் விழப்படாதுன்னு ஸ்வாமிய வேண்டிட்டேன்.... இப்போ இப்படி ஆயிடுத்தே... மன்னிச்சு இதையும் என்னையும் ஏத்துண்டே ஆகணும்"னு அழுதேன். அவர் அதே மாதிரி சிரிச்சார். சிரிச்சிண்டே என்னெத் தூக்கி நிறுத்தினார். முகத்திலே அந்தச் சிரிப்பு மாறாமலே சொன்னார்: "அடியே!... நீ இப்ப லட்சாதிபதியாய்ட்டே... சபாஷ்...! இது நான் சம்பந்தப்படாம நீயே தேடிண்ட சம்பத்து. என்னத்துக்கு என் காலண்டை கொண்டு வந்து வச்சு இந்தப் பாவத்தை என் தலையில் கட்டப் பாக்கறே! நேக்கு லட்சம் வேண்டாம்னு சொன்னது வெளையாட்டுக்கு இல்லே. நெஜமாவே நேக்கு வேண்டாம். நேக்கு இருக்கற கவலையெல்லாம் முன்னே மாதிரி... இப்ப வர வர வேதாப்பியாசம் பண்றவா கொறைஞ்சிண்டு வராளேங்கறதுதான்... இன்னும் ஒரு பத்துப்பிள்ளைகள் இதுக்குக் கெடைச்சாப் போதும்... பணத்தாலே அவா வரப்படாது... பணத்துக்காகவும் வரப்படாது... இது உனக்குப் புரியாது. சரி, இது உன்னோட பிரச்னை. நான் எப்பவுமே உஞ்சவிருத்தி பிராமணன்தான். என் தோப்பன், பாட்டன் - எல்லோரும் வந்த வழி அதுதான். லட்சாதிபதிக்கு புருஷனா இருக்கற அந்தஸ்து, கொணம் எதுவும் எனக்குக் கெடையாது..."ன்னு பேசிண்டே போனாரே அவர். "ஏன் இப்படி யெல்லாம் பிரிச்சுப் பிரிச்சுப் பேசறேள்?... இப்ப நான் இதுக்கு என்ன செய்யணும்னு சொல்லுங்கோ... நான் செய்யறேன்... நான் இப்படி ஆகும்னு எதிர்பார்க்காதது; நடந்துடுத்து... இனிமே நான் என்ன செய்யணும்"னு அவரைத் திரும்ப திரும்ப நான் கேக்கறேன்... கொஞ்சம்கூட மனசிலே பசை இல்லாம என்னைப் பார்த்து அவர் சிரிக்கிறார். கடைசிலே அவருக்குப் பாடசாலைக்குப் போக நேரமாயிடுத்தாம்... போகும்போது அதே மாதிரி சிரிச்சுண்டே சொல்லிட்டுப் போனார்: "இந்த அதிர்ஷ்டச் சீட்டைப் பயன்படுத்திக்கறதுன்னு முடிவு பண்ணினா அது உன் இஷ்டம். நேராப் போயி படம் புடிச்சுண்டு பத்திரிகையிலே போட்டோ போட்டுண்டு ஜம்னு நீ வாழலாம்... நான் இன்னார் சகதர்மிணின்னு சொல்லிக்கப்படாது... ம், உன் திருப்திக்கு அந்தப் பொய்யைச் சொல்லிண்டு காலம் தள்ளிக்கோ. இல்லேன்னா 'இந்த மாயை வலையிலே நான் மாட்டிக்கலே; எனக்கு இது வேண்டாம்'னு அந்தத் தரித்திரச் சீட்டைக் கிழிச்சு எறி. ஆமாம் கிழிச்சு எறிஞ்சுடு. வேறே யார் கிட்டேயாவது குடுத்து அதுக்கு வட்டி வாங்கிண்டாலும் ஒண்ணுதான், நன்றியை வாங்கிண்டாலும் ஒண்ணுதான். சூது மனசுக்கு அதெல்லாம் தோணும். அதுக்கெல்லாம் பலியாகாம எந்த விதத்திலயும் அந்தச் சூதுக்கு ஆட்படாமே அதை கிழிச்சு எறிஞ்சுடு. இரண்டும் உன்னோட இஷ்டம். அது பாவமா, பாக்கியமான்னு முடிவு பண்ண வேண்டியது நீ; எனக்கு நாழியாறது!"ன்னு சொல்லிட்டுப் போயிண்டே இருக்காரே! இதுக்கு நான் என்ன செய்யலாம் சொல்லுங்கோ. தெய்வமே! ஒரு லட்சம்! இந்த ஒரு லட்சத்தை, அதிர்ஷ்ட லட்சுமியை நிர்த்தாட்சணியமா கிழிச்சு எறியறதா? அவர் கையிலே குடுத்தா, கிழிச்சு எறிஞ்சுடுவார். அவர் மாதிரி ஞானிகளுக்கு அது சுலபம். நம்பளை மாதிரி அஞ்ஞானிகளுக்கு அது ஆகற காரியமா, சொல்லுங்கோ? எத்தனை லட்சத்தையும் விட இவர் உசந்தவர்தான். நான் இல்லேங்கலே. அந்த லட்சத்தைக் கால்தூசா மதிக்கிறாரே இந்த மகா புருஷர். உஞ்சவிருத்தி பண்ணினார்னா இவருக்கு ஒரு குறையும் வந்துடாது. இப்பேர்ப்பட்டவரோட சம்சாரம் பண்ணினா, அந்த உஞ்சவிருத்தி வாழ்க்கையிலேயும் நேக்குப் பெருமை உண்டு. பணம் பெரிசா, ஞானம் பெரிசாங்கிறதெல்லாம் நேக்குத் தெரியாது. ஆனால், பணம் - அது எவ்வளவு அதிகம்னாலும் எப்படி நிலையில்லையோ அதே மாதிரி மனுஷாளும் எவ்வளவு பெரிய ஞானியாயிருந்தாலும் வாழ்க்கை சாசுவதமில்லையே! அப்படி நினைக்கிறதோ சொல்றதோ மகா பாவம். ஆனால் இந்தக் காலத்திலே எப்பேர்ப்பட்ட பதிவிரதையும் உடன்கட்டை ஏறிடுறதில்லையே! இவருக்கு அப்புறம் ஒருவேளை நான் இருக்க வேண்டி வந்ததுன்னா... சிவ! சிவா!... உஞ்சவிருத்தி பண்றதிலே எனக்கென்ன பெருமை! எல்லோரும் பிச்சைக்காரின்னு சொல்லுவா. கட்டினவளைப் பிச்சைக்காரியா விட்டுட்டான்னு இந்த மகா ஞானியைப் பத்தியும் பேசுவா. அவர் கிழிச்சு எறியலாம். நான் அதைச் செய்யலாமா? ஆனால், அவர் அப்படிச் சொல்லிட்டுப் போயிட்டார். நான் கையிலே சீட்டை வச்சுண்டு நிக்கறேன். கனக்கறது. இதுக்கு நான் என்ன செய்யட்டும் - சொல்லுங்கோ? -----